மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் இயற்கை பாதுகாப்பை உறுதிசெய்திடவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் மத்திய அரசால் அமைக்கப்பட்ட கஸ்தூரி ரங்கன் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தெரிவித்துள்ள கருத்து முற்றிலும் சரியானதாகும். கஸ்தூரிரங்கன் குழு அறிக்கையை வைகோ வரவேற்றதின் அடிப்படை என்ன? என்பதை அறியும் முன், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி குறித்தும், உயர் பாதுகாப்புப் பகுதியாக இப்பகுதி அறிவிக்கப்பட வேண்டியதின் அவசியம் குறித்தும் மத்திய அரசு அமைத்த குழுவின் விபரங்களையும் காண்போம்.

மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் குஜராத் மாநிலத்தில் தொடங்கி, மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, தமிழகம் வரை ஆறு மாநிலங்களில் சுமார் 1, 500 கி.மீ. தூரம் நீண்டு கிடக்கிறது. அடர்ந்த வனப்பகுதியாகவும், தாவரங்கள் நிறைந்த பகுதி யாகவும் பறவைகள் மற்றும் புலி, யானை போன்ற விலங்கு களின் புகலிடமாகவும் இப்பகுதி விளங்குகிறது. இயற்கை பாதுகாப்புக்கும், சுற்றுச்சூழலுக்கும் மிகவும் இன்றியமையாத பகுதியாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி இருக்கிறது.

தென் இந்திய தீபகற்பத்தின் மிக முக்கியமான ஆறுகளின் உற்பத்தி இடமாக இருப்பதும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிதான். இங்கு 58 பெரிய ஆறுகள் உற்பத்தியாகிறது. 47 ஆறுகள் மேற்கு நோக்கியும், 8 ஆறுகள் கிழக்கு நோக்கியும், 3 ஆறுகள் தெற்கு நோக்கியும் ஓடுகின்றன.இவற்றில், கோதாவரி, கிருஷ்ணா, நெட்ராவதி, காவிரி, வைகை போன்ற ஆறுகள் முக்கிய மானவையாகும். பருவக் காற்று காலங்களில் 2, 000 மில்லி மீட்டர் முதல் 8, 000 மில்லி மீட்டர் வரை மழை பொழிவதற்கும் இந்த மேற்குத்தொடர்ச்சி மலை காரணமாக இருக் கின்றது. இயற்கை சமன்பாட்டை பராமரிப்பதில் இப்பகுதிகள் முக்கியக் கார ணியாக விளங்குகின்றன. மேலும் 245 மில்லியன் மக்களின் வாழ் வாதரமான குடிநீர், பாசன நீருக்கு அடிப்படை ஆதாரம் மேற்குத் தொடர்ச்சி மலைகள்தான்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் 39 பகுதிகளை உலக பாரம்பரியச் சின்னமாக ஐ.நா.வின் ‘யுனெஸ்கோ’ தேர்ந்தெடுத்து இருக்கிறது. இந்த 39 இடங்களில் கேர ளாவில் 19, கர்நாடகாவில் 10, தமிழகத்தில் 6, மகாராஷ்டிராவில் 4 பகுதிகள் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு சிறப்புமிக்க மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி (Western Ghats) சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டு, ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருவது அதிகரித்து வருகிறது. இதனால், அங்குள்ள விலங்குகளுக்கும், பறவைகளுக் கும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து ஏற்பட்டு வருவதுடன், அடர்ந்த காடுகளுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனை உணர்ந்த இந்திய அரசு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியைப் பாதுகாக்க 2010 மார்ச்சில் சுற்றுச் சூழல் பேராசிரியர் மாதவ் காட்கில் தலைமையில் ஒரு நிபுணக் குழுவை (Western Ghats Ecology Expert Panel - WGEEP) அமைத்தது.

காட்கில் குழு மேற்கு மலைத் தொடர் பகுதிகளை ஆய்வு செய்து, அறிக்கையை 2012 ஆகஸ்டு 30 இல் மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் வழங்கியது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் தற்போதைய சுற்றுச் சூழல் நிலை, நுட்பமான சுற்றுச்சூழல் பகுதிகளைக் கண்டறிவது இயற்கையை பாதுகாக்க மேம்படுத்த மற்றும் தேவையான நடவடிக்கைகள், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி ஆணையம் அமைப்பது நிலுவையில் உள்ள சுற்றுச் சூழல் அனுமதிக் காகக் காத்திருக்கும் திட்டங்கள் பற்றிய மதிப்பீடு தயாரிப்பது போன்ற பணிகள் காட் கில் குழுவிற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் வழி காட்டுதலாக அளிக்கப்பட்டன.

இவற்றின் அடிப்படையில், மாதவ் காட்கில் குழு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை மூன்று பிரிவுகளாகப் பிரித்தது.

அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்ட லம் ((Ecologically Sensitive Zone) ஒன்று, இரண்டு மற்றும் மூன்று என ((ESZ-1, ESZ-2, ESZ-3) பிரிக்கப்பட்டது.மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் 1, 29, 037 சது கிலோ மீட்டர் பரப்பளவு பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும், அதிநுட்பமான சுற்றுச்சூழல் மண்டலமாகவும் காட்கில் குழு அறிக்கை பரிந்துரைத்தது. இந்த பகுதிகள் உயர் பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்டு, கடல் மட்டத்திலிருந்து 2, 000 மீட்டர் உயரத் திற்கு மேல் வரும் கட்டடங்களை இடிப்பதுடன், அங்குள்ளவர்களையும் வெளியேற்ற வேண்டும்.வளர்ச்சித் திட் டங்கள் என்ற பெயரால் காடுகளை அழிப்பது, ஆறுகளின் போக்குகளை மாற்றி அமைப்பது, அனல்மின் நிலையங்கள் அமைப்பது போன்றவைதடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று காட்கில் குழு அறிக்கை தெரிவித்தது.

அதிநுட்பமான சுற்றுச்சூழல் மண்டலம் ஒன்று என (ESZ-1)அடையாளம் காணப் பட்ட பகுதிகளில் புதிய அணைகள் கட்டக் கூடாது என்று காட்கில் குழு திட்ட வட்டமாகக் கூறியது. கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவி குளம், பீர்மேடு போன்ற வட்டங்கள் சுற்றுச் சூழல் மண்டலம் ஒன்றின் கீழ் வருகின்றன. இங்குள்ள முல்லைப் பெரியாறு அணையை உடைத்துவிட்டு, புதிய அணை கட்ட வேண்டும் என்று துடிக்கும் கேரள அரசுக்கு காட்கில் குழு பரிந்துரைகள் பெரும் தடையாக அமைந்தது. எனவே, கேரள மாநிலமும், மகாரா ஷ் டிரா, கோவா, குஜராத் போன்ற மாநிலங்களும் மாதவ் எதிர்த்தன.

இதனால், மத்திய சுற்றுப்புறச் சூழல் மற்றும் வனத்துறை மாதவ் காட்கில் குழு பரிந்துரைகளை (WGEEP) மறு ஆய்வு செய்வதற்கு திட்டக்குழு உறுப்பினர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான 10 பேர் அடங்கிய இன்னொரு குழுவை(High Level Working Group-HLWG)அமைத்தது.கஸ்தூரிரங்கன் குழு 2012 ஆகஸ்டு 17 இல் அமைக்கப்பட்டு, 2013 ஏப்ரல் 15 இல் தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளித்தது.

கஸ்தூரி ரங்கன் குழு மாதவ் காட்கில் குழுவின் பரிந்துரைகளில் அடிப்படை யான சிலவற்றை ஏற்றுக்கொண்டது.ஆனால், அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலங்கள் என்று மூன்று இனங்களாக, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளைப் பிரித்ததை இக்குழு ஏற்கவில்லை. காட்கில் குழுவின் பரிந்துரைகளின் படி, சில மண்டலங்களில் வளர்ச்சித் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், கஸ்தூரிரங்கன் குழு மேற்குத் தொடர்ச்சி மலையில் அடையாளம் கண்ட 1, 64, 280 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு பகுதி முழுவதும் சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பகுதி (ESA) என்று அறிவித்தது. இவற்றில் சுமார் 60 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவில் வளர்ச்சித் திட்டங்களைத் தடை செய்ய வேண்டும் என்று (37 சதவீதப்பகுதிகளில்) பரிந்துரைத்து, மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியை பாரம்பரிய நிலப்பகுதி (Cultural) மற்றும் இயற்கையான நிலப்பகுதி (Natural land Scape )என்று இரு இனங்களாக வகை செய்தது இதில் பாரம்பரிய நிலப் பகுதிகளில் விவசாய நிலங்கள், தோட்டாங்கள், மக்கள் வசிப்பிடங்கள் என்று 58.44 சதவீதப் பகுதிகள் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ளன. மீதமுள்ள மற்றப் பகுதிகளில் 90 சதவீதம் இயற்கைப் பகுதிகள் என்று அடையாளம் காணப்பட்டு, அவை அதிநுட்பமான சுற்றுச் சூழல் பகுதியாக (Ecologically Sensitive Area -ESA) கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்துள்ளது. இதன்படி குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் உள்ள 188 வட்டங்கள் சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பகுதிக்குள் வருகின்றன. இவற்றில் சுமார் 4, 000 கிராமங்கள் அடங்கி உள்ளன. மேலும் 40 இலட்சம் மக்கள் வசிக்கின்றனர்.

