மயூரா ரத்தினசாமி கவிதைகள்
மின்விசிறியின் மூன்று இறக்கைகள்
I. எழுத்துக்களின் தனிமை கண்டு பதறி
அதை வார்த்தைகளாக்கினான்
வார்த்தைகளின் தனிமையை சொற்றொடர்களாலும்
சொற்றொடர்களை பாக்களாகவும்
பாக்களை காவியங்களாகவும்
இணைத்துக்கொண்டே போனவன்
அதை மொழியிடம் ஒப்புவித்து
தனதறை மீண்டான்.
II. புழுக்கம் மிகுந்த ஒரு மின்வெட்டு இரவில்
கவிஞனில்லாத மொழியும்
மொழிதலில்லாத கவிஞனும்
தனிமைப்பட்டு தற்கொலை செய்துகொள்வார்களென
கையப்பமிடும் அவனை உற்றுப் பார்த்தன
தங்களுக்குள் கைகுலுக்கவியலாத
மின் விசிறியின் மூன்று இறக்கைகள்.
III. அவன் காலத்தை
சுத்தியலொன்று பிளக்கும் ஓசை
பிணவறை தாண்டி எதிரொலித்தபடியிருக்கிறது.
(ஸ்டெல்லா புரூஸ்க்கு)
எங்கும் இருக்கும் ஓர் அறை
மேலிருந்து நிரம்பும் ஒட்டடைகள்
அண்டக்கூரையைப் பிடித்துத் தொங்கியபடி
கீழிறங்குகின்றன.
தினமும் முட்டிதேய தவழ்ந்துதான்
எனதறைக்குள் சென்று திரும்புகிறேன்
ஒருநாள்
ஒரேயரு நாள்
நான் எனதறைக்குத் திரும்பாவிட்டாலும்
ஒரு நாள் ஒரேயரு நாள்
அதிகப்படியாக நான்
எனதறையிலேயே தங்கி விட்டாலும்
தவழும் இடத்தையும் ஆக்கிரமித்து
என்னைக் கொன்று விடலாம்
அல்லது வெளித்தள்ளி விடலாம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|