தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - அறிவிப்பு
இப்பொழுதும் எங்கள் புழக்கத்தில் “கண்ணோட்டம்” என்ற பெயர் தான் உள்ளது. 1986 ஆம் ஆண்டு அது தொடங்கப்பட்டது. 1993 இல் இதழ் பதிவு செய்யப்பட்ட போது கண்ணோட்டம, தமிழர் கண்ணோட்டம் ஆனது. இப்பெயர் மீது இப்பொழுது வழக்கு நடக்கிறது. இதனால் 2008 மே முதல் புதிய “தமிழர் கண்ணோட்டம்” என்ற பெயரில் வந்தது.
வழக்கு இன்னும் முடியவில்லை. புதிதாகப் பதிவுக்கு விண்ணப்பித்தோம். “தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்” என்ற பெயர் இந்திய இதழ்ப் பதிவாளரால் ஏற்கப்பட்டு, சென்னை எழும்பூர் மாநகரக் குற்றவியல் நடுவர் மன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுவும் ஒரு நன்மைக்கே! இலட்சியத்தைத் தெளிவாக வெளிப்படுத்தும் வகையில் இதழுக்குப் பெயர் கிடைத்துள்ளது. முதலில் தட்டச்சு இதழாக வந்தது. பின்னர் உருட்டச்சு இதழாக வந்தது. அப்போது அதன் விலை 0.50 காசு. ஓர் இலட்சியம், அதற்கான மெய்யியல், அவற்றிற்கான ஓர் அமைப்பு என்ற இம்மூன்றும் சேர்ந்து “கண்ணோட்டத்தை” இயக்குகின்றன.
தமிழர்கள் மீதும் சமூக அறிவியல் மீதும் அக்கறையுள்ள ஆற்றல்மிகு அறிவாளர்கள், பாவலர்கள், இளைஞர்கள் பலரும் கண்ணோட்டத்தில் எழுதுகிறார்கள். விரிவடைந்து கொண்டே வரும் வாசகப் பரப்பு, இதழை வாரி அணைத்துக் கொள்கிறது. இயக்கத் தோழர்களும், ஆதரவாளர்களும் எண்ணிப் பார்க்காத இடங்களுக்குகெல்லாம் தாளிகையைக் கொண்டு போய்ச் சேர்க்கிறார்கள். இதழ் ஆக்கத்தில் இளம் தோழர்களின் உழைப்பு எடுப்பானது.
எத்தனை இருந்தாலும் இழப்பில்லாமல் கண்ணோட்டத்தை நடத்த முடியவில்லை. இன்னும் பெரும் எண்ணிக்கையில் இதழ் விற்பனை பெருகினால் தான் இழப்பில்லாத நிலை வரும். ஓரளவு ஈடுகட்டும் நோக்கத்தில் விலையைப் பத்து ரூபாயிலிருந்து பதினைந்து ரூபாய் ஆக்க முனைந்தோம். தோழர்கள், இந்த அளவு உயர்த்தக் கூடாது என்றார்கள். பன்னிரண்டு ரூபாயாக விலையைக் குறைத்துள்ளோம். இதழை நடத்த விற்பனைத் தொகை மட்டுமே போதாது. நன்கொடைகள், அன்பளிப்புகள், வழங்குவோர் உதவி பெருந்துணையாக உள்ளது. உங்கள் அன்போடும் அரவணைப்போடும். தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் வீறு நடை போடும். நன்றி.
- ஆசிரியர்.
|