பலதரப்பட்ட எதிர்ப்புக்கும் ஆதரவுக்கும் இடையில் ஒருவழியாக காமன்வெல்த் எனப்படும் பிரிட்டிஷ் ஏகாதிப்பத்திய அடிவருடி(அடிமை)களின் மாநாடு முடிவடைந்தது. ஆம் அப்படித்தான் சொல்லவேண்டும், காமன்வெல்த் அமைப்பு என்பது பிரிட்டிஷ் ஏகாதிப்பத்தியின் அடிமைகளாக இருந்த நாடுகளின் கூட்டமைப்பு.  இதில் உறுப்பினர் பதவி என்பது கட்டாயம் அல்ல. இதில் உறுப்பினர் ஆவதற்கு ஒரே தகுதி இங்கிலாந்தின் வரலாற்றுடன் தொடர்புடைய எந்த ஒரு நாடும் தன்னிச்சையாக விண்ணப்பித்து இந்த காமன்வெல்த் நாடுகள் அமைப்பில் தன்னை இணைத்துக் கொள்ளலாம்.

வெள்ளையர்கள் அமெரிக்க மண்ணின் பழங்குடிகளை கொன்று அந்த மண்ணை கபளீகரம் செய்து பின்னர் நடந்த பங்காளி சண்டையில் உலகம் முழுக்க திருடித் தின்னும் முதலாளிகளுக்கான நாடாக உருவாகிய அமெரிக்கா இந்த கூட்டமைப்பில் இல்லை. ஒருவேளை இங்கிலாந்தும், அமெரிக்காவும் கூட்டாக உலகம் முழுக்க களவாண்டு தின்பதால் இந்த அமைப்பில் இல்லையோ  என்னவோ? பிறகென்ன இருக்கின்ற நாடுகள்  எல்லாம்  எங்களை சுரண்டி தின்ன வா  என்று அழைக்கவா இந்த மாநாடு, இந்த கூட்டமைப்பு   என்று நீங்கள் கேட்கலாம். உங்கள் கேள்வி ஒன்றும் அநியாயமானது கிடையாது. இந்தியா போன்ற பிறநாடுகள் தங்களுக்குள் பேரம் பேசி தத்தமது நாட்டை பிறருக்கு விலை பேசத்தான் இந்த ஒன்றுகூடல். அதற்காக, காமன்வெல்த்தில் பங்கு பெறாத எகிப்து , ஜோர்டான், ஈராக், சூடான், குவைத், பஹ்ரைன் போன்ற நாடுகள் அனைத்தும் யோக்கியமானவை  என்று புரிந்து கொள்ள வேண்டாம். அந்நாட்டு முதலாளிகள் தம் நாட்டை வேறு வழியில் விற்கிறார்கள் அவ்வளவே.

சென்ற மாதத்தில் துவக்கத்தில் (அக்டோபர் 3, 2013)  ஜாம்பியா காமன்வெல்த் நாடுகளின் அமைப்பில் இருந்து வெளியேறி உள்ளது. அதன் தலைவர் யஹ்யா ஜம்மே (Yahya Jammeh) இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் அடிமையாக இருந்த நாடு என்பதனைக் குறிக்கும் அமைப்புடன் எந்த உறவும் தங்கள் நாட்டிற்குத் தேவையில்லை எனஅறிவித்துள்ளார். இரு மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகையையும், 4,000 சதுர மைல் பரப்பளவுள்ள மிகச்சிறிய நாடு இந்தக் காம்பியா. 120 கோடி மக்கள் தொகை கொண்ட சுதந்திர இந்தியாவுக்கு அந்த துணிச்சல் இல்லை பெருமைப்படத்தக்க விசயமா  என்பதை  நீங்களே  எண்ணிப் பாருங்கள்..

உலக அமைதிக்கான அவை என்று சொல்லிக் கொள்கின்ற ஐநாகூட இலங்கையின் ஈழத்தமிழர்களுக்கு சரியான உதவிசெய்யாமல் இருக்கும் நிலையில், காமன்வெல்த் நாடுகள் அமைப்பு பெரிதாக என்ன உதவி செய்துவிடப்போகிறது? காமன்வெல்த் நாடுகள் அமைப்பின் ‘ஹாரேர் பொதுநலப் பிரகடனம்’ (Harare Commonwealth Declaration) அறிவுறுத்தும் கொள்கைக்குப் புறம்பாக, மக்களாட்சி வழிமுறைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட நைஜீரியாவும், பாகிஸ்தானும், சிம்பாபுவே நாடுகளும் முறையே 1995, 1999, 2002 ஆண்டுகள் தற்காலிகமாக உறுப்பினர் பதவில் இருந்து நீக்கப்பட்டன. அதிலும் பாகிஸ்தான் இருமுறை நீக்கப்பட்டுள்ளது. தற்பொழுது ஃபிஜிநாடு நீக்கப்பட்ட நிலையில் உள்ளது. இலங்கையின் மனித உரிமை மீறல் செயல்களுக்காக அந்நாட்டின் மீது இதுபோன்ற நடவடிக்கை எடுக்கச் சொல்லி வலியுறுத்தி கனடாவும், இங்கிலாந்தும் இந்த ஆண்டின் துவக்கத்தில் கண்டனக் குரல்கள் எழுப்பின. ஆனால் இந்திய நடுவரணரசிடமிருந்து அப்படியான எந்த எதிர்ப்பும் இல்லை. 

