Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Thamizhar Kannottam
Thamizhar Kannottam Logo
ஏப்ரல் 2008

திபெத் விடுதலையை ஆதரிப்பதே மார்க்சிய லெனினியம்
பெ.மணியரசன்

வாழ்ந்து கெட்ட இனங்களின் வரிசையில் திபெத்தியர்களையும் வரலாறு பதிவு செய்துள்ளது. கிறித்து பிறப்பதற்கு இன்னும் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் இருக்கின்றபோதே திபெத்தியர்களின் நாகரிகமும் சிந்தனையும் கிழக்கில் ஒளி வீசியது. அவ்வளவு ஏன், புத்தர் பிறப்பதற்கு ஐநூறு ஆண்டுகளுக்கு முன் கி.மு.1063இல் சென்ராப்மிவோ என்ற திபெத்திய ஞானி சீர்த்திருத்தப்பட்ட “பான்” மதத்தை sஉருவாக்கினார்.

காஷ்மீர், நேபாளம், பூடான், மியான்மர், சீனா ஆகிய நாடுகளை எல்லைகளாகக் கொண்ட திபெத்தின் அசல் பெயர் "போத்''. இன்றும் திபெத்தியர்கள் தங்கள் நாட்டைப் போத் என்றே அழைக்கின்றனர். கி.மு.127இல் முடி சூட்டிக் கொண்ட மன்னர் நியாத்திரி சென்போ காலத்திலிருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட திபெத்திய அரசர்களின் வரலாறு பதிவாகி யுள்ளது. மன்னர் சாங்சென் கம்போ (கி.பி.62949) ஆட்சிக்காலத்தில் திபெத் மாபெரும் படைவலிமை கொண்ட வல்லரசாகத் திகழ்ந்தது. அவருடைய போர்ப்படை நடு ஆசியக் கண்ட நாடுகளில் வெற்றி நடைபோட்டது.

மன்னர் திரிசாங் டெட்சென் ஆட்சியில் (கி.பி.75597) திபெத்தியப் பேரரசு புகழின் உச்சியில் இருந்தது. அது சீன நாட்டைக் கைப்பற்றியது. அப்போதைய சீனத் தலைநகர் சாங்அன் (இப்போதைய சியான்) நகரத்தை திபெத்தியப் படைமுற்றுகையிட்டது. சீனப் பேரரசர் நாட்டை விட்டு ஓடிவிட்டார். புதிய சீனப் பேரரசர் ஒருவரை திபெத்தியர்கள் அமர்த்தினர். இவ்வெற்றியைக் குறிக்கும் கல்தூண் திபெத் தலைநகர் லாசாவில் நடப்பட்டது. அதில் பின்வருமாறு கல்வெட்டு பொறித்தனர். "மன்னர் திரிசாங் டெட் சென், மகத்தான மனிதர். ஆழ்ந்து அகன்ற பேரறிவாளர். அவர் செய்தவை அனைத்தும் வெற்றிபெற்றன.

சீனாவின் பல மண்டலங்களையும் கோட்டைகளையும் கைப்பற்றினார். சீனப் பேரரசர் ஹெகு கி வாங்கையும் அவரது அமைச்சர்களையும் அச்சுறுத்தி வைத்தார். அவர்கள் ஆண்டுக்கு ஐம்பதாயிரம் சுருள் பட்டை (சில்க்) (திபெத்துக்கு) கப்பமாகக் கட்டினர்.'' இவ்வாறு பலவெற்றிகளைக் குவித்த திபெத்தியப் பேரரசில் பலபரம்பரையினர் ஆட்சிக்கு வந்தனர். பலபோர்க்குழுக்கள் உருவாயின. அப்போது புத்தத் துறவிகளின் தலைவராக விளங்கிய பேரறிவாளர் சோனம் கியாஸ்ட்டோ, (பிறப்பு 1543) ஆல்டன் கான் என்ற மன்னரை புத்தமதத்திற்கு மாற்றினார். பல்வேறு போர்க்குழுக்களைத் தமது அறிவுரையால் இணக்கப்படுத்தினார் சோனம் கியாஸ்ட்டோ.

