வேலை முடிந்து வந்ததும்
சட்டையைக் கழற்றி
ஆணியில் மாட்டுவோர்
ஜம்மென்று வாழ்கிறார்கள்
என்றே நம்புங்கள்
உடலைக் கழற்றி
மாட்டுகிறவர்களும் உண்டு
இங்கே

*
ஒரு மோசமான பட்டப்பெயரை
பள்ளி டீச்சர் எனக்கு வைத்தார்
ஆனாலும்
அவர் இறந்த போது
நான் அழுதேன்

*
நெருப்புச் சட்டி ஏந்தி
நெருப்பில் நடந்தது
நெருப்பில் ஓடியது போதும்
இனி அரை மணி நேரம்
நெருப்புக் குழிக்குள்
நிற்பதாக
வேண்டு பக்தா

*
கடவுள் கை கொடுக்கவில்லை
கைக்கு கிடைத்த கல்லும்
பிடி கொடுக்கவில்லை
அடித்துப் பிடித்து
ஆலயம் போன
நேரத்துக்கெல்லாம்
நீச்சல் கற்றிருக்கலாம்

- கவிஜி

Pin It