சிவகாசி ஆலங்குளம் வட்டாரம் மாதாங்கோவில்பட்டியில் உழைக்கும் மக்கள் போராட்டக்கமிட்டி சார்பாக 21.12.2008 அன்று பாரதி பிறந்தநாள் விழா சிறப்புடன் நடத்தப்பட்டது. விழாவில் பேராசிரியர்கள் பெரியவர், பிரேம்குமார், உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டி மாநில அமைப்பாளர் தோழர் V. வரதராஜ், மாற்றுக்கருத்து! மற்றும் கேளாத செவிகள் கேட்கட்டும் ஆசிரியர் தோழர் த.சிவக்குமார் ஆகியோருடன் கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை (சி.டபிள்யூ.பி) தமிழ்நாடு அமைப்பாளர் தோழர் A. ஆனந்தனும் உரையாற்றினர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்த தோழர் த.செல்வக்குமார் விழாவிற்கு தலைமை வகித்தார்.

விழாவின் தொடக்கத்தில் பாரதியின் வாழ்க்கையின் மிக முக்கிய சம்பவங்களை மாணவ மாணவிகள் ஜென்னி பாரதி, சுபாஷ் ஆகியோர் தொகுத்து வழங்கியதும் பாரதியின் கவிதை ஒன்றினை உயிரோட்டத்துடன் ஜென்னி பாரதி முழங்கியதும் விழாவிற்கு கூடுதல் சிறப்பு சேர்த்தது. தனது தலைமையுரையில் தோழர் செல்வக்குமார் விழாவிற்காக உழைத்த உள்ளூர்த் தோழர்களை உருக்கமாக நினைவுகூர்ந்தார்.

அடுத்து உரையாற்றிய தோழர் வரதராஜ் பாரதிக்கு விழா எடுத்துள்ள உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டி இதற்கு முன் இப்பகுதியில் எடுத்த பல்வேறு போராட்டங்களையும் இனி எடுக்கவிருக்கும் உழைப்பாளர்களுக்கான பல உரிமைப் போராட்டங்களையும் கூறி அவையனைத்திற்கும் இவ்வட்டாரப் பொதுமக்கள் ஆதரவு தரவேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

பேராசிரியர் பிரேம்குமார் தனது உரையில் உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டியும், கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொது மேடையும் (சி.டபிள்யு.பி) பகத்சிங் நினைவு தினம் மற்றும் பாரதி விழா போன்றவற்றை அனுஷ்டிப்பதன் மூலம் அவர்களது சிந்தனைகளை மக்கள் மத்தியில் பிரபலமாக்கி அவர்களின் பாதையில் நடைபயின்று இன்றைய சமுதாய பிரச்னைகளை தீர்ப்பதற்கும், சமுதாய மாற்றத்தை கொண்டு வருவதற்கும் முயன்று வருகின்றன என்று குறிப்பிட்டார்.

தோழர் த. சிவக்குமார் தனது உரையில் பாரதியை ஜாதிய வாதியாக சித்தரிக்கும் சில தரப்பினரின் இழிசெயலை வன்மையாக கண்டித்தார். அவரது கவிதை ஒன்றினை மேற்கோள் காட்டி நந்தன்தான் மிகச்சிறந்த அந்தணன் என்று அவர் அதில் கூறியுள்ளது பார்ப்பனியத்தையா வெளிப்படுத்துகிறது? கனகலிங்கம் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவருக்கு பூணூல் அணிவித்து அந்தணனாக்கி சமூகத்தின் மேல் ஈடுபாடும் அக்கறையும் கொண்டு அதற்கு முன்மாதியாக திகழ்பவர்களே அந்தணர்கள் அந்த வகையில் அத்தகுதி, ஒருவரின் நடைமுறையால் அடையப் பெறுவதே என்ற பாரதியின் கருத்து பார்ப்பனியத்தையா பிரதிபலிக்கிறது? என்ற கேள்விகளை எழுப்பியதோடு பிறப்பில் ஜாதி பேதம் பாராட்டுவதை ஒரு சதி என்று அவர் வர்ணித்ததும் அவரது காலத்தில் நிலவிய ஜாதியத்திற்கு எவராலும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவிற்கு எதிர்ப்பைக் கிளப்பியவை என்பதை முன் வைத்தார்.

பாரதியின் கண்ணோட்டம் காந்தியடிகளின் ஜாதியம் குறித்த கண்ணோட்டமான பிராமண வகுப்பில் பிறந்த ஒருவன் அதற்குகந்தவனாக வாழாவிட்டால் அவன் கெட்ட பிராமணன் அதைப்போல் சூத்திர குலத்தில் பிறந்த ஒருவன் பிராமண வகுப்பினனைப் போன்ற குணங்கள் கொண்டவனாக இருந்தால் அவன் நல்ல சூத்திரன் என்பதைக் காட்டிலும் மிக மிக முற்போக்கல்லவா என்று குறிப்பிட்டார். ஜாதியத்தை ஒழிக்கிறோம் என்ற பெயரில் ஜாதிக் கட்சிகளோடு கம்யூனிஸ்ட் கட்சிகள் என்ற பெயரில் செயல்படும் சி.பி.ஐ(எம்) போன்ற கட்சிகளும் எவ்வாறு ஜாதியத்தை வளர்க்கும் போக்கில் செயல்படுகின்றன என்பதற்கு எடுத்துக்காட்டாக உத்தப்புரம் நிகழ்வுகளை எடுத்துரைத்தார்.

உத்தப்புரத்தில் ஒரு சமயத்தில் அனைத்து மக்களும் ஒருமித்து முடிவு செய்து எழுப்பிய சுவரை இடிப்பதற்கு அனைத்து சமூகத்தினரையும் சுமூகமாக அணுகி அவர்களது ஒற்றுமைக்கு ஊறு விளையா வண்ணம் பிரச்சனையை தீர்ப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக எடுத்த எடுப்பிலேயே அச்சுவருக்கு தீண்டாமைச்சுவர் என்று பெயரிட்டு அதனை அகற்றுவதில் முனைப்புக் காட்டிய சி.பி.ஐ(எம்) கட்சியினர் இருபிரிவு மக்களிடையே நிரந்தரப் பகையை ஏற்படுத்தி விட்டனர். அதே வேகத்தில் அதனால் அக்கட்சியினர் மேல் வெறுப்புற்றிருந்த அதில் சம்பந்தப்பட்ட இன்னொரு வகுப்பினரையும் தாஜா செய்யும் விதத்தில் தற்போது பிள்ளைமார் ஜாதியவாதத்திற்கு இரையாக்கப்பட்டு விட்ட மாபெரும் விடுதலைப் போராட்ட வீரரும் பாரதியின் உற்ற தோழருமாகிய வ.உ.சி-யின் சிலைக்கு மதுரையில் பிள்ளைமார் சங்கத்துடன் போராடி மாலை அணிவித்து தங்களது வாக்கு வங்கி அரசியலை வெளிப்படுத்தினர் என்பதை தெளிவுபட எடுத்துரைத்தார்.

சமூகத்தில் ஒரு வகுப்பினர் ஜாதிய வாதத்தை எடுத்தால் அது எவ்வாறு அனைத்து வகுப்பினரும் ஜாதிய வாதத்தை எடுப்பதில் சென்று முடிகிறது என்பதை எடுத்துக் கூறினார். மேலும் இவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிரான தீண்டாமைக் கொடுமையினை எவ்வாறு பூதக்கண்ணாடி போட்டுப் பார்த்து கண்டுபிடித்து அதனைப் பிரபலமாக்கி அழிந்து கொண்டிருக்கும் ஒன்றிற்கு எதிராக நிற்பதாக தேர்தல் ஆதாயம் கருதி மார் தட்டுகிறார்கள் என்பதை தோலுரித்துக் காட்டினார். உண்மையான இடதுசாரிகள் விரும்புவது ஜாதிய ஒழிப்பே தவிர ஒடுக்கிய ஜாதியினரின் ஒடுக்கு முறைக்கு பதிலாக ஒடுக்கப்பட்ட ஜாதியினரின் ஒடுக்கு முறையை கொண்டு வருவதல்ல என்பதை வலியுறுத்தி தன் உரையை நிறைவு செய்தார்.

தோழர் சிவக்குமாருக்கு பின் உரையாற்றிய போராசிரியர் பெரியவர் தனது உரையில் அனைத்து மகான்களைப் போலவே பாரதியும் அவன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்திருந்த சமூகத்தால் பார்க்கவும், பாராட்டவும்படவில்லை. அவன் வாழ்ந்த சமூகம் அவனுக்கு வறுமையையும் வேதனையுமே தந்தது. ஆனால் அவன் தீர்க்கதரிசனமாக கூறியவை அனைத்தும் அடுத்து வரும் காலங்களில் நிகழ்ந்து இன்று, அவன் எத்தனை உயர்ந்தவன் என்பதை மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. விடுதலை பெறுவதற்கு முன்பே ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்று அவன் விடுதலை பெற்றுவிட்டதாகவே பாடினான்.

வானம் அளந்தது அனைத்தும் அளந்த மொழி என்று அவன் தமிழைப் பற்றி கூறினான். இன்று வாழ்ந்த தமிழகத்தின் கலாமும், மயில்சாமி அண்ணாதுரையும் விண்வெளி விஞ்ஞானத்தில் இந்தியாவை உயர்ந்து விளங்கச் செய்துள்ளனர். தமிழ் இலக்கியத்தில் அவனுக்கு பின் தோன்றிய அனைத்து எழுத்தாளர்களுக்கும் புதுவழி காட்டிய புதுயுக கவிஞன் அவன். யாரும் நினைத்துப் பார்க்க முடியாத விதத்தில் பெண்விடுதலைக் கருத்தும் கண்ணோட்டமும் கொண்டவனாக அவன் விளங்கினான் கற்பென்றால் இருபாலருக்கும் அதனை பொதுவில் வைப்போம் என்று அவன் முழங்கினான். அத்துடன் தனது மனைவியின் தோளில் கைபோட்டுக்கொண்டு அஹ்ரகார தெருவுக்குள் நடைபோட்டு அங்கு நிலவிய பத்தாம் பசலி போக்குகளை பரிகசித்தான் என்ற விசயங்களை சாராம்சப்படுத்தினார்.

இறுதியாக சிறப்புரையாற்றிய தோழர் A. ஆனந்தன் தனது உரையில் பின்வரும் விசயங்களை எடுத்துரைத்தார்:

உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டி, கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடை ஆகிய அமைப்புகள் ஒரு இலக்கிய வாதியான பாரதிக்கு விழா எடுப்பது என்பது வித்தியாசமாக தோன்றலாம். ஏனெனில் பாரதி நேரடியாக தொழிலாளி வர்க்க இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்தவனல்ல. அவன் கம்யூனிஸ்ட் என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டவனும் அல்ல. இருந்தாலும் உண்மையான சமூகமாற்றத்தை கொண்டுவர விரும்பும் அரசியல்வாதிகளுக்கு எப்போதுமே இலக்கியங்கள் மற்றும் இலக்கியவாதிகள் மீது ஒரு பார்வை மற்றும் ஈடுபாடு இருந்து கொண்டே வந்துள்ளது.

இலக்கியம் என்பது மக்களின் மனதை பண்படுத்தக் கூடியது. பண்படாத நிலத்தில் எவ்வாறு பயிர்கள் வளராதோ அதைப்போல உயர்ந்த சரியான இலக்கியங்களால் பண்படுத்தப்படாத பரந்துபட்ட மக்கள் மனதில் சமுதாய மாற்றக் கருத்து விதைகளை விதைக்கவோ அதனை வளர்க்கவோ முடியாது. அந்த அடிப்படையில் ஒரு சரியான அரசியல் நீரோட்டத்தைக் கொண்டு இன்று நிலவும் சீரழிந்த சாக்கடை அரசியலை அகற்ற முனைபவர்களுக்கு நிச்சயம் பாரதி போன்ற மறுமலர்ச்சியுக இலக்கியவாதிகள் மேல் ஒரு ஈடுபாடு இருக்கவே செய்யும்.

உயர்ந்த கருத்துக்களே உயர்ந்த இலக்கியவாதிகளை உருவாக்குகின்றன. அக்கருத்துக்கள் அரசியல்வாதிகளின் எழுத்துக்களைக் கூட மிகச்சிறந்த உன்னத இலக்கியங்களாக்குகின்றன. கவிஞர் கண்ணதாசன் ஒருமுறை கூறினார். தான் படித்த கவிதைகளிலேயே மிக உயர்ந்த கவிதை "பாட்டாளிகளுக்கு இழப்பதற்கென்று எதுவுமில்லை; அவர்களது கைவிலங்குகளைத் தவிர. ஆனால் அவர்கள் வெல்வதற்கு ஒரு உலகம் இருக்கிறது" என்ற இரு வரிகளே என்று. அவ்வரிகள் மாமேதை மார்க்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கை என்ற இறவா இலக்கியத்தில் இடம் பெற்றவையாகும்.

சமகாலத்து எழுத்தாளர்களிலேயே பாரதி மிகவும் வேறுபட்டும் உயர்ந்தும் இருந்ததற்கான காரணம் அவரை வழி நடத்திய அவர் கைக்கொண்டிருந்த உயர்ந்த இலக்காகும். அடிமைத்தனம் என்ற சவுக்கடி அவர்மேல் விழுந்து கொண்டிருப்பதை உணர்ந்தார். எனவே தான் தேசவிடுதலைக் கண்ணோட்டத்தை அவர் தனது இலக்காகவும் உயிர் மூச்சாகவும் கொண்டார். அதுவே அவரது எழுத்துக்களில் நெருப்பைப் பாய்ச்சி அவற்றை வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் அவரது சமகால இலக்கியங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டியது.

அவர் தனது கவிதைகளை வெறும் இலக்கியப் படைப்புகள் என்று பார்க்கவில்லை. அவை தேசவிடுதலைக்கு மக்களை அணிதிரட்டும் கருவிகளாக விளங்க வேண்டும் என்று விரும்பினார். அதனால் தான் அவரது நடையில் அனைவராலும் புரிந்து கொள்ளக்கூடிய எளிமை பிறந்தது. யாப்பிலக்கண தளைகளை அவரது கவிதைகள் துச்சமென தூக்கியயறிந்தன. காவடிச்சிந்து அவரது கருத்துக்களை ஏதுவாகச் சுமக்கும் வாகனமாயிற்று. ஏற்றம் இறைப்போர், மீன்பிடிப்போர், புகைவண்டியில் பிச்சை எடுப்போர் போன்றவர்கள் பாடிய பாடல்களில் இருந்தும் கூட அவர் தனது கவிதைகளுக்களான ராகங்களையும் சந்தங்களையும் பெற்றார். அதனால்தான் அவரது இலக்கியம் இன்னும் வாழ்கிறது.

ஒரு அரசியல் நோக்கை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட அவரது கவிதைகள் மற்ற இலக்கியங்களைப் போல் இறவா வரம் பெற்றவையாக இருக்க முடியாது என்பது போன்ற கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் கூற்றை பொய்ப்பித்து தரமான வாசகர்களால் இன்றும் அவரது கவிதைகள் வாசிக்கப்படுவது மட்டுமல்ல அது பலருக்கு வழிகாட்டுதல் வழங்கவும் செய்கிறது.

உலகம் முழுவதும் சமுதாய மாற்றக் கருத்துக்கள் உயர்ந்த இலக்கியவாதிகளை உருவாக்கவே செய்துள்ளது. ரஷ்யாவின் மாக்சிம் கார்க்கி, மாயகோவ்ஸ்கி, ஜெர்மனியின் பிரக்ட் ஆகியோர் இதற்கு பொருத்தமான எடுத்துக்காட்டுகள் ஆவர். பாரதி கவிதைகளின் அரசியல் ரீதியான பங்கு தேசவிடுதலை கிட்டியதன் மூலம் அரைகுறையாக நிறைவேறிவிட்டாலும் கூட அவரது கவிதைகள் கலாச்சார அரங்கில் சமுதாய மாற்ற சக்திகளுக்கு வழிகாட்ட கூடியவைகளாக இன்றும் உள்ளன.

இன்று ஆளும் முதலாளி வர்க்க கலாச்சாரம் உழைக்கும் மக்களையும் பீடித்து பாதித்துள்ளது. அந்நிலையில் அக்கலாச்சாரத்திலிருந்து அவர்களை விடுவிக்கும் தலையாய பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு அவர்கள் விரும்பும் கலாச்சாரச் புரட்சியை கொண்டுவருவதற்கு பாரதியின் கவிதைகளும் கருத்துக்களில் பலவும் வேராக விளங்குகின்றன.

பாரதி போற்றி வளர்த்த மனிதாபிமானக் கலாச்சாரம் இன்று மங்கி மறைந்து கொண்டுள்ளது. ஆளும் முதலாளிவர்க்கத்தின் பாசிச கலாச்சாரம் எங்கும் பரப்பப்படுகிறது. மக்களுக்கிடையே ஒற்றுமையை பேணுவதற்கு பதிலாக வேற்றுமைகளை இன்றைய முதலாளித்துவ சிந்தனைகள் வளர்க்கின்றன. ஒரு சமூகப் பிரிவினர் அனைவரையும் பயங்கரவாதிகள் என சித்தரிப்பது, உலகில் தற்போது நிலவும் முரண்பாடு நாகரிகங்களுக்கிடையே நிலவும் முரண்பாடே என்று கூறுவது தலைவிரித்தாடும் ஜாதியவாதம் போன்றவை ஒரு பாசிச கலாச்சாரத்திற்கு சமூகத்தை இட்டுச் செல்கின்றன.

மாணவர்களிடமும் இளைஞர்களிடமும் குறிப்பாக நமது நாட்டில் ஒரு வகை காரியவாதமும் தன்னலவாதமும், கார்ப்பரேட் சிந்தனையின் மூலமும் வெற்றிநெறி (Sucsess ethics) கோட்பாட்டின் அடிப்படையிலும் கொண்டு வரப்படுகின்றன. பெரும்பாலானோர் அதற்கு இரையாகியுள்ளனர்.

நமது மக்களிடமும் அவர்களது தார்மீக முதுகெலும்பை முறிக்கும் விதத்தில் பல கலாச்சார சீரழிவுகள் கொண்டு வரப்படுகின்றன. இலவச திட்டங்கள் மூலம் கிடைக்கும் பொருட்களை விற்பது போன்ற பரவலாக நிலவும் போக்குகள் அநியாயத்தைத் தயக்கம் இன்றி தட்டிக்கேட்க முடியாதவர்களாக அவர்களை ஆக்கியுள்ளன.

