கவிஞர் சிற்பியின் கவிதைகள் குறித்த ஒரு திறனாய்வு
பி.மருதநாயகம்
தமிழ்க்கவிதை புனைவு முயற்சியில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆழ்ந்த ஈடுபாடு காட்டி வருபவர், கவிஞர் சிற்பி. மகாகவி பாரதியின் வழித்தோன்றலாக முழுமையான ஈடுபாட்டுடன் அந்த முயற்சியில் இயங்கி வருபவர். கவிஞர் சிற்பியின் கவிதைகளை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களும், கவிஞர்களும், திறனாய்வாளர்களும் பலவகைப்பட்ட கோணங்களில் ஆய்வுகளைச் செய்துள்ளனர். சிற்பியின் படைப்புக்கலை, சிற்பியின் படைப்புலகம், சிற்பியின் கவிதை வளம், சிற்பியின் கருத்தியல் வளம், கோபுரத்தில் ஒரு குயில் போன்ற தனி நூல்கள் வெளியாகியுள்ளன. தற்போது "Sirpi Poet as Sculptor" என்ற விமர்சன நூலை முன்னாள் பாண்டிச்சேரி பல்கலைக்கழக ஆங்கிலத்துறை தலைமைப் பேராசிரியர் டாக்டர் மருதநாயகம் எழுதியுள்ளார்.
நெருடல் இல்லாத வளமான ஆங்கில மொழி நடையில் கவிஞர் சிற்பியின் கவிதைகளை அவற்றின் ஒவ்வொரு நுணுக்கங்களுடனும் ஆய்வு செய்து அவரது கவிதைப் படைப்புத் திறனை வெளிப்படுத்தியிருக்கிறார். பாரதி, பாரதிதாசன் போன்றவர்களின் மரபுவழிக் கவிதை ஆக்கத்தைப் பின்பற்றினாலும் கவிஞர் சிற்பி தனக்கே உரிய தனித்தன்மைகளை அவர் கையாண்டுள்ள கவிதைக் கருத்துக்களின் வாயிலாக நிலைபெறச் செய்திருக்கிறார் என்ற கருத்தைத் திறனாய்வாளர் நிலைப்படுத்தியிருக்கிறார்.
கவிஞர் சிற்பியின் சுய வெளிப்பாட்டு முறைகளையும், பலவகையான கவிதை வரிகனையும் அங்கங்கே ஆங்கில மொழிபெயர்ப்பில் தெளிவாகப் புலப்படுத்தி, அவருடைய பன்முகக் கண்ணோட்டத்தை மிகுந்த நுட்பங்களுடன் விளக்கிக் காட்டுகிறார். கவிதைகளின் தனித்தன்மைகளில் நிறைந்திருக்கும் மாறுபட்ட வெளிப்பாட்டு மொழிகளைத் திறனாய்வாளர் கூர்மையாகக் கவனித்து ஒவ்வொன்றையும் இனம் காட்டுகிறார். தொன்மங்களை அவர் தேர்ந்தெடுத்துக்கொண்டு தன்னுடைய நிகழ்காலக் கண்ணோட்டத்தில் எப்படியெல்லாம் கவிதைகளின் வாயிலாக வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதைத் திறனாய்வாளர் தகுந்த ஆதாரங்களோடு நிரூபணம் செய்திருக்கிறார்.
புதுக்கவிதை முயற்சிக்கு வந்த கவிஞர் சிற்பி வடிவத்தை தன்னுடைய ஒவ்வொரு கருப்பொருளுக்கும் ஏற்றபடி எப்படி உருவாக்கியிருக்கிறார் என்பதைத் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் அடையாளப்படுத்தியிருக்கிறார். இயற்கை, தனிமனிதன், சமூகம், வாழ்வியல், அறிவியல் போன்ற பல வகைப்பட்ட மாறுபட்ட, முரண்பட்ட தளங்களில் கவிஞர் சிற்பி இயங்கியுள்ள தன்மைகளை விருப்பு வெறுப்பு இல்லாமல் புலப்படுத்தியிருப்பது வியப்பிற்குரிய ஒரு செய்தியாக இருக்கிறது.
சாராம்சத்தில் திறனாய்வாளர் குறிப்பிட்டுச் சொல்வது இதுதான்: Sirpi is also a very inventive and technically audacious writer, whose chief weapon is metaphor. Even when the subject is light, he can playfully accumulate metaphors that one simple and complex, direct and mixed.
இதுபோன்ற திறனாய்வு நூல்கள் தமிழ்மொழியில் நிறைய எழுதப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பைத் தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது இந்த ஆங்கில நூல்.
(வெளியீடு : நந்தினி பதிப்பகம், 169ஏ, 6வது தெரு விரிவு, காந்திபுரம், கோவை 12. ரூ. 100)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|