பரவசம் காணப்போகும்
நிலையில்,
பெருங்கனவு
வேண்டுதல்கள்
ஆசைகள்
தீர்மானங்கள் சுமந்து
சுடச்சுட மலர்கள்
பூத்த ஆடைகள் மணக்க
தள்ளுமுள்ளு நெரிசலில்
வியர்வை அர்ச்சனையில்
முட்டிமோதி தரிசனம் செய்ய
வந்தனர் தெய்வங்கள்
சுயரூபத்தைக் கண்டு
கன்னத்தில் போட்டுக் கொண்டனர்
மகள் வரைந்த நட்சத்திர
வீட்டில் வாசம் செய்து..
கூட்டநெரிசலில் சிக்கித் தவித்த
தெய்வங்களுக்குப் பிரசாதமாய்
உயிர்க்காற்றை அள்ளி வழங்கினாள் மகள்
தலவிருட்சமாய் உயர்மாய்
வரைந்த மரத்திடமிருந்து..
மரத்திடம் ஆசிபெற்ற
சுவாமிகள் தேவலோகம்
செல்ல மனமின்றி
மகள் வரைந்த குட்டி வீட்டின்
வாசலில் வரிசை கட்டி
ஒளிர்கிறார்கள் ..!
நட்சத்திர அபிசேகத்தில்
மின்னுகிறது மகளின் மனம்
வானமாய் புத்தாண்டு வாசலில்...

- சதீஷ் குமரன்

Pin It