இது போன்றவைதான் முதலாளித்துவச் சுரண்டல் எத்தனை கடுமையானதாக இருந்தபோதிலும் அதற்கு எதிராக நிமிர்ந்து நிற்க முடியாதவர்களாக உழைக்கும் மக்களை ஆக்கியுள்ளது. எனவே நமது நாட்டைப் பொறுத்தவரை அரசியல் புரட்சிக்கு முன்னதாகவே கலாச்சாரப் புரட்சி தொடங்கப்பட வேண்டும். அத்தகைய கலாச்சாரப் புரட்சிக்கு பாரதியின் கருத்துக்கள் வளமான சத்தும் சாரமும் வழங்கக் கூடியவை என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இன்று நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மேலைநாட்டு மக்களை புரட்சிகர பாதைக்கு நிச்சயம் இட்டுச்செல்லவே செய்யும். பெர்லின் சுவர் அகற்றப்பட்ட போது அதன் மூலம் அதுவரை சோசலிஸம் என்ற இரும்புத்திரை அமைப்பில் இருந்த கிழக்கு ஜெர்மனியின் மக்கள் சுதந்திரக்காற்றை சுவாசிக்க தொடங்கிவிட்டனர் என்றெல்லாம் பெரிதுபடுத்தி முதலாளித்துவ பத்திரிக்கைகள் எழுதின.

ஆனால் அந்நாட்டு மக்கள் இன்று சோசலிசமே மிக உயர்ந்த, பிரச்னைகள் எதற்கும் வழிவகுக்காத அமைப்பு என்று உணரத் தொடங்கி விட்டனர். கருத்துக் கணிப்புகளில் 30 சதவீதத்தினருக்கு மேல் சோசலிசத்திற்கு ஆதரவான தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். இது ஒரு எடுத்துக்காட்டே தவிர மேலை நாட்டு மக்களின் ஒட்டு மொத்த மனநிலையின் படப்பிடிப்பல்ல.

இதை ஒத்த நிலைமைதான் ஏறக்குறைய அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் நிலவுகின்றன. இந்நிலையில் முதலாளித்துவத்திற்கு மாற்றாக சோசலிசத்தை அவர்கள் பார்க்கத் தொடங்குவர்; அதை கொண்டு வருவதற்கான போராட்டங்களில் ஈடுபடுவர் என்று நாம் நம்புவதற்கு காரணம் நமது நாட்டு மக்களைப் போல் தார்மீக முதுகெலும்பு முறிந்து போனவர்களாக அவர்கள் இல்லை என்பதே.

இந்த நிலையில் இன்று நாம் சந்தித்துக் கொண்டிருக்க கூடிய கலாச்சார பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டுமென்றால் பாரதியின் சிந்தனைகளை உள்வாங்கி, ஜீரணித்து அதையும் கடந்து அவன் முன்வைத்த தேசியவாத வரையறையை தாண்டி சர்வதேசவாத, கூட்டுவாத கலாச்சாரங்களை கைக்கொள்ள வேண்டும்.

அக்கருத்துக்கள் வழிநடத்தினால் கலாச்சார துறையிலும் கலை இலக்கிய துறையிலும் சமூகமாற்றப் பணிகளை செவ்வனே மேற்கொள்ளும் நவயுக பாரதிகளாக நாமும் உருவாக முடியும். ஏனெனில் பாரதி அமானுஷ்யனல்ல. அவனுக்கு விழா எடுக்கும் நாம் அவன்பட்ட கஷ்டங்களை எண்ணிக் கண்ணீர் வடிப்பதோடு நமது கடமையை முடித்துக் கொள்ளக்கூடாது. எத்தனை கஷ்டங்களை நாம் மேற்கொண்டாலும் கூட அவனது பாதையில் பயணித்து இன்றைய சமூகத் தேவையான சோசலிஸத்தை கொண்டுவர பாடுபடுவதே அவனை நாம் பொருத்தமான விதத்தில் நினைவு கூர்வதாகும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

மிக அதிக எண்ணிக்கையில் இளைஞர்களும், மாணவர்களும், உழைக்கும் மக்களும் கலந்து கொண்ட இப் பாரதிவிழாப் பொதுக்கூட்டம். அவ்வட்டாரத்தில் உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டிக்கு ஒரு முழுமையான அங்கீகாரத்தை மக்களிடையே ஏற்படுத்தி மக்களின் பல்வேறு அன்றாட பிரச்னைகள் சார்ந்த இயக்கங்கள் பல்கிப் பெருகுவதற்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை. அத்துடன் அது மாணவர் இளைஞரிடையே ஒரு குறிப்பிட்ட அளவு இலக்கியம், அதன் சமூக பங்கு குறித்த ஒரு சரியான கண்ணோட்டத்தை அறிமுகம் செய்யும் பணியையும் நிச்சயம் ஆற்றியிருக்கும்.

வாசகர் கருத்துக்கள்
த.சிவக்குமார்
2009-02-21 05:08:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

திரு. கருப்பணன் அவர்களுக்கு,
தங்களது மாற்றுக்கருத்துக்கு நன்றி. இந்த விவாதத்திற்குரிய இடம் இதுவல்ல என்பதால் இதற்கான பதில் "புதுயுகக் கவிஞன் பாரதிக்கு ஓர் விழா" கட்டுரைப் பகுதியில் இடப்பட்டுள்ளது. நன்றி!
த.சிவக்குமார்,
ஆசிரியர்
மாற்றுக்கருத்து!

//Dr. Sokkalingam Karupanan, Malaysia.

திரு.மாற்றுக்கருத்து சிவகுமார்,

பாரதி பற்றிய மாற்றுக் கருத்துகள் அசைக்க இயலாத வாதங்களுடன் இன்றைக்கு வே.மதிமாறன்,வாலாசா வல்லவன் போன்றோரால் நிறுவப்பட்டுள்ள நிலையில் தயை கூர்ந்து மாற்றுக் கருத்துகளை (இழி செயல்கள் என்று தூற்றாமல்)எவ்வாறு நீங்கள் மறுக்கும் கருத்துகளாக்குகிறீர்கள் என்பதில் தயை கூர்ந்து கவனம் செலுத்துங்கள். அதுதான் என் போன்ற வெளி நாடுகளில் வாழும் தமிழர்கள் விரும்புவது. மகாகவி எனப்பட்டவனும், தமிழின தலைவன் என கூறிக் கொள்பவனும் ஆகிய பொய், உண்மை முகங்களைப் பார்க்கும் போது பற்றிக்கொண்டு வருகிறது. இந்த ஈனர்களை ஆதரிப்பவர்கள் ஒருவனை கொலையாளி என்றும் சர்வாதிகாரி என்றும் சொல்லும் போது அவன் உண்மையிலெயே நல்ல தலைவனாகத்தான் இருக்கவேண்டும்.
நன்றி,
சோ.கருப்பணன், மலேசியா///

திரு. கருப்பணன் அவர்களுக்கு,
தங்களது மாற்றுக்கருத்துக்கு நன்றி. ஆனால் “பாரதி பற்றிய மாற்றுக் கருத்துகள் அசைக்க இயலாத வாதங்களுடன் இன்றைக்கு வே.மதிமாறன்,வாலாசா வல்லவன் போன்றோரால் நிறுவப்பட்டுள்ள நிலையில் … “ என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனென்றால் அவை வெறும் புகைக்கோட்டைகளே. லேசாக ஊதினால் கூட கலைந்து போய்விடக்கூடியவை.

அவை, இந்த அவசர யுகத்தில் ஆழவாசிக்கும் பழக்கம் இன்றைய தமிழ் வாசகர்களிடம் போய்விட்ட சூழ்நிலையைப் பயன்படுத்தி, பாரதியைப் பற்றி அவர்கள் விரும்பும் ஒரு பிம்பத்தை நிலைநிறுத்த முயல்கின்றனர். எப்பொருள் யார், யார் வாய்க்கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காணும் அறிவு இல்லாத அல்லது அதற்கு நேரம் இல்லாத அவசரக்காரர்கள் அதற்கு பலியாகவும் செய்கின்றனர்.
பொதுவாக அவர்களது வாதங்களை மேம்போக்காகப் பார்த்தால் அவற்றில் உண்மை இருப்பது போலவும் தர்க்கரீதியில் சரியானதாக இருப்பது போலவும் ஒரு தோற்றம் காட்டும். ஆனால் அதை உங்கள் சொந்த அறிவைக்கொண்டு சரிபார்ப்பதற்கு உங்களுக்கு நேரமிருக்குமானால் அடுத்த கணமே அந்தப் புகைக்கோட்டை கலைந்துவிடும். அவர்களது வாதங்கள் எத்தனை நேர்மையற்றவை; எத்தனை பலவீனமானவை என்பது புரிந்துவிடும்.

உதாரணத்திற்கு வாலாசா வல்லவனின் காய்தல் உவத்தலற்ற ஆய்வு முடிவு (?!) களில் ஒன்றை எடுத்துக்கொள்வோம். அவர் தனது பாரதியின் உயிர் மூச்சு தமிழா? ஆரியமா? - பகுதி 1 -ல் இவ்வாறு கூறுகிறார்: “இந்தியாவிலுள்ள மொழிகள் யாவும் சமசுகிருத மொழியோடு கலந்த பிறகே மேன்மை பெற்றதாகப் பாரதி கருதுகிறார். தமிழுக்கு முறையான இலக்கணம் இல்லாதிருந்ததாகவும், ஆரியர்கள் இலக்கணம் வகுத்ததாகவும் பாரதி கூறுவதாவது:

“தமிழ் பாஷைக்கோ, இலக்கணம் முதல் முதலாக அகஸ்தியராலும், அவருடைய சிஷ்யராகிய திரணதூமாக்கி (தொல்காப்பியர்) என்ற ஆரிய முனிவராலுமே சமைத்துக் கொடுக்கப்பட்டதென்பதும் மெய்யே. அதனின்றும் தமிழ் இலக்கணம் பெரும்பாலும் சமஸ்கிருத இலக்கணத்தை அனுசரித்தே சமைக்கப்பட்டிருக்கிறதென்பதும் மெய்யே” என்கிறார் பாரதியார்.”-என்று வாலாசா வல்லவன் எழுதுகிறார்.

மேலோட்டமாகப் பார்க்கும்போது அவர் காட்டியிருக்கும் மேற்கோளும் அதிலிருந்து அவர் சொல்லும் ஆய்வு முடிவும் அசைக்க இயலாத வாதங்களுடன் நிறுவப்பட்டுள்ளது போலவே தோன்றும்.
ஆனால் சற்று சிரமம் எடுத்து அந்த மேற்கோள் எங்கிருந்து எடுக்கப்பட்டதோ அங்கே சென்று, அதன் முன்னும் பின்னும் முழுமையாகப் படித்துப் பார்த்தால் அது எத்தனை பெரிய ஏமாற்றுவேலை என்பது புரிந்துவிடும்.

இப்போது நாம் அதன் முழுமையான மேற்கோளைப் பார்ப்போம்.

(வாலாசா வல்லவன் சுட்டிய மேற்கோளுக்கு முன்னுள்ள பகுதி) “தமிழ்நாட்டின் நாகரீகம் மிகவும் புராதனமானது. ஒரு தேசத்தின் நாகரீகம் அல்லது அறிவு முதிர்ச்சி இன்ன தன்மையுடையதென்று கண்டுபிடிக்க வேண்டுமாயின் அதைக் கண்ணாடிப் போல் விளக்கிக்காட்டுவது அந்த நாட்டில் வழங்கும் பாஷையிலுள்ள இலக்கியம். அதாவது, காவியம் முதலிய நூல்களேயாம். இங்கிலாந்து தேசத்தின் தற்கால நாகரீகத்தை ஒருவாறு அளவிடக்கூடும். எனவே தமிழ்நாட்டின் புராதன நாகரீகத்தை அளவிட்டறிவதற்கு தமிழ் நூல்களே தக்க அளவுகோலாகின்றன. இந்தியாவில் பெரும்பான்மையான பாஷைகள் ஸம்கிருதத்தின் திரிபுகளேயன்றி வேறல்ல. அங்ஙனம் திரிபுகளல்லாததுவும் ஸம்கிருதக் கலப்பிற்குப் பிந்தியே மேன்மை பெற்றனவாம்.
(வாலாசா வல்லவன் சுட்டிய மேற்கோள் பகுதி) தமிழ் பாஷைக்கோ, இலக்கணம் முதல் முதலாக அகஸ்தியராலும், அவருடைய சிஷ்யராகிய திரணதூமாக்நி (தொல்காப்பியர்) என்ற ஆரிய முனிவராலுமே சமைத்துக் கொடுக்கப்பட்டதென்பதும் மெய்யே. அதனின்றும் தமிழ் இலக்கணம் பெரும்பாலும் சமஸ்கிருத இலக்கணத்தை அனுசரித்தே சமைக்கப்பட்டிருக்கிறதென்பது மெய்யே. (வாலாசா வல்லவன் சுட்டிய மேற்கோளுக்கு பிந்தைய பகுதி) எனினும் வடமொழிக் கலப்புக்கு முந்தித் தமிழுக்கு வேறுவகையான இலக்கணமிருந்து ஒருவேளை பின்னிட்டு மறைந்திருக்கக்கூடுமென்று நினைப்பதற்கும் பல ஹேதுக்கள் இருக்கின்றன. இஃது எவ்வாறாயினும் சம்ஸ்கிருத பாஷையின் கலப்புக்கு முன்பாகவே தமிழ்நாட்டில் மிகவும் உயர்ந்த நாகரீகமொன்று நின்று நிலவி வந்ததென்பதற்கு அடையாளமாகத் தமிழில் மிக உயர்ந்த தரமுடைய பல பழைய இலக்கிய நூல்கள் காணப்படுகின்றன.”
[மகாகவி பாரதியார் கவிதைகள், கட்டுரைகள்...ஏ.கே.கோபாலன் பப்ளிஷர்ஸ், சென்னை, பக்கம்-383 /வாலாசா வல்லவன் அடிக்குறிப்பின்படி பாரதியார் கட்டுரைகள், ப.264, வானதி பதிப்பகம், சென்னை, 1981]

இங்கு பாரதி, இந்தியாவில் பெரும்பான்மையான மொழிகள் ஸம்கிருதத்தின் திரிபுகளே. அவ்வாறு திரிபுகளாக இல்லாத மொழிகளும்கூட ஸம்கிருதக் கலப்பிற்குப் பிந்தியே மேன்மை பெற்றன என்பர். ஆனால் தமிழில் மட்டும் சமஸ்கிருதக் கலப்பிற்கு முன்பே “வேறுவகையான” இலக்கணமும், உயர்ந்த தரமான இலக்கியங்களும் உயர்ந்த நாகரீகமும் நின்று நிலவியதாக ஆணித்தரமாக நிறுவுகிறார்.
ஆனால் பாரதியின் வாதத்தில் இருந்து இடையில் சில வரிகளை உறுவி எடுத்து மேற்கோள் காட்டும் வாலாசா வல்லவன் அதை அப்படியே திரித்து உண்மைக்கு நேரெதிரான முடிவை வாசகர்கள் மீது திணிக்கிறார்.
அவர், இந்தியாவிலுள்ள மொழிகள் யாவும் சமசுகிருத மொழியோடு கலந்த பிறகே மேன்மை பெற்றதாகப் பாரதி கருதுவதாகவும் தமிழுக்கு முறையான இலக்கணம் இல்லாதிருந்ததாகவும், ஆரியர்கள் இலக்கணம் வகுத்ததாகவும் பாரதி கூறுவதாகவும் திரித்துக்கூறி வாசகர்களை ஏமாற்றுகிறார்.
அதே கட்டுரையில் மற்றொரு இடத்தில், “தமிழுக்கு இலக்கணம் இல்லாதிருந்தது போலவும், ஆரியப் பார்ப்பனர்கள் தான் இலக்கணம் வகுத்துக் கொடுத்தது போலவும் பாரதி கூறுவது வேடிக்கையாக உள்ளது.” என்று / வடமொழிக் கலப்புக்கு முந்தித் தமிழுக்கு வேறுவகையான இலக்கணமிருந்து ஒருவேளை பின்னிட்டு மறைந்திருக்கக்கூடுமென்று நினைப்பதற்கும் பல ஹேதுக்கள் இருக்கின்றன / என்று சொன்ன பாரதியின் மீது உள்நோக்கத்துடன் பழிசுமத்துகிறார் வாலாசா வல்லவன்.

இதுவா காய்தல் உவத்தலற்ற ஆய்வு? இல்லை. இது ஆய்வு என்ற பெயரில் நடத்தப்படும் பித்தலாட்டம். மூலத்தை தேடிப் படித்து சரிபார்க்க நேரமில்லாத வாசகன் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை சிதறடிக்கும் நம்பிக்கை மோசடிக் குற்றம். இன்டலெக்சுவல் ஹானஸ்டி என்று சொல்லப்படும் அறிவுஜீவிக்குரிய நேர்மையின் மீது நிகழ்த்தப்படும் அராஜகம்.

அதனால்தான் கருப்பணன் அவர்களே நாங்கள் இதுபோன்றவர்களின் செயல்களை இழிசெயல்கள் என்று கூறுகிறோம்.

“ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்”
நேரம் கிடைக்கும் போதெல்லாம் இன்னும் அதிகமான சோற்றையும் பதம் பார்ப்போம். நன்றி!

த.சிவக்குமார்,
ஆசிரியர்
மாற்றுக்கருத்து!
22.02.2009

பொரம் போக்கு
2009-02-22 11:58:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

தோழார் சிவகுமாரன் அவர்களே,

இரண்டு விடயங்கள் -

ஒன்று நீங்கள் எம்மை விட ஆழமாக, அதிகமாக பாரதியை கற்று இருக்கிறீர்கள். உங்களைப் பாரட்டுகிறேன்!

இரண்டாவதாக சுயனலமற்ற ஒரு நல்லவரை, சிறந்த தமிழ் புலவரை, சிலர் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவர் மீது தார் பூசும் போது, நீங்கள் அவர்களின் பித்தலாட்டத்தை அம்பலப் படுத்துகிறீர்கள்.

வாழ்க நீர் பல்லாண்டு!

புறம் போக்கு
2009-02-22 12:23:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Let me quote & confront what Mr. VALLASA VALLAVAN wrote about Bharathi.

