எனது 93-வது ஆண்டு பிறந்தநாள் மலருக்கு ஒரு செய்தி வேண்டும் என்று நண்பர் திரு.வீரமணி அவர்கள் கேட்டார். சற்றேறக் குறைய 10 ஆண்டுகளாகவே எனது பிறந்த நாள் மலருக்குச் சேதி கொடுத்துக் கொண்டுதான் வருகிறேன். முதலாவதாக எனது பிறந்த நாள் என்பது எனது பிரச்சாரத்திற்கு ஒரு சாதனமாக - ஒரு ஆதாரமாக விளங்குகிறது என்பது ஒரு கல்லுப் போன்ற செய்தியாகும்.
நான் சமுதாய சமத்துவத்திற்குப் பாடுபடுகின்ற ஒரு தொண்டனாவேன். அதாவது, சாதி அமைப்பை அடியோடு ஒழிக்கப் பாடுபடுபவன். சாதி அமைப்பு என்பது 'கடவுள், மதம்' மற்றும் அவைகள் சம்பந்தமான எதையும் ஒழித்தாக வேண்டும் என்று கருதி அவைகளை ஒழிக்கப் பாடுபடுகிறவன். அதில் எந்த அளவும் மக்களுக்குச் சந்தேகமில்லாமல் நடந்தும் வருகிறேன். மக்களோ பெரும்பாலும் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் ஆவார்கள். கடவுள் ஒழிப்பு என்பது மக்களுக்கு ஆத்திரத்தையும் கோபத்தை யும் உண்டாக்கக் கூடியதாகும். இது மாத்திரமல்ல; நம்மைச் சபிக்கவும் கூடியதாகும். ஆகையால், சபிக்கப்பட்டும் வருகின்றேன். சபிக்கும் மக்களோ கடவுளைச் சர்வசக்தி உடையவர் என்று பலமாக நம்புகின்றவர்கள். அவர்கள் சாபம் பலிக்காவிட்டாலும் கடவுள் என்னைச் சும்மா விட்டுக் கொண்டு இருக்கமாட்டார் என்றும் நம்புகிறவர்கள் ஆவார்கள்.
நானோ எனது பிரச்சாரத்தில் கடவுளே இல்லை என்று சொல்லுவதற்காகவே சிறுமைப்படுத்தி, இழிவுபடுத்தி - செய்கையாலும், காட்டிக் கொண்டே, நடந்துகொண்டே வருபவன். இந்த நிலையில் எனது 92-வது வயதில் கடவுள் நம்பிக்கை ஒரு மூடநம்பிக்கையில் பட்டதென்பதை நல்லவண்ணம் மக்களுக்கு விளங்கும்படி, 'கடவுளைச் செருப்பால் அடிக்கும்படி' நான் சொல்லும் அளவுக்கு ஆளாகி இருக்கின்றேன். இந்த நிலையில், எனது 92-வது வாழ்நாள் முடிந்து 93-வது வாழ்நாள் தோன்றிவிட்டது என்றால், கடவுள் இருந்தால் இப்படி நடக்குமா? விட்டுக்கொண்டு இருப்பானா? - என்று எந்த, எப்படிப்பட்ட கடவுள் நம்பிக்கை பக்தனும் நினைத்து - அவனுக்கு ஒரு சிறு அறிவிருந்தாலும், 'கடவுளாவது வெங்காயமாவது' என்று கருதி, ஓரளவுக்காவது தெளிவு பெற முடியும் என்பது எனது கருத்து. அதனாலேயே, எனது 93-வது வருஷப் பிறப்பு என்பது எனது பிரச்சாரத்திற்கு ஆதாரம் என்று கருதுகிறேன்.
சென்ற எனது 92-ஆம் ஆண்டு மலருக்கு நான் எழுதிய எனது பிறந்த நாள் செய்தியில் 'எனது 91-வது ஆண்டு எனக்கு உற்சாகமாகவே கழிந்தது. மனச் சலிப்பு அடைய வேண்டிய அவசியம் இல்லாமல் இருப்பது மாத்திரம் அல்லாமல், இதுபோல் வாழ்நாள் நீண்டால் மேலும் பல முன்னேற்றகரமான காரியம் செய்ய வாய்ப்பு ஏற்படலாம் என்று தோன்றுகிறது. மற்றும், மக்களிடையில் ஒரு மாறுதலைக் காண்கிறேன். அதுவும் தீவிரமான மாறுதலுக்கு இணங்குபவர்கள் போல மக்களைக் காண்கின்றேன்.
கடவுள், மதம், சாதி முதலிய விஷயங்களால், மக்கள் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் மாறுதல் அடையப் பக்குவமாய் இருக்கிறார்கள் என்றே காண்கின்றேன். இந்த நிலைதான் எனது உற்சாகத்திற்கும், மேலும் இருந்து தொண்டு செய்யலாம் என்ற நம்பிக்கைக்கும் ஆதரவிற்கும் காரணமாகும்.'
இந்தப்படி எழுதிய நான், முந்திய ஒரு ஆண்டில் எனக்கு மனச் சலிப்பு ஏற்பட்டு 'நான் ஏன் இருக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றிற்று' என்று எழுதிச் சலிப்படைந்து இருக்கின்றேன். இந்தச் சலிப்பைக் கண்டு காலஞ்சென்ற மாண்புமிகு அறிஞர் அண்ணா அவர்களும் திரு.காமராசர் அவர்களும் எனக்கு ஆறுதல் எழுதி உற்சாகமூட்டினார்கள். அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியவர்களது ஆட்சி ஏற்பட்டதற்குப் பிறகு தான் நான் உண்மையிலேயே நம்பிக்கையும் உற்சாகமும் அடைந்தேன்.
