உலக முதலீட்டாளர்கள் வெளியே வரும்போது...
உமா மஞ்சப்பாரா
மனித உரிமை குறித்த THE TAKE எனும் படம் ஐ.எம்.எஃப் மற்றும் உலக வங்கியால் இயக்கப்படும் சமகால வளர்சிக்கான நடைமுறைகளை விமர்சிக்கும் படமாகும். இத்திரைப்படம் கூட்டுறவு அமைப்புகள் மூலம் பொருளாதார வளர்ச்சியை சாதிக்க ஒரு மாற்று ஏற்பாட்டை முன்வைக்கிறது.
இது அர்ஜென்டைனாவின் முன்னாள் தலைவர் மெனெம் கையாண்ட உலகமய முதலீட்டுக் கொள்கைகளால் அந்நாட்டுக்கு நேர்ந்த கதியை மையப்படுத்திக் காட்டும் ஒரு தீவிர படைப்பாகும். உலகமய முதலீட்டாளர்கள் தங்கள் தொழிற்சாலைகளை மூடிவிட்டு நாட்டைவிட்டு வெளியேறியதால் ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழந்த சமயத்தை இந்த திரைப்படம் சித்தரிக்கிறது. இப்படத்தின் இயக்குநர் லூயின் சொல்கிறார், ‘2004 மே மாதத்தில் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. நடுத்தர வர்க்கம் வறுமைக் கோட்டுக்குக் கீழே இறங்கிவிட்டது. உற்பத்தி செய்யத் தேவையான உழைப்பு வாய்ப்புகள் மூன்றாம் உலகத் தொழிலாளர்களுக்குப் போய்விட்டதன் விளைவாகத் தற்போது கனடாவில் ஏற்பட்டுள்ள நிலைதான். இவ்விரண்டு நாடுகளுக்குமுள்ள ஒரே வேற்றுமை கனடாவில் இந்த மாற்றம் மெதுவாக நிகழ்கிறது; அர்ஜன்டைனாவிலோ இது வெகு விரைவாக, திடீரென்று நிகழ்ந்துவிட்டது. இதன் விளைவாக தெருக்கலவரங்கள் நேர்ந்தன. ஏறக்குறைய ஐந்து வாரங்களில் ஐந்து தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்’ அவர் தொடர்ந்து சொல்கிறார், ‘நாங்கள் ஒரு கட்டுரையை விட அதிக விவரங்களைத் தெரிவிக்கும் ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க விரும்பினோம். நௌமியும் நானும் எங்கள் வாழ்க்கையில் நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கிறோம். ஆனால் எங்கள் கருத்தை வலியுறுத்தும் ஒரு மானுடக் கதை - ஒரு மானிட நாடகம் - தான் சரியான வழி என்று முடிவு செய்தோம்’
"Forje San Marfin" ஐந் சேர்ந்த, வேறு வழியற்ற தொழிலாளர்கள் ஸ்போர்ஜ் தொழிற்சாலைகளின் கட்டமைப்பைக் காவல் காத்துக்கொண்டு, அதே சமயத்தில் அவற்றை தொழிலாளர் கூட்டுறவு அமைப்பு மூலம் இயக்கும் நோக்கத்துடன் நீதிமன்னறத்துடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள். அதே சமயத்தில் அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு நம்பிக்கையூட்டி அவற்றைக் காப்பாற்றவும் முயற்சி செய்கிறார்கள். அவர்கள் Janon Ceramics என்ற ஓடு தயாரிக்கும் தொழிற்சாலையையும் Bruck என்ற துணித் தொழிற்சாலையையும் நடத்தி வருகிறார்கள். அவர்கள் இவ்வாறு தொழிற்சாலைகளை கைப்பற்றிக் கொள்வதை நீதிமன்றம் அனுமதிக்காத நிலையில் அவர்கள் நாடாளுமன்றத்தை அணுக நேர்கிறது. இதற்கிடையே நாம் Carlis Menem மற்றும் Neslor Korchmer Menem-இன் தேர்தல் பிரச்சாரத்தைப் பார்க்கிறோம்.
