இந்தியா முழுவதும் அறியப்பட்ட சிந்தனையாளர். சாதி ஒழிப்பிற்கான சமரில், தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளவர். ஆந்திராவில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த இவர், "நான் இந்து அல்ல' என்று அறிவித்தவர். கல்வி மறுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்த காஞ்சா அய்லைய்யா, இன்று உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் அரசியல் துறை தலைவர். சாதி எதிர்ப்பு குறித்து பல்வேறு நூல்களை எழுதியுள்ள இவர், பார்ப்பனிய சமூக அமைப்பால் கடும் பாதிப்புகளை சந்திக்கும் தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மக்கள், சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக அறிவார்ந்த தளத்தில் இடையறாது குரல் கொடுத்து வருகிறார்.

அதிகார வர்க்கத்திற்கும், ஆதிக்க சாதிகளுக்கும் உறைக்கும் வண்ணம் ஆங்கில பத்திரிகைகளில் சமூக நீதிக் கட்டுரைகளை எழுதி வரும் அய்லைய்யா, தலித்துகள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிரான பிரச்சாரத்தை, கடந்த 25 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறார். இவருடைய Why I am not a Hindu, God as a political philosopher, Buffalo Nationalism ஆகிய நூல்கள் பல பதிப்புகளைக் கண்டிருக்கின்றன. "நான் ஏன் இந்து அல்ல' என்ற இவருடைய புகழ்பெற்ற நூல், தலித் - பெரும்பான்மை மக்கள் பார்வையில் இந்து மதத்தை கடும் விமர்சனத்திற்குள்ளாக்கியது. இந்நூல் தமிழிலும் வெளிவந்துள்ளது.

"பாம்செப்' அமைப்பின் ஆவணப்படம் ஒன்றுக்காக எடுக்கப்பட்ட இந்நேர்காணல், அவர்களுடைய அனுமதியுடன் "தலித் முரசில்' வெளியிடப்படுகிறது.

சந்திப்பு : டாக்டர் பி.டி. சத்யபால், ஆர்.ஆர். சீனிவாசன்

தமிழில் : கவின் மலர்

kancha_ilaiah_350உங்கள் பின்னணி குறித்து தெரிந்து கொள்ளலாமா? சொந்த ஊர், கல்வி பின்புலம் போன்றவை குறித்து கூற முடியுமா?

அது ஒரு சுவாரஸ்யமான கதை. நான், ஆந்திர மாநிலம், வாரங்கல் மாவட்டத்திலுள்ள பாப்பையாபேட்டை என்கிற சிறிய கிராமத்தில் பிறந்தேன். எங்கள் ஊர் ஓர் உள்ளடங்கிய கிராமம். நான் பிறந்தபோது, எங்கள் ஊரில் பள்ளிக்கூடம் கிடையாது. 50 களின் பிற்பகுதியில்தான் ஓர் ஓராசிரியர் பள்ளி செயல்படத் தொடங்கியது. ஆனாலும் கூட நானோ, என்னுடைய சகோதரரோ, சகோதரியோ பள்ளிக்குச் செல்லவில்லை. ஏனெனில், "குருமாக்கள்' என்றழைக்கப்படும் இடையர் சாதியைச் சேர்ந்தவர்கள் நாங்கள். எங்கள் சாதியில் பிறந்த குழந்தைகளை கல்வி கற்க பள்ளிக்கு அனுப்பினால், சரஸ்வதி அவர்களை கொன்று விடுவாள் என்ற தீவிரமான நம்பிக்கை இருந்தது. என் பெற்றோரும் அப்படியே நம்பினார்கள். அதனால் என் பாட்டி எங்களை பள்ளிக்கு அனுப்பக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தார். ஆனால், எங்கள் ஊரில் உள்ள பள்ளிக்கு அப்போது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் ஆசிரியராக வந்திருந்ததால், எங்கள் அம்மா எங்களை பள்ளிக்கு அனுப்ப விரும்பினார். அதன் பிறகு நாங்கள் பள்ளி செல்லத் தொடங்கினோம். அங்கு நான் அய்ந்தாம் வகுப்பு வரை படித்தேன். அதன் பிறகு அருகில் உள்ள சற்று பெரிய கிராமமான குண்டூரில் ஆறாம் வகுப்பு படிக்கச் சென்றேன். அங்குதான் என் சகோதரர்களுடன் நான் சமைத்து உண்ணப் பழகினேன். அங்கே ஒரு நிலப்பிரபு இருந்தார். அவர்தான் சீட்டு அளித்து, ஒவ்வொரு மாணவரையும் பள்ளியில் அனுமதிப்பார்.

