Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Kanavu
Kanavu
டிசம்பர் 2008
இரு கவிதைக் குரல்கள்
தமிழில் : சா. சிவமணி

எனது கவிதை நதியில்... மா சேதுங்
மஞ்ஞிநாடு பத்மகுமார்


கல்லூரி வளாகத்தைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தேன். புதிய ப்ளாக்கும் அதனையெட்டியுள்ள கான்ட்டீனும் எந்த மாற்றமுமின்றி அப்டியேதான் இருந்தது. கம்போஸ்டு செடிகள் சீராக வெட்டிவிடப்பட்டிருந்தன. மாவோ ட்ரீ அங்கு காணாமல் போயிருந்தது. என்னால் அந்த இடத்தைத் தொட்டுக்கூடப் பார்க்க முடியவில்லை. அது மகா விருட்சமாய், எனக்கு மேலே வளர்ந்து, தனது எண்ணற்ற கிளைகளை விரித்துக்கொண்டு நிற்கிறது. அதன் கிளைகளில் படர்ந்து தொங்கும் கொடிகள் தோற்றுப்போன என் இதயத்தை அழுத்தி முத்தமிடும் பாவனையில் இறுக்கிப் பின்னிக் கொள்கிறது. நீண்ட நாட்களாய்... இது போன்ற வலி... உணர்வு... எனக்குள் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதிலிருந்து என்னால் மீளமுடியாத போது கடைசியில்.. நான் என்னுடைய கவிதையில் தஞ்சமடைந்தேன்.
--

கொல்லம் ஸ்ரீ நாராயணா கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போது நண்பர்களெல்லாம் சேர்ந்து ஒரு போராட்டக் குழுவை ரகசியமாய் ஏற்படுத்தியிருந்தோம். புதிய கட்டிடத்தின் முன்புறம் நிற்கும் புளியமரத்தின் மடியில்தான் நாங்கள் ஒன்றுகூடுவோம். சுற்றிலும் ஆளுயரத்திற்கு கம்போஸ்டு செடிகள் வளர்ந்திருந்ததால் எங்களை யாரும் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. அப்படியரு இடத்தைக் கண்டுபிடித்து, அதற்கு மாவோ ட்ரீ எனப் பெயரிட்டது வெளிநெல்லூர் ஸ்ரீஜித்து தான். ஸ்ரீஜித் எஸ்.எப்.ஐ-யினுடைய செயல்வீரனாக மட்டுமல்ல, ஒரு நல்ல வாசகனானவும் விளங்கினான்.

ஸ்ரீஜித்தை தவிர விவேக், சதீசன், அனில்குமார், விபின்தாஸ் இவர்களோடு நானும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். பல சந்தர்ப்பங்களில் வகுப்பைக் கட்டடித்துத்தான் நாங்கள் விவாதிக்கச் செல்வோம். கன்யூசன்யால், சாருமஜும்தார், குன்னிக்கல் நாராயணன் போன்றோர் எங்களுடைய அன்றைய தலைவர்களாய் விளங்கினர். இவர்களின் வாயிலாகத்தான் நாங்கள் அன்றைய உலகைக் கண்டிருந்தோம். சதீசன் ஒருநாள் கொல்லம் பொது நூலகத்திலிருந்து கெ.பானூர் எழுதிய நா.நக்சல்பாரி என்ற புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்தான். நக்சல்பாரி கிராமத்திற்குள் நாங்கள் துணிச்சலாக நடந்தோம். அதொரு நல்ல அனுபவமாக எங்களுக்கு அமைந்தது. எம்.சுகுமாரனுடைய கதைகளில் மிகுந்த ஈடுபாடுடைய ஸ்ரீஜித், அவருடைய இறந்துபோகாதவரின் நினைவுச்சின்னங்கள் என்ற நூலைப் பற்றிக் கட்டுரை எழுதும்படி என்னிடம் கேட்டுக் கொண்டான். அதன்படி காம்பஸ் சோய்ஸ் என்ற பத்திரிகையில் எழுதியுள்ளேன்.

இதற்கிடையில் ஒருநாள் ஸ்ரீஜித் கொண்டு வந்த சைனீஸ் கம்யூனிஸ்டு கட்சியின் வரலாறு (1921 - 1951) என்ற நூல் எங்களையெல்லாம் ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. ஹ§ஜியாமோ எழுதிய அந்த சிறு புத்தகத்தின் வாயிலாகத்தான் மாவோ பற்றி ஏராளமான செய்திகளை அறிந்து கொண்டோம். அன்றிலிருந்து மாவோ எங்களுடைய போற்றுதலுக்குரிய தலைவராக ஆகிப்போனார். பிரபாத் புக் ஹவுஸில் ரகசியமாக அதனைப் பாதுகாத்து வைத்திருக்கிறோம். பிறகு வாழ்க்கைப் பயணத் தினிடையே எப்போதோ.. எங்கேயே... மாவோ உடனான தொடர்பு இழை அறுத்து போனது.