ஆன்மீகவழிப் புத்தமத ஆட்சியை ஆல்டன்கான் நடத்தினார். "தலாய்லாமா'' என்ற பட்டத்தை ஞானி சோனம் கியாஸ்ட்டோவுக்கு ஆல்டன்கான் சூட்டினார். "தலாய் லாமா'' என்றால் “அறிவுக்கடல்'' வா என்று பொருள். தம்மை மூன்றாவது “தலாய் லாமா'' என்று கூறித் தன்னடக்கம் காட்டினார் கியாஸ்ட்டோ. ஆகவே அவருக்கு முன் இருந்து மறைந்த முதலாவது, இரண்டாவது ஆன்மீகத் தலைவர்ளுக்கும் தலாய் லாமா என்று பட்டம் சூட்டினர். இறந்த பிறகு வழங்கப்படும் பட்டங்கள் அவை. இந்த வரிசையில் ஐந்தாவது தலாய் லாமா ஆன கவாங் லோசாங் கியாஸ்ட்டோ கி.பி.1642 இல் அரச பதவி ஏற்றார். அவர்தாம் முதல் முதலாகத் தம்மை திபெத்தின் ஆட்சித் தலைவராகவும் ஆன்மீகத் தலைவராகவும் அறிவித்துக் கொண்டவர்.

இவ்வாறாக மதஅரசர் திபெத்தில் உருவானார். (இப்பொழுது இமாச்சலப் பிரதேசம் தர்மசாலாவில் உள்ளவர் 14ஆவது தலாய்லாமா) ஐந்தாவது தலாய் லாமா, வெவ்வேறு குறுநில மன்னர்களின் கீழ் பிரிந்து கிடந்த திபெத் பகுதிகளை ஒருங்கிணைத்துத் தமது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். ஒருங்கிணைக்கப்பட்டு தனது ஆட்சியின் கீழ் உள்ள திபெத்தின் இறையாண்மையை ஏற்குமாறு அப்போது (17ஆம் நூற்றாண்டில்) சீனத்தை ஆண்ட மிங் பேரரசரைக் கோரினார். சுதந்திர நாட்டின் அரசராகவும் தமக்குச் சமமான வராகவும் ஐந்தாவது தலாய்லாமாவை மிங் பேரரசர் அங்கீகரித்துச் சீனத்தின் தலைநகருக்கு அழைத்தார். தலாய் லாமாவைத் தனித்தேசத்தின் தலைவராக மட்டுமின்றி தெய்வ அருள் பெற்றவராகவும் சீனப் பேரரசர் ஏற்றார்.

சீனாவில் மஞ்சு பரம்பரையினர் ஆட்சி ஏற்பட்டது. முதல் முதலாக 1720இல் அன்றைய 6ஆவது இளம் தலாய்லாமாவை காப்பாற்றுவதற்கும் உதவுவதற்கும் என்று கூறிக்கொண்டு சீன மஞ்சு அரசர் திபெத்துக்குப் படை அனுப்பினார். அதன்வழி சீன அரசு, தனது ஆதிக்க அரசியலைத் திபெத்தில் தொடங்கியது. நிரந்தர நிர்வாகி ஒருவரை நியமித்துவிட்டு சீனப்படை திரும்பியது. இளம் தலாய்லாமாவுக்கு உதவியாக நிர்வாகத்தைக் கவனித்து வந்த திபெத்திய அதிகாரியை (ரீஜெண்ட்) சீன நிர்வாகி கொலை செய்துவிட மஞ்சு அரசப் படைகளுக்கும் திபெத்தியர்களுக்கும் இடையே சண்டை மூண்டது. இச்சூழலில் கூர்க்கர்கள் திபெத்தின் மீது படையெடுத்தனர். அரசியல் நிலையற்ற தன்மை நீடித்தது.

