தேய்பிறையின் முதல் நாளிலிருந்து
இரா. ரவி
மகாகவி பாரதி சொல்வதைப் போல கூடை கூடையாக எழுதிக் குவிப்பவன் அல்ல கவிஞன். கவிதையாக வாழ் கிறவன் கவிஞன். அதுபோல என்னிடம் மொழிப்புலமை உள்ளது என்பதை பறைசாற்றும் விதமாக பலர் வசன கவிதைக ளாக நூல் முழுவதும் எழுதுவதுண்டு. ஆனால் இந்த நூலில் ஒரு பக்கத்தில் சில வரிகள் சில சொற்கள் மட்டுமே இருந்தாலும் நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைக்கின்றன. பேசுவதைவிட மௌனம் சிறந்த மொழி என்பார்கள். அதுபோல இவர் சொன்ன சொற்கள் தவிர சொல்லாமல் விட்ட சொற்கள் பல பொருள்களைத் தருகின்றன.
கவிதைகளில் பெண்களின் உணர்வுகளை அதிர்வுகளாக பதிவு செய்துள்ளார். நான் பெண்ணியம் எழுதுகிறேன் என எந்த வித ஆர்ப்பாட்டமுமின்றி அமைதியாக அடக்கமாக பெண் ணியம் பாடியுள்ளார். சமுதாயத்தை சாடி உள்ளார். விடியலை தேடி உள்ளார். உள்ளத்து உணர்வுகளை சொற்களால் செதுக்கி உள்ளார்.
‘விற்பனைக்கு’ என்று தொடங்கி ‘நன்றி’ என்று முடித்து 50 கவிதைகள் 50 முத்துக்கள். சிந்தனை சிதறல்கள். இவருடைய கவிதை நடை தெளிந்த நீரோடை போல இருந்தாலும் சில சொற்கள் எரிமலை போன்ற வெப்பத்தை உமிழ்கின்றன.
‘பின்னும் எல்லாம் முடிந்து விட்டது / இனி தீ வளர்த்து / குதித்து உயிர்த்தெழுந்து / நிரூபிக்க வேண்டும்.’ இந்த வரிகள் நமக்கு இராமாயணத்தில் சீதைக்கு இழைக்கப்பட்ட அநீதியை தட்டிக் கேட்கும் குரலாக கேட்கிறது. ‘சித்திரப்பெண்’ கவிதை யைப் படிக்கும்போது நமக்குள் கற்பனையும் வண்ணங்களும் பிறக்கின்றன. மச்சத்தை நட்சத்திரமாகப் பார்த்த முதல் பெண் ரத்திகா மட்டுமே. இந்த உவமை வேறு எந்த கவிஞர்கள் எழுதியும் நான் படித்ததில்லை. வித்தியாசமான உவமை.
‘உருமாற்றம்’ என்ற கவிதையில் கடைசி வரிகள்.... ‘இன்று வரை கிடைக்கவில்லை இழந்தவை / நீ உட்பட’. தலைவனை பிரிந்த தலைவியின் மன ஆதங்கத்தை மிக இயல்பாகவும் நுட்பமாகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் பதிவு செய்துள்ளார்.
‘கிரகணம்’ என்ற கவிதையில் இன்றைக்கு ஆணாதிக்க சமு தாயம் பெண்களை எந்த அளவிற்கு ஒளிர விடாமல் கிரகணமாக மறைத்து வருகிறார்கள் என்பதை கவிதை நயத்துடன் பதிவு செய்து இருக்கிறார். சில பெண் கவிஞர்கள் நவீனம் என்ற பெய ரில் கொச்சையான சொற்களை பயன்படுத்துவதுதான் சிறப்பு என்று வலிய சொற்களைப் புகுத்தி மலிவான விளம்பரம் தேடிக் கொள்ளும் இந்தக் காலத்தில் மிகவும் கண்ணியமான சொற்களி னால் கவிதை வடித்திருக்கும் ரத்திகா பாராட்டுக்குரியவர்.
‘ஒரு பூ’ கவிதைப படித்து முடித்தவுடன் ரோசாப்பூ நம் உடன் நினைவுக்கு வருகின்றது. இதுதான் ஒரு படைப்பாளியின் வெற்றி. ‘என் சொற்கள்’ என்ற கவிதையில் இன்றைய காதலில் ஊடலும் கூடலும் மிகமிக அபத்தமாக உள்ளதை உடைத்துச் சொல்லுகிறார்.
தேய்பிறையின் முதல் நாளிலிருந்து - கவிதைகள் : ரத்திகா
உயிர்மை, சென்னை - பக்கம் 64, ரூ. 40
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|