காமராசர் சாதனைகள் - பறிபோகும் கல்வி உரிமைகளை கிராமம் கிராமமாக விளக்கினர்

திருப்பூர்  மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காமராசர் பிறந்த நாள் விழாவை கல்வி உரிமை மீட்புப் பரப்புரையாக 3 நாள்கள் பொது மக்கள் பேராதரவுடன் நடத்தினர்.

கல்விவள்ளல் காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு, திராவிடர் விடுதலைக் கழகம் திருப்பூர் மாவட்டம் சார்பில், கல்வி உரிமை மீட்பு பரப்புரைப் பயணம் மற்றும் தெருமுனை கூட்டங்கள் ஜூலை 14, 15, 16 தேதிகளில் திருப்பூர், பல்லடம், மடத்துக்குளம் ஆகிய பகுதிகளில் மூன்று நாள்கள் நடைபெற்றது. பரப்புரை பயணம் - கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்று! தமிழ்நாட்டில் நீட் தேர்வை விலக்கு! புதிய கல்வி கொள்கை என்ற பெயரால் குலக்கல்வித் திட்டத்தை திணிக்காதே !  போன்ற கோரிக்கைகளை முன் வைத்து பயணம் மற்றும் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. முதல் நாள் 14.07.2019 அன்று திருப்பூர் அம்மாபாளையத்தில் அமைந்துள்ள காமராசர் சிலைக்கு, கழக பொருளாளர் துரைசாமி மாலை அணிவித்தார். அதைத் தொடர்ந்து அம்மாபாளையத்தில் முகில் இராசு தலைமையில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

அடுத்ததாக ஆத்துப்பாளையம் பகுதியில் சங்கீதா தலைமையில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. அனுப்பூர்பாளையத்தில் முத்து தலைமையில் கூட்டம் நடைபெற்றது. மதிய உணவாக மாட்டுக்கறி, முகில் இராசு இல்லத்தில் வழங்கப்பட்டது. மதிய உணவிற்குப் பின் இராக்கியப்பாளையம் பிரிவில், தமிழ்நாடு மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர் பிராசாந்த் தலைமை யிலும், வெள்ளியங்காடு பகுதியில் பொள்ளாச்சி சபரி மற்றும் மாஸ்கோ நகரில் மாதவன் தலைமையிலும் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. முதல் நாள் கூட்டங்களில், கழக பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். மடத்துக்குளம் மோகன் முதல் நாள் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார். 

இரண்டாம் நாள் 15.07.2019 அன்று காலை 9 மணிக்கு பல்லடம் லக்ஷ்மி மில்ஸ் பகுதியில், சண்முகம் தலைமையில், தமிழ்நாடு மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர் தேன்மொழி முன்னிலையில் தெருமுனை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. அடுத்ததாக அய்யம் பாளையம் அரசுப் பள்ளியில் காமராசர் நிகழ்வு கொண்டாடப்பட்டது. அதில் பயணத் தோழர்களும் கலந்து கொண்டனர். காமராசரின் கல்வி சாதனைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு கழகப் பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன் விரிவாக கருத்துரையாற்றினார். மேலும், அனுப்பட்டியில் பருதி இளம்வழுதி தலைமையிலும், செந்தேவன் முன்னிலையிலும் தெருமுனைக் கூட்டம் நடை பெற்றது. மதிய உணவாக மாட்டுக்கறி உணவை பருதி இளம்வழுதி மற்றும் கோவிந்தராசு ஏற்பாடு செய்திருந்தனர். மதிய உணவிற்குப் பின் மாலை எம்.ஜி.ஆர் சாலையில் செந்தேவன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

இரண்டாம் நாள் பயணத்தில், மடத்துக்குளம் மோகன், கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், பொருளாளர் துரைசாமி, முகில் இராசு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மூன்றாம் நாள் 16.07.2019 அன்று மடத்துக்குளம் கடத்தூர் பகுதியில் காலை 8:30 மணிக்கு அய்யப்பன் தலைமையில், கண்ணன், சரவணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அடுத்ததாக காரத்தொழுவு பகுதியில் சு.சிவானந்தம் தலைமையில் நடைபெற்றது. கணியூர் பகுதியில் கண்ணன் தலைமை யிலும், மடத்துக்குளம் பகுதியில் திராவிடன் ஜின்னா தலைமையிலும் தெருமுனைக் கூட்டங்கள் நடை பெற்றன.

மதிய உணவை மடத்துக்குளம் மோகன் வழங்கினார். மதிய உணவு வேளையில் தமிழ்நாடு மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர் தேன்மொழியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. உணவிற்குப் பின், குமரலிங்கம் பகுதியில் இராசேந்தின் தலைமையிலும், குத்திராபாளையம் பகுதியில் அய்யப்பன் தலைமை யிலும் தெருமுனைக் கூட்டங்கள்  நடைபெற்றன.

மூன்றாம் நாள் மடத்துக்குளம் பயணத்தில், இராசேந்திரன் (விசிக), சாந்துமுகமது (மதிமுக), பாருக் அலி (திமுக), மயில்சாமி (தி.க), சாமிநாதன் (தி.க), ஆர்.டி.எம்.  மாரியப்பன் (மாவட்டச் செயலாளர் மதிமுக), பன்னீர்செல்வம் (சி.பி.ஐ.-எம்) ஆகியோர் பயணங்களின் தெருமுனைக் கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

மேலும், கழகப் பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், பொருளாளர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொள்ளாச்சி சபரி, தமிழ்நாடு மாணவர் கழகம் தேன்மொழி, பொள்ளாச்சி வெள்ளிங்கிரி, மடத்துக்குளம் மோகன் ஆகியோர் மூன்றாம் நாள் தெருமுனைக் கூட்டங்களில் சிறப்புரையாற்றினர். பெரியார் பிஞ்சுகள் யாழினி, யாழிசை - கூட்டங்களில் பகுத்தறிவுப் பாடல்களைப் பாடி மக்களின் கவனங்களை ஈர்த்தனர்.

மூன்று நாள் பயணமும் மக்களின் பேராதரவுடன் நடைபெற்றது. திருப்பூர் நகரத்தை அடுத்த கிராமங்களில் பயணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய பாஜக அரசு கிராமப்புற தமிழக மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை எவ்வாறு சீர் குலைக்கிறது என்பதை இப்பயணத்தின் மூலம் கிராமங்களுக்கு எடுத்துச் சென்றிருப்பது சிறப்பு வாய்ந்ததாகும்.

பயணத்தில் பங்கேற்றோர்:  தமிழ்நாடு மாணவர் கழகம் பிரசாந்த், தேன்மொழி, கனல்மதி, வைத்தீஸ் வரி, மேட்டூர் தேன்மொழி,  திருப்பூர் பார்வதி, சரசு,  சங்கீதா, முத்து, தனபால், இராஜ சிங்கம், நீதிராசு, கருணாநிதி, மூர்த்தி, அகிலன், மாதவன், மணி, பருதி இளம்வழுதி, பல்லடம் சண்முகம், பொள்ளாச்சி, வெள்ளிங்கிரி, சபரி, ஆனந்த், விவேக், அரிதாசு, மடத்துக்குளம் மோகன், ஈரோடு இரத்தினசாமி, பால் பிரபாகரன், திருப்பூர் துரைசாமி, சூலூர் பன்னீர் செல்வம்

Pin It