Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Kanavu
Kanavu
மே 2009
சு.சுபமுகி கவிதைகள்

நம்பிக்கை

என் கவிதைகளில்
இயற்கை அழகை வர்ணிக்க முடியவில்லை
கான்கிரீட் கட்டடங்களுக்குள்
வளர்ந்ததால்
என் வரிகளில்
மொழி சுத்தமாக இல்லை
பல்வேறு மொழிக்கலப்பில்
என் பேச்சு பழகிவிட்டதால்
நான் வரையும் கோலங்களில்
பச்சரிசி மாவு இல்லை
விதவிதமான வர்ணப் புள்ளிகளும்
இரசாயனப் பொடிகளும்
நிரம்பி வழிகின்றன
என் பார்வையில்
பசுமையும் நிம்மதியும் இல்லை
படபடப்பும்
பரபரப்பும் வேகமும் கூடியிருக்கிறது
என் காதுகளில்
எனக்குத் தேவையான
குரல்களின் இனிமை இல்லை
வசவும், அழுகையும் காதுகளை நிறைக்கிறது.
ரொம்ப நாளைக்கு அப்புறம் வர இருக்கும்
பேய் மழை
எனக்கு தேவையானவற்றை எல்லாம்
அடித்துக் கொண்டு போகும்
என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது
வானத்தின் நீலம்
குளுமைப்படுத்துகின்றது

நகரம்

என் நகரம் சற்றே விஸ்தாரமாகிக்கொண்டே போகிறது
ஆலைகளின் பெருக்கமும்
அதன் உட்செல்லும் பணியாளர் பெருக்கமும்தான்
கண்ணுக்குத் தெரிகின்றன
யார் கண்ணுக்கும் தெரிவதில்லை
அங்கே புதைந்து கொண்டிருக்கும்
பிஞ்சுகளின் ஓலமும், வாழ்க்கை வலியும்.
பெண்கள் சுமங்கலிகள் என்ற பெயருடன்
கொத்தடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள்
காற்றில் மாசு கலந்து
மூச்சு திணறுகிறது
பெரும் பெரும் கட்டிடங்கள்
இவற்றில் யார் வசிக்கிறாரென்றே தெரியவில்லை
ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்கள்
எதை நோக்கி ஓடுகின்றாரென்று தெரியவில்லை
வேகமாய் விரைந்து கொண்டிருக்கும் வாகனங்கள்
எந்த இலக்கை நோக்கி போய்க்கொண்டிருக்கின்றன
தெரியவில்லை
முகம் பார்த்து பேசமுடியாதபடி
எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்
எல்லோர் முகங்களும் ஒரே மாதிரியாகிவிட்டன
வெவ்வேறு முகங்களுக்கும் வித்யாசம் தெரியவில்லை
எல்லோரும் முகமூடி அணிந்து கொண்டிருக்கின்றார்கள்
நகரமே முகமூடி அணிந்து கொண்டு விட்டது
விஸ்தாரமாகிக் கொண்டிருக்கும் நகரத்தில்
முகமூடியும் பெரியதாய்க் கொண்டே வருகிறது
ஒரே முகமூடியில் நகரத்தையே
திணித்து விட்டோம்
எங்கள் சாதனையாகவே
இதுவும் தொடர்கிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Unable to connect to database! Please try again later.