மாதவிடாயைப் பற்றி எழுதி பேச வேண்டிய தேவை இன்னமும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் அதைப் பற்றி எதை எழுத என்று எனக்குள் ஒரு குழப்பத்திற்கிடையில் மாதவிடாய் பற்றிய செய்திகள் நண்பர்களின் மூலம் கிடைத்துக் கொண்டேயும் இருந்தது.

முதல் செய்தி:

மிகக்கவர்ச்சிகரமான ஆடம்பரமான வேலையாகக் கருதப்படும் விமானப்(பணிப்பெண்) உதவியாளர் பணியிடங்களில் பெரும்பாலும் பெண்கள்தான் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். ஐந்து ஆண்டுகளுக்கு மேல் விமானங்களில் பணி புரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ரத்தப் போக்கு அதிகமாவதோடு வேறு சில மாதவிடாய் பிரச்சனைகளும் தைராய்டு மற்றும் கர்ப்பப்பை வாசல் அரிப்பு நோயும் ஏற்படுகிறது. இதற்கான காரணங்களைக் கண்டுபிடிக்க இதுவரை உலக அளவில் எந்த ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

நிறையப் பெண்கள் விரும்பி இந்த வேலைக்கு செல்கின்றனர். நிறையப் பயணம் மேற்கொள்ளலாம் நிறைய வெளிநாடுகளுக்கு சென்று வரலாம். நாகரிகமான மேல்தட்டு வாழ்க்கை வாழ முடியும் என்ற பல கவர்ச்சிகரமான அம்சங்கள் இளம் பெண்களை இப்பணியை நோக்கி ஈர்க்கிறது.

ஆனால் படித்த ஆங்கில அறிவு அதிகம் கொண்ட இந்தப் பெண்களில் எத்தனை பேருக்கு இந்த வேலையில் இப்படி ஒரு பிரச்சனை இருப்பது தெரியும். மற்ற வேலைகளில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி பேசப்படும் அளவிற்கு இந்த பிரச்சனை வெளியில் பேசப்படவும் இல்லை, போதிய விழிப்புணர்வும் இல்லை. அதற்கான ஆராய்ச்சிகளும் பெரிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை.girl in distressஇரண்டாவது செய்தி:

சமீபமாக தமிழில் ஸீ 5ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அயலி வெப் சீரியஸ்சில் வருவதைப் போலவே ஒரு கிராமம்.

இது எங்கோ மலையில் ஒளிந்து கொண்டிருக்கும் மலைவாழ் கிராமமெல்லாம் கிடையாது. சமதளத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இராஜபாளையம் நகரத்திற்கு மிக அருகில் வெறும் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிற கம்மாபட்டி என்ற கிராமம். இந்த கிராமத்தில் பெண்கள் வயதுக்கு வந்தவுடனேயே அவர்களின் படிப்பு நிறுத்தப்பட்டு திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர்.

அதுமட்டுமல்ல, அப்பொழுது தான் வயதுக்கு வந்த 11 வயது சிறுமியாக இருந்தாலும் சரி 45 வயது பெண்மணியாக இருந்தாலும் சரி வெயில் மழை என எல்லாக் காலத்திலும் மேற்கூரைகளோ தடுப்புகளோ எதுவுமே அற்ற ஊருக்கு பொதுவான ஒரு மரத்தடியில் தான் ஒவ்வொரு மாதவிடாய் காலத்தையும் கழிக்க வேண்டும்.