பாரதியின் கூற்று: “நம் முன்னோர்கள் அவர்களைப் பின்பற்றி நாமுங் கூடப் புண்ணிய பாஷையாகக் கொண்டாடி வரும் ஸம்ஸ்கிருத பாஷை மிகவும் அற்புதமானது. அதைத் தெய்வ பாஷையென்று சொல்வது விளையாட்டன்று. மற்ற ஸாதாரண பாஷைகளையெல்லாம் மனித பாஷையென்று சொல்லுவோமானால், இவை அனைத்திலும் சிறப்புடைய பாஷைக்குத் தனிப்பெயர் ஒன்று வேண்டுமல்லவா. அதன் பொருட்டே அதைத் தெய்வ பாஷை என்கிறோம்.” (12)

வாலாசா வல்லவரின் குற்றச் சாட்டு: பாரதியார் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்த போதிலும் தன்னுடைய மூதாதையர்களின் மொழியாகிய ஆரிய மொழியான சமஸ்கிருதத்தை உயர்ந்த மொழி என்பதோடு அதைத் தெய்வ மொழியாகவும் கூறுகிறார்.

நமது பதிலும் விளக்கமும்:

"எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு"- இது வள்ளுவர் சொன்னது.

அதனால்தான் பாரதி வட மொழி இலக்கியத்தில் தமிழருக்கு பயன் தரும் உண்மைகள் இருப்பதால் அதைப் படிக்கச் சொன்னார்!

"எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்" என்று எல்லாம் அவர்கள் கூறியது, சிந்தனையாளர்களின் அறிவு முழுமை அடைய வேண்டும் என்பதற்க்காக! "நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்" என்று கூருபவர்க்கு அல்ல.

எனவே உண்மையைத் தேட, அறிய விரும்புவோர், அது எங்கே கூறப் பட்டிருக்கிறது என்று தேடீச் செல்ல வேண்டுமே தவிர, உண்மை நாம் வீட்டுக்கதவைத் தட்டும்என்று எதிர்பார்த்து உட்கார்ந்து இருக்க முடியாது!

பாரதியார் சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் குடுத்தது, அந்த மொழியில் உள்ள ஆன்மீக உண்மைகளுக்காகத்தான்! அட, அது என்னது தமிழில் இல்லாத உண்மை இந்த சமஸ்கிருதத்தில் உள்ளது என்று கூறுகின்றனர்-என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா?
தமிழில் எல்லா உண்மைகளும் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன. இன்னும் சொல்லப் போனால், சமஸ்கிருதத்தையும் மிஞ்சிய உண்மைகள், தமிழிலும், பிற திராவிட மொழியிலும் உண்டு!

இந்தியாவைப் பொருத்த அளவில் ஆன்மீகம் என்பது, மனிதனின் அறிவை உயர்த்தி, அவன் உயிரை விடுதலை அடையச் செய்வது என்பதுதான்!

"மனித உயிர், உடல் மரணம் அடையும் போது, உயிர் மரணம் அடைகிறதா- இல்லை உயிர் தொடர்ந்து வாழ்கிறதா?"- இந்தக் கேள்விக்கு விடை காணும் பொருட்டு, ஆராய்ச்சி செய்யும் உரிமை இந்த உலகத்தில் எல்லோருக்கும் உண்டு!

பெரியார் சொன்னது போல கடவுளை மறந்து விட்டு, மனிதனை மட்டும் நினைப்போம். மனிதனை மட்டும் நினைக்கும் போதும், சில முக்கியமான கேள்விகள் வருகின்றன. மனிதனுக்கு இன்னல் வருவது எதனால்? புத்தர் கண்ட மூன்று முக்கிய இன்னல்கள்-நோய், மூப்பு, மரணம்- இது அல்லாது இன்னும் எத்தனையோ இன்னல்கள் மனிதன் அனுபவிக்கிறான். ஒழியட்டும்! இன்னல்கள் எல்லாம், மரணத்தோடு முடிந்து விடுகிறதா, என்பது முக்கியமான கேள்வி-

அதாவது மனிதன் உயிர், உடல் மரணம் அடையும் போது, உயிர் மரணம் அடைகிறதா- இல்லை உயிர் தொடர்ந்து வாழ்கிறதா? இந்தக் கேள்விக்கு விடை காணும் பொருட்டு, ஆராய்ச்சி செய்யும் உரிமை இந்த உலகத்தில் எல்லோருக்கும் உண்டு! மனித உயிர் தொடர்ந்து வாழ்கிறதா,இல்லை அழிகிறதா என்ன்னும் ஆராய்ச்சி ஆதி கால முனிவனுடனோ, சித்தருடனோ, புத்தருடனோ, ஏசு கிரிஸ்துவுடனோ, முகமது நபியடனோ, ஆதி சங்கரருடனோ, விவேகானந்தருடனோ, பெரியாருடனோ முடிந்து விடவில்லை!

மனித உயிர் பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து நடை பெரும். அதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது! மனித உயிர் அறிவியல் முடியும் இடம் தான் கடவுளாக (அப்படி ஒருவர் இருந்தால்) இருக்க முடியும்! எனவே வெறுமனே உண்டு விட்டு, உறங்கி விட்டு, காலையில் எழுந்து 'கடவுள் எங்கே? காட்டு!' என்று கேட்பது, நுனிப்புல் மேயும் முறையாகும்! மெரீனா கடற் கரையில் நின்று கொண்டு "எங்கே இருக்கிறது ஆப்பிரிக்க கண்டம்? எனக்கு காட்டு பார்க்கலாம்!" என்று கேட்பது போல் உள்ளது! நான் (புறம் போக்கு)கடவுளைப் பார்த்தது இல்லை!! எனவே கடவுள் இருக்கிறார் என்று சாட்சி குடுக்க நான் (புறம் போக்கு) தயார் இல்லை!!! ஆனால் அதே நேரத்தில் கடவுள் இல்லை என்பது ஃபாரடேயின் மின்னியக்க விதியைப் போல தெளிவாக நிரூபிக்கப் பட்டால் அதை ஏற்றூக் கொள்ள நான் (புறம் போக்கு) தயார்.

கடவுள் இருக்கிறார் என்பது உண்மையோ, கடவுள் இல்லை என்பது உண்மையோ-எது உண்மையானாலும் அதை ஏற்றூக் கொள்ள நான் (புறம் போக்கு) தயார்!!! எனவே உண்மை - அதை எந்த மொழியில் சொன்னாலும் அது (உண்மை) ஒன்றாகத்தான் இருக்க முடியும்!

உலகம் உருண்டையானாது என்று சொன்னாலும், EARTH IS ROUND என்று சொன்னாலும், பொருள் ஒன்றுதான்!

எனவே மனித உயிர் பற்றீய ஆராய்ச்சியில் கிருட்டிணர், " கதாசூன், அகதாசூன், ந அனுசியதோ பண்டித" -என்று கூறியுள்ளார். 'இங்கே இருப்பவர்களைப் பற்றீயோ, இறந்தவர்களைப் பற்றீயோ சான்றோர் எண்ணிக் கலங்குவதில்லை' என்று பொருள்! அதையே பட்டினத்தார்
" செத்த பிணத் தருகே இனிச் சாம்பிணம் கத்துதையோ " என்று பாடியுள்ளார்!

"காம்பிணங்கும் பணைத்தோளார்க்கும் பொன்னுக்குங் காசினிக்கும் தாம்பிணங்கும் பலஆசையும் விட்டுத்தணித்துச் செத்துப்
போம்பிணம் தன்னைத் திரளாகக் கூடிப் புரண்டினிமேற்
சாம்பிணம் கத்துதையோ ? என்செய்வேன் தில்லைச்சங்ககரனே".


மேலும் கிருட்டிணர், "நத்வே வாஹம், ஜாது நாசம், ந துவம் னேமே ஜனாதிபா" என்று கூறியுள்ளதையே, பட்டினத்தார்

"அன்னை எத்தனை எத்தனை அன்னையோ?
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ?
பின்னை எத்தனை எத்தனை பெண்டீரோ?
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ?
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ?
மூடனாயடி யேனும றிந்திலேன்,
இன்ன மெத்தனை யெத்தனை சன்மமோ?
என்செய் வேன்? கச்சியேகம்ப நாதனே? " !!!

எனவே எந்த மொழியில் உண்மை சொன்னாலும், உண்மை ஒன்றுதான். எந்த மொழியில் சொன்னாலும் உண்மை ஒன்றுதானே- பின்ன என்னதுக்கு சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? சில விஷயங்கள் ஒவ்வொரு மொழியில் தெளிவாக சொல்லப் பட்டு உள்ளன!

உதாரணமாக, "எழுமின், விழிமின் குறி சேரும் வரை நில்லாது செல்மின்" என்ற வாக்கியம் சம்ஸ்கிருத வாக்கியமான, "உத்திஸ்டத, ஜாக்ரத, ப்ராப்யவரான் நிபோதித" என்ற வட மொழி வாக்கியத்தின் மொழி பெயர்ப்பு. இதில் குறிப்பிடப்பட்டுள்ள, " ஜாக்கிரத" என்ற வார்த்தையை தமிழில் "விழிமின்" என்று எழுதியுள்ளனர். ஆனால், இந்த வார்த்தை "ஜாக்கிரத" மிக முக்கியமானது. "ஜாக்கிரத" என்ற வார்த்தையால் உணரப்படும் ஜாக்கிரதை, "விழிமின்" "என்ற வார்த்தையால் உணரப்படுமா- என்பது சந்தேகம்!
"ஜாக்கிரதை"யை கைவிட்டு விட்டதால் தான், இன்றைக்கு தமிழ்நாட்டில் மக்கள், ஆன்மீக விஷயத்தில் ஏமாந்து (ஜெயேந்திரர், ப்ரெமானந்தா) நிற்கின்றனர்!

எனவே பொருளின் சாரத்தை சரியாக அறிந்து கொள்ள, மூல மொழியில் சிறிது புலமை பெறுவது நல்லது தான். நான் வட மொழியையோ, இந்தி மொழியையோ கற்றவன் அல்லன். நான் மேற்கூறியீட்ட வட மொழி வசனங்கள் அப்படியே தமிழில் எழுதப்பட்ட நூல்களில் இருந்துபயின்றவை! எனவே ஆன்மீக கருத்துக்களை சரியாகாப் புரிந்து கொள்ள, மூல மொழியான சமஸ்கிருதத்தில் சிறிது புலமை இருந்தால் " கசடறக் கற்க" முடியும் என்ற காரணத்தினாலே தான் பாரதி வடமொழிப் புலமை தேவை என்று சொல்லியிருக்கிறார். அதில் தவறு இல்லை என்று நாம் சொல்லுகிரோம்!

mani
2009-03-10 04:14:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பாரதி அன்பர்களே எனக்கு சில சந்தேகங்கள்

1. பாரதி ஏன் எட்டப்பனிடம் குல வம்ச வரலாறு எழுத அனுமதி கேட்டார்... அது மறுக்கப்பட்ட போது அதற்கு அவர் குழைந்து எழுதிய கடிதம் ஆரா வெங்கடாசலபதியால் வெளியிடப்பட்டதே... மறுக்கப்படாமல் இருந்திருந்தால் அவரது கூற்றான படித்தவன் பாதகம் செய்தால்.... போல நமக்கு ஒரு தேசபக்த எட்டப்பனும் துரோகி கட்டபொம்மனும் அல்லவா கிடைத்து இருப்பார்கள்.. என்ன சொல்கின்றீர்கள்

2. பிரஞ்சு இந்தியாவில் இருந்து மன்னிப்பு கடிதம் எழுதித் தந்து தமிழகம் வந்த பாரதி ஈடுபட்ட புரட்சிகர பணிகள் என்ன

3. பாரதி பாரட்டியது 1917 பிப்ரவரியில் நடந்த முதலாளிய புரட்சியை... ஆனால் சோசலிச புரட்சியை திட்டி உள்ளான்.
போல்ஷவிசம் ஆபத்து என்றும் கூறியுள்ளான்.

4. அரசியல் புரட்சியை சமூகப் புரட்சி முந்த வேண்டும் என்பது நமது பின்தங்கிய உற்பத்தி முறையில் புரட்சிக்கு பதிலாக சீர்திருத்தத்திற்குதான் இட்டு செல்லும்.

5. சிபிஎம் உத்தபுரத்தில் செய்ததை விட அமைதியான் வழிதான் தேவை என்றால் காந்தியை விட விஞ்சி விட்டீர்கள். திருடன் காந்திதான் மக்களது எழுச்சியைக் கூட மன அடக்கம் இல்லை என்று பாதியில் கைகழுபுபவன்,

6. அன்று தலையெடுத்து வந்த பார்ப்பனர்ல்லாதோர் இயக்கமான நீதிக்கட்சி பற்றி பாரதியின் ஏளனத்தை எப்படி உங்களால் மென்று மூடி மறைக்க முடிகின்றது.

7. பூணூல் சாதி ஆதிக்கத்தின் சின்னம்தான். அதாவது பூணூல் அணிவதன் மூலம் பூணூல் அணியாதவர்களின் தாயின் பாலியல் ஒழுக்கம் கேள்விக்குள்ளாகின்றது. இந்த சூழலில் கனகலிங்கத்திற்கு பூணூல் அணிவித்தது எப்படி முற்போக்கு

8. சாவதற்கு முன்னால் பிராமணர் சங்க மாநாட்டில் கலந்து கொண்டாரே பாரதி அதனை எப்படி முற்போக்காகப் புரிந்து கொள்வது

9.நந்தனை எரித்துக் கொன்ற சிதம்பரம் தீட்சிதர்கள் அவனை நாயன்மார்களில் சேர்க்காமலா விட்டார்கள்.. அதற்காக அவர்கள் முற்போக்காளர்களா என்ன

10. இல. கணேசனும், எஸ்வி சேகரும் தங்களது அரசியல் செயல்பாடுகளில் இவரைப் பயன்படுத்த காரண்ம் என்ன

11. காந்தி நால் வர்ணத்தில் பிறக்காதவர்களை பிரம்மனிடம் பிறக்காத அரி இடம் பிறந்தவர்கள் என ஏளனப் படுத்தி existing system சரி என வாதாடினார். பூனா ஒப்பந்தத்தில் கூட உண்ணாவிரதம் என்ற பூச்சாண்டி வேலை காட்டிய பார்ப்பன அடிவருடி மாமா காந்தி அம்பேத்கரை பணிய வைக்க நேர்மையாகவா முயற்சித்தான்.

12. பாரதி அன்பர்களே பூணூல் மாட்டி தலித் ஐ பிராமணன் ஆக்கினான் பாரதி. ஒரு வேளை உத்தபுரத்தில் நீங்கள் இருந்தால் எதை மாட்டி தலித் ஐ பிள்ளைமார் ஆக்குவீர்கள்

13. தாய் தந்த கார்க்கியும், கலீலியோ கலிலீ தந்த பிரக்ட்ம் மாயகாவஸ்கியும் எப்படி பாரதி அளவுக்கு தரம் தாழ்ந்து போனார்கள் என்பதை விளக்கவும்.

14. அது ஏன் மக்களைப் பற்றி குறை சொல்கின்ற மனோபாவமும், அரசியல் ஒரு சாக்கடை என்ற நடுத்தர வர்க்க மனோபாவமும் பாரதி அன்பர்களிடம் நிரவிக் கிடக்கின்றது.

15. பாரதி ஆர்எஸ.எஸ் ன் மூதாதையன் என்பதற்கு பல் கட்டுரைகளையும் மக இக தோழர் மருதையன் எழுதியுள்ளாரே அதுபற்றி தமிழரங்கம் சைட்டில் ஒரிஜினல் கட்டுரை இருக்கும் என நினைக்கிறேன். அது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்

ஊஏஒ

Dr.Sokkalingam Karupanan, Malaysia
2009-03-19 10:33:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

நன்றி மணி அவர்களே!

தங்களின் சுப்ரமணிய பாரதி பற்றிய 15 கேள்விகளுக்கு முறையான பதில்களை ஆசிரியர் சிவகுமார் அளிப்பார் என நம்புகிறேன்.

அன்புடன்
சொ.கருப்பணன்.மலேசியா

sivarajan
2009-03-27 04:08:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

mr.sivakumar,

பாரதி ஒரு மிகப்பெரிய தேசிய கவி அவர் மேல் பொறாமை கொண்ட மிகசிளர் தான் இப்படி அவதுஉறு சொல்லுகின்றனர் இவர்களுக்கு பதில் கூறுவதை விட வெட்டி வேலை உலகத்தில் வேறு எதுவும் இருக்காது . இவர்கள் கூறுவதை எந்த சாதரண அறிவு கொண்ட எந்த மனிதனும் ஏற்று கொள்ள மாண்டான். இவர்கள் மிகபெரிய பச்சோந்திகள்

த.சிவக்குமார்
2009-03-27 08:38:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

நண்பர் மணி அவர்களே,
மன்னிக்கவும். மார்ச் 23 தியாகி பகத்சிங் நினைவு தின வேலைகளில் இருந்ததால் உடனடியாக உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியவில்லை.
இன்றுதான் நேரம் வாய்த்தது.

உங்கள் கேள்விகளின் வரிசையினை என் வசதிக்கேற்ப மாற்றம் செய்துள்ளேன். உங்கள் கேள்விகளுக்கு விடையளிப்பதன் மூலம் உங்களைப் போன்ற பாரதி எதிர்ப்பாளர்களுக்கும் விடையளிக்க முடியும் என்று நம்புகிறேன்.
த.சிவக்குமார்,
ஆசிரியர்,மாற்றுக்கருத்து!

த.சிவக்குமார்
2009-03-27 08:40:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

கருப்பணன் அவர்களே,
நான் முறையான பதில் அளிப்பேன் என்ற தங்கள் நம்பிக்கைக்கு நன்றி. ஆனால் நான் உங்கள் கேள்விக்கு அளித்த பதிலுக்கு உங்கள் எதிர்வினை என்ன? அதைச்சொல்லாமல் நண்பர் மணிக்கு கொம்பு சீவி விடுவதனால் என்ன பயன்?
த.சிவக்குமார்,
ஆசிரியர்,மாற்றுக்கருத்து!

த.சிவக்குமார்
2009-03-27 08:50:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

நண்பர் சிவராஜன் அவர்களே,
நீங்கள் சொல்வது உண்மதான். ஆனாலும் வாசகர் என்ற முறையில் கேள்விகள் முன்வைக்கப்பட்டுவிட்ட பிறகு அதற்கு கூடுமானவரை பதில் சொல்ல முயல்வதுதான் சரியாக இருக்கும். ஆக்கப்பூர்வமானதாகச் செல்லும்வரை விவாதத்தைத் தொடரலாம், தவறில்லை என்று நினைக்கிறேன்.
த.சிவக்குமார்,
ஆசிரியர்,மாற்றுக்கருத்து!

த.சிவக்குமார்
2009-03-27 08:55:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பாரதி எதிர்ப்பாளர் மணியின் 15 கேள்விகளுக்கான பதில்கள்...

