பழமனின் ‘தலைச்சுமை’
சக்திக்கனல்
வட்டார இலக்கியங்களுக்கு தமிழில் ஒரு தனி இடம் உண்டு. கி.ராஜ நாராயணன், நாஞ்சில் நாடன், சோலை சுந்தரபெருமாள் ஆகியோர் அந்தந்த வட்டார வழக்குகளில் நவீனங்களைப் படைத்துள்ளார்கள். கொங்கு வட்டார நாவல்களில் இரா. சண்முகசுந்தரம் அவர்களைத் தொடர்ந்து சின்னப்ப பாரதி, ஈரோடு வடிவேலன், சூர்யகாந்தன், சி.ஆர். ரவீந்திரன் போன்றவர்கள் படைப்புக்கள் குறிப்பிடத் தக்கவை. இவ்வரிசையில் பழமனும் இடம் பெறுகிறார்.
கவிஞர் பழமன் ஒரு மரபுக்கவிஞராகத்தான் அறிமுகமானார். ‘பொன் ஊற்று’, ‘நந்தியா வட்டம்’ என்ற இரண்டு நாவல்களை எழுதிய பழமனின் மூன்றாவது நாவல்தான் ‘தலைச்சுமை’.
முழுக்க முழுக்க கிராமியச் சூழல்களையே பயன்படுத்தி கொங்கு மண்ணின் மைந்தர்களின் மனசாட்சியைப் பேச வைத்திருக்கிறார் ஆசிரியர். நாவலின் முக்கியக் கதாநாயகன் வேலு, அவன் தாய் ராமாத்தாள், இளம்பெண் சாந்தி, அவள் தாய் அய்யம்மா, பூவா - இவர்களைச் சுற்றியே கதை சுழன்று சுழன்று வந்தாலும் கிராமத் துக்கே பெருமை சேர்க்கும் முரட்டுப்பாத்திரங்களான கிட்டான் மாதாரி, டெம்போ ரங்கநாதன், மினிடோர் மருதாசலம், ட்ராக்டர் அருணாசலம், கால் டாக்சி கருப்புசாமி, பவர்ஸ்ப்ரேயர் பொன்னு சாமி, போரிங் மெஷின் பூங்காவனம், மெக்கானிக் மாரிமுத்து, ஊராட்சி உறுப்பினர் வேலாயுதம் என்ற பல பாத்திரங்கள் இந் நாவலில் வருகிறார்கள். ராமாத்தாள் எதைப் பேசினாலும் அதில் ஒரு பழமொழியைக் கூறிப் பேசுவதும், தனிமையில் ஒப்பாரி பாடி மன அமைதி பெறுவதும் மனதை அள்ளுகின்றன.
போதை தலைக்கேறிய நிலையில் நல்ல பையனாக இருந்த வேலு மழையில் இருளில் கொத்துக்காரி கோமளாவைத் தழுவி அவளு டன் சேர்ந்து அவளையே திருமணம் செய்துகொள்ள வாக்களிக் கிறான். ஆனால் கோமளா பாம்பு கடித்து இறந்து விடுகிறாள். கிராமங் களில் இலைமறைவு காய் மறைவாக நடக்கும் இந்த அரங்கேற்றங் கள் வேலுவையும் விட்டு வைக்கவில்லைவில்லை! இந்த நிகழ்ச்சி நாவலின் இலவச இணைப்பாகச் சேர்க்கப்படுகிறது.
இறுதியில் வேலுவும் சாந்தியும் இணைகிறார்கள் என்றாலும் நாவ லின் ஆரம்பத்திலிருந்து நடைபெறும் நிகழ்சிகள் கொங்கு மண்ணுக்கே உள்ள தனிச்சிறப்போடு வேகமாகச் சொல்லப்படுகிறது. கொங்கு வட்டார நாவல்களில் ‘தலைச்சுமை’க்கு ஒரு சிறப்பிடம் நிச்சயம் உண்டு.
தலைச்சுமை
நாவல் : பழமன்
நிவேதிதா புத்தகப் பூங்கா சென்னை 14 பக்கம் 144, ரூ. 55
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|