இருபது வருடங்களுக்கு முன்பிருந்த ஒரு அபூர்வமான மாவோ ட்ரீ நட்பைப் பற்றித்தான் நான் மேலே குறிப்பிட்டது. சில நாட்களுக்கு முன்பு வணிகவியல்துறை சார்பாக ஆர்ட் பெஸ்ட் அமைப்பைத் தொடங்கி வைக்க கல்லூரிக்கு நான் போயிருந்தேன். அப்போது கல்லூரியைச் சுற்றிப்பார்த்துக் கொண்டு வரும்போது,

புதிய கட்டிடமும் எந்த மாற்றமுமின்றி அப்படியேதான் இருந்தது. கம்போஸ்டு செடிகள் காணாமல் போயிருந்தது. என்னால் அந்த இடத்தைத் தொட்டுக்கூடப் பார்க்க முடியவில்லை. அது மகா விருட்சமாய், எனக்கு மேலே வளர்ந்து, தனது எண்ணற்ற கிளைகளை விரித்துக்கொண்டு நிற்கிறது. அதன் கிளைகளில் படர்ந்து தொங்கும் கொடிகள் தோற்றுப்பொன என் இதயத்தை அழுத்தி முத்தமிடும் பாவனையில் இறுக்கிப் பின்னிக்கொள்கிறது. நீண்ட நாட்களாய்... இது போன்ற வலி... உணர்வு... எனக்குள் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதிலிருந்து என்னால் மீளமுடியாத போது கடைசியில்.. நான் என்னுடைய கவிதையில் தஞ்சமடைந்தேன்.

மனவேதனையிலிருந்து விடுபடுவதல்ல என் ஆசை. சில தவிர்க்க முடியாத வேதனைகளை புயலிலிருந்து வரலாற்றுக்குள் கொண்டுவந்துதான் ஆகவேண்டும். ‘அழவில்லை தோழர்களே, எனது நதியில் மாவோ சேதுங்’ என்ற எனது கவிதை இனியும் சேதமில்லாது சேமித்து வைத்திருக்கும் ஒரு வசந்தத்தை நினைவூட்டும் படைப்பு. கடைசி நினைவு எரிந்துபோகும் வரை, எனது கவிதையில் ஒற்றையாய்த் தவிர்த்து மறைந்துபோகும் அந்த வலியை நான் அனுபவித்துக் கொண்டேதான் இருப்பேன்.

எனது கவிதைப் பயணத்தின் பவளத்தீவுகள்
அப்பன் தச்சேத்து


எனது எழுபதாவது பிறந்த நாளின்போது எனது குடும்பத்தினர் வெளியிட்ட ‘ஸ்னேக தீரங்கள்’ (அன்புக்கரைகள்) என்ற என்னுடைய கவிதைத் தொகுப்பு, உண்மையில் எனது கடந்த கால அனுபவங்களின் தொகுப்புதான். நான் நேசிக்கிற எனது கவிதை, என் வாழ்க்கையில் இடையறாது துடித்துக்கொண்டிருக்கும் இதயத்தோடு கலந்து கிடக்கிறது. உள்ளத்தில் பூத்துக் கிடக்கும் கனவுகள். அவை பல வண்ணத்திலும், வடிவத்திலும் நினைவுகளில் பசுமையாய்க் காட்சி தரும் பவளத்தீவுகள். அவைகள் எவ்வளவு வருணித்தாலும் தீராது; காரணம் கவிதை என்பது எனக்கு ஆன்மாவின் ஓர் அம்சம்!

பாரம்பரியமும் செல்வாக்கும் மிகுந்த ஓர் குடும்பத்தில் பிறந்தேன். சிறுவயது முதலே புராணக்கதைகளில் மூழ்கி முத்தெடுத்த எனது பாட்டியின் பகவத்கீர்த்தனங்கள் கேட்டு வளர்ந்தேன். எப்போதும் குருவாயூர் மேகம் போல வாசுதேவாத்மஜன் (ஸ்ரீகிருஷ்ணன்) என் முன்னால் தோன்றி காட்சியளிப்பது போல் என்னுள் அனுபவித்து வந்துள்ளேன். துன்பத்தில் மூழ்கி மனம் குழப்பமடையும் போதெல்லாம் என் நினைவுகளை ஆன்மிகமும், ஆத்மார்த்தமும் நிறைந்த ராஜபாதையில் அழைத்துச் செல்லும் ஏகாந்த இரவுகள், உண்மையில் எனக்கு சொர்க்கத்தின் கதவுகளைத் திறந்துவிட்ட பிரம்ம முகூர்த்த நிமிடங்கள் என்று சொல்வேன்.

இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் நான் எழுதிய கவிதைகள் யாரோ சொல்லிக்கொடுத்து நான் எழுதியதுபோல் எனக்குத் தோன்றியதுண்டு. உண்மையில் அதுதான் கவிதை. கவிதை எழுதுவதல்ல; எழுதிக்கொண்டே இருப்பது. அவ்வாறு எழுதிக்கொண்டே இருப்பதற்கான தெளிவு, நமக்கு எங்கிருந்து கிடைக்கிறது? இதயப்பூர்வமான தியானம், விரதம், யோகநிஷ்ட்டை, வழிபாடு, கட்டுப்பாடான வாழ்க்கை, இடைவிடாத பக்தி போன்ற உன்னத உணர்வுகள், எண்ணங்கள்தான் குருபீடத்தை அலங்கரிக்கிறது.

