ஆயிரம் காரணம் சொல்லி
ஆயிரத்தோராவது
வெடிகுண்டையும்
வீசி விட்டாயா
சாகடிப்பதில் இருக்கும்
சாணக்கியம் பிடிக்கிறதோ
ரத்தம் சிந்தச் செய்யும் யுத்தம்
என்ன தருகிறது
அறிவாளிகளின் உச்சம்
மூடத்தனம் என்ற நிரூபணமா
அபகரிப்பின் அரிப்பு
துப்பாக்கி தூக்கச் சொல்கிறதோ
சக மனிதனை காவு வாங்கி
கைக்கொள்வது எதை
நின்று நிதானிக்கத் தெரியாத
உனக்கு
கொன்று போடுதல் சரி என்று
யார் சொன்னது
செத்தால்
செத்தோம் என்றாவது
தெரியுமா
வெடிகுண்டும் பீரங்கியுமா
மானுட தோட்ட மலர்கள்
நட்சத்திரக் கொள்ளிகளை
அள்ளி வீசென்றா
உன் கடவுள் சொல்கிறார்
சிறுபிள்ளையின் சித்திரம்
உடைபடுகின்ற ஊரில்
ஊற்றெல்லாம் குருதி
கேட்கிறதா
காற்றெங்கும் புலம்பல்...!

- கவிஜி

Pin It