பிரித்தானியர் ஆதிக்கம் சீனாவில் அதிகரித்தது. சீன மஞ்சு அரசர்களின் வழியாக பிரித்தானிய வணிகர்கள் திபெத்தில் 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் நுழைந்தனர். இறுதியாக 1904 ஆகஸ்ட் 3ஆம் நாள் பிரித்தானியப் படை திபெத்துக்குள் நுழைந்து தலைநகர் லாசாவைக் கைப்பற்றியது. அப்போது திபெத்தை ஆண்டு கொண்டிருந்த 13ஆவது தலாய் லாமா மங்கோலியாவிற்குத் தப்பிச் சென்றார். பின்னர் பிரித்தானியருடன் சமரசம் ஏற்பட்டு 1909இல் 13ஆவது தலாய்லாமா திரும்பி வந்து ஆட்சி நடத்தினார். ஆனால் 1910இல் மஞ்சுப் படையினர் திபெத்திற்குள் நுழைந்து போரிட்டனர். தலாய்லாமா லாசாவை விட்டு வெளியேறி பிரித்தானிய இந்தியாவின் உதவியை நாடினார்.

பின்னர் திபெத் மங்கோலியா உடன்படிக்கை அடிப்படையில் தலாய்லாமா திரும்பிவந்து திபெத்தின் இறையாண்மையை நிலை நாட்டி அறிக்கை வெளியிட்டார். 1933 டிசம்பர் 17இல் 13ஆவது தலாய் லாமா இறந்தார். அடுத்த ஆண்டே சீனப்படை திபெத்திற்குள் புகுந்தது. 1949 செப்டம்பரில் சீனப்புரட்சி வெற்றி பெற்று வந்த வேளையில் கம்யூனிஸ்ட் படை திபெத்திற்குள் புகுந்து அதைக் கைப்பற்றியது. 1950 நவம்பர் 17ஆம் நாள் இப்பொழுது இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள 14ஆவது தலாய் லாமாவுக்கு திபெத்தின் மத அரசர் பட்டம் சூட்டப்பட்டது. அப்போது அவருக்கு அகவை 16. 1951 மே 23 திபெத்தின் தூதுக்குழு பீகிங் சென்று, திபெத் விடுதலை பற்றி பேச்சு நடத்தியது. அப்போது 17 அம்ச உடன்பாடு ஒன்று ஏற்பட்டது.

அவ்வுடன்படிக்கை இராணுவ மிரட்டலுடன் தங்கள் மீது திணிக்கப்பட்டதாக திபெத் தரப்பு கூறுகிறது. இரு தரப்பு மன ஒப்புதலுடன் செய்யப்பட்டது என்று சீனத் தரப்பு சொல்கிறது. இவ்வொப்பந்தம் திபெத் தன்னாட்சி உள்ள பகுதியாக சீன நாட்டில் நீடிக்கும் என்று கூறுகிறது. திணிக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் ஒப்புக் கொண்டவற்றைக் கூட சீன அரசு நிறைவேற்றவில்லை என்றும் 1951 செப்டம்பர் 9அன்று ஆயிரக் கணக்கில் சீனப்படையினர் திபெத்துக்குள் நுழைந்தனர் என்றும் தலாய்லாமா தரப்பினர் கூறுகின்றனர். அவ்வொப்பந்தம் ஏற்பட்ட பின்னர் தலாய்லாமா சகோதரர்கள் சீனாவுக்கு எதிராகச் சதிபுரிந்தனர் என்று சீனத் தரப்பு கூறுகிறது.

சீன ஆக்கிரமிப்பை எதிர்த்து திபெத்தில் போராட்டம் தொடங்கியது. 1959 மார்ச்சு 10இல் அப்போராட்டம் திபெத் முழுவதும் வீச்சோடு வெடித்தது. தலைநகர் லாசா பேரெழுச்சி கொண்டது. ஆனால் சீனப்படையினர் நூற்றுக்கணக்கான ஆண்களையும் பெண்களையும் சுட்டுக் கொன்றனர். ஏராளமானோர் சிறையிலடைக்கப்பட்டனர். 1959 மார்ச்சு 17இல் இரவோடு இரவாக தலாய்லாமா தப்பிச் சென்று இந்தியாவில் தஞ்சம் கேட்டார். அவர் பின்னால் ஆயிரக்கணக்கான திபெத் தியர்கள் மூட்டை முடிச்சுகளுடன் குழந்தை குட்டிகளுடன் தாயகத்தை விட்டு வெளியேறினர்.

