கோசின்ரா கவிதைகள்
சாட்டைகளின் சாத்திரம்
எல்லோரும் பார்க்கும் படியாயிருந்த
சாட்டை தொலைந்து விட்டது.
அரண்மனையின்
பலிபீடத்திலிருந்தது ஒரு காலத்தில்
மன்னராட்சி ஒழிக்கப்பட்ட பிறகு
ஜமீன்தார்களின் காலம் முடிந்தபிறகு
சாட்டையும் வெளியேறிவிட்டது.
அந்தச் சாட்டையின் நகல்
வீடுகளில்தொங்கிக் கொண்டிருக்கிறது.
விருந்தினர்களை பயமுறுத்திக் கொண்டு
ஜனநாயக நாட்டில்
சாட்டைகளில்லாமல்
நடமாடிக் கொண்டிருந்தார்கள் மக்கள்.
சாட்டைகள் மனிதனின்
மாமிசத்தைத் தின்ற தெல்லாம்
பழைய காலம்.
இப்போது சாட்டைகள்
அலங்காரப் பொருளாகிவிட்டது
அரசியல்வாதிகள்
நடிகர்கள் அவ்வப்போது
சொடுக்குவார்கள் சாட்டையை
எல்லாம் நடிப்புத்தான்.
அப்புறம் சாட்டைகள்
யார் கண்ணிலும் படவில்லை.
இனி வரலாற்றாசிரியர்கள் எழுதுவார்கள்
சாட்டைகளின் காலம் முடிந்து
பதவிகளின் காலம் தொடங்கிவிட்டதென்று.
சாபங்கள்
சாபமிட வைக்க
காரணங்கள் இருக்கலாம்.
சுயபச்சாதாபத்திற்காகவோ
அடக்குமுறைக் கெதிராகவோ
சாபங்கள் வருகின்றன
ஒரு நாட்டின் மீதோ
ஒரு நகரத்தின் மீதோ
ஒரு சமூகத்தின் மீதோ
சாபங்கள் விழுவதில்லை.
தலைமுடி அவிழ்த்து
பின்பு முடிந்து கட்டும் சாபங்கள்
சாமான்யனை
வீதியில் நிறுத்துகின்றன.
கற்பு குறித்தான சாபங்கள்
பெண்களை வட்டமிடுகின்றன.
கடவுளைக்கூட
சாபமிட்டவள் இருக்கிறார்கள்.
இப்போது _
சாபங்கள் குறைந்துவிட்டன.
ஏகாதிபத்தியத்தின் மீதோ
தீவிரவாதிகள் மீதோ
மக்களை நசுக்கும்
கறுப்புச் சட்டங்கள் மீதோ
சாபங்கள் விழுந்திருக்கலாம்
எரி நட்சத்திரத்தைப் போல.
சாப விமோசனங்களுக்காக
யுத்தங்கள் நடத்தப்படுவதில்லை.
அணுகுண்டுகள் வெடிப்பதில்லை.
சாபமிடுபவர்கள் இன்னுமிருக்கலாம்.
ஆனால் _
சாபங்களின் காலம்
முடிந்து போயிற்று
மண்ணோடு மண்ணாக.
இது
போராட்டங்களின் காலம்.
போராட வேண்டும்.
போரட்டம் தீர்மானிக்கும்
உன் விடுதலையையும்
உன் உரிமையையும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|