வேட்டை சமூகத்தில் குழு குழுவாக காடுகளில் திரிந்த மக்கள் இரத்தத்தைக் கண்டு அஞ்சி நடுங்கினர். மாதவிடாயின் போது பெண்ணிற்கு ஏற்படும் இரத்தப்போக்கின் வாடையை நுகர்ந்து கொடியக் காட்டு விலங்குகள் வந்து விட்டால் மொத்த குழுவிற்கும் சேதம் ஏற்படும். அதனால் குழுவைக் காப்பாற்றுவதற்காக மாதவிடாயிலிருக்கும் ஒரு பெண்ணை மட்டும் விலங்குகளுக்கு பலியிடுவது பரவாயில்லை என அந்தப் பெண்ணைக் குழுவை விட்டு மிக தூரத்தில் காட்டில் தனியே விட்டுவிடுவார்கள். அந்தப் பெண் எந்த மிருகத்தாலும் தாக்கப்படாமல் தப்பிப் பிழைத்து மீண்டு வந்தால் அடுத்த மாதவிடாய் வருவதற்கான ஒரு மாத காலம்வரை மீண்டும் குடும்பத்துடன் வாழ முடியும். பின்னர் மீண்டும் அடுத்த மாதம் இரத்தப் போக்குடன் தனியே சாவை எதிர்கொள்ளக் காத்திருக்க வேண்டும்.

முறத்தால் புலியை விரட்டிய வீரமங்கை என்று நமது பழம் பெண்டீரைப் பற்றிய வீரக்கதையைக் கேட்டு பெண்கள் அனைவருமே புழகாங்கிதம் அடைந்திருக்கிறோம். ஆனால் புலி ஏன் நாட்டுக்குள்ளும் வீட்டுக்குள்ளும் வரப்போகிறது. இப்படி தனித்து விடப்படும் பெண்கள் உயிர் பிழைப்பதற்காகப் போரடித்தானே ஆக வேண்டும். முறத்தால் புலியை விரட்டினாள் பெண் என்ற பெருமையின் பின்னால் பெண்களை தனித்துக் காட்டில் விட்ட கொடுமை மறைந்துகிடக்கிறது.

வேட்டை சமூகத்தில் மாதவிடாயின் போது பெண்கள் தனித்து விடப்பட்டதற்கு ஒரு மக்கள் குழுவை காப்பாற்றும் முயற்சி என்ற சிறு நியாயமாவது இருந்தது. ஆனால் இன்றும் கம்மாபட்டி போன்ற கிராமங்களில் மக்கள் அனுசரிக்கும் இந்த நடைமுறைக்கு எந்த நியாயத்தை நாம் காரணமாக ஒப்புக் கொள்வது.

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ஜக்கம்மாவாக சின்ன ஜக்கம்மா, பெரிய ஜக்கம்மா, வீர ஜக்கம்மா என்று இந்தக் கிராமம் முழுவதுமே விதவிதமான ஜக்கம்மாக்களால் தான் நிறைந்து கிடக்கிறது. இந்த ஜக்கம்மாக்களை ஒவ்வொரு மாதவிடாயின் போதும் நடுத்தெருவில் விடச்சொல்லி உத்தரவு போட்டது வேறு யாருமல்ல இவர்களின் குலதெய்வமான ஜக்கம்மா தேவிதான்..

ஒவ்வொரு மாதமும் பெண்ணிற்கு ஏற்படும் இரத்த ஒழுகலைக் கண்டு பயந்து போனான் ஆதிமனிதன். ஆணின் உடலில் இருந்து இரத்தம் வெளியேறினால் அவன் இறந்து போவான். ஆனால் பெண்ணின் யோனியிலிருந்து அவ்வளவு இரத்தம் வழிந்த பின்னும் அவள் உயிரோடு இருப்பது மட்டுமல்லாமல் பிள்ளைகளையும் பெற்றுக் கொடுப்பவளாக இருக்கிறாளே என்ற அதிசயத்தில் மிரண்டு போய்தான், பெண்ணைத் தெய்வமாக வழிபட ஆரம்பித்தான்.

ஆனால் காலம் செல்லச் செல்ல பெண்ணில் எதைக்கண்டு அச்சப்பட்டும் அதிசயத்தும் பெண்ணை தெய்வமாக்கினானோ அதே தெய்வத்தின் பெயரால் அவளை அடிமையாகவும் வைத்திருக்கக் கற்றுக்கொண்டான் ஆண்.