இந்தியாவில் பண்டித நேரு அரசாங்கம், தலாய்லாமாவுக்கும் புலம்பெயர்ந்த திபெத்தியர்க்கும் தஞ்சம் அளித்தது. இமாச்சலப்பிரதேசம் தர்மசாலாவில் தலாய் லாமா தங்கி புலம்பெயர்ந்த அரசாங்கம் நிறுவி அதன் தலைவரானார். இந்தியா அந்த புலம்பெயர்ந்த அரசாங்கத்தை அங்கீகரிக்கவில்லை. திபெத்தின் முழு விடுதலையைக் கோரி வந்த தலாய்லாமா பின்னாளில் பாதுகாப்பு, வெளியுறவு தொடர்பான அதிகாரங்கள் பெய்ஜிங்கில் இருக்கட்டும் மற்ற அதிகாரங்கள் அனைத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட திபெத்தியப் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தன்னாட்சி கேட்டு வருகிறார். இது தொடர்பாக சீன அரசுடன் பேச்சு நடத்தவும் அணியமாக உள்ளதாகக் கூறுகிறார்.

ஆனால் சீன அரசோ, திபெத், சீனாவின் ஒரு பகுதி. அது ஓர் உள்நாட்டுச் சிக்கல் அது பற்றி தலாய்லாமாவுடன் பேச முடியாது என்கிறது. தலாய்லாமா தன்னாட்சி என்று கூறுவது அவர் போடும் வெளிவேடம் என்று கூறுகிறது. திபெத் மக்களிடம் விடுதலை வேட்கை நெருப்பாய்க் கனன்று கொண்டுள்ளது. கடந்த மார்ச்சு 10 அன்று தலைநகர் லாசாவில் போராட்டம் வெடித்தது. சீன ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்துத் திபெத்தியர்கள் முதல் முதலாக மாபெரும் மக்கள் எழுச்சி தொடங்கிய நாள் 1959 மார்ச் 10. அதன் 50ஆம் ஆண்டு தொடங்குவதை ஒட்டி இப்பொழுது மீண்டும் கிளர்ச்சிகள் நடக்கின்றன. சீன அரசின் கணக்குப்படி இதுவரை 19 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். 385 பேர் காயம்பட்டுள்ளார்கள். கொல்லப்பட்டவர்களில் காவல்துறை அதிகாரி ஒருவரும் அடக்கம்.

“புனித ஆடை போர்த்திக் கொண்ட ஓநாய்'' என்றும் “மனித முகம் கொண்ட கொடிய விலங்கென்றும்'' தலாய்லாமாவை திபெத்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜாங் தமது கட்சி ஏட்டில் எழுதியுள்ளார். இவ்வாறான சொற்களைத் தவிர்த்து விட்டு, இதே பொருள்தரும் வகையில் தலாய்லாமாவை சீனவெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் குயின் கூறியுள்ளார். சீனா கம்யூனிஸ்ட் நாடு. திபெத்திய விடுதலை இயக்கத்தை வட அமெரிக்கா ஆதரிக்கிறது. எனவே மார்க்சியர்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் என்ன நிலை எடுப்பது என்ற வினா முன்னுக்கு வருகிறது.

தலாய்லாமாவுக்கு இந்தியா தஞ்சம் கொடுத்து, புலம்பெயர்ந்த அரசாங்கம் தனது மண்ணில் நடத்திக் கொள்ள அனுமதிப்பது சீனாவுக்கெதிரான அரசியல் உத்தியே. அதேபோல் 1960லிருந்து அமெரிக்க ஏகாதிபத்திய அரசு ஆண்டொன்றுக்கு 17 லட்சம் அமெரிக்க டாலர்களைத் தலாய்லாமா அரசுக்கு நன்கொடையாக அளித்து வந்தது என்பதையும் இத்தொகை சி.ஐ.ஏ. வழியாக அனுப்பப்பட்டது என்பதையும் 1998 அக்டோபரில் தலாய்லாமா நிர்வாகமே ஒப்புக் கொண்டுள்ளது. கம்யூனிஸ்ட் சீனாவில் தலையிட்டு அதைப் பிளவுபடுத்த அல்லது அங்கு குழப்பங்கள் உண்டாக்க அமெரிக்கா சதித்திட்டம் தீட்டும் என்பதில் எள்ளளவும் ஐயப்பட வேண்டியதில்லை.

