நெரிசல்
- மயூரா ரத்தினசாமி
கவிதை வாசிக்க உங்கள் முன் நின்றுகொண்டிருக்கிறேன்
சுக்கு காபி குடித்தாகிவிட்டது அல்லது குடிக்கப்போகிறோம்
நாற்காலியில் வசதியாக சாய்ந்து உட்கார்ந்துகொள்கிறீர்கள்
அறைக்கு வெளியே சாலையில் இருசக்கர வாகனமொன்று
கிரீச்சென்று பிரேக் பிடிக்கும் சப்தம் கேட்கிறது
நாயன்று வாகனத்தில் அடிபட்டு
ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கும் திசைநோக்கி ஓடுகிறது
அதன்கால் ஒடிந்திருக்கலாம்
உங்களில் ஒருவர் செல்பேசியை காதில் வைத்தபடி வெளியேறுகிறார்
நகரெங்கும் கைப்பேசிகளின் கிணுகிணுப்பு திடீரென அதிகமாகிவிட்டது
ஒலியெழுப்பியபடி வருகிறது ஆம்புலன்ஸ்
வாகனஓட்டி இறந்திருக்கலாம்
என் கால்கள் அத்திசை நோக்கி இழுபடத்துவங்குகிறது
நீங்கள் இன்னும் நன்றாக சாய்ந்து உட்கார்ந்துகொள்கிறீர்கள்
மாமிசத் துணுக்குகளைத் தேடியலையும் கருப்புப் பறவைகள்
பெரியார்சிலை மீது எச்சமிட்டபடி பறக்கின்றன
ஆளுங்கட்சியின் அண்ணாசிலையை பராமரிக்க நிறுவனங்களிடையே போட்டி
போக்குவரத்து நெரிசலாகிவிட்டது
சாலையில் வாகனங்கள் தத்தமது பாதை கேட்டு பிளிறத்துவங்கிவிட்டன
காற்றொலிப்பான்களின் அலறல் படியேறிவந்து
உங்களுக்குப் பின்னால் காலியாக இருக்கும் நாற்காலிகளில் உட்கார்ந்து கொள்கின்றன
நெரிசல் அதிகமாகிவிட்டது
நீங்கள் மெல்ல நகர்ந்து நெரிசலைத் தவிர்க்கப் பார்க்கிறீர்கள்
குறுஞ்செய்தி ஒன்று உங்களை நள்ளிரவு விருந்துக்கு அழைக்கிறது
நெரிசல் இன்னும் இன்னும் அதிகமாகவே
நீங்கள் ஜன்னல் வழியாகக் குதித்து தப்பிக்கும் வேளையில்
நானும் கவிதை வாசித்தலை நிறுத்திவிட்டு குதிக்கவேண்டியதாயிற்று.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|