முதலீட்டாளர்களின் ஆதரவைப் பெற்ற KORCHMER முதல் சுற்றில் வெற்றி பெறுகிறார். இதற்கிடையில் தொழிலாளர்களால் நடத்தப்பட்டு வரும் துணித் தொழிற்சாலை தொடர்பின்றி துண்டிக்கப்படுகிறது. அதன் தொழிலாளர்களின் நிலைமை கேள்விக்குள்ளாகிறது. இறுதியில் San Martin இயங்கத் தொடங்குகிறது. தொழிலாளர்கள் துணித் தொழிற்சாலையை இயக்க அனுமதிக்கப்படுகின்றனர். கிர்ச்னர் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
சொரிஸ் சொல்கிறார் : ‘இடிந்துபோயிருந்த தொழிலாளர்கள் கண்ணீர் மல்கும் தங்கள் மனைவியின் கண்ணுக்கு முன்னால் தங்கள் தன்னம்பிக்கையை மீண்டும் பெறுவது ஒரு சிலிர்க்கச் செய்யும் மாற்றமாகும். அது மட்டுமல்ல, தொழில் முனைப்பின் உந்துதலிலிருந்து, பிழைத்திருப்பதற்காகச் செய்யப்படும் தனி மனித முயற்சி வரை நம்மை இட்டுவந்துள்ள சிக்கலான சக்திகளின் மிகத் தேவையான மனித சித்திரத்தை இந்தப் படம் நமக்கு அளிக்கிறது. தொழிலாளர்களால் நடத்தப்படும் பல தொழிற்சாலைகள் இன்று அரசின் விரோதத்தையும் வன்முறையையும் எதிர்கொள்கின்றன. தொழிலாளர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு அரசு அடக்குமுறைக்கு ஆளாகிறார்கள். இதன் விளைவாக தொழிலாளர்கள் தங்கள் பணிமனையிலிருந்து வெளியேற்றப்பட்டு, தொழிலாளர்களால் நிர்வகிக்கப்படும் தொழில்களுக்கு ஆதரவான சட்டங்களுக்காகப் போராடுவதில் தங்கள் சக்தியை செலவு செய்ய நேரிடுகிறது. இவ்வாறு மீட்கப்பட்ட தொழில்கள் சட்டபூர்வமாக நிச்சயமற்ற நிலையிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இந்த கூட்டுறவு அமைப்புகளுக்கு உரிய சட்டபூர்வமான தகுதியை அளிக்கும்படி அரசாங்கத்தை வற்புறுத்துகின்றன’
கிர்ச்னர் IMF உடன் ஓர் உடன்படிக்கை செய்துகொள்ளும் ஒரு தொடர் குறிப்பும் இத்திரைப் படத்தில் இடம்பெற்றுள்ளது.
Mark Weisbrot ‘IMF அர்ஜன்டைனாவுக்காக அழவேண்டாம்’ என்ற தம் கட்டுரையில் எழுதினார் ‘1998 நவம்பரை நினைத்துப் பாருங்கள். பிரேசிலின் நாணயம் மிகவும் மதிக்கப்பட்டது, டாலருடன் அதன் நிலையான நாணய மாற்று மதிப்பு வீழ்ந்துவிடும் என்று பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்த்தார்கள். IMF நுழைந்தது. 42 பில்லியன் டாலர் மதிப்புள்ள கடன்கள் மூலம் பொருளாதாரத்தைக் ‘காப்பாற்றி’, நோயாளிகளின் ரத்தத்தை உறிஞ்சுவதற்கு அதன் வழக்கப்படி அட்டைகளைப் பயன்படுத்தியது, அதாவது அதிக வட்டி விகிதங்கள் மற்றும் பட்ஜெட் வெட்டுகள் மூலம் பொருளாதார முன்னேற்றத்தைக் குறைத்து அதற்கேற்ப இசைவு (agreement) செய்து கொள்ளும் சுமையை ஏழைகள் மேல் சுமத்தியது. இரண்டே மாதங்களில் பிரேசிலின் ‘ரியல்’ விழுந்துவிட்டது. IMF திட்டத்தின் அடையாளமாகக் கணிசமான அன்னியக் கடனும் தேங்கிவிட்ட பொருளாதாரமுமே மிஞ்சி நிற்கின்றன’.