இதில் நாம் சரியான நிலைப்பாடு வகுக்க வேண்டுமெனில் அசல் சிக்கல் எது, பக்க விளைவு எது என்று பிரித்துப் பார்த்துத்தான் முடிவெடுக்க வேண்டும். அசல் சிக்கல் என்பது, திபெத்திய தேசிய இனத்தின் தன்னுரிமை (சுயநிர்ணய உரிமை)தான். லெனினியக் கோட்பாட்டின்படி, பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை ஒரு தேசிய இனத்தின் அடிப்படை உரிமை. அவ்வுரிமையை ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும், ஒவ்வொரு சனநாயகவாதியும் ஏற்க வேண்டும். சீனர்களும் திபெத்தியர்களும் வெவ்வேறு தேசிய இனத்தவர்; வேறு வேறு தேசத்தவர். திபெத் தனிநாடாக இறையாண்மையுடன் விளங்கியதை வரலாறு நெடுக பார்த்தோம்.

மாவோ தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி சீனப் புரட்சியை நடத்தும் போது, எதிர்ப் புரட்சியாளர்கள் தைவானைத் தளமாகக் கொண்டது போல, திபெத்தையும் தளமாகக் கொண்டு புரட்சிக்கெதிரான பன்னாட்டு பிற்போக்காளர் செயற்களமாக மாறலாம் என்ற அச்சத்தில் திபெத்திலும் மக்கள் விடுதலைப்படை நுழைந்து அதைக் கைப்பற்றியிருக்கலாம். ஆனால் புரட்சி நிலை நிறுத்தப்பட்ட பின் அதே காரணத்தைச் சொல்லிக் கொண்டு திபெத்தை, மாவோ தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி, சீனாவின் ஒரு பகுதியாக இணைத்துக் கொண்டது

பெருந்தேசிய இனவாதம் தவிர வேறல்ல; தனது நாட்டு நலனுக்காக இன்னொரு நாட்டின் இறையாண் மையைப் பறிக்கும் செயலாகும். இந்த அணுகுமுறையில் தன் தேசியவாதம் தெரிகிறதே தவிர பாட்டாளி வர்க்கப் பல்தேசியவாதம் தெரியவில்லை. இவ்வாறான ஒரு சிக்கலில் லெனின் எப்படி நடந்து கொண்டார் என்பதைப் பார்க்க வேண்டும். ரசியப் புரட்சி 1917 நவம்பர் 7இல் வெற்றி பெற்றது. ஆனால் எதிர்ப் புரட்சியாளர்கள் உள்நாட்டுப் போரைத் தூண்டி நடத்தினார்கள். அந்த நிலையில் அதே ஆண்டில், ரசியாவிலிருந்து பிரிந்து போக வேண்டுமென்று பின்லாந்து கோரியது. அக்கோரிக்கையை ஏற்று அது பிரிந்துபோக அனுமதித்தார் லெனின்.

எனவே, மாவோ தலைமையில் இயங்கிய சீனம் 1959இல் திபெத்துக்குள் படையை அனுப்பி, விடுதலைகோரிய மக்கள் போராட்டத்தை நசுக்கி அந்நாட்டு இறை யாண்மையை தனது எல்லைக் குள் அடக்கியிருக்கக் கூடாது. ஏகாதிபத்தியம் தலையிடுகிறது, சீனாவுக்கு எதிரான தளமாகத் திபெத்தை மாற்ற விரும்புகிறது என்ற சீனத்தரப்பு வாதத்தில் முழுஉண்மை உண்டு. மாட்டின் முதுகில் புண் இருக்கிறது, காக்கை வந்து காக்கையை விரட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தினால் போதுமா என்பதே நாம் எழுப்பும் வினா.

1959 மார்ச்சில் பெரும் படையை திபெத்துக்குள் அனுப்பி, அம்மக்களின் விடுதலைக் கிளர்ச்சியை நசுக்கியது சீனா. தலாய்லாமா இந்தியாவுக்கு தப்பி வந்து விட்டார். அதே சிக்கல் 50 ஆண்டு கழித்து மறுபடியும் கிளர்ந்து வருகிறது. திபெத் தலைநகர் லாசாவில் போராட்டம் தொடர்கிறது. 19 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 185 பேர் காயம்பட்டிருக்கிறார்கள். பலநூறு பேர் சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது சீன அரசு. திபெத் விடுதலைக் கிளர்ச்சியாளர்களோ நூற்றுக்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறுகிறார்கள்.

