அதனை மட்டும் சொல்லாதீர்கள்!
அடரிருள் வீட்டின் ஒரு மூலைப் பகுதியில்
வெண்ணிற சேலையணிந்து
மெல்ல மெல்ல அடியெடுத்து வைக்கிறாள்
நிலவதனி..
கொலுசுமல்லாது வளையுமல்லாது
சுவாசச்சத்தம் மட்டும் முழுதாய் நிறைத்திருக்கிறது
இந்த இரவின் நிமிடங்களை...
தாழம்பூ மணக்க ஒவ்வொரு அடியிலும்
கூந்தல் தவழும் இடையில்
செருகி வைத்திருக்கும் சிரிப்புகளை
திடீரென வெளியிடுகிறாள்..
எதிரொலியின் வீரியத்தில் சிரிப்புத்துகள்கள்
சிதறி அச்சமெனும் சிறகுகளணிந்து
படபடத்துப் பறக்கின்றன அறை முழுதும்...
அவள் நடை என்றோ இறந்த உங்கள்
தோழியோருத்தியையோ
உறவினளையோ
நினைவூட்டக்கூடும்...
உங்களை நினைவுலகில் மிதக்கவிட்டு,
முகத்தினை மட்டும் மறைத்தே வைத்திருக்கும்
நிலவதனியைப் பேயென்று சொல்வதுண்டு
சிலர்..
இப்படியான நிலவதனிக்கு
இராப்பேய்கதைகள் எப்படியிருக்கும்?
அதை மட்டும் எவரிடத்தும்
உரக்கச் சொல்லாதீர்கள்!!
- தேனப்பன் [இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.]
நறுமண இளவரசியின் இரவு நிழல், கவிதையாய்ப் படர்கிறது கொலுசுமல்லாது வளையுமல்லாது...
RSS feed for comments to this post