விதையின் அழுகை
அர. செல்வ்வமணி
வானுறை செம்மரக் கானுயிர் சாய்த்துப்
பழங்குடி மக்களின் வாழிட மழித்து
ஆற்றின் போக்கை மாற்றி யமைத்து
இயற்கை யழித்து செயற்கை நாட்ட
பசுமைப் புரட்சியை உசுப்பி விட்டு
வான்மழை கொண்டு தான்வளர் தானியப்
பல்வகை யழித்து நெல்வகை சுருக்கி
ஓரினப் பயிரால் உயிரினப் பன்மை
வீழ்த்தி உழவரைத் தாழ்த்தி யொடுக்கிக்
கொழித்த கும்பனி செழித்திட மீண்டும்
மரபீனி மாற்றக் கரவினி லிறங்கி
விதைக்கும் உழவரைப் பதைக்கச் செய்து
கொழுத்த கயவர் செழித்திட மீண்டும்
மலட்டு விதைகள் மலியச் செய்தனர்
இயற்கை யழித்து செயற்கை வானில்
வலம்வர எண்ணி நலந்தர வியலா
நரகந் தனிலே நீரகந் தானும்
அழுந்தி மடிந்து மழுங்க விடுவதோ?
கண்ணை யிழந்தினி விண்ணைப் பிடிப்பதோ?
விதையை மடிவித்துக் கதையைத் தொடர்வதோ?
சாவு விதைகளைக் காவு கொடுத்தினி
சமரில் வென்று நமரைக் காப்போம்!
|