வடஅமெரிக்கா, ஜெர்மனி, பிரான்சு போன்ற நாடுகள் திபெத் விடுதலைக் கிளர்ச்சியை ஆதரிக்கின்றன. ஆகஸ்ட்டில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் தொடங்கவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவைப் புறக்கணிக்கப் போவதாக ஐரோப்பிய நாடுகள் அறிவிக்கின்றன. அடக்கி வைக்கப்பட்டுள்ள தேசம் தண்ணீருக்குள் அமுக்கி வைக்கப்பட்ட பந்துபோல் தான் இருக்கும். சிறு வாய்ப்பு கிடைத்தாலும் பந்து தண்ணீருக்கு மேலே வந்துவிடும். மனித உரிமை, தேசிய இனஉரிமை, தேச இறையாண்மை ஆகியவற்றை மற்றவர்களை விட மார்க்சிய லெனினியர் அன்றோ அதிகம் மதிப்பர்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பாசிச பாணியில் அல்லவா பேசுகிறது. திபெத்திய மக்கள் கிளர்ச்சியை ஒடுக்குகிறது. இதே சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆங்காங்கை சீனாவுடன் இணைப் பதில் எவ்வளவு பொறுமை காட்டியது! எவ்வளவு காலம் பொறுத்திருந்தது! இத்தனைக்கும் ஆங்காங் சீன மொழி பேசும் சீன மக்களின் தீவாகும். சீனாவின் பிரிக்க முடியாத பகுதியாகும். 1949 அக்டோபர் 1இல் சீனப் புரட்சி வெற்றி பெற்று கம்யூனிஸ்ட் கட்சியின் முழு அதிகாரத்தில் சீனா வந்தது.

1949 செப்டம்பரிலேயே சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தனது மக்கள் விடுதலைப் படையை திபெத்துக்குள் அனுப்பி அதைக் கைப்பற்றியது. 1949 அக்டோபர் 1க்குப் பிறகும் ஆங்காங்கைக் கைப்பற்ற சீனக்கட்சி ஏன் படை அனுப்பவில்லை? ஆங்காங் பிரித்தானிய ஏகாதி பத்தியத்தின் வசம் இருந்தது. சீனக்கட்சி தனது படையை அனுப்பினால் பிரிட்டனுடன் பெரும் போர் நடத்தவேண்டி வரும். அப்போர் நீடித்தால் சீனப் பொருளியல் பாதிக்கப்படும்.

புரட்சியின் பலன்களை மக்களுக்கு வழங்குவதற்கு மாறாக, போரில் சிக்கிக் கொள்ள நேரிடும் என்று சீனக்கட்சி கருதியிருந்தால் அது தவறில்லை. ஆனால், திபெத், “வலுவில்லாத எதிரி'', “குட்டிப் பையன்'' என்ற மதிப்பீட்டில் தானே அது வேற்று தேசிய இன தாயகமாக இருந்த போதும் படை அனுப்ப முடிந்தது? வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற பழமொழி முதலாளிய சிந்தனைக்குப் பொருத்தமாக இருக்கலாம். பாட்டாளி வர்க்க சிந்தனைக்கு எவ்வாறு பொருந்தும்? ஆங்காங்கை, இணைத்துக் கொள்வதற்காக பிரிட்டனுடன் சீனா பலமுறை பேச்சு நடத்தி, பத்தாண்டுகளுக்குப் பிறகு செயலுக்கு

வரக்கூடிய ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி 1998இல் தான் ஆங்காங் சீனாவுடன் இணைக்கப்பட்டது. அதற்காக சீனா விட்டுக் கொடுத்தவை கொஞ்சநஞ்சமல்ல. ஆங்காங்கில் முதலாளிய அமைப்பு, ஆங்காங் நாணயம் ஆகியவை அப்படியே இருக்கும். “ஒரு நாடு இரு சமூக அமைப்பு'' என்று இதற்குப் பெயர் சூட்டியது சீனா.