உண்மையில் எனது தொண்டு சாதி ஒழிப்புத் தொண்டுதான் என்றாலும், அது நமது நாட்டைப் பொறுத்தவரையில் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் ஒழிப்புப் பிரச்சாரமாகத் தான் முடியும். இந்த நான்கும் ஒழிந்த இடம் தான் சாதி ஒழிந்த இடமாகும். இவற்றில் எது மீறி இருந்தாலும் சாதி உண்மையிலேயே ஒழிந்ததாக ஆகாது.
ஏன் எனில், சாதி என்பது இந்த நான்கில் இருந்தும் ஆக்கப்பட்டதே ஆகும். இப்போது சொல்லுவேன்; நாகரிகத்திற்காகச் சிலர் சாதி ஒழிய வேண்டும் என்று கூறுகின்றார்கள். ஆனால், அவர்கள் மேற்கண்ட நான்கையும் ஒழிக்கத் துணிவு கொள்ள மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களால் நமக்கு ஒரு பயனும் ஏற்படாது. சில சமயங்களில் அவர்கள் நமக்கு எதிரிகளாகவும் ஆகக்கூடும். மனிதனை மடையனாக, அடிமையாக ஆக்கப்பட்ட பின்புதான் சாதி புகுத்தப்பட்டதாகும். சுதந்திர உணர்ச்சியும், அறிவும் ஏற்படாமல் சாதியை ஒழிக்க முடியாது. மடமைக்கும் அடிமைத் தன்மைக்கும் ஆக்கம் அளித்துச் சாதியை நிலை நிறுத்துவது தான், சாதியை ஒழியாமல் பாதுகாப்பதுதான் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் என்பவைகளாகும்.
உண்மையில் சாதி ஒழிய வேண்டும் என்று கருதுபவர்கள், இந்த நான்கு ஒழிப்புக்கும் சம்மதித்தவர்களாகவே தான் இருப்பார்கள். நமது மக்களில் பெரும்பாலோர் இன்று அப்படி ஆகிவிட்டார்கள் என்பதுதான் எனது உற்சாகத்திற்கும் காரணமாகும். எதனால் இப்படிச் சொல்கிறேன் என்றால், சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டையும், அதனை அடுத்து நடந்த நமது தி.மு.க. தேர்தலையும் (பொதுத் தேர்தலையும்) கொண்டுதான் இப்படிச் சொல்லுகின்றேன்.
அதாவது, 'கடவுளைச் செருப்பால் அடித்ததாக' 10 இலட்சக்கணக்கான பத்திரிகைகள், 10 இலட்சக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள், மாணவர்கள், வக்கீல்கள், அதிகாரிகள், சில பெண்கள் மற்றும் காங்கிரஸ் இயக்கம், சுதந்திரா இயக்கம், ஜனசங்க இயக்கம் முதலிய - சாதித் துவேஷமற்ற தமிழ் உணர்ச்சிக்கு மாறான பல இயக்கங்களும் எதிராகப் பாடுபட்டு - 230 இடங்களில் சுமார் 200 இடங்களுக்கு மேல் (தி.மு.க.) வெற்றி பெற நேர்ந்தது என்றால், சென்ற ஆண்டு பிறந்த நாள் செய்திக்கு நான் கொண்ட கருத்து - அதன் அளவுக்குமேல் மெய்யாகி வெற்றிபெற்றது என்பது யாருக்கும் விளங்கும்.
இனி, நமது சாதி ஒழிப்புக்கு மக்களில் யாரும் எதிர்ப்பு இல்லை என்பது உறுதியான செய்தியாகிவிட்டது. இந்த நிலையில், நான் நமது மக்களை அடி பணிந்து வேண்டிக்கொள்வதெல்லாம் - கோயில்களுக்குப் போகாமல் இருக்கவேண்டும்; உற்சவங்களில் கலவாமல், மதப் பண்டிகைகள் கொண்டாடாமல், நெற்றிக் குறி அணியாமலும் இருக்கவேண்டும் என்பதேயாகும். மற்றும் நான் நினைக்கின்றேன்; அண்மையில் ஒரு மாநாடு கூட்டி, கோயில்களுக்குப் போகிறவர்களை அடிபணிந்து வேண்டிக் கொள்வது மூலம் போகாமல் இருக்கச் செய்யலாமா என்று, யோசனை கேட்டுக் காரியத்தில் தொடரலாமா என்று சிந்திக்கிறேன். இதுதான் எனது 93-வது பிறந்த நாள் விண்ணப்பம்.
93ஆம் பிறந்த நாள் விழா 'விடுதலை' மலர் 17.9.1971
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- மோடியின் உறுதியளிப்பும், செய்த மோசடிகளும்
- 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பா.ச.க.வை வீழ்த்துவோம்!
- ஊழலுக்கும் கருப்புப் பணத்திற்கும் சட்ட ஏற்பளிக்கும் மோடியின் தேர்தல் பத்திரத் திட்டம்
- இந்துக்களின் வாக்குகளை அணி திரட்டவே CAA வெளியீடு
- வங்கித் துறையை சீரழித்த மோடி அரசு
- காடு திறந்து கிடக்கிறது
- காங்கிரசை விட்டு காந்தியார் விலகுகிறாராம் - வழ வழா அறிக்கை
- தமிழ்நாடு மார்ச் 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தெற்கு ஏன் மோடியை நிராகரிக்கிறது? அதற்கான முக்கியத்துவம் தான் என்ன?
- பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது? (2)
- விவரங்கள்
- பெரியார்
- பிரிவு: பெரியார்