நிலங்களை விடுத்து....
பாட்டாளி
ஆதியில்
எமக்கொரு இறகு இருந்தது.
காற்றின் விசையில்
மெல்லிய பீலிகள்
அலைவுற
ஆதியில்
எமக்கொரு இறகு இருந்தது.
எம்
முன்னூறாம் பாட்டன்
தலையிலிருந்து
இடம் பெயர்ந்து இடம் பெயர்ந்து
இப்போது
எம் தலையிலும்.
ஆதியில்
எமக்கொரு மேகம் இருந்தது.
துளித் துளியாய்
குறக்கே வெட்டப் பட்டாலும்
தொடர்பறாத
நேரிழையாய்
மழை சொரிய
ஆதியில்
எமக்கொரு மேகம் இருந்தது.
ஆதியில்
எமக்கொரு நிலம் இருந்தது.
நிலம் கீறி
நிலம் கீறி
யுகாந்திரப் பசி
பொசுக்கிட
ஆதியில்
எமக்கொரு நிலம் இருந்தது.
நேற்று
ஆடோடிகளும்
மாடோடிகளும்
இன்று
பன்னாட்டு காரோடிகளும்
நிலை பெற....
திரிந்தலைகிறோம்
எமது நிலங்களை விடுத்து.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|