எந்த ஒரு மத அடையாளமோ, மதமோ நமக்கு ஏற்புடையதன்று.

மதமா? நாடா? எதுவேண்டும் என்று காட்டமாகக் கேட்டிருக்கிறது கர்நாடக உயர் நீதிமன்றம்.

மதம் என்பது அபினுக்கு நிகரானது என்றார் காரல் மாக்ஸ். மது போதையை விட மத போதை மிகக் கொடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாடு பார்த்திருக்கிறது.

மக்கள் மனங்களில் மத போதையை ஏற்றிக் கலவரங்களை ஏற்படுத்தி வருபவை இந்துத்துவ அமைப்புகள்.

 இந்திய அரசியல் அமைப்பு வழங்கியுள்ள உரிமையின் படி, இஸ்லாமிய மாணவிகள் ஜிஹாப் அணிந்து கல்விக் கூடங்களுக்கு வந்திருக்கிறார்கள், கருநாடகத்தில். இன்னும் சொல்லப் போனால் 1948க்குப் பின் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக அப்படித்தான் வந்திருக்கிறார்கள்.

அப்போதெல்லாம் கண்களை உறுத்தாத ஜிஹாப் ஆடை இப்பொழுது இந்து அமைப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு உறுத்தி விட்டது.

உடனே காவித் துண்டுகளுடன் போராட்டம், கலவரம், தடியடி, துப்பாக்கிச் சூடு வரை போய் விட்டது.

இது ஜிஹாப்புக்கு எதிரான போராட்டம் என்பதை விட, மதத்தின் பெயரால் தூண்டி விடப்பட்ட போராட்டமாகவும், நீண்ட காலத்திற்குப் பின்னர் கல்லூரி வரை சென்று படிக்கும் பெண்களுக்கு எதிரான போராட்டமாகவும் இருக்கிறது. இதனால் அவர்களின் கல்வி எதிர்காலங்களில் பாதிக்கப்படும், என்பதையும் கவனிக்க வேண்டும்.

இந்தப் போராட்டத்தில் ஒரு சில மாணவர்களைத் தவிர பெரும்பாலும் வெளியில் இருந்து கொண்டு வரப்பட்டவர்களாகத் தெரிகிறார்கள். இது ஒரு திட்டமிட்ட செயல் என்பதும் தெரிகிறது.

இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஏனைய மாநிலங்கவில் பரவி விடாமல் இருக்க வேண்டும்.

ஆகவே மத போதையில் இருந்து மாணவர்கள் விலகி, அவர்களின் கல்வி தொடரவும், அமைதி நிலவச் செய்வதும் மாநில, ஒன்றிய அரசுகளின் கடமையாகும்.

Pin It