ஆங்காங் தீவினர் நேரடியாக வெளிநாடுகளுடன் வணிகம், வணிக ஒப்பந்தங்கள் செய்து கொள்ளலாம். ஆங்காங் சீனப்படையின் பாதுகாப்பின் கீழ் இருக்கும். இதுபோன்ற அணுகு முறையை திபெத் சிக்கலில் ஏன் சீனா காட்டவில்லை. ஆங்காங்கில் உள்ளவர்கள் சீனர்களின் “ஹன்'' தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு இரத்தம் சிந்துவதை சீனா விரும்பவில்லையா? அதேபோல் தைவானில் வாழ்பவர்களும் “ஹன்'' இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அதனை இணைத்திடப்படை அனுப்பவில்லையா? தலாய்லாமா, திபெத்தைத் தனிநாடாக்கும் கோரிக்கையைக் கைவிட்டு விட்டதாக 1990களிலிருந்து அழுத்தம் திருத்தமாகக் கூறிவருகிறார். சீனாவுக்குள் ஒரு தன்னாட்சிப் பகுதியாக திபெத் இருக்கட்டும்; வெளியுறவு, பாதுகாப்பு போன்றவை மட்டும் சீன அரசிடம் இருக்கட்டும் என்கிறார்.

2008 மார்ச்சு 10ஆம் நாள் திபெத்தில் விடுதலைக் கிளர்ச்சி வெடித்த பிறகு தனிநாட்டுக் கோரிக்கையைத் தாம் கைவிட்டு விட்டதாக தலாய்லாமா செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். தன்னாட்சிபற்றி சீன அரசுடன் பேச அணிமாயிருக்கிறேன் என்கிறார்; திபெத்தியர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை வலியுறுத்தினாலோ வன்முறைக் கிளர்ச்சியைத் தொடர்ந்தாலோ அரசியல் துறவறம் பூண்டு விடுவேன் என்றும் தலாய்லாமா எச்சரிக்கிறார். (தி இந்து 26.3.2008) சீன மக்களையும் சீனக் கம்யூனிசத்தையும் எப்போதும் மதிக்கிறேன் என்கிறார். திபெத்தில் போராடுபவர்களில் பெரும்பாலோர் கம்யூனிச சித்தாந்ததைத்த ஏற்றுக் கொண்டவர்கள் என்றும் தலாய்லாமா கூறியுள்ளார். ஐரோப்பிய நாடுகள் பலவும், அமெரிக்காவும் தலாய்லாமாவைப் பேச்சு வார்த்தைக்கு அழைக்குமாறு சீனாவை வலியுறுத்துகின்றன. ஆனால் சீனா பேச மறுக்கிறது. “கும்பல்'' என்று திரும்பத் திரும்பக் கூறுகிறது.

ஆங்காங்கை இணைக்கக் கடைபிடிக்கப்பட்ட மென்மையான அணுகுமுறை, கனி தானாக விழும்வரை காத்திருந்த பொறுமை, சித்தாந்தச் சமரசம் ஆகியவற்றில் எள்ளளவையும் திபெத் சிக்கலில் காட்டவில்லை. ஏன்? திபெத் சின்னஞ்சிறு தேசம்; அமெரிக்காவுக்கோ பிரிட்டனுக்கோ அது நேரடிக் காலனியாக இல்லை. இவ்வாறு தான் புரிந்து கொள்ள முடிகிறது. அடுத்து, அமெரிக்கா திபெத் விடுதலையை ஆதரிக்கிறது; தலாய்லாமா இந்தியாவில் நடத்தும் புலம்பெயர்ந்த அரசாங்கத்திற்கு ஆண்டுதோறும் 17 லட்சம் டாலர் பணம் கொடுத்து வந்திருக்கிறது என்பது குறித்துப் பார்க்கலாம்.