// 4. அரசியல் புரட்சியை சமூகப் புரட்சி முந்த வேண்டும் என்பது நமது பின்தங்கிய உற்பத்தி முறையில் புரட்சிக்கு பதிலாக சீர்திருத்தத்திற்குதான் இட்டு செல்லும்//
//14. அது ஏன் மக்களைப் பற்றி குறை சொல்கின்ற மனோபாவமும், அரசியல் ஒரு சாக்கடை என்ற நடுத்தர வர்க்க மனோபாவமும் பாரதி அன்பர்களிடம் நிரவிக் கிடக்கின்றது.//

கட்டுரையில் காணப்படும் உரையில் குறிப்பிடப்பட்டது அரசியல் புரட்சிக்கு முன்னதாகவே கலாச்சாரப் புரட்சி தொடங்கப்பட வேண்டும் என்பதையே. சமூகப் புரட்சி என்பதைப் பற்றியல்ல. சமூகமாற்றத்திற்கான புரட்சிக்கு மக்களை தயார்ப்படுத்த வேண்டுமானால், அநீதிகளுக்கு எதிராகப் போராடும் தார்மீக முதுகெலும்பு மக்களுக்கு ஊட்டப்பட வேண்டும். இன்று நிலவும் முதலாளித்துவக் கலாச்சாரம் அனைத்துப் பகுதி மக்களிடமும் சுயநலம், சூது, பொய், வஞ்சகம், ஏமாற்று என்று எல்லாவித மோசமான குணங்களையும் ஊட்டி வளர்த்துள்ளது. இவற்றையெல்லாம் போக்கி மக்களிடையே பொதுநல எண்ணத்தை உருவாக்க வேண்டுமென்றால் அதற்கு கலாச்சாரப் புரட்சி அவசியம்.

தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் சோசலிசப் புரட்சியை நடத்த வேண்டுமென்றால், அதற்கு முதலில் முதலாளித்துவ சிந்தனையில் ஊறிப்போயிருக்கும் தொழிலாளி வர்க்கத்தை அச்சிந்தனையின் செல்வாக்கிலிருந்து விடுவிக்க வேண்டும். அதனால்தான் மாமேதை மார்க்ஸ் சொன்னார்: “தொழிலாளி வர்க்கம் தன்னைத்தானே மாற்றிக்கொள்ளாமல் தன்னைச் சுற்றி இருக்கும் உலகத்தை மாற்ற முடியாது” என்று.

அதனால்தான் மக்களிடம் இருக்கும் குறைகளையும் நாம் சுட்டிக்காட்டுகிறோம். மக்களிடம் இருக்கும் மோசமான குணங்களையும் போற்றிப் புகழ்வது என்றால், தன்னுடையது என்பதற்காக தன் உடலில் உள்ள அழுக்கும் புனிதமானது என்று கூறுவது போலத்தான் ஆகும்.
த.சிவக்குமார்,ஆசிரியர்,மாற்றுக்கருத்து!

அடுத்தது // நமது பின்தங்கிய உற்பத்தி முறையில்...//

த.சிவக்குமார்
2009-03-27 09:00:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பாரதி எதிர்ப்பாளர் மணியின் 15 கேள்விகளுக்கான பதில்கள்...

அடுத்தது // நமது பின்தங்கிய உற்பத்தி முறையில்ஞ...//
நமது நாட்டின் உற்பத்திமுறை பின்தங்கிய உற்பத்திமுறை என்று உங்களுக்கு யார் சொன்னது?
பின்தங்கிய உற்பத்திமுறை என்றால் நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறையினையே கூறமுடியும். உள்ளூர்(Local)த் தேவைக்காக (உள்நாட்டின் தேவைக்காக அல்ல) உற்பத்தி நடந்தால் மட்டுமே அது நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை. முதலாளித்துவ சந்தைக்காக லாபநோக்கில் உற்பத்தி நடந்தால் அது முதலாளித்துவ உற்பத்திமுறையே.

இன்று நமது நாட்டின் விவசாய விளைபொருள் முதல் அவை விளையும் மண் வரை அனைத்தும் சந்தைச் சரக்குகளே. மலைவாழ் மக்களின் உற்பத்திப் பொருட்கள்கூட சந்தைச் சரக்குகளாகியிருக்கும் இன்றைய நிலையில், இந்தியாவில் பின்தங்கிய உற்பத்திமுறை நிலவுவதாகக் கூறுவது சிறுபிள்ளைத்தனம். தயவுசெய்து அரசியல் பொருளாதாரம் பற்றிய நூல்களைப் படியுங்கள்.
த.சிவக்குமார்,ஆசிரியர், மாற்றுக்கருத்து!

த.சிவக்குமார்
2009-03-27 09:11:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பாரதி எதிர்ப்பாளர் மணியின் 15 கேள்விகளுக்கான பதில்கள்...

//13. தாய் தந்த கார்க்கியும், கலீலியோ கலிலீ தந்த பிரக்ட்ம் மாயகாவஸ்கியும் எப்படி பாரதி அளவுக்கு தரம் தாழ்ந்து போனார்கள் என்பதை விளக்கவும்.//

பாரதி என்றும் தரம் தாழ்ந்து போனவனில்லை. நாம் இன்று சுதந்திரமாக வாழ்வதற்காக, ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கெதிராகப் போராடி, வறுமையிலும் நோயிலும் உழன்று கேள்வி கேட்பாரற்று மடிந்துபோன பாரதி போன்றவர்களை நினைவுகூர வேண்டுமென்ற நன்றியுணர்வுகூட சிறிதும் இன்றி, “பாரதி தரம் தாழ்ந்தவன், திருடன் காந்தி, மாமா காந்தி” என்று தரமற்ற வார்த்தைகளால் வசைபாடிக் கொண்டிருக்கும் உங்களைப் போன்றவர்கள் எந்தளவிற்கு தரம்தாழ்ந்து போயிருக்கிறார்கள் என்பதே இதன்மூலம் தெரியவருகிறது. உண்மையில் கலாச்சாரப் புரட்சியை இங்கிருந்துதான் துவக்க வேண்டும் போலிருக்கிறது. யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம்; ஆனால் அதற்குப் போதுமான அளவிற்கு தரமான வார்த்தைகள் தமிழில் இருக்கின்றன என்பதை அவர்கள் அறியச்செய்ய வேண்டும்.
கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பது இதுதான்: “உலகம் முழுவதும் சமுதாய மாற்றக் கருத்துக்கள் உயர்ந்த இலக்கியவாதிகளை உருவாக்கவே செய்துள்ளது. ரஷ்யாவின் மாக்சிம் கார்க்கி, மாயகோவ்ஸ்கி, ஜெர்மனியின் பிரக்ட் ஆகியோர் இதற்கு பொருத்தமான எடுத்துக்காட்டுகள் ஆவர்.”

நிலவும் சமுதாயத்தை அதன் அன்றைய நிலையிலிருந்து அடுத்த கட்ட உயரத்திற்கு கொண்டுசெல்லும் சமுதாய மாற்றக்கருத்துக்களே உயர்ந்த இலக்கியவாதிகளை உருவாக்கும். அப்படித்தான் மாக்சீம் கார்க்கி... போன்றவர்கள் உருவானார்கள். பாரதியும் அப்படித்தான் உருவாக்கப்பட்டான். அவன் மட்டும் அன்று ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கெதிராகப் போராடாமல் இருந்திருப்பானேயானால் அவனால் இப்படி ஒரு சிறந்த இலக்கியவாதியாக உயர்ந்திருக்க முடியாது என்பதைத்தான் பேச்சாளர் சுட்டிக் காட்டுகிறார்.
த.சிவக்குமார்,ஆசிரியர்,மாற்றுக்கருத்து!

அடுத்தது // 3. பாரதி பாரட்டியது 1917 பிப்ரவரியில் நடந்த முதலாளிய புரட்சியை... //

த.சிவக்குமார்
2009-03-28 01:01:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பாரதி எதிர்ப்பாளர் மணியின் 15 கேள்விகளுக்கான பதில்கள்...

அடுத்தது // 3. பாரதி பாரட்டியது 1917 பிப்ரவரியில் நடந்த முதலாளிய புரட்சியை. . . ஆனால் சோசலிச புரட்சியை திட்டி உள்ளான்.
போல்ஷவிசம் ஆபத்து என்றும் கூறியுள்ளான் //

பாரதி 1917ல் ரஷ்யப் புரட்சி பற்றிப் பாடிய “ஆகாவென்று. . .“ எனத்தொடங்கும் பாடல் 1917 பெப்ரவரி புரட்சி பற்றியதா அல்லது அக்டோபர் புரட்சி பற்றியதா? என்பதை அப்பாடலில் எடுத்தாளப்பட்டிருக்கும் வரலாற்று நிகழ்வுகளின் மூலமாகவே நம்மால் அறுதியிட்டுச் சொல்லமுடியும்.

1) அப்பாடலில் இந்நிகழ்வை ‘யுகப் புரட்சி’ என்று வர்ணிக்கிறார் பாரதி. புரட்சி என்று சொல்லத்தகுந்த நிகழ்வு பெப்ரவரியில் நடந்ததா, அக்டோபரில் நடந்ததா என்று பார்த்தோமானால் பாரதி அக்டோபர் சோசலிசப் புரட்சியையே பாடியுள்ளான் என்பதை உணரமுடியும்.

பெப்ரவரிப் புரட்சி என்பது முதலாளித்துவவாதிகள் ஜார் மன்னருக்கு எதிராகப் போராடி ஆட்சியைக் கைப்பற்றிய நிகழ்வு அல்ல. முதல் உலக யுத்தம் நடந்து கொண்டிருந்த அச்சமயத்தில் தொழிலாளர்களும் விவசாயிகளும் ஜார் மன்னருக்கு எதிராக லெனின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் வீதியில் போராடிக்கொண்டிருந்தனர். அப்போது டூமா எனப்படும் ரஷ்யப் பாராளுமன்றத்தின் துணையுடன் உலகயுத்தத்தில் ஈடுபட்டிருந்த ஜார், மக்கள் எழுச்சியை ஒடுக்க தன் படையினரை ஏவினான். ஆனால் மக்களை ஒடுக்கச் சென்ற படைவீரர்களும் மக்களுடன் சேர்ந்து கொண்டனர். நாடெங்கிலும் தொழிலாளர், விவசாயிகள், படைவீரர்களது சோவியத்துக்கள் உருவாக்கப்பட்டு மக்கள் அதிகாரத்தை செயல்படுத்தத் தொடங்கினர். ஜார் மற்றும் அவனுடன் சேர்ந்து ஆட்சி நடத்திக்கொண்டிருந்த டூமாவின் முதலாளித்துவவாதிகளின் அதிகாரம் செயல்படவில்லை. ஜார் டூமாவைக் கலைத்து உத்தரவிட்டான். டூமாவில் இருந்த முதலாளித்துவவாதிகள் தங்கள் அதிகாரங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், தங்கள் மூலதனத்திற்கு சந்தை வாய்ப்பு வரும் என்று நடத்திக்கொண்டிருந்த உலக யுத்தத்தை தொடரவும் விரும்பினர். மேலும் ஜாரின் மீது வெறுப்புற்று இருந்த மக்கள் கம்யூனிஸ்டுகளின் பின்னால் திரண்டு ஒட்டுமொத்தமாக சுரண்டலுக்கே முடிவுகட்டிவிடுவார்களே என்ற பயமும் இருந்தது. எனவே டூமாவைக் கலைத்து ஜார் இட்ட உத்தரவை நிராகரித்து இளவரசர் லிவாவ் தலைமையில் தற்காலிக அரசாங்கம் அமைத்துள்ளதாக அறிவித்தது டூமா. யுத்தத்தில் இருந்த பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய ஏகாதிபத்திய நாடுகளும் நிலப்பிரபுத்துவ ஜாரின் தலைமையிலான ரஷ்யாவைவிட, முதலாளித்துவவாதிகள் தலைமையிலான ரஷ்யாவே தனது யுத்த நலன்களுக்கு உகந்தது என்று லிவாவ் தலைமையிலான தற்காலிக அரசாங்கத்தை ஆதரித்தன. இப்படித்தான் பெப்ரவரிப் புரட்சி நடந்தேறியது. எனவேதான் பெப்ரவரி புரட்சி வெளி உலகால் ஒரு புரட்சி என்பதாக அக்காலத்தில் அறியப்படவில்லை. அக்டோபர் சோசலிசப் புரட்சிக்குத் தயாராகுமாறு அறைகூவல் விடுத்த ஏப்ரல் ஆய்வறிக்கையில்தான் லெனின் பெப்ரவரியில் டூமா ஆட்சியை கைப்பற்றியதுடன் முதலாளித்துவப் புரட்சி நிறைவடைந்து விட்டது; அடுத்தது சோசலிசப் புரட்சிக்கான கட்டம் என்று கூறி அதனை பெப்ரவரிப் புரட்சி எனக் குறிப்பிடுகின்றார்.

மாறாக, அக்டோபர் புரட்சிதான் உலகையே குலுக்கிய புரட்சியாகும். எனவே, பாரதி பெப்ரவரிப் புரட்சியை யுகப்புரட்சி என அழைத்திருக்க வாய்ப்பில்லை. பாரதி பாடியது அக்டோபர் சோசலிசப் புரட்சியையே.

2) இப்பாடலில் ‘வீழ்ந்துவிட்டான் ஜாரரசன்’ என்று பாரதி குறிப்பிடுகிறார். பெப்ரவரி புரட்சியில் ஜார் வீழவில்லை. நாம் முன்னரே விவாதித்ததுபோல் அவனது அதிகாரம் மட்டுமே பறிக்கப்பட்டது. ஜாரின் தயவில் ஆட்சியில் இருந்த டூமாவிடம்தான் அதிகாரம் கைமாறியது. மொத்தத்தில் பெப்ரவரிப் புரட்சிக்கு முன்பு இருந்த அதிகார அமைப்பில், ஜார் ஒருவனைத் தவிர மற்ற அனைத்தும் பெப்ரவரிப் புரட்சிக்குப் பின்னரும் அப்படியேதான் இருந்தன. அரசுரிமையைத்தவிர ஜாரின் நில உரிமை உட்பட பிற உரிமைகள் ஜாரிடமே இருந்தன.

அக்டோபர் புரட்சியின் போதுதான் ஜார் உண்மையில் வீழ்த்தப்பட்டான். அவனது அரண்மனையில் இருந்து விரட்டப்பட்டான். மக்கள் நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டான். எனவே ‘வீழ்ந்துவிட்டான் ஜாரரசன்’ என்று பாரதி குறிப்பிடுவதால் அப்பாடல் அக்டோபர் புரட்சியைப் பற்றியதே.

3) ‘இமயமலை வீழ்ந்ததுபோல் வீழ்ந்துவிட்டான் ஜாரரசன்; இவனைச்சூழ்ந்து சமயமுளபடிக்கெல்லாம் பொய்கூறி அறங்கொன்று சதிகள் செய்த சுமடர் சடசடவென்று சரிந்திட்டார்’ என்று பாரதி பாடுகிறார்.

இப்பாடலில் குறிப்பிடப்படும் புரட்சியின்போது இரண்டு சக்திகள் வீழ்ந்ததாக பாரதி குறிப்பிடுகின்றார். ஒன்று ஜார் மன்னன், மற்றொன்று அவனைச்சூழ்ந்து சமயமுளபடிக்கெல்லாம் பொய்கூறி அறங்கொன்று சதிகள் செய்த சுமடர். யார் இந்த சுமடர்கள்? ஜாரின் அமைச்சர்களா? இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் ‘சமயமுளபடிக்கெல்லாம் பொய்கூறி அறங்கொன்று சதிகள்’ செய்தவர்கள் என்கிறார். 1905 புரட்சிக்குப் பின்னர் ஜாரின் ஆட்சியில் சமயமுளபடிக்கெல்லாம் பொய்கூறி மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்தவர்கள் டூமா உறுப்பினர்கள்தான்; அமைச்சர்கள் அல்ல. பெப்ரவரி புரட்சியின்போது ஜாருக்கு எதிராக எழுந்த எழுச்சியை, யுத்தத்தை நிறுத்துவதாக சமயத்திற்குத் தக்கபடி பொய்கூறி, சோவியத்துகளை ஏமாற்றி சதிகள் செய்து தனது ஆக்ரமிப்பு யுத்தத்தை தொடர்ந்து நடத்தியது கெரன்ஸ்கி தலைமையிலான டூமாதான்.

பெப்ரவரி புரட்சியில் ஜார் ஒருவர் மட்டுமே பதவியிழந்தார்; டூமா சரியவில்லை. அக்டோபர் புரட்சியின்போதுதான் ஜாரும் டூமாவும் வீழ்த்தப்பட்டனர். எனவே பாரதியின் பாடலில் பாடப்படும் புரட்சி அக்டோபர் சோசலிசப் புரட்சியே.

4) பாரதி இப்பாடலில் குறிப்பிடப்படும் புரட்சியை ‘வையகத்தீர் புதுமை காணீர்’ என்று உலகத்தாரை அழைத்துக் காட்டுகிறார். இந்த உலகத்திற்குப் புதுமையான புரட்சி, பெப்ரவரி புரட்சியா அக்டோபர் புரட்சியா?

ரஷ்யாவில் பெப்ரவரி முதலாளித்துவப் புரட்சி நிகழ்வதற்கு நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே ப்ரெஞ்சுப் புரட்சி நடந்துவிட்டது. அதைத்தொடர்ந்து இங்லாந்து, ஜெர்மனி, இத்தாலி போன்ற எத்தனையோ நாடுகளில் முதலாளித்துவப் புரட்சிகள் நடந்து, அது ஏகாதிபத்தியமாக வளர்ச்சியடைந்து-முதுமையடைந்து, உலகப்பொது நெருக்கடியை சந்தித்து, உலக யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்த, அறுதப்பழசாகிவிட்ட முதலாளித்துவத்தை - இதுவரை உலகில் நடந்த முதலாளித்துவப் புரட்சிகள் எல்லாவற்றையும்விட கேலிக்கூத்தாக அரங்கேறிய பெப்ரவரி புரட்சியை ‘வையகத்தீர் புதுமை காணீர்’ என்று உலகத்தாரை அழைத்துக் காட்ட முடியுமா?

அக்டோபர் சோசலிசப் புரட்சிதான் இந்த மனிதகுல வரலாற்றிலேயே புதுமையான புரட்சி. உலகம் அதுவரை அத்தகையதொரு புரட்சியைக் கண்டதில்லை. அதனால்தான் பாரதி ‘வையகத்தீர் புதுமை காணீர்’ என்று உலகத்தாரை அழைத்துக் காட்டிகிறான்.

