பாரத மாதா பஜனையும் இத்தாலி மாதா பாப் இசையும்
பாட மட்டும் தான் பேச்சுரிமையா?
அங்கே ஈழத்தமிழினத்தை அழிக்க இந்திய அரசின் பீரங்கிகள் எழுப்பும் பேரோசை; இங்கே அதை எதிர்க்கும் இன உணர்வாளர்களை உள்ளே தள்ளி இழுத்துப் பூட்டும் இரும்புக் கதவுகளின் கரகர ஒலி. இந்தியனாய் இருந்தால் இங்கே இரு; தமிழனாய் இருக்க நினைத்தால் சிறையிலிரு என்கிறார்கள்.
திரைப்பட இயக்குநர் சீமான், பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி, ம.திமு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் இந்தியாவின் இறையாண்மைக்குத் தீங்கிழைத்து விட்டார்கள் எனக்கூறி சிறையில் அடைத்துள்ளார்கள். இறையாண்மைக்கு எதிராக பேசியோரை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் அடைக்கலாம் என்ற விதி அந்த சட்டத்திலேயே இல்லை.
சூதுமதி சோனியாவும் துரோகத் திலகம் கருணாநிதியும் சட்டம் என்ன சொல்கிறது என்பதைச் சட்டை செய்யவில்லை. தங்கள் தர்பாரில், பாரத மாதா பசனை பாடலாம்; தவறினால் இத்தாலி மாதா பாப் பாடலாம்; இடையிடையே கருணாநிதியின் கழிவிரக்கக் கட்டளைக் கலிவெண்பா பாடலாம். இவை தவிர இங்கே உரிமை முழக்கத்திற்கு இடமில்லை.
ஒருவர் நாட்டு பாதுகாப்புக்கு பாதிப்பு உண்டாக்கினால், பொது ஒழுங்கிற்கு பொல்லாங்கு செய்தால், இன்றியமையாச் சேவைகளுக்கு இடையு+று ஏற்படுத்தினால் அவரைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் தள்ளலாம் என்கிறது அச்சட்டம். இம்மூவரும் இறையாண்மைக்கு எதிராகப் பேசினார்கள் என்று கூறி சிறையில் தள்ளியுள்ளார் கருணாநிதி. ஈழத்தமிழர்க்காக போராடிய 26 விடுதலைச் சிறுத்தைகளை குண்டர் சட்டத்தில் சிறையில் தள்ளி இழிவுபடுத்தியுள்ளார்.
நீதித்துறை ஆய்வு என்று வரும்பொழுது இந்தக் காரணங்கள் நிற்காது. தோழர் கொளத்தூர் மணியை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் அடைக்கப் போட்ட ஆணைக்கு ஒருத் திருத்தத்தை இப்பொழுது சேர்த்துள்ளார் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர். அதில் இறையாண்மைக்கு எதிராக என்ற சொற்களை அடித்து விட்டு பொது ஒழுங்கிற்கு எதிராக என்று திருத்தி வாசிக்கவும் என்று கூறியுள்ளார். எப்படியோ உள்ளே தள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிகறார்கள். அதற்காக அவசரப்படுகிறார்கள். சட்டம் என்ன சொல்கிறது என்று பார்ப்பதற்குக் கூட அவர்களுக்குப் பொறுமையில்லை.
சூதுமதி சோனியாவிற்கும் துரோகத் திலகம் கருணாநிதிக்கும் ஒன்றைச் சொல்கிறோம். தலைவர்கள் சிலரை, செயல்வீரர்கள் பலரை சிறையிலடைப்பதால் ஈழத்தமிழர் உயிர் காக்க எழுந்துள்ள இன உணர்வாளர்களை அடக்கிவிடமுடியாது. இலட்சக் கணக்கில் அவர்கள் அலை அலையாய் எழுந்து வருவார்கள்
|