தேச விடுதலைக்குப் போராடுவோர், எதேச்சாதிகாரிகள், பாசிச ஆட்சியாளர்கள் துணை செய்தால் கூட ஏற்றுக் கொள்வது வரலாற்றில் நாம் பார்க்கும் ஒன்றுதான். எதேச் சாதிகாரிகளுக்கும் பாசிச ஆட்சியாளர்களுக்கும், தங்கள் நலனை உள்ளடக்கிய நோக்கம் ஒன்றிருக்கும், விடுதலை கோருவோர்க்கு விடுதலை கூடி வரவேண்டும் என்ற நோக்கமிருக்கும். இந்திய விடுதலைக்கு இந்திய தேசியப் படை நிறுவிப் போராடிய சுபாஷ்சந்திர போஸ், இட்லர், முசோலினி, டோஜோ ஆகிய பாசிச, நாஜிச, இராணுவ சர்வாதிகார சக்திகளின் துணையை நாடி அவர்களுடன் கூட்டணி சேர்ந்தார். அதற்காக சுபாஷ் சந்திர போசை பாசிஸ்ட்டுகளின் கைக்கூலி என்று கருதலாமா? அவ்வாறு கருதக்கூடாது. போஸின் அந்த உத்திமீது விமர்சனம் இருப்பது தவறல்ல. ஆனால் அவரது இலட்சிய வேட்கையை, நேர்மையைக் கொச்சைப்படுத்தக் கூடாது.

இராக், துருக்கி நாடுகளில் வாழும் குர்திஷ் தேசிய இனமக்கள் விடுதலைக்குப் போராடுகிறார்கள். அவர்களின் தலைவர் ஓசலான் துருக்கி சிறையில் உள்ளார். சதாம் உசேன் காட்டு மிராண்டித்தனமாக குர்திஷ் விடுதலை இயக்கத்தையும் அம்மக்களையும் ஒடுக்கினார்; நசுக்கினார். இப்பொழுது ஈராக்கை ஆக்கிரமித்து சதாமைத் தூக்கில் போட்ட அமெரிக்க வல்லரசுடன் இணக்கம் கண்டு ஒருவகைத்தன்னாட்சி பெற்றுள்ளனர் குர்திஷ் மக்கள்.

சமூக முரண்கள் ஒரே பாணியில் தீர்வு காண்பதில்லை. வரலாறு வளைந்தும் நெளிந்தும் சுழன்றும்முன்னேறுகிறது. இலட்சிய மலையின் கொடுமுடியை தொடுவதற்கு ஏறிச்செல்லும் கதாநாயகன் தன் தோள்களில் கொள்கைகளையும் கொஞ்சம் அழுக்கு மூட்டைகளையும் சுமந்தே செல்கிறான். தலாய்லாமாவை அமெரிக்கா ஆதரிக்கிறது. ஐரோப்பிய நாடுகள் ஆதரிக்கின்றன, இந்தியா அவருக்கு இடங்கொடுக்கிறது என்பதற்காக திபெத்தியர்களின் தேசிய விடுதலை இயக்கத்தை ஒரு சனநாயகவாதியோ அல்லது மார்க்சியரோ எதிர்க்கக் கூடாது. ஆதரிப்பவர் அல்லது எதிர்ப்பவர் யார் என்று பார்த்து ஒரு சிக்கலுக்குத் தீர்வு கூறுவதைவிட அசல் சிக்கல் குறித்த மதிப்பீட்டின் அடிப்படையிலேயே தீர்வு கூற வேண்டும். உள்ளதை உள்ளபடி பார்க்க வேண்டும்.

திபெத் சிக்கல் சீனாவின் உள்நாட்டுச் சிக்கல் என்று கூறுவது. பாலஸ்தீனச் சிக்கல் இஸ்ரேலின் உள்நாட்டுச் சிக்கல் என்று யூத வெறியர்கள் கூறுவது போன்றது தான்; ஈழச்சிக்கல் உள்நாட்டுச் சிக்கல் என்ற சிங்களப் பேரினவாத அரசு கூறுவது போன்றதுதான். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி (அப்போது எம்.சி.பி.ஐ.) 1989ஆம் ஆண்டு நவம்பர் மாதம் “கண்ணோட்டம்” இதழில் எழுதிய கட்டுரையில் திபெத்தியர்களுக்குப் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை உண்டு என்று கூறியுள்ளது.

அப்பொழுது, தலாய்லாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதையொட்டி விவாதம் நடந்தது. அன்றே த.தே.பொ.க. தனது தெளிவான தேசிய இனக்கொள்கையை வெளிப்படுத்தியது. திபெத்தை விட்டு சீன ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற வேண்டும் என்ற முழக்கத்தை உலகெங்குமுள்ள சனநாயகவாதிகளும் மார்க்சியர்களும் முழங்க வேண்டும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com