எனக்கு நிக்கர், கால்சட்டை போன்ற உடைகளை அணிந்து பழக்கமில்லை. வேட்டி அணிந்துதான் நான் பள்ளிக்குச் சென்றேன். அந்த நிலப்பிரபு எனக்கு "ஸ்கவுட்' சீருடையையும், ஷûக்களையும் கொடுத்தார். ஒருநாள் அவர் "ஸ்கவுட்' மாணவர்களை மேற்பார்வையிட வந்தார். அன்று பார்த்து நான் தாமதமாக வந்து சேர்ந்தேன். பள்ளி உதவியாளரிடம் என்னை அழைத்து வரச் சொன்னார். ஒரு மரத்தடியில் அவர் நின்று கொண்டிருந்தார். நான் அங்கு சென்றேன். “ஏன் தாமதமாக வந்தாய்?'' என்றார். “சமைத்துவிட்டு வரவேண்டியிருந்ததால் தாமதமாகிவிட்டது'' என்றேன். “தாமதமாக வருபவர்களை ஏற்றுக் கொள்ள முடியாது'' என்ற அவர், உதவியாளரிடம் என் "ஸ்கவுட்' உடையையும் ஷûக்களையும் கழற்றுமாறு உத்தரவிட்டார். உதவியாளரும் அவ்வாறே செய்ய நான் அதிர்ந்து போனேன். அழத்தொடங்கினேன். நிலப்பிரபுத்துவத்தின் விதிகளால் முதன்முதலில் நான் தண்டிக்கப்பட்ட அனுபவம் அது.

நர்சிம் பேட்டை என்கிற ஊரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் சேர்வதற்காகச் சென்றேன். பள்ளியின் தலைமை ஆசிரியர் என்னை எட்டாம் வகுப்பில் அனுமதித்து, சீட்டு ஒன்றைக் கொடுத்து வகுப்பாசிரியரிடம் கொடுக்கச் சொன்னார். நான் வகுப்பிற்குச் சென்று அவரிடம் ஒப்படைத்துவிட்டு நின்றேன். அவர் சீட்டைப் பார்த்தார், என்னையும் பார்த்தார். “இங்கே பார்! இந்த அய்லைய்யா, மல்øலய்யா, பொன்னய்யாக்களுக்கெல்லாம் என் வகுப்பில் இடமில்லை. உங்களுக்கெல்லாம் படிக்கவோ, எழுதவோ வராது. என் வகுப்பில் நீங்களெல்லாம் ஒரு சுமையாக இருப்பீர்கள். தலைமையாசிரியர் எதற்காக இவர்களையெல்லாம் என் தலையில் கட்டுகிறார்?'' என்று அலுத்துக் கொண்டார்.

நானோ கைகளைக் கட்டியவாறு அங்கேயே நின்று கொண்டிருந்தேன். அவரோ “நீ என் வகுப்பிற்குப் பொருத்தமானவனாய் இருப்பாய் என்று எனக்குத் தோன்றவில்லை'' என்றார். நான் மிகுந்த துயரத்துடன் வகுப்பிற்குள் நுழைந்தேன். அவர் எங்களுக்கு இந்தி ஆசிரியர். அடுத்த மூன்றாவது மாதத்தில் காலாண்டுத் தேர்வு முடிந்து விடைத்தாள்களை கொடுக்கும்போது, என் விடைத்தாளை கையில் வைத்துக் கொண்டு என்னைப் பார்த்தார். “ஓ! நீ நிறைய மதிப்பெண்கள் எடுத்திருக்கிறாய்! வகுப்பில் முதலாவதாக வந்திருக்கிறாய்! உன்னைப் போன்ற ஒருவன் வகுப்பில் முதல் மாணவனாய் வருவான் என்று நான் எதிர்பார்க்கவில்லை'' என்றார்.

