மோடி அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் என்ற மெகா மோசடித் திட்டத்தைத் தோண்டத் தோண்ட ஊழல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. உச்சநீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பால் தேர்தல் பத்திரங்கள் முறை ஒழிக்கப்பட்டு, ரகசியங்கள் வெளியிடப்பட்டன. மொத்த தேர்தல் பத்திரங்களில் பாஜகவுக்கு மட்டுமே ரூ.8250 கோடி கிடைத்தது தெரியவந்தது. அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை வைத்து தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்ததும் எஸ்.பி.ஐ. தரவுகளை ஆய்வு செய்ததில் அம்பலமானது.

இந்த நிலையில், குஜராத்தில் பட்டியல் சமூக விவசாயியின் குடும்பத்திடம் நிலம் வாங்குவதுபோல் ஏமாற்றி , பாஜவுக்கு ரூ.10 கோடி நிதியை தேர்தல் பத்திரங்கள் மூலம் கொடுத்திருப்பது அம்பலமாகியுள்ளது. அதானி குழுமத்துக்கு நெருக்கமான வெல்ஸ்பன் நிறுவனம் இந்த மோசடியைச் செய்திருக்கிறது. அங்குள்ள கட்ச் மாவட்டத்தின் அஞ்சார் பகுதியில் புதிய தொழில் தொடங்க பல நூறு ஏக்கர் நிலங்களை வாங்கியது வெல்ஸ்பன் நிறுவனம். இதில் பட்டியல் சமூக விவசாயி ஹரேஷ் சவகரா என்பவரின் 11 ஏக்கர் நிலமும் வாங்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.16.61 கோடிக்கு நிலம் விற்பனையானது. இதில், ரூ.2.80 கோடி முன்பணமாக தரப்பட, மீதமுள்ள ரூ.13.81 கோடி ஹரேஷ் சவகரா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரின் வங்கி கணக்குக்கு அனுப்பப்பட்டது.adani and modiஇந்த நிலையில், மொத்தம் ரூ.11 கோடிக்கு சவகரா குடும்பம் சார்பில் தேர்தல் பத்திரங்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வாங்கப்பட்டன. இதில், ரூ.10 கோடியை பாஜவும், ரூ.1 கோடியை சிவசேனா கட்சியும் பணமாக்கி உள்ளன. தேர்தல் பத்திர திட்ட விவரங்களை ஆய்வு செய்த பத்திரிகையாளர்கள் சிலர் இது பற்றி ஹரேஷ் சவகராவை சந்தித்து விளக்கம் கேட்ட பின்னர்தான், தாங்கள் ஏமாற்றப்பட்டதே தெரிய வந்திருக்கிறது. அதன்பிறகு அஞ்சார் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பத்திரிகையில் அளித்திருக்கும் பேட்டி: “எங்கள் குடும்பத்துக்கு மொத்தம் ரூ.16.61 கோடி கிடைத்ததால் மகிழ்ச்சியாக இருந்தோம். அப்போது, என்னையும் என் தந்தையையும் வெல்ஸ்பன் நிறுவன விருந்தினர் விடுதிக்கு அழைத்து அந்த நிறுவன அதிகாரி மகேந்திர சிங் சோதா பேசினார். அப்போது, நகர பாஜ தலைவர் ரஜினிகாந்த் ஷா உடனிருந்தார். இவ்வளவு பெரிய தொகையை வங்கியில் வைத்திருந்தால் ஐ.டி ரெய்டு வரும் என்று மிரட்டினார். ரெய்டில் இருந்து தப்பிக்க தேர்தல் பத்திரங்களில் முதலீடு செய்யுங்கள், நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறினார். இதனால், அதற்கு சம்மதித்தோம். இப்போதுதான் நாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிந்தது. எங்களை ஏமாற்றி பாஜவுக்கு நிதி கொடுக்க வைத்த வெல்ஸ்பன் நிறுவன இயக்குனர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கூறியிருக்கிறார்.

அதுமட்டுமல்ல, 11 ஏக்கர் நிலத்துக்கு குஜராத் அரசு முதலில் ரூ-76 கோடியை விலையாக நிர்ணயித்தது. ஆனால், அந்த தொகையை தர வெல்ஸ்பன் நிறுவனம் மறுத்துவிட்டது. ஓராண்டுக்கு பிறகு கட்ச் மாவட்ட சப் கலெக்டர் தனது அதிகார வரம்பை மீறி நிலத்தின் மதிப்பை ரூ.16.61 கோடியாக முறைகேடாக குறைத்ததாக சவகரா குடும்பத்தின் வழக்கறிஞர் புகார் கூறியுள்ளார். வங்கி டெபாசிட் பத்திரத்துக்கும் தேர்தல் பத்திரத்துக்கும் கூட வித்தியாசம் தெரியாத அப்பாவி பட்டியல் சமூகக் குடும்பத்தை அதானிக்கு நெருக்கமான வெல்ஸ்பன் உள்ளூர் பாஜக நிர்வாகிகளோடு சேர்ந்து ஏமாற்றியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தொடக்கத்தில் இருந்தே பாஜகவை பாதுகாக்கும் நோக்கிலேயே செயல்பட்டு வருகிறது. பல உண்மைகளையும் மறைத்துக் கொண்டிருக்கிறது. கோடக் மஹிந்த்ரா குழுமம் 130 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கியதாகக் கணக்குத் தாக்கல் செய்திருக்கிறது. ஆனால் எஸ்பிஐ வெளியிட்ட விவரங்களில் 60 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்கள் குறித்த தகவல்கள் மட்டுமே உள்ளன. மீதம், 70 கோடி ரூபாய் குறித்த தகவல்கள் இல்லை.

பூஜ்யம் ரூபாய் கூட இலாபம் இல்லாத மற்றும் இழப்பைச் சந்தித்த நிறுவனங்களும் தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளன. அத்தகைய 33 நிறுவனங்கள் வழங்கிய தேர்தல் பத்திரங்களின் மதிப்பு 576.2 கோடி ரூபாய். இதில் 434.2 கோடி ரூபாய் பாஜகவுக்கு மட்டுமே சென்றுள்ளது. அதாவது இலாபம் ஈட்டாத மற்றும் இழப்பைச் சந்தித்த நிறுவனங்களில் 75% நிறுவனங்கள் பாஜகவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கியுள்ளன. இந்நிறுவனங்கள் மிரட்டப்படாமல் பாஜகவுக்கு நன்கொடை வழங்கியிருக்குமா? அல்லது இலாபத்தை மறைத்து கொள்ளையடிக்கும் நிறுவனங்களிடம் லஞ்சமாக தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக நன்கொடை பெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை இதிலிருந்து ஊகிக்க முடிகிறது. தேர்தல் பத்திரங்களைத் தோண்ட தோண்ட பாஜகவின் ஊழல்கள் அம்பலமாகிக் கொண்டே உள்ளன. பாஜகவின் இந்த மெகா மோசடியில் சம்மந்தப்பட்ட அனைவரையும் உள்ளடக்கி உரிய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமாகிறது.

விடுதலை இராசேந்திரன்

Pin It