எனவே, பாரதி 1917ல் ரஷ்யப் புரட்சி பற்றிப் பாடிய “ஆகாவென்று. . .“ எனத்தொடங்கும் பாடல் அக்டோபர் சோசலிசப் புரட்சி பற்றியதே

த.சிவக்குமார்,ஆசிரியர்,மாற்றுக்கருத்து!

Dr.Sokkalingam Karupanan, Malaysia
2009-03-31 01:01:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

அன்புள்ள ஆசிரியர் சிவகுமார்,

சுப்ரமணிய பாரதி குறித்த எனது பின்னூட்டங்களுக்கு தங்களது பொறுப்பு மிக்க பதில்களை இடையறாவண்ணம் அளித்து வருகை குறித்து மட்டற்ற மகிழ்ச்சி. கடைசியாக திரு.மணி அவர்கள் கேட்டிருந்த 15 கேள்விகளை நான் கொம்பு சீவிவிடுவதற்காக உங்களிடம் திருப்பியதாகவும் தங்களின் முறையான பதிலுக்கு நான் பின்னூட்டமிடவில்லை என்றும் எழுதியுள்ளீர்கள். மன்னிக்கவும். உங்களின் பதில்கள் அனைத்தையும் நான் மிகவும் கவனமாக குறித்துக்கொண்டுதான் உள்ளேன். எதிர்வினையாற்றவில்லை என்பதற்கு நான் காரணமில்லை. 1) " ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" நேரம் கிடைக்கும்போதெல்லாம் இன்னும் அதிகமான சோற்றையும் பதம் பார்ப்போம்' என்று நீங்கள் அளித்திருந்த விளக்கம் முழுமையானதாக இல்லை. ஏனென்றால் நான் இரண்டு பானை சோற்றைப் பற்றி விளக்கம் கேட்டிருந்தேன். இப்போது மணி அவர்களையும் சேர்த்து மூன்று பானை சோறு! கொதித்துக் கொண்டு இருக்கும் சோற்றுப் பானையில் ஒரே ஒரு அரிசியை கையால் எடுத்து சோதனை செய்து பார்க்கும் பொழுது சூடு தாங்காத கை விரல் சோற்றின் பதம் பற்றி தவறாக மதிப்பிட்டிருக்கலாம். 2) அடிப்படையில் நான் ஒரு இலக்கியவாதி அல்ல. கணினி சம்பத்தப் பட்ட துறையில் பணி புரியும் ஓர் ஆராய்ச்சியாளன் அவ்வளவே. சிறிது காலம் பேராசிரியராகவும் பணிபுரிந்தபோது என் மாணவர்களின் ஆராய்ச்சி கட்டுரைகளை மதிப்பீடும் செய்திருக்கிறேன். ஏன் இதனை குறிப்பிட வேண்டியுள்ளது என்றால் பாரதியின் கவித்திறமையையோ அற்புத இலக்கிய வளமைகளைப் பற்றி எனக்கு எவ்விதமான அய்யங்களுமில்லை. அதைப்பற்றி நான் விமர்சிக்கவும் இல்லை. என்னுடைய கேள்விகளெல்லாம் குறிப்பிட்ட விழாவில் நீங்கள் பாரதி சாதிக் கண்ணோட்டம் அற்றவன் என்றும், மோகன் தாஸ் காந்தி குறிப்பிட்டதைப் போல் "பார்ப்பன சாதியில் பிறந்த நல்ல பார்ப்பனன்" என்ற கருத்துக்கள் பற்றிய என் விமர்சனமே! என் வாதங்களுக்கு சான்றாக நான் குறிப்பிட்டிருந்த இரண்டு கருத்தாக்கங்களில் ஒன்று வே.மதிமாறன் எழுதியது - ஒரு திறனாய்வுப் புத்தகம் ('பாரதி'ய ஜனதா பார்டி -"http://mathimaran.wordpress.com/" ) மற்றும் வாலாசா வல்லவனுடையது ஆராய்ச்சி கட்டுரைகள்.

இந்த இரண்டு ஆசிரியர்களுமே பாரதியின் துவக்க வாழ்கையின் முதல் கொண்டு அவருடைய கடைசி காலம் வரை கொண்ட ஆற்றிய பணிகள் (இதில் கவிதைகள், 'இந்தியா' பத்திரிக்கையில் எழுதிய கருத்தாக்கங்கள், அரசியல், குமுகாய பணிகள்) எல்லாவற்றையும் ஆய்ந்து எடுத்த பல முடிவுகள் பற்றியே நான் குறிப்பிட்டிருந்தேன். இவை இரண்டையுமே நான் சமூக ஆராய்ச்சிக் கட்டுரைகளாகவே எடுத்துக்கொண்டு பாரதியை மதிப்பிட்டேன். பாரதி புரட்சிகரமான கருத்துக்களை அள்ளி வீசித்தான் வாழ்க்கையை துவக்கினார். ஆனால் பாரதப் பண்பாட்டுக்கே உரியவாறு பரிணாம வளர்ச்சியடைந்து கடைசியில் மணி அவர்கள் குறிப்பிட்டதைப் போல் பார்ப்பன சங்கத்தில் அய்க்கியமானார் என்பது வரலாறு. ஒரு சீன நண்பர் அடிக்கடி கூறுவார் " ஒருவன் தான் வாழ்ந்த காலத்தில் தான் சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்கும் எடுக்கும் ஒவ்வொரு செயலுக்கும் யாருக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவன் இறந்த பிறகு அவன் வரலாறுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்". பாரதி துவக்க காலங்களில் எழுதிய கவிதைகளை மட்டுமே வைத்துக்கொண்டு அவரை யுகக் கவிஞன் என்று கூத்தாடுவது ஏற்புடையதாக இல்லை.

இன்றைய சூழலில் கூட இதற்கு உதாரணம் நம் முன் நடந்துகொண்டுதான் உள்ளது. ஆளை மயக்கும் அலங்கார மேடைப் பேச்சுத் தமிழ், அறிவுப் பசிக்கு அறுசுவை உரை நடைத் தமிழ், இலக்கியப் போதைக்கு அருமருந்தாக அக நானூறு, புற நானூறு, அனல் பறக்கும் நாடக, திரைப்பட வசனங்கள், உடன் பிறப்புக்கு நாள் தோறும் கடிதங்கள், 'வாழ்ந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடு காடு' போன்ற வீர வசனங்கள் என்று அறுபது ஆண்டுகள் அரசியல் பேசி, ஆட்சிக்கு வந்தவுடன், அதிகாரம் கையில் உள்ள நிலையிலும், கொத்து கொத்தாக பச்சிளம் குழந்தைகளும், பெண்களும் தமிழர் என்கிற ஒரே காரணத்துக்காக படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் போது, பொறுக்காத இளைஞர்கள் நாள் தவறாமல் தம் உடலை எரித்து உயிர்க் கொடை அளித்த போதும், அய்யோ ஆட்சி கவிழ்ப்பு சதி! அய்யய்யோ இறையாண்மை! அய்யகோ முதுகு வலி! என்று ஒருவர் கூறி, இயல்பாய் எழுந்த போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி, தேர்தல் காலங்களில் மட்டும் தமிழின தலைவன் என்று கூறிக் கொள்ளும் தலைவர்களைப் பார்க்கும் போது பரம்பரை பரம்பரையாக திராவிடப் பாரம்பரியத்தில் வந்த எனக்கே வாயில் சிரிப்பு வருவதில்லை!!! நாளை வரலாறு, இவர்கள் என்றோ, எதற்கோ செய்த தமிழ் தொண்டை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு தமிழுக்காகவும் தமிழருக்காகவும் உழைத்த உத்தமன் என்று பாராட்டும் என கருதுகிறீர்களா! கிட்டத்தட்ட இதே கண்ணோட்டத்துடன் தான் பாரதியையும் நான் கேள்வுக்குள்ளாக்குகிறேன்! பாரதியை வரலாறு இப்படியும் பார்க்கிறது என்பதற்கு இந்த கட்டுரைகளே சாட்சி. பள்ளிக்காலங்களில் நான் ஒரு பாரதி ரசிகன். ஏன் இந்தக் கட்டுரைகளைப் படிக்கும் வரை கூட அப்படித்தான். ஆனால் நீங்கள் எத்தனை சப்பை கட்டு கட்டினாலும் (மதிமாறன், வல்லவன், மணி ஆகியோரின் கேள்விகளுக்கு இன்று வரை தியரிடிகலான, ஹைபாதிகேடட் பதில்களை மட்டுமே அளித்துள்ளீர்கள்) உண்மை என்றைக்கும் உறங்குவதில்லை என்பதுதான் உண்மை. வரலாற்றின் தீர்ப்பும் அதுதான்! போகட்டும்! தயவு செய்து இதை ஒரு விவாதம் என்பதால் எப்படியும் பதில் அளித்தே தீரவேண்டும் என பார்க்காமல் (நீங்கள் பொறுமையாகவும், பொறுப்பாகவும் பதில் அளிக்கிறீர்கள், மேலும் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்) ஆய்ந்து எமது அய்யங்களை போக்குங்கள். இதற்காக நீங்கள் உங்கள் மாற்றுக்கருத்து பத்திரிக்கையில் தொடர் மறுப்புக் கட்டுரை எழுதினாலும் சரியே! உங்களுக்கு என் நன்றிகள்!

த.சிவக்குமார்
2009-03-31 03:13:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

கருப்பணன் அவர்களே
1) // என்னுடைய கேள்விகளெல்லாம் குறிப்பிட்ட விழாவில் நீங்கள் பாரதி சாதிக் கண்ணோட்டம் அற்றவன் என்றும், மோகன் தாஸ் காந்தி குறிப்பிட்டதைப் போல் "பார்ப்பன சாதியில் பிறந்த நல்ல பார்ப்பனன்" என்ற கருத்துக்கள் பற்றிய என் விமர்சனமே //

கருப்பணன் அவர்களே இதுபற்றி உங்கள் கேள்வியில் ஒரு குறிப்பும் இல்லையே. கேட்காத கேள்விக்கு பதிலை எதிர்பார்ப்பது நியாயமா? இருக்கட்டும் இதுபற்றி மணி அவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும்போது பார்ப்போம்.


2) //நான் இரண்டு பானை சோற்றைப் பற்றி விளக்கம் கேட்டிருந்தேன்//
நீங்கள் கேட்ட இரண்டாவது கேள்வி, பாரதியையும் கருணாநிதியையும் (அபத்தமாக) ஒப்பிட்டு நீங்களாகவே உருவாக்கிக் கொண்ட கருத்தின் அடிப்படையிலானது. அக்கருத்து எங்களுடையது அல்ல. தயவுசெய்து எங்களுடைய கருத்துக்களுக்கான விளக்கத்தை மட்டுமே எங்களிடமிருந்து எதிர்பாருங்கள்.

3) // கொதித்துக் கொண்டு இருக்கும் சோற்றுப் பானையில் ஒரே ஒரு அரிசியை கையால் எடுத்து சோதனை செய்து பார்க்கும் பொழுது சூடு தாங்காத கை விரல் சோற்றின் பதம் பற்றி தவறாக மதிப்பிட்டிருக்கலாம்.//

என் மதிப்பீடு எப்படித்தவறு என்று விளக்க வேண்டும். எனது பதிலில் “பாரதியின் வாதத்தில் இருந்து இடையில் சில வரிகளை உறுவி எடுத்து மேற்கோள் காட்டும் வாலாசா வல்லவன் அதை அப்படியே திரித்து உண்மைக்கு நேரெதிரான முடிவை வாசகர்கள் மீது திணிக்கிறார்.” என்பதை முன்னும் பின்னும் உள்ள பாரதியின் வாசகங்களோடு நிறுவியுள்ளேன். ஒன்று நான் மேற்கோள் காட்டிய வாசகங்கள் பாரதியின் வாசகங்களே அல்ல என்று நீங்கள் சொல்ல வேண்டும்; அல்லது வாலாசா வல்லவன் முன்னும் பின்னும் மறைத்து நம்மை ஏமாற்றி விட்டாரே என்று கோபப்பட வேண்டும். இதுதான் பகுத்தறிவுவாதியாகிய தங்களிடமிருந்து நான் எதிர்பார்த்த எதிர்வினை. வெறுமனே பின்னூட்டம் என்பது ஓர் எதிர்வினை அல்ல.

ஆனால் வாலாசா வல்லவனின் காய்தல் உவத்தலற்ற ஆய்வு ( !?) - ஆய்வு என்ற பெயரில் நடத்தப்படும் பித்தலாட்டம் என்பதை நான் ஆதாரத்தோடு நிரூபித்த பின்னரும் அதை மறுக்காமலும் வாலாசா வல்லவனின் ஆய்வின் நேர்மையினை கேள்விக்குள்ளாக்காமலும் இருப்பதன் காரணமென்ன?

4) //மதிமாறன், வல்லவன், மணி ஆகியோரின் கேள்விகளுக்கு இன்று வரை தியரிடிகலான, ஹைபாதிகேடட் பதில்களை மட்டுமே அளித்துள்ளீர்கள்//
எப்படிச் சொல்கிறீர்கள் கருப்பணன் அவர்களே? நிரூபிக்க முடியுமா?
மதிமாறன் கேள்வி என்று எதுவும் இங்கே குறிப்பாகக் கேட்கப்படவில்லை; அதற்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் எழவில்லை.
வல்லவன் ஆய்வு குறித்தும் மணியின் கேள்விகள் குறித்துமே பதில் அளித்துள்ளேன். இவற்றில் எந்த பதில் தியரிடிகலான பதில், எந்த பதில் ஹைபாதிகேடட் பதில் என்பதை விளக்கினால் நன்றி உடையவனாய் இருப்பேன் கருப்பணன் அவர்களே. விளக்குவீர்களா?
த.சிவக்குமார்,ஆசிரியர்,மாற்றுக்கருத்து!

த.சிவக்குமார்
2009-03-31 03:15:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பாரதி எதிர்ப்பாளர் மணியின் 15 கேள்விகளுக்கான பதில்கள்...

// 3. பாரதி... சோசலிச புரட்சியை திட்டி உள்ளான்.
போல்ஷவிசம் ஆபத்து என்றும் கூறியுள்ளான் //
பாரதி விஞ்ஞான சோசலிசத்தை ஏற்றுக்கொண்ட கம்யூனிஸ்ட் அல்ல. அவனது சோசலிசம் கற்பனாவத சோசலிச வகைப்பட்டது. ஒருவகையில் காந்தியின் தர்மகர்த்தா கண்ணோட்டத்தை ஒத்தது.

இதன் பொருள் பாரதி வாழ்ந்த காலத்தில் நம் நாட்டில் ஒருபக்கம் விஞ்ஞான சோசலிசத்தை ஏற்றுக்கொண்ட கம்யூனிஸ்ட்டுகள் இருந்தது போலவும், பாரதி அதை ஏற்காமல் கற்பனாவதியாக இருந்தது போலவும் நினைத்துவிடக் கூடாது.
அன்று இந்தியாவில் (தமிழ்நாட்டில் 1934 வரையிலும்கூட) கற்பனாவத சோசலிசவாதிகளே இருந்தனர். அவர்கள் பொதுவாக சோசலிசத்தின் நன்மைகளை ஏற்றுக்கொள்வார்கள்; ஆனால் அதை நடைமுறைப்படுத்துவது பற்றிய கேள்வி வரும்போது கற்பனாவதியாக மாறிவிடுவார்கள். ஏனெனில் அதை முதன்முதலில் நடைமுறைப்படுத்திய போல்ஷிவிசம் ரத்தம் தோய்ந்த பயங்கர அபாயமாகவே உலகில் பல அறிவுஜீவிகளால் அக்காலத்தில் பார்க்கப்பட்டது.

முதலாளித்துவ ஜனநாயக மனிதாபிமானியாகிய பாரதி போல்ஷிவிசத்தை அபாயமாகப் பார்த்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால் 1925ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை கான்பூரில் ஸ்தாபித்த கம்யூனிஸ்டுகளும் போல்ஷிவிசத்தை அபாயமாகத்தான் பார்த்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

1925 டிசம்பர் 26ல் கான்பூரில் நடந்த முதல் கம்யூனிஸ்ட் ஸ்தாபக மாநாட்டிற்கு தலைமையேற்ற தோழர் சிங்காரவேலர் தனது உரையில்: “இந்திய கம்யூனிசம் போல்ஷ்விசம் அல்ல. போல்ஷ்விசம் என்பது ரஷ்யர்கள் தங்களது நாட்டில் கடைபிடித்த ஒரு கம்யூனிச வடிவம். நாம் ரஷ்ய போல்ஷ்விக்குகள் அல்ல. இந்தியாவிற்கு போல்ஷ்விசம் தேவைப்படாமல் போகலாம். உலக கம்யூனிஸ்டுகளோடு ஒன்றுபட்டு நிற்கிறோமே தவிர போல்ஷ்விக்குகளோடு அல்ல.” என்றார்.
தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று புகழப்படும் சிங்காரவேலரின் (1925ன்) நிலையே இதுதான் எனில் பாரதியை (1922) இதுவிஷயத்தில் குறை சொல்ல ஒன்றுமில்லை.

த.சிவக்குமார்,ஆசிரியர்,மாற்றுக்கருத்து!

mani
2009-04-01 06:24:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

ந‌மது உற்பத்தி முறை முன்னேறியது என்றால் இது ஒரு முதலாளித்துவ சமூகமாக மாற்றமடைந்து இருக்க வேண்டும். இன்றைய உலகமயமாக்கல் சிலவற்றை சந்தைப்படுத்தியுள்ளது என்பதால உற்பத்திமுறையை மேலிருந்து உலகம் முழுக்க மாற்றி விட்டது என நினைப்பது சிறுபிள்ளையிலும் சிறுபிள்ளைத் தனமானது. இந்த பிரஷ்யன் ஜங்கர் உற்பத்தி முறையின் மீது எந்த இடியும் விழவில்லையே என்ற புரட்சியாளர்களின் ஏக்கத்தை எல்லாம் நடந்து முடிந்துவிட்ட மணவாட்டிகளின் பைபிள் கதை போல சொல்லுகின்றீர்களே எப்படி உங்களால் உண்மையை பார்க்க விரும்பாமல் இருக்க முடிகின்றது.

