கரீபியக் கவிதைகள்
மெர்வின் மாரிஸ் / தமிழில் : ரா.பாலகிருஷ்ணன்
நார்சியஸ் (அ) பிரதிபலிப்பு
அவர்கள் புறங்கூறுகின்றனர்
அவன் தன் நிழலை என்றும்
நேசித்ததில்லை, அது வேறொன்று
என்று அதன் கழுத்தை நெறிக்கப்
பாய்ந்தான் _ நேசமன்று _ கொலைவெறி
ஆம். நகர்ந்து செல்லும் இந்நீரில்
கண்ட அதனை அவன் அழிக்க முற்பட்டான்.
நீர்ப்பரப்பு இப்போது உடைந்து விட்டது
மாயையற்ற விழிகள் தம்
விழிப்புணர்ச்சிக்குள் மீண்டன.
நிச்சயமாக நம்மால் அங்கு காணப்பட்ட
அதன் நாம் என்றும் அழிக்கவியலாது
என்று உணர்ந்ததும்
அவன் வெட்கத்துடன் புதைந்தான்
ஒரு மஞ்சள் வண்ண அடிவயிறு
கொண்ட ஒரு பூவில் அவன்
இவ்வாறு ஒடுங்கினான்.
குளம்
இக்குளம் ஆங்கே அந்தக் கிராமத்தில்
சின்னஞ்சிறு குழந்தைகள் மற்றும் பிணியுற்றிருந்த
அவனும் அதனருகே செல்ல அனுமதிக்கப்படவில்லை
அவர்கள் கூறினர், ‘ஆழங்காணவியலாதது இக்குளம்
மனிதர்கள் மிருகங்களை அது விழுங்கியுள்ளது’
அதன் ஆழத்தில் மரங்களில் ஊர்ந்து செல்லும்
விஷப்பல்லிகள் பெயரற்ற பயங்கரங்கள்
காணப்படுவதால் அறிவுள்ள சிறுவர்கள் ஒதுங்கிக் கொண்டனர்.
அவநம்பிக்கைகளால் சூழ்ந்த இச்சிறு பையன்
என்றும் அதனிடத்திருந்து விலகியிருந்தான் _ அச்சம் புடைசூழ
அன்று ஒரு மழைசூழ்ந்த வேனில் புற்கள் ஓங்கி வளர்ந்த
அக்காலம், புரளும் சேறுநிறைந்த சறுக்கும் தரை
பெரிதும் சித்தரிக்கப்பட்ட அதன் ஓரத்தை அவன் அடைந்தான்.
ஆழ்ந்த இக்குளம் கருமையடர்ந்து கிடந்தது
மேகத்திலிருந்து விடுபட்ட சூரியனின் ஒளி
அதில் நிறைந்து வீழ்ந்தது நடுங்கும் பளிங்கு நீரின்
பரப்பில் குற்றமும் பயமும் நிறைந்த அவன் முகம்
திடீரென ஒளிர அவன் கண்டான்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|