ஆதி காலத்திலிருந்து இப்போதைய கம்மாப்பட்டி காலம் வரையிலுமே பெண்கள் மாதவிடாயின் போது வெளியேறும் குருதியின் நசநசப்பு, அடிவயிற்றில் மின்னல் போல் தெரிக்கும் வலி, இழுத்துப் பிடிக்கும் தசை வலி, துவண்டு போகும் தொடைகள் சோர்ந்து போன உடல் என அத்தனை உடல் உபாதைகளோடு தனிமை, இருள், வெயில், மழை, இடி, மின்னல், மிருகங்கள், மனிதர்கள் என அத்தனை காரணிகளையும் தைரியமாக தாங்கி சமாளித்து பெற்றுப் போட்ட பிள்ளைகள் தான் இன்றைய மக்கள் சமூகமாக வாழ்ந்து கிடக்கிறோம்.

இவ்வளவு தைரியமான பெண்களுக்கு புத்திசாலித்தனம் மட்டும் இல்லாமல் போகுமா என்ன. புத்திசாலித்தனம் இல்லாத வெறும் வீரத்தில் மட்டுமா பெண்கள் பிழைத்துக்கிடந்து சமூகத்தையும் மீட்டுக் கொடுக்கிறார்கள்.

மனிதர்கள் வேட்டை சமூகமாக இருந்து சிறு இனக் குழுக்களாக வாழ்ந்து பின்னர் விவசாய குழுக்களாக ஓரிடத்தில் நிலைத்து வாழ ஆரம்பித்தனர். அக்கால கட்டத்தில் விவசாயத்தைக் கண்டு பிடித்து வாழ்க்கையை அச்சமின்றி ஒரே இடத்தில் நிலைத்து வாழ வழிசெய்த பெண்களை போற்றும் விதமாக, பெண் குழந்தைகள் முதல் முறையாக பூப்பெய்தும் பொழுது ஏற்படும் இரத்த ஒழுக்கை செழுமையின் சின்னமாகக் கருதி வயல்களில் தெளித்தனர் என பேராசிரியர் ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள் தனது மந்திரமும் சடங்குகளும் என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

விவசாய சிறுகுடிகள் பின்னர் பேரரசாக மாற ஆரம்பித்த பொழுது மதமும் குடும்ப அமைப்பும் பேரரசுகளுக்கு மிக முக்கியத் தேவையாக இருந்தது. குடும்ப அமைப்பு கட்டுக்குலையாமல் இருந்தால் தான் மக்களை ஒரு கட்டுக்குள் வைத்து பேரரசுகள் ஆள முடியும்.

அப்படிக் குடும்பம் குடும்பமாக மக்களைக் கட்டுக்குள் வைப்பதற்கு மதத்தை மிக முக்கியமான ஆயுதமாக பயன்படுத்தினர். வெகு ஜன மக்களின் அன்றாட செயல்பாடுகளிலிருந்து அனைத்து செயல்பாடுகளும் உணவு, உடை, இருப்பிடம், திருவிழாக்கள் என் அனைத்தும் மதத்துடனும் தெய்வங்களுடனும் பிணைக்கப்பட்ட வாழ்க்கை முறையை வரையறை செய்தன பேரரசுகள்.

அப்படிப்பட்ட குடும்பம் என்னும் முக்கியமான கன்னி உடையாமல் இருப்பதற்கு ஒவ்வொரு மாதவிடாய் காலத்திலும் குழந்தைப் பிறப்பின் போதும் காட்டுக்குள் தைரியமாய்த் தனித்துப் பிழைத்துக்கிடந்த முதன்முதலில் விவசாயத்தைக் கண்டு பிடித்த மதியூகம் நிறைந்த தனித்து இயங்கும் தைரியம் படைத்த பெண்ணை, அவள் தனித்து இயங்க விடாமல் கட்டுப்படுத்துவதற்கு மதத்தின் பெயரையும் தெய்வத்தின் பெயரையும் உபயோகப்படுத்த ஆரம்பித்தனர். பெண்ணின் தனித்தன்மையைக் குலைத்து அவள் தன் உடலையும் தன் உடலின் செயல்பாடுகளையும் இழிவாக தீட்டாக எண்ணுவதற்கு மாதவிடாயை ஒரு முக்கிய காரணியாக பயன்படுத்த ஆரம்பித்தனர்.