இப்போ தண்ணீரை சரக்காக மாற்றிவிட்டது உலக முதலாளியம். அப்போ பூமியல தண்ணி இருக்கும் இடமெல்லாம் முன்னேறிய உற்பத்திமுறைதான் இருக்குது அப்படினு எடுத்துக்கிட்டா உலகம் முழுக்க புரட்சி நடந்திருச்சு அப்பிடினுதானே அர்த்தம்... இது உண்மையா அப்படிங்கிறத ரேடியோ மூலமா மட்டுமே நாட்டு நடப்ப தெரிஞ்சுக்குற யாருமே சொல்லிடுவாங்களே..

ஆகவே கலாச்சாரப் புரட்சி என்பது காந்தி பாரதி போன்றோரை விமர்சிக்கும் வார்த்தைகள் பற்றியதா சரி உங்களுடன் கலாச்சாரம் பற்றி விவாதிக்க எதுவுமில்லை. கார்க்கி, பிரக்ட், கலீலி போன்றவர்கள் பற்றியும் அதவது நடைமுறை ப்ற்றியும் தெரிந்துதான் பாரதியுடன் ஒப்பிட்டீர்களா.. இந்தியாவில் புரட்சி எதுவும் நடக்கவில்லை. இந்திய விடுதலையை தீர்மானிக்க கார்க்கியின் தாய் போல எந்தப் படைப்பும் அப்படைப்புக்கு நேர்மையாக இருந்த்தாகவும் கார்க்கி போல பாரதியை உங்களால் காட்ட முடியுமா.. காந்தியின் துரோகம் பற்றி தனியாக பேசுவோம்.

ஒரு சிறந்த இலக்கியவாதி அரசியல் சார்பற்ற மனிதனாகவும் இருக்க முடியும்.

நண்பரே எளிய கேள்வி அக்டோபர் புரட்சியை பாரதி ஆதரித்தான் என பக்கம் பக்கமாக வரலாற்றிலுருந்து உங்களது பார்வையில் மாத்திரமே விடைசொன்ன தாங்கள், அப்புரட்சியை நடத்திய போல்ஷ்விக்குகளை திட்டி எழுதியது அல்லது ஆபத்தானவர்கள் எனச் சொன்னது லாஜிக் ஆக உதைக்கவில்லையா

கம்யூனிசம் என்பது வரலாற்று இயக்கவியல் பொருள்முதல்வாதம். இவற்றின் சிலபல கூறுகளைக் கொண்டிருப்பவர்களை இந்திய வரலாற்றில் சிங்காரவேரலருக்கு முந்தைய நூற்றாண்டுகளிலும் நீங்கள் காணமுடியமு. அவைதீக மரபை சேர்ந்த இந்திய த்த்துவ மரபில் அப்படி சமூக மாற்றத்திற்காக பேசியவர்களை நீங்கள் காணமுடியும். அது புராகிரசிவ் ஆக இதனை நோக்கி வந்த்தா என்பது தான் அளவுகொல். தர்மகர்த்தா பாணி என்றால் இன்றைய சுய உதவிக் குழுவின் மூதாதையர்கள் அவர்கள். தெட்ஸ் ஆல்.

try to answer my other questions

த.சிவக்குமார்
2009-04-03 12:42:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Mr.Mani
//try to answer my other questions//

Why you are so tempted to react to my answers before I completed. Please wait until I complete. Till then please try to understand basic principles of communism.
//கம்யூனிசம் என்பது வரலாற்று இயக்கவியல் பொருள்முதல்வாதம்.// It is absurd.

sivarajan
2009-04-09 03:21:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

நண்பர் சிவகுமார் அவர்களே இந்த மணி தன்னை தானே புத்திசாலி என்று பீற்றி கொன்று திரிகிறார் இவருக்கு நீங்கள் பதில் சொல்வதே வீண் வேலை இவரை போன்ற ஆட்களுக்கு பதில் சொல்வதை விட உலகத்தில் உயர்ந்த வேலைகள் பல உண்டு

mani
2009-04-09 06:22:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

நான் அறிவாளி என்று சொல்லவில்லை. தர்க்கரீதியாக வரலாற்று ஆதாரங்களுடன் விவாதிக்க முடியுமானால் பாரதியின் பக்தர்கள் தமது அறிவைச் சுரண்டிப்பார்ப்பதற்கு முன் அறிவு நாணயத்தை உரசியாவது பாருங்கள்.

பதில் சொல்வது அதுவும் மறுத்து ஓரிரு வரிகளில் அதற்கு போதுமான அளவில் என யோசிக்க ஆரம்பிப்பீர்கள்

த.சிவக்குமார்
2009-04-09 08:32:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பாரதி எதிர்ப்பாளர் மணியின் 15 கேள்விகளுக்கான பதில்கள்...

// 7. பூணூல் சாதி ஆதிக்கத்தின் சின்னம்தான். அதாவது பூணூல் அணிவதன் மூலம் பூணூல் அணியாதவர்களின் தாயின் பாலியல் ஒழுக்கம் கேள்விக்குள்ளாகின்றது. இந்த சூழலில் கனகலிங்கத்திற்கு பூணூல் அணிவித்தது எப்படி முற்போக்கு //

ஒரு செயல் அல்லது கருத்து முற்போக்கானதா இல்லையா என்பது அது செய்யப்பட்ட அல்லது சொல்லப்பட்ட காலகட்டத்தைப் பொறுத்தது. காலகட்டத்தில் இருந்து பிரித்து தனியே வைத்து அதனை மதிப்பிடுவது இயக்கவியலுக்கு முரணானது.

இன்றிலிருந்து சுமார் 85-90 ஆண்டுகளுக்கு முந்தய தமிழ்நாட்டில் தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடிய ஒரு காலத்தில் தனது விடுதலைப் போராட்டத்தின் ஊடே சமூக சீர்திருத்தம் பற்றியும் சிந்தித்து, பின்னர் வந்த சீர்திருத்தவாதிகளுக்கு எல்லாம் முன்னோடியாய் இருந்த பாரதி, தீண்டாமைக் கொடுமைக்கு ஒரு தீர்வாக முன்வைத்த கொள்கையின் குறியீட்டு வடிவம்தான் கனகலிங்கத்திற்கு பூணூல் அணிவித்த நிகழ்வு.

இங்கு அடிப்படையில் நாம் பார்க்க வேண்டியது, தன் கண்முன் நிலவிய ஜாதிஅமைப்பு முறையையும் அதன் தீண்டாமைக் கொள்கையினையும் பாரதி ஏற்றுக் கொண்டானா அல்லது எதிர்த்தானா என்பதே. பிறப்பின் அடிப்படையில் ஜாதி பேதம் பாராட்டி, மனிதனை மனிதன் இழிவுபடுத்தும் ஜாதிஅமைப்பையும் அதன் தீண்டாமைக் கொள்கையினையும் கடுமையாகச் சாடியதோடு, அதை மாற்ற வேண்டும் என்றும் யோசித்த பாரதி அக்கால கட்டத்தில் முற்போக்கு சிந்தனையாளனே.

ஆரம்பத்தில் ஜாதிகள் தோன்றும் போது தொழிலின் அடிப்படையிலேயே தோன்றின; அப்போது ஜாதிகளுக்குள் தீண்டாமை என்பது கிடையாது; தொழில்களில் உயர்வு-தாழ்வு கிடையாது; எனவே அந்த நிலைக்கு நாம் திரும்பி விட்டால் தீண்டாமையை ஒழித்து விடலாம் என்பது பாரதி முன் வைத்த தீர்வு.

அறிவுத் தலைமை ஏற்று சமூகத்தை முனேற்றுவதற்காக தன்னலமற்றுத் தொண்டாற்றுபவர் எந்த ஜாதியில் பிறந்தவராயினும் அவர் பிராமணரே என்பதை ஒரு குறியீடாக அறிவிக்கவே பாரதி கனகலிங்கத்திற்குப் பூணூல் அணிவிக்கிறான். பிறப்பின் அடிப்படையில் ஜாதியை நிர்ணயிக்கும் ஜாதியப் பார்வையில் அல்ல. பூணூல் என்பது ஓர் அடையாளம், அவ்வளவே.

ஆனால் பாரதி முன்வைத்த தீர்வு நடைமுறை சாத்தியமானது அல்ல. ஏனெனில் பாரதி கருதியது போல் நால்வருண முறை தோன்றிய ஆரம்பகாலத்தில் தீண்டாமை கிடையாது என்பது உண்மையே ஆயினும், வரலாற்றில் அக்காலகட்டத்தைத் தாண்டி வந்துவிட்ட சமூகம் பின்னோக்கித் திரும்பிச் செல்ல முடியாது.

இருந்தபோதிலும் பாரதி வாழ்ந்த காலத்தில் ஜாதிகளே இல்லாமல் ஒழிப்பதற்கு தீர்வு சொன்னவர் எவரும் இல்லை. அக்காலத்தில் தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் எவருமே நால்வர்ணத்தைத் தாண்டிச் செல்லவில்லை (அயோத்தி தாசர் உட்பட). இன்றும்கூட வர்க்கப் போராட்டத்தின் மூலமாகத்தான் ஜாதியை ஒழிக்க முடியும் என்று சொல்லும் கம்யூனிஸ்ட்களைத்தவிர (ஜாதி அரசியலுக்குப் பலியான கம்யூனிஸ்ட்களைப் பற்றி இங்கு பேச்சில்லை) ஜாதிக்கொடுமைக்கு எதிராக குரல் கொடுக்கும் எவரும் ஜாதியை ஒழிப்பதற்கு நால்வர்ணத்தைத் தாண்டி எந்தத் தீர்வையும் முன்வைக்கவில்லை. இன்றைய நிலையே இதுதான் எனில் 85-90 ஆண்டுகளுக்கு முன் பாரதியின் காலத்தில் இருந்த நிலையை அதிகம் விளக்க வேண்டியதில்லை. எனவே பாரதியின் காலத்தில் தீண்டாமைக் கொடுமைக்கு முன்வைக்கப்பட்ட தீர்வுகளில் பாரதியின் தீர்வு முற்போக்கானதே.

மதம் மாறுவது போல் ஜாதியும் மாறிக்கொள்ளலாம் என்று சட்டம் அனுமதித்தால் இன்று இடஒதுக்கீட்டு சலுகைகளுக்காக பிராமணர் உட்பட அனைத்து ஆதிக்க ஜாதியினரிலும் பெரும்பான்மையானவர்கள் தாழ்த்தப்பட்ட ஜாதிகளுக்கு மாறத்தயாராக இருக்கும் (போலி ஜாதிச்சான்றிதழ் வாங்கி ஏற்கனவே மாறிக் கொண்டிருக்கும்) தற்கால நிலைமையில் வைத்துப் பார்த்தால், தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்த கனகலிங்கத்திற்குப் பூணூல் போட்டு பிராமணன் ஆக்கிய தலைகீழ் நிகழ்வைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாது.

த.சிவக்குமார்,ஆசிரியர்,மாற்றுக்கருத்து!

த.சிவக்குமார்
2009-04-09 10:45:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பாரதி எதிர்ப்பாளர் மணியின் 15 கேள்விகளுக்கான பதில்கள்...

// 9.நந்தனை எரித்துக் கொன்ற சிதம்பரம் தீட்சிதர்கள் அவனை நாயன்மார்களில் சேர்க்காமலா விட்டார்கள்.. அதற்காக அவர்கள் முற்போக்காளர்களா என்ன //

நந்தனை சிதம்பரம் தீட்சிதர்கள் நாயன்மார்களில் சேர்த்ததற்கும் பாரதி நந்தனை சுதந்திரப் போராட்டத்தில் ஒரு குறியீடாகப் பயன்படுத்தியதற்கும் அடிப்படையிலேயே வேறுபாடு உண்டு. ஏன் எல்லாவற்றையும் இப்படி தட்டையாகவே பார்க்கின்றீர்கள். வரலாற்றோடு பொருத்திப் பாருங்கள்.

திலகர் மக்களிடையே சுதந்திர உணர்ச்சியை ஊட்டுவதற்காக அந்நியர்களான மொகலாயர்களை எதிர்த்துப் போரிட்ட சிவாஜியை ஒரு குறியீடாகப் பயன்படுத்தினார். மக்களை ஒன்று திரட்டுவதற்கு விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களைப் பிரபலப்படுத்தினார்.

ஆனால் தமிழ்நாட்டில் திலகரின் தலைமையை ஏற்று சுதேசி இயக்கத்தை முன்னெடுத்துச் சென்ற பாரதி திலகரை அப்படியே குருட்டுத்தனமாகப் பின்பற்றியவனல்ல. அவன் சுயசிந்தனை உடையவன். திலகர் வழியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களைப் பயன்படுத்தினால் இஸ்லாமியர்களையும் ஒன்றிணைக்க முடியாது என்று கருதிய பாரதி, தமிழ்நாட்டில் “கம்பர், வள்ளுவர், இளங்கோ முதலிய மகாகவிகளுக்கு” வருடம் தோறும் விழாக்கள் எடுக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்தான். அதன் காரணத்தைக் கூறும்போது “மதபேதங்கள் பாராட்ட இடமில்லாத திருவிழாக்கள் தமிழ்நாட்டில் எவ்வளவு அவசியம் என்பதை ஒவ்வொரு அறிவாளியும் எளிதாக ஊகித்துக் கொள்ளலாம்” என்று கூறி முடிக்கிறான் பாரதி.

அதுபோலவே திலகர் வழியில் தமிழ்நாட்டு மக்களிடையே சுதந்திர உணர்ச்சியை ஊட்டுவதற்காக மொகலாயர்களை எதிர்த்துப் போரிட்ட சிவாஜியை ஒரு குறியீடாகப் பயன்படுத்தினால் அது இஸ்லாமியச் சகோதரர்களை அந்நியப்படுத்தும் என்பதை உணர்ந்துதான் பாரதி, அன்று தமிழ்நாட்டு மக்களின் கலாச்சார வாழ்வில் இரண்டறக் கலந்திருந்த நந்தனார் சரித்திரத்தை ஒரு குறியீடாகப் பயன்படுத்தினார்,

ஆரம்பத்தில் 1906 நவம்பர்-டிசம்பரில் திலகரின் அடிஒற்றி “சத்ரபதி சிவாஜி தன் சைன்யத்தாருக்குக் கூறியது” என்ற பாடலை ‘இந்தியா’ இதழில் எழுதத் துவங்கும் போதே இந்த அபாயத்தை பாரதி உணர்ந்துவிட்டார். அதனால்தான் அதன் ஆரம்பக் குறிப்பில் இப்படி எழுதினார்:

“. . . சுதேசப்பற்று மிகுதிப்படுவதற்கு மேற்கூறியவிதமான செய்யுளிலே நமது மகமதிய சகோதரர்களுக்கு விரோதமாகச் சில வசனங்கள் உபயோகிக்க நேர்ந்திருப்பது பற்றி விசனமடைகிறோம். இக்காலத்து மகமதியர்கள் பாரத பூமியின் சொந்தப் புத்திரர்கள் என்பதையும், ஹிந்துக்களும் மகமதியர்களும் ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகள் போல் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் பலமுறை வற்புறுத்தி இருக்கிறோம் என்றபோதிலும், சிவாஜி மஹாராஜா காலத்தில் ஹிந்துக்களுக்கும் மகமதியர்களுக்கும் விரோதம் இருந்தபடியால், அவர்களைப் பற்றி மஹாராஜா சிவாஜி சில கோபமான வார்த்தைகள் சொல்லி இருப்பது வியப்பாக மாட்டாது. செய்யுளிலே மகமதியர்களைப் பற்றி வந்திருக்கும் பிரஸ்தாபங்களில் வீர ரஸத்தை மட்டும் கவனிக்க வேண்டுமேயல்லாமல், மகமதிய நண்பர்கள் தமது விஷயத்தில் உதாசீனம் இருப்பதாக நினைக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்.”

இதன் பிறகு பாரதி சிவாஜிக்குப் பதிலாக நந்தனாரைக் குறியீடாகப் பயன்படுத்தி சுதந்திர வேட்கையை மூட்டத்துவங்கினார். சிதம்பர முக்தியை அடையும் நந்தனாரின் வேட்கையினை சுதந்திரப் போராட்ட வீரர்களின் சுதந்திர வேட்கையாகவும், சுதந்திரத்திற்காகப் போரடிய திலகர், வ.உ.சி. போன்றோரை நந்தனாராகவும் சுதேசி உணர்வை அடக்கி ஒடுக்க முயன்ற ஆங்கிலேயர்களை, நந்தனாரின் வேட்கையினை அடக்கி ஒடுக்க முயன்ற ஆண்டைகளாகவும், ஆங்கிலேயர்களுக்கு அடங்கிப் போக வேண்டும் என்று சொன்ன மிதவாதிகளை, நந்தனாரின் சிதம்பர முக்தியை அடையும் வேட்கை நம்ம சாதிக்கு அடுக்காது என்று ஆண்டைகளுக்கு ஆதரவாக பேசிய நந்தனாரின் சேரிக்காரர்களாகவும் உருவகப்படுத்தி பாரதி பல பாடல்கள் பாடினார். அதன் மூலம் நந்தனார் அத்தனை துன்பங்களையும் தாண்டி தனது குறிக்கோளை அடைந்தது போல், எத்தனை துன்பங்கள் வந்தாலும் சுதந்திரத்தை அடைந்தே தீருவோம் என்று சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு வீர உணர்ச்சி ஊட்டினார்.

இந்தப் பின்ணணியிலும் தீண்டாமைக்கொடுமைக்கு பாரதி முன்வைத்த தீர்வின்(முந்தய இடுகையில் விவதிக்கப்பட்டதன்) பின்ணணியிலும்தான் பாரதி, “ நந்தனைப்போல் ஒரு பார்ப்பான்- இந்த நாட்டினில் இல்லை” என்று பாடியதைப் புரிந்து கொள்ள முடியும்.

த.சிவக்குமார்,ஆசிரியர்,மாற்றுக்கருத்து!

mani
2009-04-09 11:24:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

முற்போக்கு என்பது ஒவ்வோரு காலகட்டத்திலும் அதன் வளர்ச்சியின் இடத்தில் வைத்துதான் பார்க்க வேண்டும். இன்றைக்கு இட ஒதுக்கீட்டுக்காக சாதியை இறக்கிக் கொள்ளத் தயாராக இருப்பதை ம் அதே நேரத்தில் ஒடுக்குவதற்கு பிற்பட்ட சாதிகள் கூட தங்களை உயர்சாதி போல கருதிக் கொள்வதும்தான் இன்றைய நிலை. இந்த நிலைக்கு அதாவது இரண்டாவதாக சொன்ன வேலைவாய்ப்பு அல்லாத சமூக அந்தஸ்தான சாதி நிலைமைக்கு பிற்போக்கான அம்சம்தான் உயர்சாதி ஆக்கம் அதாவது பூணூல் அணிந்து கொள்ளவது ... அதனை தாழ்த்தப்பட்ட இளைஞனுக்கு செய்வதன் மூலம் அவனை மாத்திரம் செய்யும் தொழிலின் அடிப்படையில் உயர்சாதி ஆக்கி தனது தந்தை உற்றார் உறவினர் பற்றி அவனது மனதில் வெட்கம் வரும்படி செய்வதுதான். இது பச்சைப் பார்ப்பனத்தனம்... இதனை எப்படித்தான் முற்போக்கு எனச் சொல்ல முடிகிறதோ... 80 அல்ல அதற்கும் முன்னர் அவைதீக மரபு என அறியப்ட்ட இந்திய த்த்துவ மரபில் பார்ப்பன எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது தங்களது கவனத்தில் படவில்லையா...