சில மாதங்களுக்குப் பின்னர் Mark Weisbrot IMF எப்படி அர்ஜன்டைனாவை மூழ்கடித்தது என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார் ‘ஆனால் அர்ஜன்டைனா போல் ஒரு நிலையான நாணய மாற்று விகிதத்தை ஏற்றுக்கொண்ட ஒரு நாட்டின் நிலை இதைவிட மோசமானது. பீசோவின் மதிப்பு குறையப் போகிறது என்று முதலீட்டாளர்கள் நம்பத் தொடங்கினால் அவர்கள் மேலும் மேலும் வட்டி விகிதங்களை உயர்த்திக்கொண்டு போவார்கள். இந்த அபரிமித வட்டி பொருளாதாரத்தைக் குலைக்கும். நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து அர்ஜன்டைனா மீளாதிருக்க முக்கிய காரணம் இதுதான். ஒரு நாடு தன் மிகைப்படுத்தப்பட்ட நாணய மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ள அதற்கு நிறைய டாலர் இருப்பு தேவைப்படுகிறது. ஒருவன் தன் ஒரு பீகோவுக்குப் பதிலாக ஒரு டாலர் வேண்டுமென்று கேட்டால் அதைக் கொடுக்க அரசாங்கம் உத்தரவாதம் அளிக்க வேண்டும். IMF-ன் பங்கு அவ்விசயத்தில் மிகவும் முக்கியம். அது அர்ஜன்டைனாவின் பீகோவைக் காப்பாற்ற கணிசமான கடன்கள் கொடுத்தது. இதில் சென்ற ஆண்டு அளிக்கப்பட்ட 40 பில்லியன் டாலரும் அடக்கம். தான் எப்போதுமே இந்த நிலையான நாணய மாற்று விகிதத்தையும் கணிசமான டாலர் கடன்களையும் எதிர்த்து வந்ததாகவும் அர்ஜன்டைனா அரசுக்கு மகிழ்ச்சியளிக்கவே இவற்றுக்கு இணங்கியதாகவும் IMF கூறுகிறது.
இப்போது தன் நாணயத்தின் மதிப்பைக் குறைத்துக் கொண்டாலும், திருப்பித்தர இயலாத அன்னியக் கடனை திருப்பித்தரத் தவறியதாலும் அர்ஜன்டைனாவின் பொருளாதாரம் சீரடைந்துவிடுமென்பதில் ஐயமில்லை. எனினும் IMF உடன் உறவைத் துண்டித்துக்கொண்டு, நாட்டின் நலனுக்கு உகந்த கொள்கைகளை கடைப்பிடிக்கும் அரசாங்கம் எப்போதும் மக்களுக்குத் தேவை. வெள்ளை மாளிகையின் சார்பாக An Fleischer அர்ஜன்டைனாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு முன்னால் சொன்னார் ‘அர்ஜன்டைனா சரியான கொள்கைகளைப் பின்பற்றி IMF மூலம் செயல்பட வேண்டும். தோல்வி என்பது IMFக்கு சாத்தியமில்லை.’
‘அர்ஜன்டைனாவின் IMF ஒப்பந்தம் புதிய யுகத்தின் விடியலா?’ என்ற தலைப்பிட்ட கட்டுரையில் Alan Cibils எழுதுகிறார் முதலாவதாக இந்த ஒப்பந்தம் அர்ஜன்டைனாவைவிட IMFக்கு அதிகம் தேவையிருந்தது என்று பொரும்பாலானோர் கருதுகின்றனர். மேலும், அர்ஜன்டைனா தன் IMF கடன்களைத் திருப்பித் தராவிட்டாலும் இரண்டு ஆண்டுகள் வரை அதன் IMF உறுப்பினர் பதவி நீடித்திருக்கும். அப்படியிருக்க அது குறுகிய அல்லது ஓரளவு இடைவெளியில் தன் பொருளாதாரத் தடையான IMF ஒப்பந்தத்தை இவ்வளவு அவசரப்பட்டு செய்துகொள்வானேன்?