இந்தக் குழுவின் அறிக்கையின் படி கேரள மாநிலத்தில்தான் அதிக ஆக்கிரமிப் புகள் உள்ளன. இங்கு உள்ள 123 மலையக கிராமங்கள் சுற்றுச்சூழல் பகுதிக்குள் வருகின்றன.

கஸ்தூரிரங்கன் குழுவின் முக்கியப் பரிந்துரைகள் வருமாறு:-

மேற்குத் தொடர்ச்சி மலையில் 37 கதவீதம் பகுதி இயற்கை பாதுகாப்புப் பகுதி யாக விளங்குகிறது. இந்த பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். மேலும் ஆக்கிரமிப்புகள் உருவாக அனுமதிக்கக்கூடாது.

இப்பகுதிகளில் 20 ஆயிரம் சதுர மீட்டர் அல்லது அதற்கு மேல் எந்தவிதமான கட்டடங்களும் கட்டக்கூடாது.

பாதுகாக்கப்பட்ட இந்தப் பகுதிகளில் 50 ஹெக்டேருக்கு மேல் நகரியங்களை அமைக்கக்கூடாது.

இந்தப் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் மணல் குவாரிகளோ, எந்த விதமான சுரங்கப் பணிகளோ மேற்கொள்ளக்கூடாது.

சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அனல் மின் நிலையங்களை அமைக்கக் கூடாது.

எண்ணெய் தொழிற்சாலை சிமெண்ட் தொழிற்சாலை, பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்ட தொழிற்சாலைகளை அமைக்கக் கூடாது.

ஏற்கனவே செய்யப்பட்டு வரும் இத்தகைய தொழிற்சாலைகளை உடனே தடை செய்ய வேண்டும்.

முறையான விதிமுறைகளுக்கு உட்பட்டு, சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில், காற்றாலை மின் திட்டங்கள், நீர் மின் திட்டங்கள் ஆகியவற்றை அமைக்கலாம். ஆனால், இதனை மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கண்காணிக்க வேண்டும்.

இந்தப் பரிந்துரைகளில் மிக முக்கிய அம்சமாக இருப்பது சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பகுதிகளில் அணை கட்டுமானம் அறவே கூடாது என்று கஸ்தூரி ரங்கன் குழு தெரிவித்துள்ளது. மாதவ் காட்கில் குழு ஒப்புக் கொண்டதையே கஸ்தூரிரங்கன் குழுவும் தெரிவித்து இரக்கின்றது. அதாவது அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலமாக இருக்கும் கேரளாவின் 12 மாவட்டங்களில் உள்ள 15 வட்டங் களில், புதிய அணை கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும். குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம், பீர்மேடு, தொடுபுழா, உடும்பல் சோலா போன்ற வட்டங்கள் உயர் பாதுகாப்பு பகுதியின் கீழ் வருகின்றன. இடுக்கி மாவட்டத்தில் தான் முல்லைப் பெரியாறு அணை உள்ளது.

முல்லைப் பெரியாறு அணையை உடைத்து புதிய அணை கட்ட வேண்டும் என் ற கேரள மாநில அரசின் திட்டத்தை காட்கில் குழு போலவே, கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரையும் முறியடித்து இருக்கின்றது. கஸ்தூரிரங்கன் குழு அறிக்கையை வைகோ வரவேற்பதற்கும், கேரளாவில் உள்ள கட்சிகள் எதிர்ப்பதற்கும் உரிய காரணம் இப்போது விளங்கும்.

முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க 12 ஆண்டுகளாக மக்களைத் திரட் டி போராடி வரும் வைகோ, கஸ்தூரிரங்கன் குழு அறிக்கை நடைமுறைப் படுத்தப்பட்டால், முல்லை பெரியாறு அணை பாதுகாக்கப்படும் என்பதால்தான் வரவேற்றார். இது குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திருமதி ஜெயந்தி நடராசன் அவர்கள் கருத்துக்கூறிய போது, கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைகள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு பாதிப்பு நேராத வகையில் நடைமுறைப்படுத்தப் படும் என்று தெரிவித்து இருந்தார். காங்கிரஸ் கட்சியின் அமைச்சராக இருந்த போதிலும் திருமதி ஜெயந்தி நடராசன் அவர்களின் கருத்தை பிரச்சினையின் தன்மையைப் பொருத்து வைகோ வரவேற்றார்.