நிற்க•. எந்த முற்போக்கும் பிறகு ஒரு காலத்தில் பிற்போக்காக மாற்றம் கண்டால் நமது தராசைத்தான் சரி செய்ய வேண்டும்...அல்லது அந்த எடை போடப்பட்ட பொருளின் தன்மை வேறாக இருக்க வேண்டும்... பஞ்சு திடீரென இரும்பாக மாறுமா என்ன•.

ஆக ந்ந்தன் பார்ப்பான் என்பதுதான் உங்களது தீர்வும்... உடல் உழைப்பை கேவலமாக்க் கருதி உலகத்தின் இயக்கத்திற்கு காரணாமான தொழிலாளி வர்க்கத்தையும் விவசாயக் கூலிகளையும் கேவலமாக்க் கருதிய பார்ப்பனீயத்தை எப்படி நீங்கள் ஆதரிக்கின்றீர்கள்...பாரதி பற்றி பேசுவதை விட இது முதல் முக்கியம் எனக் கருதுகிறேன்...

உயர்குடி ஆக்கம் என்பது தன்னை ஏறக்குறைய ஆர் எஸ் எஸ் அமைப்புடன் இணைத்து கொள்வதுதான். அவர்கள்தான் முனி ஐ முனீஸ்வரன் ஆக்குகிறார்கள். குப்பன் என்ற பெரயரை குப்பன் ஜி என்கிறார்கள்...

த.சிவக்குமார்
2009-04-10 01:46:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பாரதி எதிர்ப்பாளர் மணியின் 15 கேள்விகளுக்கான பதில்கள்...

// 12. பாரதி அன்பர்களே பூணூல் மாட்டி தலித் ஐ பிராமணன் ஆக்கினான் பாரதி. ஒரு வேளை உத்தபுரத்தில் நீங்கள் இருந்தால் எதை மாட்டி தலித் ஐ பிள்ளைமார் ஆக்குவீர்கள் //

ஜாதிகளே இல்லாமல் ஒழிக்க வேண்டும் என்பதே எங்கள் கொள்கை. ஜாதியை ஒழிக்க எல்லோருக்கும் பூணூல் போடவேண்டும் என்பது எங்கள் வழியல்ல. எல்லா ஜாதிகளிலும் உள்ள உழைக்கும் வர்க்கத்தினரை ஒன்றுபடுத்தி வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் மக்களிடையே ஜாதி உணர்வுகளைப் போக்கி வர்க்க உணர்வை உருவாக்கி, அவ்வர்க்கப் போராட்டத்தின் இறுதி வெற்றியில் ஜாதிகளே இல்லாமல் செய்துவிட முடியும் என்பது நாங்கள் முன்வைக்கும் தீர்வு.

ஆனால் பாரதி காலத்தில் முன்வைக்கப்பட்ட தீர்வுகளில் பாரதி முன்வைத்த தீர்வு முற்போக்கானது என்பதே நாம் வலியுறுத்த விரும்புவது. அதையே //கேள்வி 7//க்கான பதிலில் விளக்கியுள்ளோம். //80 அல்ல அதற்கும் முன்னர் அவைதீக மரபு என அறியப்பட்ட இந்திய தத்துவ மரபில் பார்ப்பன எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது// என்பது மட்டுமல்ல; புத்த மதத்தின் பிறப்பே பார்ப்பணீய இந்துமதத்திற்கு எதிராக நடந்ததே என்பதும் எங்கள் கவனத்தில் படத்தான் செய்தது. ஆனால் இங்கு பார்ப்பன எதிர்ப்பு பற்றியல்ல; 85-90 ஆண்டுகளுக்கு முந்தய பாரதியின் காலத்தில் //தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் எவருமே நால்வர்ணத்தைத் தாண்டிச் செல்லவில்லை //என்பது பற்றியே விவாதிக்கப்பட்டுள்ளது என்பது ஏன் உங்கள் கவனத்தில் படவில்லை.

ஆனால் இன்று பாரதி முன்வைத்த தீர்வைக்காட்டிலும் முற்போக்கான, நடைமுறை சாத்தியமான தீர்வாக வர்க்கப் போராட்டத்தின் முலமான தீர்வு முன்வைக்கப்பட்டு விட்ட நிலையிலும் பாரதியின் தீர்வுதான் இன்றும் முற்போக்கானது என்று நாங்கள் வாதிடவில்லை. ஆனால் பாரதியின் காலத்தில் பாரதியின் தீர்வைக் காட்டிலும் முற்போக்கான தீர்வை முன்வைத்தவர் என்று எவரையும் கூற முடியாது.

ஆனால் // எந்த முற்போக்கும் பிறகு ஒரு காலத்தில் பிற்போக்காக மாற்றம் கண்டால் நமது தராசைத்தான் சரி செய்ய வேண்டும்...// என்பது கள்ள வியாபாரிகளின் தந்திரம். ஒரு காலத்தில் முற்போக்காக இருந்த ஒன்று பிறகு ஒரு காலத்தில் பிற்போக்காக மாற்றம் கண்டால், எந்த தராசைக் கொண்டு-எந்த இயக்கவியல் அளவுகோல் கொண்டு- அதை முற்போக்கு என்று மதிப்பிட்டோமோ அந்தப் பார்வையை மாற்ற வேண்டிய- அந்தத் தராசை சரிசெய்ய வேண்டிய- அவசியம் இயக்கவியல்வாதிகளுக்குக் கிடையாது.

ஏனெனில் இன்று அது பிற்போக்காக மாறிவிட்டது என்பதற்காக, அன்று அது முற்போக்காக இருந்தது என்பது இல்லை என்று போய்விடாது. இன்று வயோதிகன் என்பது உண்மை ஆகிவிட்ட காரணத்தால், முன்பு அவன் இளைஞனாக இருந்தான் என்பது பொய்யாகிவிடாது.

முதலாளித்துவம், அது தோன்றும்போது முற்போக்கானதாகத்தான் இருந்தது என்ற மதிப்பீட்டை, இன்று அது ஏகாதிபத்தியமாக மாறி பிற்போக்காக மாற்றம் கண்டுவிட்டதால், - அந்தக் கள்ள வியாபாரிகளின் வழியில் நாமும் நமது தராசை சரிசெய்து - முதலாளித்துவம் தோன்றிய காலத்தில் முற்போக்கானதாக இருந்தது என்ற உண்மையை மறுக்க வேண்டுமா? இல்லை. நாம் சுயலாபத்திற்காக தராசுகளை சரிசெய்து மக்களை ஏமாற்றும் கள்ளவியாபாரிகளாக என்றும் இருக்க மாட்டோம் என்று உறுதி எடுத்துக் கொள்வோமாக.

த.சிவக்குமார்,ஆசிரியர், மாற்றுக்கருத்து!

த.சிவக்குமார்
2009-04-22 12:40:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

//5. சிபிஎம் உத்தபுரத்தில் செய்ததை விட அமைதியான் வழிதான் தேவை என்றால் காந்தியை விட விஞ்சி விட்டீர்கள். திருடன் காந்திதான் மக்களது எழுச்சியைக் கூட மன அடக்கம் இல்லை என்று பாதியில் கைகழுபுபவன்,//

மக்களை ஜாதி ரீதியாகவும் மத, இன ரீதியாகவும் பிரித்து வைத்திருப்பது எப்போதும் ஆளும்வர்க்கத்திற்கு உகந்ததாகவே இருக்கிறது. அதேசமயம் அந்த ஆளும்வர்க்கத்திற்கு எதிராக மக்களைத் திரட்டி சமூக மாற்றத்தைக் கொண்டுவர விரும்பும் எங்களைப் போன்றவர்களுக்கு மக்களின் ஒற்றுமையைக் குலைக்கும் ஒவ்வொரு செயலும் சமூகமாற்றத்திற்கு எதிரானதாகவே படுகிறது.
வர்க்க வேறுபாடு இன்றி உத்தப்புரத்தில் உள்ள பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த அனைவருமே தலித் சமூகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் எதிரி என்ற அடிப்படையில் பிரச்னையை அணுகியது கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறையா? அதைத்தான் இங்கே விமர்சிக்கின்றோம் //உத்தப்புரத்தில் ஒரு சமயத்தில் அனைத்து மக்களும் ஒருமித்து முடிவு செய்து எழுப்பிய சுவரை இடிப்பதற்கு அனைத்து சமூகத்தினரையும் சுமூகமாக அணுகி அவர்களது ஒற்றுமைக்கு ஊறு விளையா வண்ணம் பிரச்சனையை தீர்ப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக எடுத்த எடுப்பிலேயே அச்சுவருக்கு தீண்டாமைச்சுவர் என்று பெயரிட்டு அதனை அகற்றுவதில் முனைப்புக் காட்டிய சி.பி.ஐ(எம்) கட்சியினர் இருபிரிவு மக்களிடையே நிரந்தரப் பகையை ஏற்படுத்தி விட்டனர். . . சமூகத்தில் ஒரு வகுப்பினர் ஜாதிய வாதத்தை எடுத்தால் அது எவ்வாறு அனைத்து வகுப்பினரும் ஜாதிய வாதத்தை எடுப்பதில் சென்று முடிகிறது என்பதை எடுத்துக் கூறினார்.//

சுரண்டிப் பிழைக்கும் முதலாளிகளில் கூட தரகு முதலாளி, தேசிய முதலாளி எனத் தரம்பிரித்து, தேசியமுதலாளிகளை நம் நேசசக்தியாக வைத்திருப்பதற்குரிய யுத்த தந்திரங்களை வகுத்து செயல்பட்டால்தான், தரகு முதலாளிகளை எதிர்த்து வெற்றிபெற முடியும் என்று தர்க்க நியாயம் பேசும் கம்யூனிஸ்டுகளே உங்களிடம் சில கேள்விகள்:
1)தலித்துகளின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் மட்டும் நீங்கள், ஆதிக்க ஜாதியில் உள்ள ஏழை, எளிய உழைக்கும் மக்களையும், அந்த ஜாதிகளில் உள்ள உடைமை வர்க்கத்தினரையும் தரம்பிரித்து, உழைக்கும் மக்களை நம் நேசசக்தியாக வைத்திருப்பதற்குரிய யுத்த தந்திரங்களை வகுத்து செயல்படாமல் ஒட்டுமொத்தமாக ஆதிக்கஜாதியில் பிறந்தவர்கள் அனைவருமே ஒட்டுமொத்த தலித்துகளுக்கும் எதிரி என்பதுபோல் சித்தரித்து, ஆதிக்கஜாதியில் உள்ள உழைக்கும் மக்களை ஏன் ஆதிக்கஜாதி உடமை வர்க்கத்தினரின் ஜாதி அமைப்புகளின் பின்னால் தள்ளிவிடுகிறீர்கள்?
2)முதலாளிகளில் கூட தரகு முதலாளி, தேசிய முதலாளி எனத் தரம்பிரித்துப் பார்க்கத் தெரிந்த உங்களுக்கு, இன்று தலித்துகள் உட்பட அனைத்து ஜாதிகளிலும் ஏழை-பணக்காரன், இருப்பவன்-இல்லாதவன், முதலாளி-தொழிலாளி என்ற வர்க்கப் பிரிவினை நிலவுகிறது என்ற யதார்த்த உண்மையை மட்டும் ஏன் பார்க்க முடியவில்லை?
த.சிவக்குமார்,ஆசிரியர்,மாற்றுக்கருத்து!

sivarajan
2009-05-01 05:06:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

சபாஸ் சரியான பதிலடி சிவகுமார்
இது போன்ற புத்திசாலிகள் தான் இன்றைய அரசியலுக்கு தேவை

த.சிவக்குமார்
2009-05-17 11:36:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பாரதி எதிர்ப்பாளர் மணியின் 15 கேள்விகளுக்கான பதில்கள்...

//6. அன்று தலையெடுத்து வந்த பார்ப்பனர் அல்லாதோர் இயக்கமான நீதிக்கட்சி பற்றி பாரதியின் ஏளனத்தை எப்படி உங்களால் மென்று மூடி மறைக்க முடிகின்றது//

பார்ப்பனர் அல்லாதோர் இயக்கமான நீதிக்கட்சியினர், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகள், தங்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறுவதற்காக இந்திய சுதந்திரப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த துரோகிகள், அந்த துரோகத்திற்கு விலையாக பட்டங்களும் பதவிகளும் வெள்ளைக்காரர்களிடம் வாங்கிக் கொண்டவர்கள், 1947 வரையிலும்கூட இந்தியாவில் மாட்சிமைதங்கிய மகாராணியாரின் ஏகாதிபத்திய ஆட்சியே இருக்க வேண்டும்; மற்ற மாகாணங்களுக்கு சுதந்திரம் கொடுத்தாலும் சென்னை மாகாணத்திற்கு சுதந்திரம் கொடுக்கக் கூடாது என்று லண்டனுக்கு மனுப்போட்டவர்கள் - என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா? அது தெரிந்திருந்தால் பாரதி அவர்களை ஏன் ஏளனம் செய்தான் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

இன்று பல அமைப்பினர் பிராமண எதிர்ப்பு என்ற பெயரில் வர்க்கப் போராட்டத்தை மழுங்கடித்து வருவதைப் போலவே, அன்று பார்ப்பனர் அல்லாதோர் இயக்கமான நீதிக்கட்சியினரும் பிராமண எதிர்ப்பு என்ற பெயரில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை மழுங்கடித்து வந்தனர். எனவே பாரதி தனது எழுத்துக்களின் மூலம் நீதிக்கட்சியினரின் முகமூடிகளைக் கிழித்தார். அவர்களை மிகச்சரியாகவே ஏளனம் செய்தார்.

ஆதி முதல் அந்தம் வரை பிரிட்டாஷாரை அண்டிப் பிழைத்தும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடிய வ.உ.சி., பாரதி, சிவா போன்றவர்கள் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் உருவாக்கிய ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை மழுங்கடித்தும், ஜாதிரீதியாக மக்களைப் பிளவுபடுத்தி சுதந்திரப் போராட்டத்தின் வீச்சை மட்டுப்படுத்தியும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு குற்றேவல் புரிந்த பார்ப்பனர் அல்லாதோர் இயக்கமான நீதிக்கட்சியினரின் துரோகத்தை உங்களால் எப்படி மக்களிடமிருந்து மறைக்க முடிகிறது? மறைப்பது மட்டுமின்றி அவர்களின் துரோகத்தை எதிர்த்துப் போராடிய பாரதி அத்துரோகிகளை ஏளனம் செய்தது ஒரு பெருங்குற்றம் என்பதுபோல் பேசவும் உங்களால் எப்படி முடிகிறது?
த.சிவக்குமார்,ஆசிரியர், மாற்றுக்கருத்து!

த.சிவக்குமார்
2009-05-17 11:38:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பாரதி எதிர்ப்பாளர் மணியின் 15 கேள்விகளுக்கான பதில்கள்...
//8. சாவதற்கு முன்னால் பிராமணர் சங்க மாநாட்டில் கலந்து கொண்டாரே பாரதி அதனை எப்படி முற்போக்காகப் புரிந்து கொள்வது//

முற்போக்காகத்தான் அதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. பிராமணர் சங்க மாநாட்டில் கலந்து கொண்டார் என்பதை மட்டும் வைத்து முடிவு செய்யாமல், அதில் அவர் என்ன பேசினார் என்பதையும் வைத்து விறுப்பு வெறுப்பின்றி அதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம்.
த.சிவக்குமார்,ஆசிரியர்,மாற்றுக்கருத்து!

த.சிவக்குமார்
2009-05-17 11:44:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பாரதி எதிர்ப்பாளர் மணியின் 15 கேள்விகளுக்கான பதில்கள்...
// 1. பாரதி ஏன் எட்டப்பனிடம் குல வம்ச வரலாறு எழுத அனுமதி கேட்டார்... அது மறுக்கப்பட்ட போது அதற்கு அவர் குழைந்து எழுதிய கடிதம் ஆரா வெங்கடாசலபதியால் வெளியிடப்பட்டதே... மறுக்கப்படாமல் இருந்திருந்தால் அவரது கூற்றான படித்தவன் பாதகம் செய்தால்.... போல நமக்கு ஒரு தேசபக்த எட்டப்பனும் துரோகி கட்டபொம்மனும் அல்லவா கிடைத்து இருப்பார்கள்.. என்ன சொல்கின்றீர்கள். //

என்ன சொல்வது மணி அவர்களே, பாரதி எழுதாத ஒன்றை, அவர் எழுதியிருந்தால் இப்படித்தான் எழுதி இருப்பார் என்று நீங்களாகவே கற்பனை செய்து கொண்டு பாரபட்சமான சிந்தனைப்போக்கின் உச்சகட்டத்தில் இருக்கும் உங்களிடம் என்ன சொல்வது?
‘எமக்குத் தொழில் கவிதை’ என்று வாழ்ந்தவன் பாரதி. கடலூர் சிறையில் இருந்து நிபந்தனையின் பேரில் கடையம் வந்த பாரதிக்கும் குடும்பம் உண்டு. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் விரோதி என்பதால் அவருக்கு உதவுவதற்கும் ஆள்இல்லை. உதவிக்குத் தயாரக இருந்த நெல்லையப்பர் போன்றோரின் உதவியுடன் தனது கவிதை நூல்களை பதிப்பிக்கும் முயற்சியிலும் அப்போது பாரதி ஈடுபட்டிருந்தார். தனது பழைய நட்பின் அடிப்படையில் எட்டயபுரம் ஜமீன்தாரிடம் உதவி கேட்டார். எந்த வேலையும் செய்யாமல் இரந்துதவி பெற விரும்பாத பாரதி, தனக்குத் தெரிந்த தொழிலாகிய கவிதையில் எட்டயபுரம் மன்னர் குலவரலாறு எழுத அனுமதி கேட்டிருக்கிறார். ஆனால் பாரதிக்கு உதவினால் அல்லது ஏதாவது ஒரு வகையில் ஆதரவு அளித்தால் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும் என்ற பயத்தின் காரணமாக எட்டயபுரம் ஜமீன்தார் பாரதிக்கு அனுமதி மறுத்துவிட்டார்.