இரண்டாவதாக, நாட்டின் வறுமை, வேலையின்மை ஆகியவற்றில் தெளிவான தாக்கம் ஏற்படுத்தத் தேவையான வேகத்தில் பொருளாதார முன்னேற்றத்தைச் சாதிக்க கிர்ச்னர் அரசாங்கத்தின் திட்டம் என்ன? 2006ம் ஆண்டில் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ள பொறுப்புகள் வருமானத்தைச் சரியான விநியோகிப்பதற்கும், உள்நாட்டுத் தேவையை முடுக்கிவிடுவதற்கும் தடையாக இருப்பது தெளிவு. நாட்டுத் தலைவரின் சொற்பொழிவுக்கு மாறாக, அரசாங்கம் 1990களில் பின்பற்றிய ‘புதிய தாராள’க் கொள்கையே இப்போதும் பொருளாதாரத் திட்ட அமைப்பில் செல்வாக்குப் பெற்றுள்ளது.
மூன்றாவதாக பொதுமக்கள் வங்கியமைப்புக்கு என்னென்ன சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன? இப்போது அர்ஜன்டைனா மெதுவாக் கடந்து வரும் பொருளாதார, நிதி விபத்து நிலை ஒரு பலமான பொது வங்கி அமைப்பின் முக்கியத்துவத்தைத் தெளிவு படுத்தியுள்ளது. மேலும், தற்போது கடன் வசதியின்றித் திணறிக்கொண்டிருக்கும் சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு ஆதரவாகக் ‘கடன் சந்தை’யை (Credit market) முடுக்கிவிடுவதில் பொது வங்கிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. மேலும் தலைவர் கிர்ச்னரே சுட்டிக்காட்டியபடி IMF கட்டாயப்படுத்தி நுழைந்து நிதியுதவியளித்த கொள்கைகளால்தான் அர்ஜன்டைனாவின் வீழ்ச்சி நேர்ந்தது. ஆகவே, பல்முனைக் கடன்களும் குறைக்கப்பட வேண்டுமென்பதே தர்க்கரீதியான முடிவாகும். ‘கடினச் செலாவணி’யில் (Hard currency) வருமானம் பெறும் ஏற்றுமதியாளர்கள் பொருத்தமான காரணமெதுவுமின்றி அபரிமித லாபம் பெற்றிருப்பதால் இந்த நடவடிக்கை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.
உலகமயமான இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்காது என்ற என் பயங்களை இந்த விவரணைப் படம் வலுப்படுத்தியுள்ளது. இதைவிடப் பெரிய ஆபத்து இந்தியா மீண்டும் ஒரு காலனியாதிக்கத்துக்கு உட்பட நேரலாம். பன்னாட்டு நிறுவனங்கள் திடீரென ஒருநாள் பெங்களூருவை விட்டு வெளியேறிவிட்டால் அதன் நிலை என்னவாகும் என்று நான் அடிக்கடி கவலைப்படுகிறேன். முக்கியமாக நடுத்தர வர்க்கத்தினர் பெற்றுவரும் கொழுத்த சம்பளம் போய்விடும். நகரின் வேலைவாய்ப்புகள் போய்விடும். தொழிலாளர்களின் செயல்முறைகள் எனக்கு நம்பிக்கையளித்தன. பிழை திருத்தல் என்பது தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ஒரு வழிதேடிக் கொள்ளும், இந்தியா வெளிநாட்டு முதலீடுகள் பற்றிய தன் பொருளாதாரக் கொள்கைகளைத் தளர்த்திக் கொள்ள வேண்டுமென்று கனடா கேட்டுக்கொண்டிருப்பதாக அண்மையில் படித்தேன். இந்தியர்கள் உலகமயமாக்கலுக்காக தங்களை விற்றுவிடக் கூடாது என்று இந்த விவரணப்படம் குரலெழுப்புகிறது. மீண்டும் ஒரு ‘மஸ்லின் கதை’யா? நைலானையும் போல்யெஸ்டரையும் விற்பனை செய்வதற்காக நெசவாளர்களின் கட்டைவிரலை வெட்டும் கதையா?, இந்தியா சரியான பொருளாதாரக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் இத்தகைய ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு இடமளிக்காமல் அவற்றை எதிர்கொள்ளத் தயாராகும்.
ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் : சு. கிருஷ்ணமூர்த்தி
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|