மாதவிடாய் என்பது மதத்தின் வழியில் அதன் பார்வையில் தான் இன்று பார்க்கப்படுகிறது. மாதவிடாய் என்றால் அசுத்தம் என்று மதம் கூறுகிறது. அந்த நாட்களில் கோயிலுக்குள் வரக்கூடாது. வேறு எந்த புனித நிகழ்வுகளிலும் கலந்து கொள்வதோ அது சம்பந்தப்பட்ட பொருட்களை தொடுவதோ கூடாது என்று வரையறுத்து வைத்திருக்கின்றனர். சில சமூகங்களில் மாதவிடாயின் பொழுது சமையல் கூட செய்யக் கூடாது என்று அசுத்தத்தின் சின்னமாக பெண்கள் பார்க்கப்படுகிறார்கள். அந்த மாதிரி ஒதுக்கி வைக்கப்படும் பெண்கள் ஒரு தண்டனைக் கைதியைப் போன்ற குறைந்தபட்ச வசதிகளுடன் மட்டும் தான் அந்த நாட்களைக் கடக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

பெண்களின் மாதவிடாயைப் பற்றி தமிழ் இலக்கியத்தில் முதன்முறையாக குறிப்பிடப்பட்ட பாடலை எழுதியவர் சங்கப்புலவர் பொன்முடியார். புறநானூற்றின் பாடல் எண் 299 இல் “கலந்தொடா மகளிர்..”. என்னும் பாடலில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் முருகன் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாமல் விலக்கி வைக்கப்பட்டதை வேறு ஒரு நிகழ்வுக்கு ஒப்புமையாகக் கூறுகிறார் இவர். இவ்வாறு பல நூறு ஆண்டுகளாக, சில ஆயிரம் வருடங்களாகத் பல முறை பல விதமாகத் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டு இன்று மாதவிடாய் என்றாலே அது தீட்டு என்று பெண்ணே பெண்ணிற்கு போதிக்கும் சமூகமாக உருமாறி இருக்கிறோம் இன்றைய நமது சமூகம். மாதவிடாய் என்றால் தீட்டு “இழிவு” என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றி இருப்பதால் தான் அந்த சமயத்தில் பெண்ணிற்கு ஏற்படும் உடல் உபாதைகளும் அலட்சியப்படுத்தப்படுகின்றன.

ஆதிப்பெண் தனது மாதவிடாய் காலங்களில் தான் உயிர் வாழ்வதற்காக வன விலங்குகளுடன் போராடினாள். படித்து வேலைக்கு செல்லும் பெண்ணாக இருந்தாலும் சரி படிக்காத கூலி வேலை செய்யும் பெண்களாக இருந்தாலும் சரி இன்றைய பெண்ணும் மாதவிடாய் காலத்தில் பல உடல் உபாதைகளுடன் தனது குடும்பத்தினருக்காகப் போராடிக்கொண்டு தான் இருக்கிறாள். அந்த நேரங்களில் ஏற்படும் உடல் உபாதைகளுக்காக விடுப்பு எடுக்கும் பொழுது, அமைப்புசாரா நிறுவனங்கள் மற்றும் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்யும் பெண்களின் பொருளாதாரம் மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது. தீட்டு என்று புனிதங்களிலிருந்து ஒதுக்கி வைக்கும் பெண்ணை பொருளாதார நெருக்கடிகளுக்காக உழைப்பதிலிருந்து யாரும் விலக்குக் கொடுப்பதில்லை.