நிலப்பிரபுத்துவமும் சாதியமும் எப்படியெல்லாம் வேலை செய்கின்றன என்பதன் எடுத்துக்காட்டுகளாக இந்நிகழ்வுகளை கொள்ளலாம். அதன்பிறகு 1969 ஆம் அண்டு நான் பதினோறாம் வகுப்பு பயிலும்போது, தெலுங்கானா கிளர்ச்சி நடந்த நேரம் அது. ஒட்டுமொத்த மாணவர்களும் காப்பியடித்தார்கள். அப்படியும் நான் பள்ளியில் முதல் மாணவனாக வந்தேன். கணக்குப் பாடத்தில் மாணவர்கள் காப்பியடிப்பதற்காக வெளியேயிருந்து வந்த விடைகளை நான் எழுதவில்லை. ஏனெனில், அவை தவறானவையாக இருந்தன. ஆகவே, நான் சொந்தமாக என் விடைகளை எழுதினேன். கணக்கில் 96 சதவிகித மதிப்பெண்கள் பெற்றேன் என்று நினைக்கிறேன்.

கல்லூரிப் படிப்பை எங்கு பயின்றீர்கள்?

என் தாயின் மறைவிற்குப் பிறகு என் சகோதரர், தனது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். என் தந்தை மிகவும் வெள்ளந்தியான மனிதர். என் சகோதரர் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். அவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும்போதே திருமணமாகிவிட்டது. அவர் என்னை பி.யூ.சி. பயில, வாரங்கலிலுள்ள கல்லூரியில் சேர்த்தார். அதுவரை தெலுங்கு வழிக்கல்வியில் படித்த நான், முதன்முறையாக ஆங்கிலவழிக் கல்விக்கு மாறினேன். நான் மூன்றாம் வகுப்பில் தேர்வாகியிருந்ததால், மருத்துவப் படிப்பில் என்னால் சேர முடியவில்லை. நான் சேர்ந்ததோ உயிரியல் தொடர்பான படிப்பு. அதை ஆங்கிலத்தில் படிப்பதென்பது சற்றுக் கடினமாக இருந்தது. ஆகவே, பி.ஏ. ஆங்கில இலக்கியத்தை எடுத்துப் படித்தேன். ஆங்கிலம், வரலாறு, அரசியல் விஞ்ஞானம் ஆகியவற்றை பாடமாகக் கொண்டு, என் பி.ஏ. பட்டப் படிப்பை முடித்தேன்.

அரசியல் ஈடுபாடு எப்போதிலிருந்து வந்தது?

kancha_ilaiah_349எனக்கு அரசியல் விஞ்ஞானம் பாடத்தில்தான் மிகுந்த ஆர்வமிருந்தது. ஏனெனில், அப்போது தெலுங்கானா பகுதி முழுவதும் கம்யூனிஸ்ட் இயக்கம் பரவியிருந்தது. தனித்தெலுங்கானாவிற்கான போராட்டங்களும் வலுவாக இருந்த நேரமது. எங்களுக்கு ஒரு முஸ்லிம் ஆசிரியர் இருந்தார். மிகத் தீவிரமான அரசியல் சிந்தனையாளர் அவர். அவர் காரல் மார்க்ஸை வழிகாட்டியாகக் கொண்டவர். நான் அவர்பால் ஈர்க்கப்பட்டேன். முதலாண்டிலிருந்தே தீவிரமாக வாசிக்கத் தொடங்கினேன். அப்போது கட்டுரைப் போட்டிகள், விவாதங்கள் போன்றவற்றில் பங்கெடுப்பவனாயிருந்தேன். எங்களுக்கு ஹர்கோபால் அப்போது ஆசிரியராக இருந்தார். அவரை எங்களுக்கு மிகவும் பிடிக்கும். அவர்தான் நிறைய போட்டிகள் நடத்துவார். முதல் ஆண்டில் நான் நிறைய போட்டிகளில் பங்கெடுத்தேன். “உனக்கு நல்ல சிந்தனைகள் இருக்கின்றன. ஆனால் மொழி உனக்கு கைகூடி வரவில்லை'' என்றார் அவர். அதனால் முதல் ஆண்டிலேயே ஆங்கிலத்தில் படிக்கவும் கற்றுக் கொள்ளவும் தொடங்கினேன்.