கஸ்தூரிரங்கன் குழு அறிக்கை செயல்பாட்டுக்கு வந்தால் மலைவாழ் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கேரள மார்ச்சிஸ்டுகள் மட்டுமின்றி, இங்குள்ள சிவப்பு சித்தாந்தவாதிகளும் கூறுகின்றனர். ஆனால், கஸ்தூரி ரங்கன் குழு தமது பரிந்துரைகளில் மலைவாழ் மக்களின் உரிமையைப் பாதுகாக்கும் வனப் பாதுகாப்புச் சட்டத்தின் படிதான் சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பகுதிகளில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றது. மேலும், இந்தப் பகுதிகளில் உள்ள கிராமங்களின் “கிராம சபைக் கூட்டங்களில்” ஒப்புதல் பெற்றுத்தான் சுற்றுச்சூழல் தொடர்பான பணிகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கின்றது.

கஸ்தூரிரங்கன் பரிந்துரைக்கு முதலில் ஆதரவு தெரிவித்த மார்க்சிஸ்ட் கட்சி, இப்போது தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, கேரளாவில் இடதுசாரி முன்னணி சார்பில், கஸ்தூரிரங்கன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து, நவம்பர் 18 ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத் தப் பட்டுள்ளது.

இந்நிலையில், கேரளத் தமிழர் கூட்டமைப்பு கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து உள்ளது.

இதுகுறித்து கேரளத் தமிழர் கூட்டமைப்பின் அமைப்பாளரும், எழுத்தாளருமான அன்வர் பாலசிங்கம் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

“கோவாவில் உயர் பாதுகாப்புப் பகுதியில் உள்ள 123 கிராமங் களிலும் பெரும் பண முதலாளிகளும், பெரிய கம்பெனிகளும், ரிசர்ட்ஸ்கள் உள்ளிட்டவற்றை கட்டி வைத்திருக்கிறார்கள். மதம் சார்ந்த கல்வி நிறுவனங்களும், ஏராளமாக உள்ளன. கஸ்தூரி ரங்கன் பரிந்துரைகள் அமலுக்கு வந்தால் இவற்றிற்கு பாதிப்பு வரும் என்பதால்தான் பதறுகிறார்கள். தற்போது நடக்கும் எதிர்ப்புப் போராட் டங்களின் பின்னணியில் பாதிரியார் செபாஸ்டியன் தலைமையில் செயல்படும் சம்ரஷண சமிதி முழுவீச்சில் இருப்பதன் ரகசியம் இதுதான். இவர்கள் யாருமே சாமானியர்களுக்காக போராடவில்லை.தமிழர்கள் 95 சதவீதம் வசிக்கும் தேவிகுளம் தாலுகாவில், 5 தேசிய வனவிலங்கு பூங்காக்களையும், 2 வன விலங்கு சரணாலயங்களையும் அமைக்க ஏற்கனவே மத்திய அரசு ஆணை பிறப்பித்து விட்டது. இது அமலுக்கு வந்தால் இரண்டரை இலட்சம் தமிழர்கள் அங்கிருந்து வெளியேற்றப் படுவார்கள். இதேபோல் குரங்கனிக்கு மேலே வட்டவடை, கோவிலூர் பகுதியில் 1000 ஏக்கரில் நீலக்குறிச்சி சரணாலயம் அமைக்க அறுபதுக்கும் மேற்பட்ட வன வருவாய் அதிகாரிகள் அங்கே முகாமிட்டிருக்கிறார்கள். இதுவும் செயல்படுத்தப்பட்டால், அந்தப் பொன் விளையும் பூமியிலிருந்து 5,000 தமிழர்கள் வெளியேற்றப்படுவார்கள்.”

கஸ்தூரிரங்கன் குழு அறிக்கை விவகாரத்தில் மனிதர்களைக் காட்டிலும் மரங்கள் பெரிதா என கேள்வி கேட்கும் மார்க்சிஸ்டுகள், இவ்விரண்டு பிரச்சினையிலும் குரல் கொடுக்காதது ஏன்? அப்படியானால், தேவிகுளம் தாலுகாவிலும் வட்டவடை, கோவிலூர் கிராமங்களிலும் இருப்பது மனிதர்கள் இல்லையா?

முல்லைப் பெரியாறு அணையை உடைக்கக் கோரி தீவிரமான போராட்டங்களை நடத்தியவர் ஜோன்ஸ் பெருந்தானம். தீவிரமான மலையாள இனப் பற்றாளரான இவரும், ஆர்.சி.கிறிஸ்துவர் தான். இவரே நில மாஃபியாக்களுக்கு துணை போகிறவர்கள் தான் கஸ்தூரிரங்கன்குழு பரிந்துரைகளை எதிர்க்கிறார்கள் என்று உண்மையைச் சொல்லி இருக்கிறார்கள். இதிலிருந்து உண்மையைத் தெரிந்துகொள்ள முடியும்.” (தி இந்து 25.11.2013)

பருவகால மாற்றமும், புவிவெப்ப மயமும் உலகையே மிரட்டிக் கொண்டு இருக்கும்போது, மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் உலகில் அதிகமான வெப்பமான பகுதியாக மாறி வருவதை தடுக்கவும் கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Pin It