காமன்வெல்த் மாநாட்டின் கொள்கைக்கு எதிராகச் செயல்படும் இலங்கையிலேயே காமன்வெல்த் மாநாட்டை நடத்தும் செயல். நடவடிக்கை எடுக்கப்பட்டு உறுப்பினர் பதவியை நீக்கப்பட வேண்டிய நாட்டில் நடந்து முடிந்திருக்கிறது. 2013 ஆம் ஆண்டு நவம்பர் 10 முதல் 17 தேதி வரை நடந்து முடிந்த மாநாட்டின் விளைவுகள் இலங்கை அதிபதிக்கு ஒருவகையில் பாராட்டாகவே அமையும். இனப்படுகொலை நாடு என்ற குற்றத்திலிருந்து தப்பிப்பதற்கும் இது உதவும். ராஜபக்‌ஷேவின் காமன்வெல்த் தலைமை இலங்கையின் மனிதநேய மீறல்களை காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் ஆதரிப்பதாகவே அமைந்துள்ளது. இனப்படுகொலையை கண்டித்தும் நடந்து முடிந்த இலங்கை மாநாட்டினால் அநியாயமாக உயிர்நீத்த அல்லது உயிர் நீக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு கிடைக்கும் நீதி என்ன என்பது விளங்கவில்லை.

இவ்வளவு ’சிறப்புமிக்க’ காமன்வெல்த் மாநாடு 2013-ன் சிறப்புகள்?

· உலகம் முழுவதும் இனப்படுகொலை செய்த நாடு என்று அறியப்பட்ட இலங்கையில் சிங்கிள இனவெறியன் என்று அறியப்பட்ட ராஜ்பக்சே தலைமையில் நடைபெற்று முடிந்துள்ளது.

· மொரிஸ்யஸ் தீவு இனப்படுகொலை செய்த நாட்டில் காமன்வெல்த் மாநாடா? என்று சொல்லி மாநாட்டில் கலந்தகொள்ளாதது மட்டுமல்லாது, அடுத்த காமன்வெல்த் மாநாட்டுற்கு (2015) தலைமை ஏற்க வந்த அழைப்பையும் ஏற்கமறுத்து தனது சுயகௌரவத்தையும் மனிதநேய உணர்வையும் நிலைநிறுத்தியுள்ளது.

· வருவோம் ஆனா வரமாட்டோம் என்ற தொனியில் கனடா பிரதமரும், இந்திய பிரதமரும் தான் செல்லாமல் தனது மந்திரிமார்களை அனுப்பிவைத்து தங்களது ”மனிதநேயத்தை”? தற்காத்துக்கொண்டுள்ளனர்.

· இந்த மாநாட்டின் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது யாதெனில் தன் நாட்டு மக்களால் மாநாடுக்கு செல்லவேண்டாம் என்று சொல்லியும் தன் நாட்டு மக்களின் எதிர்ப்பையும் மீறி இம்மாநாட்டில் கலந்துகொண்டு இலங்கையில் இனப்படுகொலையைக் கண்டித்தும், போர்குற்ற விசாரணையை நடத்தவேண்டும் என்று உரக்கக் குரல் கொடுத்த இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் வருகை.

மேற்கண்ட சிறப்புகளில் நாம் மிக உன்னிப்பாக கவனிக்கவேண்டியது, ’இனப்படுகொலை இலங்கையைக் கண்டித்த இங்கிலாந்து’ என்ற வார்த்தையைத் தான். இலங்கை இனப்படுகொலை செய்தது என்று கண்டித்துப் பேசிய இங்கிலாந்துக்கு என்ன தகுதி இருக்கிறது என்று சற்று பார்ப்போம்.

இலங்கை இனப்படுகொலையை கண்டித்துப் பேசிய இங்கிலாந்து ஒரு இனப்படுகொலை நாடு என்பது கண்கூடு, அதற்கு உதாரணம் வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் அமெரிக்காவோடு சேர்ந்து இங்கிலாந்து செய்த இனப்படுகொலை உலகறிந்த ஒன்று, அப்பேர்ப்பட்ட இங்கிலாந்து இலங்கையை எதிர்த்து பேசியது குறித்த மர்மம் என்ன…? இங்கிலாந்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழர்களின் வாக்குகளைப் பெறவே (நம்மூர் அரசியல்வாதி போலவே) இலங்கையைக் கண்டித்து தன் மீது உலகின் பார்வையை விழச்செய்துள்ளார். ஆனால் இதற்கு முன்னால் இலங்கைக்கும் இங்கிலாந்திற்கும் உள்ள தொடர்பை உற்று நோக்கினால் இலங்கைக்கு ஆயுதம் வழங்கிய முக்கிய நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. இப்படி ஆயுதம் கொடுத்து இனப்படுகொலைக்கு காரணமாக இருந்து இங்கிலாந்துதான் போர்குற்ற விசாரணையை நடத்தவேண்டுமென்று இலங்கைக்கு எதிராக குரல் கொடுத்துள்ளது. இப்படி இரட்டை வேடம் போடும் இங்கிலாந்தை தான் உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழருக்காக பேசிய இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் என்று பெருமையாக பேசிக்கொள்ளுகிறார்கள்.

தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்று தெரியாமல், தாங்கள் முட்டாள்ளாக்கப்பட்டிருப்பது உணராமல், இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் தங்கள் வாழ்வு மலர்வதற்காகவே அரசியல் தலைவர் இருக்கிறார்கள் என்று நம்பி வாழும் மக்களைப் போல உலகளவில் நடக்கும் இது போன்ற நாடகங்களை (இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம், காமன்வெல்த் மாநாட்டில் இலங்கைக்கு எதிரான இங்கிலாந்து பேச்சு,) நம்புவது ஈழத்தமிழர்களுக்கு விடியலைத் தராது. அதனால் ஏகாதிப்பத்திய (அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற) நாடுகள் ஒரு போதும் மக்களின் விடுதலையை விரும்பாது என்று உண்மையை உணர்ந்து நாம் செயல்படுவோம்.

Pin It