இரண்டாம் மூன்றாம் ஆண்டுகளில் நான் போட்டிகளுக்குச் சென்றபோது, அனைத்துப் பரிசுகளும் எனக்கே கிடைத்தன. எங்கள் கல்லூரிக்கு எதிரில் இருந்த நூலகத்தில் நான் நிறைய நூல்களை வாசித்தேன். மிகத் தீவிரமாக ஆங்கிலத்தைக் கற்றுக் கொண்டேன். அய்.ஏ.எஸ். தேர்வெழுத விரும்பினேன். ஏனெனில், ஆந்திராவின் முதல் தலித் தலைமைச் செயலாளரான காக்கி மாதவராவ், அப்போது வாரங்கல் மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக இருந்தார். அவருடைய அலுவலகம் எங்கள் கல்லூரிக்கு மிக அருகில்தானிருந்தது. அவர் குறித்த செய்திகளை ஆவலுடன் கேட்போம். அவர் எப்படி நிலச்சுவான்தார்களை கையாளுகிறார்; அவர் எப்படியெல்லாம் ஏழை மக்களுக்கு, விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு; துன்புறும் மக்களுக்கு உதவுகிறார் என்பது குறித்து நிறைய செய்திகள் எங்கள் காதுக்கு வரும். இதையெல்லாம் கேட்டு, கேட்டு எனக்கும் கலெக்டராக வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது.

அதன் பிறகு நான் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பயில வந்தேன். உஸ்மானியாவில் எப்போதுமே மாணவர்களிடையே அரசியல் இயக்கங்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். வலுவான தீவிர இடதுசாரி இயக்கம், உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இருந்தது. நான் அதன் உறுப்பினராகச் சேர்ந்தேன். வாரங்கலில் இருக்கும்போது ஆங்கில நூல்கள் நிறைய படிப்பேன். ஆனால், ஆங்கிலத்தை எப்படிப் பேசுவது என்று கற்றுக்கொள்ள எனக்கு ஒரு வானொலி இல்லை. நாங்கள் நான்கைந்து பேர் ஒரு சின்ன அறையில் தங்கி, நாங்களே சமைத்து சாப்பிட்டு வந்தோம். அதிகாலையில் நான் பாத்திரம் கழுவுவேன். சமைக்கும் வேலையை என் நண்பர்களிடம் விட்டுவிட்டு, நான் நூலகத்திற்குச் சென்று படிப்பேன். திரும்ப வந்து சாப்பிட்டுவிட்டு வகுப்புக்குச் சென்றுவிடுவேன். மாலை வேளைகளில் சமூக நலத்துறை விடுதிக்குச் சென்று, அங்குள்ள வானொலிப் பெட்டியில் ஆங்கிலச் செய்திகள் கேட்பேன். அதிலிருந்துதான் ஆங்கில உச்சரிப்பை கற்றுக் கொண்டேன்.