பின் தங்கிய மாநிலங்களில் ஒன்றாக அறியப்படும் பீகாரில் இந்தியாவிலேயே முதல்முறையாக 1992இல் அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாயின் பொழுது சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அன்றைய முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் அமல்படுத்தினார். ஐந்து பெண் குழந்தைகளுக்கு தந்தையான லல்லு பிரசாத் யாதவ் தனது மாநிலப் பெண்கள் அனைவருக்கும் தந்தையாக மாறிய தருணம் அது. அதன் பின்னர் இத்தனை ஆண்டுகளில் இன்று வரை கேரளாவைத் தவிர வேறு எந்த மாநிலங்களிலும் இந்தச் சட்டம் நடைமுறைப் படுத்தப்படவில்லை.

பெண்களுக்குக் கிட்டத்தட்ட 45 இல் இருந்து 55 வயதுக்குள் மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் காலகட்டத்தின் முன்னும் பின்னுமாக இரண்டு வருடகாலம் வரை ஏற்படும் மன அழுத்தம் மற்றும் உடல் உபாதைகளைப் பற்றிய விரிவான புரிதலை ஏற்படுத்த வேண்டியது மிகஅவசியம். எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி மிக தைரியமானவர். வேலைக்கு போகாத கணவரையும் குழந்தைகளையும் வைத்துக் கொண்டு தனி ஆளாகக் குடும்பத்தை தூக்கி நிறுத்தியவர். ஆனால் அவர் தனது மெனோபாஸ் காலகட்டத்தில் ஒரு குழந்தையைப் போன்ற பயந்த மனநிலையோடு ஒவ்வொரு செயலுக்கும் இன்னொரு வரை துணைக்கு அழைப்பவராக, சின்ன விஷயத்திற்கெல்லாம் கோபப்படுபவராக, தூக்கமின்மையால் அவதிப்படுபவராக மாறிப்போனார். அவர் நன்றாகப் படிக்க வைத்த அவரது குழந்தைகள் அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று முறையான மருத்துவ வழிகாட்டுதலுடன் அவரைப் பாதுகாத்து அந்த காலகட்டத்தை அந்தப் பெண்மணி நலமுடன் கடக்க உறுதுணையாக இருந்தனர்.

ஆனால் பல குடும்பங்களில் பெண்ணின் மெனோபாஸ் காலகட்ட பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளாமல் சண்டையும் சச்சரவுகளும் அந்தப் பெண்ணின் மீதான குறை சொல்லலும் அதிகரிக்கத் தொடங்கும். இந்திய குடும்பங்களில் பெண்களின் அந்தக் காலகட்டத்தில் தான் வீடுகளில் நிறைய திருமணங்கள் மற்றும் அடுத்தத் தலைமுறையினருக்கான பிரசவங்கள் என பொறுப்புகளும் வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும். ஏற்கனவே பாதிப்பில் இருக்கும் பெண்மணிக்கு உடலும் உள்ளமும் துவண்டு கிடக்கும் பொழுது, அதுவரை அவர் மூலம் சலுகைகளை அனுபவித்து வந்த கணவர் குழந்தைகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் அனைவரும் இப்பொழுது அந்தப் பெண்மணியின் மீது குற்றம் சுமத்தத் தொடங்குவார்கள். அந்தப் பெண்மணி சொல்ல முடியாத மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தனியாகவே அந்த காலகட்டத்தை கடக்க வேண்டிய ஆதி காலத்திற்கு செல்ல வேண்டியதாயிருக்கும்.

பெண்களின் வலியைப் பற்றியப் புரிதலை முதலில் பெண்களிடமிருந்தே ஆரம்பிப்பதுதான் சரி. பெண்கள் தங்கள் உடலில் நடக்கும் நிகழ்வை அறிவியல் பூர்வமாகப் புரிந்து கொண்டால் அதனால் அவளுக்கு நிகழ்த்தப்படும் பிரச்சனைகளை அவளால் எளிதில் கையாளமுடியும். அதே நேரத்தில் ஆண் குழந்தைகளுக்கும் சம அளவில் இதைப் பற்றிய புரிதலை ஏற்படுத்துவது மிக அவசியமான செயல்பாடாகும்.

