செந்தமிழ்மாரி கவிதைகள்
வாலைப்பருவம்
மலர்கள்தாம் அவளைக் கொய்து
மாலையாக்கியிருந்தன
அம்மலர்களிடம் சொல்லவில்லை அவள்
எந்தவொரு தந்திரமும் -
அதுவேதான் வாசமூட்டின
தோள் கனக்கும் மாலையெங்கும்
கடல்சேரும் நதியைப் போல
பீரிட்ட முதிர்ச்சியோடு
பாதையமைத்துக்
காத்திருக்கிறது அவள் முன்
சேரும் கரம் யாதென
வருவோர் மீதெல்லாம்
வாசமிட்டுப் பரிசீலித்தபடி
தலைசாய்ந்திருக்கிறது
அப்பருவம்
பிறை நிரம்பிய நிலவாய்!
கற்பிதங்கள்
அன்பின் கணங்களிடும்
சதுக்க முனையறியாது
கொடி பரப்பிய நிழலில்
ஒற்றையாய்த் தளிர் ரோஜா
கொடிகள் எதுவும் பரவாமல்
அரண்கள் அதுவே இட்டுக் கொண்டது
தானே -
தனிமை போக்குவதாய்ச் சொல்லி
ரோஜாக்களைப் பறித்தபடியே இருக்கிறான்
அவ்வனத்தின் காவல்காரன்
காலம்காலமாய்!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|