இந்நிலையில்தான் எம்.ஏ. பயில்வதற்கு உஸ்மானியா பல்கலைக்கழகத்திற்கு வந்த நான், முற்போக்கு மாணவர் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்தேன். அதன்பிறகு மார்க்சியத்தை தீவிரமாக கற்கத் தொடங்கினேன். அப்போது அம்பேத்கர் பற்றி நாங்கள் அறிந்திருக்கவில்லை. மகாத்மா புலே குறித்தும் நாங்கள் அறிந்திருக்கவில்லை. பி.ஏ. பயிலும்போது வகுப்பறையில் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மார்க்ஸை படித்திருக்கிறேன். எம்.ஏ. பயிலும்போதுதான் "கம்யூனிஸ்ட் அறிக்கை' வாசித்தேன். அப்போது இதுதான் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான பிரதி என்று தோன்றியது.

நான் இடையர் சாதியில் பிறந்தவன். ஒரு நிலச்சுவான்தாரால் உடைகளும், காலணிகளும் கழற்றப்பட்டவன். ஒரு ஆசிரியரால், “அய்லைய்யா, புல்லையா, மல்லைய்யாவெல்லாம் கல்வி கற்க முடியாது'' என்று இகழப்பட்டவன். ஆனால் கல்வியில் எனக்கொரு இடம் வேண்டும் என்பதற்காக போராடத் தொடங்கியவன். எனக்கு புரட்சி இன்றியமையாத தேவை என்று தோன்றியது. ஆகவே வாசிப்பு, போராட்டம் என்ற இரண்டு விஷயங்களையும் இணைத்துக் கொண்டு இயக்கத்தில் சேர்ந்தேன். சுவரொட்டி ஒட்டுவது, கூட்டங்களுக்குப் போவது என்று இயக்க வாழ்க்கை இருந்தது.

அந்த நேரத்தில்தான் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. ஒட்டுமொத்த தேசிய அரசியலும் எங்களிடையே தாக்கம் செலுத்த தொடங்கிய அந்த நேரத்தில், அவசரநிலை பிரகடனத்திற்கு எதிரான அரசியலின் பால் ஈர்ப்பு தோன்றியது. அப்போது "என்கவுன்டர்' என்ற பெயரில் முக்கியமானவர்கள் கொல்லப்பட்டனர். எங்கள் வளாகத்திலேயே மாணவர் தலைவர்கள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏட்டளவில் அரசியலைப் பயின்றது மட்டுமல்லாது, நடைமுறை அரசியலிலும் இச்சம்பவங்களினால் ஈர்க்கப்பட்டேன். குடிமக்கள் சுதந்திரத்தில் கவனத்தை செலுத்தினேன். அதன்பிறகு "தர்மில நாகிரெட்டி' குழுவை  வழிநடத்துபவர்களில் ஒருவராக இருந்தேன். அதன்பிறகு 1981இல் அதன் பொதுச்செயலாளர்களில் ஒருவராக ஆனேன். இதற்குப்பிறகு சிவில் உரிமைகள், ஜனநாயக உரிமைகள் தொடர்பான பிரச்சனையில் அதிக கவனம் செலுத்தினேன். அத்துடன் வாசிப்பதும், எழுதுவதும் தொடர்ந்து கொண்டேயிருந்தது.

அம்பேத்கரை எப்போது வாசிக்கத் தொடங்கினீர்கள்?