நான் கல்லூரி முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் பொழுது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த எனது தம்பி “அக்கா எனது நண்பர்கள் எல்லோரும் பெண்களுக்கு ஆடைகளில் சிவப்பாகப்படும் கரையைப் பற்றி அதிகமாகப் பேசிபெண்களைக் கிண்டல் பண்ணுகிறார்கள். அது என்ன அக்கா..? உனது உடையிலும்சிவப்பு நிறம் படுமா..? ஏன்..? அது என்ன..?”

என்று கேட்டான். நான் கூச்சப்படாமல் அவனை அருகில் அழைத்து ஒரு நோட்டுப் புத்தகத்தில் படம் வரைந்து விளக்கமாக கூற ஆரம்பித்தேன்..

பெண்களுக்கு இரு சினைப் பைகள் இருக்கின்றன. அந்த சினைப் பைகளில் நூற்றுக்கணக்கான சிறுசிறு கருமுட்டைகள் உண்டாகும். அவை ஹார்மோன்களின் செயல்பாடுகளால் வளரும். அவற்றில் ஒன்று மட்டும் சரியான அளவில் வளர்ந்து சுழற்சியின் பதின்மூன்றாம் நாளன்று சினைப்பையை விட்டு வெளியேறி கர்ப்பப் பையை நோக்கி நகரும். அப்படி கர்ப்பப்பையை வந்தடையும் கரு முட்டையுடன் ஆணின் விந்து இணையும் பொழுது கருவாக உருக்கொள்கிறது. அந்தக் கரு பாதுகாப்பாக வளர்வதற்கு ஏதுவாக கர்ப்பப்பையின் சுவரிலும் மாற்றங்கள் ஏற்படும். இந்த இணைதல் 24–48 மணி நேரத்தில் நடக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த கருமுட்டை செயலிழந்து விடும். சரியாக இருபத்து எட்டாம் நாளில் அந்த செயலிழந்த கருமுட்டை சிதைந்து கர்ப்பப்பை வழியாக வெளியே வரும். அவ்வாறு வரும்போது கர்ப்பப்பையின் சுவரில் ஏற்பட்ட திசுக்களும் சிதைந்து இரத்தக்கசிவாக வெளிவரும். இதுதான் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் என்றழைக்கப்படும் மாதசுழற்சி ஆகும்.”

“பொதுவாக 3–5 நாட்கள் மாதவிடாய் ஆகும். இந்த சமயங்களில் தாங்கமுடியாத வயிற்றுவலி, தசைப்பிடிப்பு மற்றும் அதீத உடல்சோர்வினால் கிட்டத்தட்ட 39% பெண்கள் பாதிப்படைகின்றனர்” என்று விளக்கமாகக் கூறினேன். கேட்டுவிட்டு அவனும் ஓடிப் போய் விட்டான்.

அவனுக்கு திருமணவயது வந்த பொழுது மீண்டும் ஒருமுறை வந்து

“அக்கா எனது வட இந்திய நண்பன் ஒருவனுக்கு திருமணமாகி 20 நாட்கள் தான் ஆகின்றது. ஆனால் அவன் மனைவி 35 நாள் கர்ப்பமாக இருக்கிறாள். அதனால் அவனும் அவனது குடும்பத்தினரும் அந்தப் பெண்ணை சந்தேகப்பட்டு அவளது பிறந்த வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். விவாகரத்துக்கும் ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றனர். மருத்துவர் இந்தத் திருமணத்தில் இந்த கர்ப்பம் சாத்தியம் தான் என்று கூறியிருக்கிறார். ஆனால் நண்பனது வீட்டு பெரியவர்கள் ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர். இதில் என்ன பிரச்சனை இருக்கிறது அக்கா..?”

