புவனராஜன் கவிதைகள்
1.
எனக்குத் தெரியும்
என் பயம் என் அப்பாவிற்கு தெரியும்
அப்பாவுக்கு ஆயிரம் கண்கள்
நான் விரும்புகிறேன்
எப்போதும் கருப்பு நிற ஆடையை
என் அத்துமீறல்களின் ஈர்ப்பில்
அவ்வப்போது
அம்மாவை நினைத்துக் கொள்கிறேன்
தோழிகளுக்கு வீதிகளைக் கண்டால் உற்சாகம்
இசை கேட்டால் நடனம்
எங்களுக்குள் தலை திருகி கிடக்கிற
புதிர்மொழி சுழல்கிறது
என்னுள் கிளைக்கும் காட்டுவெள்ள
திரவங்களில்
அழுகிறேன் சிரிக்கிறேன் கண்மயங்குகிறேன்
என் மழலைகளில் எதையும்
சொல்ல முடிவதில்லை
பின்பனிப்போதில்
என்மீது முயங்கும் நாயன்று
இளைத்து கிடக்க
இன்னொரு எரிநட்சத்திரம்
வீழ்கிறது சுவடற்று.
2.
வீட்டுத் திண்ணையில்
இறக்கி வைக்கப்பட்ட மொடாப்பானை
உதிர்ந்து கொண்டிருக்கிறது
இன்னும்
புராதன நம்பிக்கை கொண்டு
முயற்சிக்கிறாள்
வளரும் குழந்தைகள் கவலையளிக்க
விழுதூன்றும் கூன் முதுகுகளுக்கு
எதுவும் விளங்கவில்லை இவள் நிமிர்தல்
அவனிருந்தான் எப்போதுமாக
இப்போதும்
அவனுக்கான அவசர வேலைகள்
இருந்துகொண்டேயிருக்கிறது
ரத்தின வைரக் கற்கள் விளையும் காலம் தேடி
அபூர்வ பொருட்களின் சுழல்வில்
பூமி பூசணிகள் பூக்கும்
ஏக்கர் கணக்கில் நிலங்கள்
சில சமயங்களில் ஜோதிடம் சொல்லி
இயல்பிற் திரிகிறான்
கடன் பணத்தை தொலைத்தும்
பணம் சம்பாதிக்கும் சூழ்ச்சிகளை கூவி கூவி
நீத்ததின் கணம் அறியாத
இலகுவாய் மிதத்தலுறும் அவன்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|