புதிதாய்ப் பிறந்தோம்
கவிபாஸ்கர்
ஈழத்தில் எம் தமிழின மக்கள்
கொத்து கொத்தாகக்
கொல்லப்படுகிறார்கள் - ஐயகோ!
காப்பாற்றுங்கள் என்று..
இந்திய சனநாயகத்தைத்
தொடர்பு கொண்டோம்
“நீங்கள் தொடர்பு கொள்ளும்
வாடிக்கையாளர்
தொடர்பு எல்லைக்கு
வெளியே உள்ளார்” என
விடை வந்தது..
திரும்பத் திரும்ப
தொடர்பு கொண்டோம்
சொன்னதையே திரும்பச்சொன்னது..
காவிரி
ஒகேனக்கல்
முல்லைப் பெரியாறு
பாலாறு - இழந்த
உரிமைக்காக
ஒவ்வொரு முறையும்
தொடர்பு கொண்டு பார்த்தோம்
முடிவில் இணைப்பு
துண்டிக்கப்பட்டுவிட்டது.
தமிழகக் கங்காணி அரசிற்கு
பலமுறை தொடர்பு கொண்டோம்
“வேறொரு இணைப்பில்
இருக்கிறார்கள்
காத்திருக்கவும் என்றது”
பல காலம்
இப்படியே காத்திருந்தோம்
இந்தப் பாழாய்ப்போன
சனநாயகத்திடம்
நேற்று அவர்கள் தொடர்பு
கொண்டார்கள்
தில்லி நாடாளுமன்றத்திலிருந்தும்
தமிழகக் கங்காணி அரசிடமிருந்தும்
நாங்கள்
சொல்லி விட்டோம்
“நீங்கள் தொடர்பு கொள்ளும்
வாக்காளர்கள்
தற்சமயம்
தமிழ்த்தேச எல்லைக்குள்
சென்றுவிட்டார்கள்”
என்று..
ஆண்டநாட்டில் அகதியாய்
வாழும்
தமிழர்களே!
தமிழகக் கங்காணி கட்சிகள் - மீண்டும்
தொடர்பு கொண்டால்
சொல்லிவிடுங்கள்..
“சனநாயகம்
செத்துவிட்டது
நாங்கள் புதிதாய் பிறந்து விட்டோம்” என்று
|