நான் மீண்டும் அவனிடம் அவனது 13 வயதில் கூறிய மாதவிடாய் சுழற்சியை பற்றிக்கூறி.. “அந்தப் பெண் மாதவிடாய் வந்து 15 நாட்களில் அவளுக்குத் திருமணம் நடந்திருக்கும். அந்த காலகட்டம் அவனது கருமுட்டை கர்ப்பத்திற்கு தயாராக இருக்கும் காலகட்டமாகும். அவள் உடனே கர்ப்பம் அடைந்து இருப்பாள். ஆனால் மருத்துவர்கள் கர்ப்ப காலத்தை அவளுக்கு கடைசியாக வந்த மாதவிடாயின் முதல் தேதியிலிருந்து தான் கணக்கெடுப்பார்கள். திருமணத்திற்கு முன்பு 15 நாட்களுக்கு முன்பு அவளது கடைசி மாதவிடாய் ஏற்பட்டு இருக்கும். அந்தத் தேதியிலிருந்து பார்த்தால் 35 நாட்கள் என்று கணக்கு வரும். ஆனால் சரியாக கடைசி மாதவிடாயிலிருந்து 15 வது நாளில் திருமணம் ஆன முதல் வாரத்தில்தான் அறிவியல் முறைப்படி அவள் கர்ப்பம் அடைந்திருக்க முடியும். அந்தப் பெண்ணின் கர்ப்பத்திற்கு அவளது திருமணம் மூலம் அவளது கணவருடன் ஏற்பட்ட தாம்பத்திய உறவு மட்டும்தான் காரணமாக இருக்க முடியும்” என்று தம்பிக்கு விளக்கமாகக் கூறினேன். எனது தம்பி 13 வயதில் கூறாத நன்றியை அன்று எனக்குக் கூறினான்.

“அக்கா எனது வயதுப் பையன்கள் அனைவரும் பெண்களை, சக பெண் தோழிகளை கிண்டல் செய்து கொண்டிருக்கும் பொழுது என்னால் அந்தப் பெண்களை அவர்களின் வலிகளைப் புரிந்து கொள்ள முடிந்தது. இதுவரை நான் எந்தப் பெண்ணையும் உடல் ரீதியாகக் கிண்டல் செய்ததோ தவறாக எண்ணியதோ கிடையாது. அதற்கு உன்னிடமிருந்து சரியான வயதில் சரியான முறையில் எனக்கு கிடைத்த விளக்கம்தான் முக்கியமான காரணம். அப்பொழுது நன்றி சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை. இப்பொழுது சொல்லத் தோன்றுகிறது. நீ இவ்வளவு விளக்கமாக கூறவில்லை என்றால் நானும் மற்ற பையன்களைப் போல் மேலும் அந்த எனது நண்பனைப் போல் ஒரு பெண்ணையோ பல பெண்களையோ கிண்டலும் வேலையும் செய்து சந்தேகப்படும் முட்டாளாக இருந்திருப்பேன். நன்றி அக்கா”.

வீட்டில் தனது தாயிடமிருந்தும் சகோதரியிடமிருந்தும் மாதவிடாயைப் பற்றி சரியான புரிதல் கிடைக்கும் ஆணால் தான் வெளி உலகில் மட்டுமல்ல வீட்டில் உள்ள பெண்களையும் நல்ல புரிதலுடன் எதிர் கொள்ள முடியும். மும்பை அருகே உள்ள உல்லாஸ் என்ற நகரத்தில் வசிக்கும் சுமித் என்ற திருமணமான இளைஞர் தனது 12 வயது சகோதரி முதல்முறையாக பூப்பெய்தியதால் அவரது ஆடையில் இருந்த இரத்தக் கறையைக்கண்டு அவள் கன்னித்தன்மையை இழந்ததனால் ஏற்பட்ட இரத்தக்கறை என்று சந்தேகப்பட்டு அடித்தேகொன்ற கொடூரங்கள் நிகழாமலும் தவிர்க்க முடியும்.

கூச்சத்தையும் அச்சத்தையும் தொலைத்து மாதவிடாயை கம்பீரமாக பெருமிதமாக எதிர்கொள்வோம் தோழிகளே...

- மகேஸ்வரி மீனாட்சி

Pin It