முதல் முதலில் செண்பகம் பூத்த, கார்த்திகை மாத அந்திப் பொழுதுகளில், நான் குமாரநல்லூர் அம்மன் கோவிலைப் பார்க்கிறேன். அங்கு ஏற்றி வைத்துள்ள அஷ்டமி விளக்குகளில் அஷ்டராகங்களை உணர்கிறேன். அஷ்டமாங்கல்ய தட்டு ஏந்தி நிற்கும் ஆராதன முகூர்த்தங் களில் தேவியின் தெய்வீகத்தன்மையை உள்வாங்கியிருக்கிறேன்; கவிதையினுடைய ஸ்பரிசத்தை அதில் உணர்ந்திருக்கிறேன். பின்னர், நதியின் சலசலப்பில், நிழலின் அசைவில், நிறங்கள் மலர்களாய் விரிவதில், பறவைகளின் சங்கீதத்தில்... இப்படி எத்தனை எத்தனையோ கவிதையின் கண்ணுக்குப் புலனாகாத பள்ளத்தாக்குகளிடையே பதுங்கிப் பதுங்கிச் செல்லும் ஒரு மேகம் போலே... சஞ்சரித்திருக்கிறேன்.

எவ்வாறாயினும், கவிதை எழுதுவது என்பது எனக்கு மிக மிக விருப்பமான, உற்சாகம் தரும் விஷயம்தான். தெய்வீகமான ஓர் ஆனந்தத்தையும் ஆவேசத்தையும் எனக்குள் ஏற்படுத்தும் அமானுஷ்ய சக்தியை நான் தாயே என்று அழைக்கிறேன்; அவளை அகிலாண்டேஸ்வரி என்று அழைக்கிறேன். வர்ணனைக்கு எட்டாத அந்த அரூப சக்திதான் சர்வ கலைப்படைப்புகளிலும் பிரதிபலிக்கிற தெய்வீகம்... தாய்மை... அந்த தெய்வீகத்தன்மை¬யின் கருணையால்தான் 1962-ல் நான் என்னுடைய முதல் கவிதைத் தொகுதியை வெளியிட்டேன். அப்போது நான் பள்ளி இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தேன்.

அந்த காலகட்டத்தில், மகாகவிஜி, அக்கித்தம், வைலோப்பிள்ளி போன்றோர் என்னை வெகுவாகப் பாராட்டினர். மகாகவிஜி என்னைப் பாராட்டியதோடு, ஆசீர்வதித்து ஒரு கடிதத்தில்,

காலம் கூர் தீட்டிக் கொண்டு நிற்பது போல்.. தோன்றுகிறது
முக்காலங்களின் முன்னே முட்டி மோதி நிற்கும்
எல்லைகள் உண்டோ?
இந்திரியங்களால் அறியும் அறிவை
மேலெல்லையாய்க் கொண்டு
முகத்தோடு முகம் நோக்கும்
உதய அஸ்தமனங்களைப் படைத்து,
உணரும் வகையில் மொழியின் எளிய முகங்களை
அடையாளப்படுத்தும் புதிய வெளிச்சமே! உன்னை
கள்ளமில்லா அன்போடு உற்சாகமாய் வாழ்த்துகிறேன்!

என்று எழுதியிருந்தார். 1962-ல் மகாகவிஜி நல்கிய வாழ்த்துச் செய்தியை, ‘பத்மஸ்ரீ’ ‘ஓடக்குழல்’ விருதுகளுக்கும் மேலாக மதித்து ஒரு பொக்கிஷமாய், குருதட்சினையாக வைத்திருக்கிறேன்.

இன்றுவரை முப்பது கவிதைத் தொகுதிகள் வெளியிட்டிருக்கிறேன். இதில் பன்னிரெண்டு கவிதைத் தொகுதிகள் குழந்தைகளுக்கும் இரண்டு கவிதைத் தொகுதிகள் இலக்கிய மாணவர்களுக்குமாக அடங்கும். முதன்முதலாக 1975-ல் மலையாளத் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதினேன். நூற்றுக்கும் மேற்பட்ட ஒலிநாடாக்கள் பக்திப் பாடல்களுக்காக வெளிவந்துள்ளன.

எழுபது வயதை நெருங்கும் இவ்வேளையில் கடந்து வந்த வாழ்க்கையைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கிறேன். இப்படியரு வாழ்க்கையை சிறப்பான முறையில் வாழ, எனக்கு நல்ல சூழலை உருவாக்கித் தந்த மாமனிதர்களை எண்ணிப் பார்க்கிறேன்! அதோடு, நிறைவான என் வாழ்க்கைக்கு செல்வமல்ல காரணம்; கவிதையும் சங்கீதமும் ஏசுதாஸ் போன்றோருடைய நட்பும்தான் காரணம் என்பேன், கடவுளும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP