உயிர் மெய் ஆயதம்
வல்லம் தாஜ்பால்
மூப்படைந்து வந்தாலும் முந்தாநாள் அந்தியிலே
பூப்படைந்த பெண்போல பொலிகின்ற தமிழ்மகளே!
சாப்பறை அடித்தேஉன் சந்ததியை வேரழிக்க
ராப்பகலாய் இலங்கையிலே ராணுவம் அலைகிறது!
கட்டிக் கரும்பாக கற்கண்டுப் பாகாகக்
கொட்டிக் குறுந்தொகையும் நெடுந்தொகையும் தந்தவள்நீ!
எட்டுத் தொகைநீ!உன் மீனவரை சிங்களவர்
சுட்டுக் கொலைசெய்யும் சோகம் தொடர்கிறது!
வஞ்சிப்பா கலிப்பா வாசிக்க வைத்தவள்நீ!
வஞ்சிப்பா ருக்கும் வாழ்வளிக்கும் தூயவள்நீ!
விருத்தப்பா வெண்பா நாயகிநீ! அங்கேபோர்
நிறுத்தப்பா என்றாலும் நித்தமும் யுத்தம்தான்!
உயிரிலும் மெய்யிலும் உதிரம் குடிப்பதற்கு
ஆயுதம் அத்தனையும் அரக்கர்கள் வீசுகிறார்!
கடல்நம்மைப் பிரித்தாலும் உடல்ரத்தம் ஒன்ற(ல்)லவா?
அக்கரையில் தவிப்போர்மேல் அக்கறை நமக்கி(ல்)லையா?-நம்
தொப்புள் கொடிஉறவு துடிக்கிறது இலங்கையிலே!
துப்பாக்கி வெடிகுண்டு துளைக்கிறது குழந்தைகளை!
ஒப்பற்ற புத்தர்இனம் உயிர்பலிகள் கேட்கிறது!
உப்புக்கடல் அகதிகளின் கண்ணீரால் கரிக்கிறது!
ஒப்புக்கு அனுதாபம் உதட்டளவில் சொல்லாமல்
தப்புத் தாளத்தைத் தடுக்க யார்வருவார்?
அப்பாவித் தமிழர்களின் அழுகைக் குரல் ஓய்ந்து
எப்போது இருள்நீங்கி ஈழத்தில் ஒளிபிறக்கும்?
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|