தண்ணீர் யுத்தம் 2008
சுப்ரபாரதிமணியன்
உலகமயமாக்கல் நிகழ்த்தி வரும் மாயாஜாலங்களின் எதிர்விளைவுகளை திருப்பூர் போன்ற வியாபார நகரங்களைச் சார்ந்த சாதாரணத் தொழிலாளர்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உடனடியாக எதிர்கொண்டுவருகின்றனர். நதிகள் சாயக்கழிவுகளின் ஓடையாகவும், அணைகள் அவற்றைத் தேக்கும் கிடங்குக ளாயும், வீதிகளின் மூலைமுடுக்குகள் மூன்றாம் உலக நாட்டுக் குப்பைக் கூடை யாகவும் தண்ணீரும் காற்றும் வாழ்வின் ஜீவாதார உரிமை என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத் தும் வண்ணமாயும் சூழல்கள் அமைந்திருக்கின்றன. ஆண்கள் உழைப்பை உறிஞ்சிவிட்டு தூக்கி எறியப்பட்டு நாற்பது வயதுக்கு மேல் கழிசடைகளாகவும், இளம் பெண்களே வேலைக்கென பொருத்தப்பட்ட இயந்திரங்களாயும், குழந்தைகள் இளம் பருவக் கனவுகளையும் கல்வியையும் மறந்துவிட்டு தொழிலாளர்களாகவும், இளம் குற்ற வாளிகளின் பிரதிகளாகவும் இருக்கும் சூழல்களை தொழில் சார்ந்த நகரங்கள் நிரந்தர மாக்கி விட்டன. இதற்கு 15000 கோடி ரூபாய் அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் திருப்பூர் உள்ளடக்கம்.
இந்தச் சூழலை எழுத்தாளர் என்ற வகையில் எதிர்கொள்வதும் அதந்கு எதிர்வினையாற்றுவதும் கடந்த 15 ஆண்டுகளாய் இங்கு வசித்துவருபவன் என்ற வகையில் அவசியம் என்று நினைக்கிறேன். என்னைப் பாதிக்கிற பல்வேறு விடயங்களை இலக்கியப் பிரதிகளில் பதிவு செய்வது முக்கியக் கடமை என எண்ணுகிறேன். நொய்யல் மாசுபாடு முதல் நியாயவணிகம் மற்றும் கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு வரை பல்வேறு விட யங்கள் அவ்வகையில் என் இலக்கியப் பிரதிகளில் இடம் பெற்றிருக்கின்றன. எனக்கிருக்கும் எல்லைகளுக்குள், இதை மீறி செயல்பாட்டுத் தளங்களிலும் இயங்கி வருகி றேன். இதைச் சாத்தியமாக்கியதற்கான அடிப்படை மூலமாக தன்னார்வக் குழுக்களின் செய்லபாடுகளையும் அவர்களின் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களையும் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
அதிலும் குறிப்பாக சேவ் அமைப்பின் இயக்குனர் ஆ.அலோசியஸ் மற்றும் பார்ட்னர்ஸ் இன் சேஞ்ச் அமைப்பினரை இச்சமயத்தில் நினைவுகூர்கிறேன். இங்கு பேசப்படும் பிரச்னைகள் பற்றி அரசியல் கட்சிகள், தொழிற்சங்கத்தினரின் செயல் பாட்டை மீறி வெவ்வேறு தளங்களில் தன்னார்வக் குழுவினர் செயல்பட்டு வருகிறார்கள். அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மீதான நம்பிக்கையை நடைமுறையில் வெகுஜன மக்கள் இழந்து வரும் நாளில் அவர்களின் பிரச்னைகளை வெளிக்கொணர வெவ்வேறு குழக்களின் செயல்பாடுகள் இன்று அவசியமாகிவிட்டது. என் அலுவலகச் சூழல் தந்திருக்கும் எல்லைக்குள் நின்று அவர்களுடன் இணைந்து செயல்படுவது எனக்கு உவப்பானதாக இருக்கிறது. இதை எழுத்தாளன் என்ற வகையில் முக்யமானதாகவும் நினைக்கிறேன். வல்லரசாகும் கனவு, பொருளாதார உயர்வு, கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு, மகிழ்ச்சியான உலகம் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போதுதான் இன் றைக்கு நவீன கொத்தடிமைத்தனமும், பொருளாதார அதிகாரத்துவமும் நிலைபெற்று வருகிறது. இதை என் பிரதேசம் சாராத மற்ற பகுதி மக்களும், வாசகர்களும் அறிந்து கொள்ளும் வகையில் இக்கட்டுரைகளாக இங்கு முன்வைத்துள்ளேன். உலகம் ஒரு கிராமமாக சுருங்கிவிட்ட நாளில் உலகின் கேளிக்கைத் தன்மையும், நுகர்வு கலாச்சாரமும் ஆகியவற்றின் ஆக்கிரமிப்பை மீறி மனதில் அதிகாரக் கட்டமைப்பு பற்றின யோசிப்புக்கானவை இக்கட்டுரைகள். - சுப்ரபாரதிமணியன்
(சுப்ரபாரதிமணியனின் சுற்றுச்சூழல் கட்டுரைகள், உயிர்மை வெளியீடு, சென்னை. ரூ.40)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|