1985இல் காரம்செடு படுகொலை, ஒட்டுமொத்த ஆந்திராவில் முக்கியமானதொரு திருப்புமுனை. இக்கொலை எங்களின் அரசியல் புரிதலை மாற்றியது. அதோடு எங்களை நாங்களே மறு உருவாக்கம் செய்து கொள்ள வைத்தது. கரம்செடு கிராமத்தில் தலித்துகளாகிய மாதிகா சாதியைச் சேர்ந்த மக்கள், கம்மா சாதியைச் சேர்ந்த நிலப்பிரபுக்களால் கொல்லப்பட்டனர். இது, கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பிரச்சனைகளை உண்டாக்கியது. தீவிர இடதுசாரி இயக்கங்களையும் இது விட்டுவைக்கவில்லை. Oகஈகீ இன் தலைவர் என்ற முறையில், “மாதிகா தொழிலாளர்களை கொடூரமாக படுகொலை செய்த கம்மா நிலப்பிரபுக்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்'' என்று தலைப்பிட்டு ஓர் அறிக்கை வெளியிட்டேன். அனைத்து நாளிதழ்களிலும் அந்த அறிக்கை வெளிவந்தது. கம்மா இனத்தைச் சேர்ந்த எங்கள் இயக்கத்திலிருந்த தலைவர்கள் சிலர், கம்மா என்ற சாதிப் பெயரை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். “எப்படி மாதிகா தொழிலாளர்கள் என்று சொல்வீர்கள்? எப்படி கம்மா நிலப்பிரபுக்கள் என்று சொல்வீர்கள்? வெறுமனே தொழிலாளர்கள் என்றும், நிலப்பிரபுக்கள் என்றும் சொல்ல வேண்டியதுதானே?'' என்றார்கள். நான் அதை மறுத்து வாதிட்டேன். சாதிகளின் பெயர்களை கண்டிப்பாக குறிப்பிட வேண்டுமென்றேன். அவர்கள் கொலை செய்யப்பட்டது, முதலில் மாதிகாக்கள் என்பதால்தான். பிறகுதான் தொழிலாளர்கள் என்பது வருகிறது. அதனால் சாதிப்பெயர் இருக்க வேண்டும் என்று எங்களில் சிலர் நினைத்தோம். கரம்செடு தேசிய அளவில் பேசப்பட்ட பிரச்சனையானது. கரம்செடு இயக்கம் அம்பேத்கரை எங்கள் வாழ்வில் கொண்டு வந்து சேர்த்தது.

அதன்பிறகு அம்பேத்கரை தீவிரமாக வாசிக்கத் தொடங்கினேன். தீவிர இடதுசாரி இயக்கமும் கூட அம்பேத்கரை ஒரு "பூர்ஷ்வா சிந்தனையாளர்' என்றும், "பிரிட்டிஷ் ஏகாதிபத்திய கையாள்' என்றும், கோட் சூட்டோடு தோற்றமளிப்பதால் அவர் ஒரு காலனியாதிக்க பண்பாட்டின் ஆதரவாளர் என்றுமே கூறியது. காந்தியின் அரைநிர்வாணத் தோற்றத்திற்காக காந்தியை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். காந்தி குறித்து நான் மறுபரிசீலனை செய்யத் தொடங்கினேன். அம்பேத்கர் குறித்த புரிதல் தொடர்பாக, நான் இயக்கத்திற்குள் பெரிய போராட்டமே நடத்தினேன். ஆனால் எனக்கும் கூட அம்பேத்கர் குறித்து உறுதியான ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியவில்லை. ஏனெனில், நான் அப்போது அம்பேத்கரை முழுவதுமாக வாசித்திருக்கவில்லை. முழு கம்யூனிச இயக்கத்தின் விவாதங்களில் அவர் எங்குமே வரவில்லை. நான் அம்பேத்கரின் எழுத்துகளை வாசிக்கத் தொடங்கினேன். புலே குறித்தும் தெரிந்து கொண்டேன். இந்தப் பின்னணியில் தான் ஒரு கம்யூனிஸ்ட் களப்பணியாளருக்கான வாசிப்பிற்காக, தெலுங்கு மொழியில் ஓர் ஆவணத்தை இயக்கத்திற்காக தயாரித்தேன். "சாதி ஒழிப்பும், ஒரு மார்க்சியவாதியின் புரிதலும்' என்பது அதன் தலைப்பு. இந்த ஆவணத்தை தயாரிக்க, அம்பேத்கரின் "சாதி ஒழிப்பு' நூல் எனக்கு உதவியாக இருந்தது. இச்சிறு வெளியீடு, இயக்கத்திற்குள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இப்போது கூட அது தெலுங்கு மொழியில் கிடைக்கிறது. அப்போதிலிருந்துதான் ஒரு புதிய காஞ்சா அய்லைய்யா உருவாகத் தொடங்கியதாகக் கொள்ளலாம்.

- அடுத்த இதழிலும்

Pin It