அத்துடன் அந்த விசயம் முடிந்துவிட்டது. அனுமதி கிடைத்து இருந்தால் எப்படி எழுதி இருப்பார் என்று ஏன் இந்த சூதாட்டக் கேள்விகள் எல்லாம் இப்போது?

பாரதி அனுமதி கேட்டது ஏற்கனவே எழுதப்பட்டிருந்த ‘வம்சமணி தீபிகை’ என்ற நூலை தற்காலத் தமிழ்நடையில் எழுதுவதற்கே, புதிதாக வரலாறு எழுதுவதற்கல்ல. அப்படி இருக்க, அனுமதி கிடைத்திருந்தால் தேசபக்த எட்டப்பனும் தேசத்துரோகி கட்டபொம்மனும் அல்லவா நமக்குக் கிடைத்திருப்பார்கள் என்று பாரதியின் மீது பழிபோடுவதற்கு ஏன் இவ்வளவு அவசரப்படுகிறீர்கள்?

உங்களுக்கு ஒன்று தெரியுமா? கட்டபொம்மன் தேசபக்தனும் அல்ல; எட்டப்பன் தேசத்துரோகியும் இல்லை. ஏனென்றால் அவர்களது காலத்தில் தேசம், தேசியம் என்ற கருத்தாக்கமோ அதற்குரிய புறச்சூழ்நிலையாகிய தேசியச் சந்தையோ தோன்றியிருக்கவில்லை. அவர்கள் இருவருமே மக்களைக் கசக்கிப் பிழிந்துவந்த நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் பிரதிநிதிகள். அவர்களில் எட்டப்பன் ஆங்கிலேயர்களுடன் சமரசம் செய்து கொள்வதில் வெற்றி பெற்றவன்; கட்டபொம்மனோ ஆங்கிலேயர்களுடன் சமரசம் செய்து கொள்வதற்கு எவ்வளவோ முயன்றும் முடியாமல்போய் முடிவில் தவிர்க்க முடியாத போர் அவன் மீது திணிக்கப்பட்ட போது, சரணாகதி அடையாமல் தீரமுடன் போரிட்டு வீர மரணமடைந்தவன். இவர்களைப் பற்றி நீங்களாகவே இயக்கவியலுக்குப் புறம்பான கருத்துக்களைப் பரப்பிவிட்டு, பின் நீங்களாகவே பாரதி இப்படிப் பாடியிருப்பார், அப்படிப் பாடியிருப்பார் என்று கற்பனை செய்து பார்த்து, பயங்கரக் கனவு கண்ட குழந்தை அலறுவது போல் அலறுவதில் என்ன அர்த்தம் உள்ளது. உலகில் எந்த ஒரு நாகரீக சமுதாயத்திலும் வரலாற்று மனிதர்களை ‘இப்படி’ மதிப்பிட்டவர்கள் எவருமில்லை.
த.சிவக்குமார்,ஆசிரியர், மாற்றுக்கருத்து!

த.சிவக்குமார்
2009-05-17 11:49:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பாரதி எதிர்ப்பாளர் மணியின் 15 கேள்விகளுக்கான பதில்கள்...
// 2. பிரஞ்சு இந்தியாவில் இருந்து மன்னிப்பு கடிதம் எழுதித் தந்து தமிழகம் வந்த பாரதி ஈடுபட்ட புரட்சிகர பணிகள் என்ன //

கடலூர் சிறையில் இருந்து பாரதி விடுதலையானது 1918 டிசம்பர் 14 மாலையில். அவர் மறைந்தது 1921 செப்டம்பர் 12 அதிகாலையில். இந்த இடைப்பட்ட 2 ஆண்டுகள் 9 மாதங்களில் பாரதி ஈடுபட்ட புரட்சிகரப் பணிகள் என்ன என்று கேட்கிறீர்கள். நல்ல கேள்வி. இக்கேள்வியின் நோக்கம் என்ன?

தனது 22வது வயதில் சுதேசி இயக்கத்தில் பங்கெடுத்து, தனதுஎழுத்துக்களால் மக்கள் மத்தியில் சுதந்திர வேட்கையை ஊட்டி, அதற்குப் பலனாக குடும்பத்தின் வறுமையையும் ஓடிஒழியும் நாடோடி வாழ்க்கையையும் சொல்லொனா துயரங்களையும் அனுபவித்து, அவன் வாழ்ந்த காலத்தில் அவனிலும் கால்வாசி புலமை இருந்தவர்கள் எல்லாம் சுகமாக வாழ்ந்திருக்கையில், அத்தனை மொழிகள், அத்தனை திறமைகள் அனைத்தும் இருந்தும் தாய்நாட்டு சேவையில் ஈடுபட்டதற்காக பட்டினியைப் பரிசாகப் பெற்று, பசிக்கொடுமையை மறக்க அபின் உண்டு உயிர் வாழ்ந்து உடல்நலம் கெட்டு, தாய்நாட்டு விடுதலைக்காக ஏதும் செய்ய முடியாமல் புதுச்சேரியில் மடிவதைவிட அவன் ‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குழாவி இருந்த’ தாய்நாட்டில் உயிர்விடுவதேமேல் என்று மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்து தமிழகம் வந்து, தனது 39வது வயதில் வறுமையில் இறந்துபோன அம்மாபெரும் கவிஞன் தனது கடைசிக்காலமான 2 ஆண்டுகள் 9 மாதங்களில் என்ன புரட்சிகரப் பணிகளில் ஈடுபட்டார் என்று கேட்கிறீர்கள். நன்று.

அதற்கு முன்பாக அந்த 2 ஆண்டுகள் 9 மாதங்களில் தமிழக அரசியலில் என்னென்ன புரட்சிகள் நடந்து கொண்டிருந்தன என்பதைச் சொல்ல முடியுமா உங்களால்? 1920 ஆகஸ்டில் அறிவிக்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கம் எப்பொழுது முழுவீச்சில் தொடங்கப்பட்டது, அது தமிழ்நாட்டில் எப்பொழுது வேகம் பெற்றது என்பதையும் உங்களால் பார்க்க முடிந்தால் இன்னும் நல்லது. அத்துடன் பாரதி தனது கடைசிக்காலமான 2 ஆண்டுகள் 9 மாதங்களில் என்னென்ன முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார் என்பதையும் அவரது வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் அதனினும் நல்லது. செய்வீர்களா?
த.சிவக்குமார்,ஆசிரியர், மாற்றுக்கருத்து!

mani
2009-05-21 07:27:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

சிவகுமார் நான் மணி..

உங்களது கருத்துக்களுக்கு பதில் சொல்ல விரும்புகிறேன். அதற்கு முன் ஒரு சந்தேகம்... நம் நாட்டில் சாதி ஒழிப்பை எப்படி நிறைவேற்றுவது என எளிமையாக விளக்க முடியுமா...

பாரதி பூணூல் மாட்டிய கனகலிங்கத்தை உயர்த்திப் பிடிப்பது மனுதர்மத்துக்குள் தீர்வைத் தேடும் முயற்சி... அதாவது பாராளுமன்ற உள்ளறைக்குள் மார்க்சிஸ்டுகள் புரட்சியைத் தேடுவதைப் போல•...
பார‌தி கால‌த்தைப் ப‌ற்றி உங்க‌ளுக்கு பொதுவில் தெரிந்திருக்க‌வில்லை என‌க் க‌ருதுகிறேன்... அய்ய‌ன் காளியும், அயோத்தி தாச‌ப‌ண்டித‌ரும், ஜோதிராவ் பூலேவும் பார‌திக்கு பிந்திய‌வ‌ர்க‌ள் இல்லை என‌ நினைக்கின்றேன்...

பார்ப்பான் உய‌ர்ந்த‌வ‌ன் என்ற‌ க‌ருத்தை பார‌தி ந‌ந்த‌னைப் பார‌ட்டிய‌த‌ற்காக‌ ஏற்றுக் கொள்ள‌ வேண்டுமா... அப்ப‌டியானால் உழைப்பை ம‌திக்காத‌ ஒரு ச‌மூக‌ப்பிரிவை அதாவ‌து சாதியை ஆத‌ரித்து பேச‌ச் சொல்லுகின்றீர்க‌ளா...

க‌ள்ள‌ வியாபாரிக‌ள் என‌ மிக‌ அறிவுப்பூர்வ‌மாக‌ எழுதிய‌மைக்கு ந‌ன்றி... ஆனால் ப‌டிப்ப‌தைப் திருந்த‌ப் ப‌டியுங்க‌ள்.. முத‌லாளித்துவ‌ம் தோன்றும்போதுதான் முற்போக்கு... அப்ப‌டின்னா என்ன•. அத‌ன் தோற்ற‌ம் நில‌பிர‌புத்துவ‌த்தை எதிர்த்து... அதோடு ஒப்பிட்டால்தான் முற்போக்கான‌து... ஆனால் கான்ட‌க்ஸ்டுக்கு பொருந்தாம‌ல் சாதியை ஒழிக்க‌ அது த‌ரும் த‌ரும் அடையாள‌ங்க‌ளை ஒழிக்க‌ வ‌ழி கேட்டால் அது எந்த‌க் கால‌மாக‌ இருந்தாலும் அத‌ற்குள் தீர்வு தேடுவ‌து முற்போக்காக‌ முடியாது... யாம் அறிந்த‌ அவைதீக‌ ம‌ர‌பு உள்ளிட்ட‌ பௌத்த‌ம் முத‌லான‌ அமைப்புக‌ள் கூட‌ எல்லோரையும் பூணூல் அணிய‌ச் சொன்ன‌தாக‌ என‌க்கு நினைவில்லை...

இப்போது சொல்லுங்க‌ள்... சாருவாக‌ன‌னை விட‌வும் பார‌தி முற்போக்கான‌வ‌ரா... அல்ல‌து அவ‌னோடு ஒப்பிட்டால் கால‌த்தால் பிந்திய‌தானாலும் பார‌தி ஒரு சீர்திருத்த‌வாதியா...

புர‌ட்சி வேறு... அத‌னைக் கெடுக்கும் சீர்திருத்த‌ம் வேறு... க‌ண்ணாடுயைக் க‌ழ‌ட்டிப் பாருங்க‌ள் புரியும் உண்மை..

mani
2009-05-22 03:25:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இந்திய உற்பத்திமுறை என்ற முறையில் வர்க்கமும் சாதியும் கீழ்கட்டுமானத்திலும் உள்ளது... எனவே சாதி ரீதியாக மக்கள் பிரிவது தமது விருப்பத்தினால் அல்ல•.. அதுதான் சமூக நடைமுறையாகவும் உள்ளது... அதனை நமது விருப்பத்துக்காக இல்லை என நினைப்பது கண்ணை மூடிய பூனையின் கதைதான்...

பண்ணைகளாக தலித் மக்களில் எவரையாவது காட்ட முடியுமா...

மற்றபடி மார்க்சிஸ்டுகள் அப்படி பிரித்துவிட்டது தவறு எனச் சொல்லும் தாங்கள் ஆதிக்க சாதியில் பிறந்த ஏழை ஒருவன் ஏன் தலித் மக்கள் பக்கம் வரவில்லை என்பதையும் கொஞ்சம் மேலசாதி மனோபாவத்தைக் களைந்துவிட்டு பரிசீலியுங்கள்,...

நிற்க ... நீதிக்கட்சி பற்றிய உங்களது மதிப்பீடு ஒருவித மேல்சாதி மனோபாவத்திலிருந்து வருவதுதான்... பாரதி அவர்களை தேசதுரோகிகள் எனக் கூறியெல்லாம் எதிர்க்கவில்லை என்ற உண்மையை படித்துப் புரிந்து கொள்ளுங்கள்... அதனால் கொஞ்சம் நீதிக்கட்சி பற்றித் தெரிந்த்தை வைத்துக் கொண்டு கண்டபடி பேசுவது பச்சைப் பார்ப்பனத் தனம்தான்...பார்ப்பன எதிர்ப்பு என்பது நீண்டகாலம் இருந்துவந்த மரபுதான்... ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதும் இந்தியாவில் இதுவரை நிலைகொண்டதாக எனக்கு தெரியவில்லை...உங்களது விமர்சனங்கள் பலவும் காங்கிரசுக்கும் பொருந்தும என்பதை சீதாராமையாவின் காங்கிரசு கட்சி வரலாற்றைப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம்...

பார்ப்பன எதிர்ப்பு என்பது நிலபிரபுத்துவ எதிர்ப்பு என்ற எளிய உண்மை கூட உங்களுக்கு தெரிய முடியவில்லையா... எப்படி அரசியல் ... மாற்றுக்கருத்து அப்படி என்றெல்லாம் பேசிக் காலம் தள்ள முடிகிறது உங்களால்..

ஏகாதிபத்திய எதிர்ப்பை பாரதி காட்டினான் என்பதை எப்படி சொல்லுகிறீர்கள்... ரசிய புரட்சியை எதிர்த்த பாரதி லெனினை குறை கூறிய பாரதி அவர் முன்மொழிந்ந ஏகாதிபத்தியத்தை எப்படி பாராட்டினான்... ஆதாரம் இருக்கிறதா

mani
2009-05-22 03:49:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பாரதி பிராமண சங்க மாநாட்டில் கலந்து கொண்டு, இனிமேல் நாமெல்லாம் சாதி ரீதியாக சங்கம் வைக்க கூடாது வர்க்க ரீதியாகத்தான் சேர வேண்டும்... அதுனால பிராமணர் சங்கத்தக் கலைச்சுருங்க அப்பிடின்னா பேசுனாரு... இல்ல அப்ப்பிடி யாரும் பேசத்தான் முடியுமா.... இல்ல அந்த நல்லவரு எங்கியாவது தலித் மக்கள் கூடுன சாதி சங்க மாநாட்டுலயாவது கலந்துக்கிட்டாரா... சாதி உணர்வு மிக்க பார்ப்பானுக்கு ஏன் இப்படி வலிந்து ஒரு முகமூடி போடுறீங்க•.. முற்போக்காளர்னு...

எட்டப்ப மகராஜாவின் வம்சமணி தீபிகை ஒரு கவிதை வடிவ நூல்ல்ல ... முதலில் அதனைப் படியுங்கள்... அதற்கு முன் பாரதி எழுதிய கடிதம் ஆ.ரா. வெங்கடாசலபதியால் கண்டறியப்பட்டு தி ஹிந்து பத்திரிகையிலும் வெளிவந்த்து... அதனைப் படித்த போதுதான் இவ்வளவு தூரம் பாரதி தான் வெள்ளையருக்கும் நல்ல பிள்ளை எனக் காட்ட முயன்றானா என்பது புரிந்த்து... முடிந்தால் படித்துவிட்டு அதன் ஒவ்வோரு வரிக்கும் உள்ள so-called-. முற்போக்கை விளக்க முயற்சிக்கவும்..

தேசப்பற்று என்று சொன்னதால் சந்தை வரை பேசிய மைக்கு நன்றி... தேசம் என்பதை நாடு என்ற பொருளில் பயன்படுத்தினேன்... ஆனால் தேசியத்திற்கு சந்தை அவசியம் என்பதை உங்கள் மூலமாகத்தான் அறிய முடிகிறது... பேரா. ராஜையன் அவர்கள் தி சவுத் இண்டியன் பொலிகார்ஸ் வார் என்ற தலைப்பில் எழுதிய வரலாற்று ஆதாரத்துடன் கூடிய புத்தகம் உங்க்ளது கண்களைத் திறக்கட்டும்... வெள்ளையர்களுக்கு எதிராக 72 பாளையங்களில் பலர் கூட்டிணைவுகளை உருவாக்கியதும், சின்ன மருதுவின் திருச்சி பிரகடனம் ஜம்பு தீவு என குறிப்பிட்டதும், கருப்பையா சேர்வை என்பவரை திப்புவின் படைக்கு அனுப்பி வைத்த கள்ளர் நாட்டு கூட்டிணைவும், தேசியம் என்ற சொல்லை தூவி வந்த பிரஞ்சுப்புரட்சி மாமன்னம் திப்புவை சிட்டிசன் திப்பு ஆக மாற்றியதும் என 18 ஆம் நூற்றாண்டை ஒருமுறை பறவைப் பார்வை பார்த்தாலே போதும் இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான வாதம் எதுவும் வெளிவராது...

இந்தக் கூட்டிணைவுகளில் சேராத்து மட்டுமல்ல•.. காட்டியும் கொடுத்தவன்தான் எட்டப்பன்... அதற்காக பாஞ்சாலங்குறிச்சி தோற்றவுடன் அவனுக்கு விருப்பமான அருங்குளம், சுப்புலாபுரம் போன்ற கிராமங்களும் அவனுக்கு கிடைத்த்து... இவன் வம்ச வரலாறு வெள்ளையனைப் பாராட்டாமலா இருக்கிறது... எட்டப்பனுக்கு எழுதிய கடித்த்தில் கூட பாரதி இப்போதெல்லாம் நான் வெள்ளையரை எதிர்த்து எழுவது இல்லாத்தால் எனது பாடங்கள் பள்ளிக்கூடத்தில் கூட பாடமாக வைத்துள்ளார்கள் என எழுதினானே அது என்னவாம்...

முதலில் வரலாற்றை படியுங்கள்... அதற்கு பிறகு அதனை இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையில் அணுகுவது பற்றிப் பேசலாம்...

mani
2009-05-22 04:05:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

புரட்சிக்கும் பாரதிக்கும் அல்லது புரட்சிக்கும் ஒத்துழையாமை இயக்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை....

புரட்சிக்கும் புரட்சித்தலைவருக்கும் எவ்வளவு சம்பந்தமோ அவ்வளவுதான் இதற்கும் உள்ளது...

திறமை இருந்தும் சமூகத்திற்காக மற்றவர்கள் இழக்க விரும்பாத ஒன்றை இழக்கத் துணிந்தவன் பாரதி என்பதுதானே உங்களது கருத்து... ஆனால் அதன் உண்மையான பொருள் இப்படித்தான் இருக்கிறது... அதாவது நான் நினைத்திருந்தால் கடைசிவரை ஒரு சமூகப் பொறுப்பற்ற நடுத்தர வர்க்க அற்பனாகவே வாழ்ந்து மறைந்திருக்கலாம்... ஆனால் பசியும் அதனைப் போக்க அபினும் தின்று, சொந்த மண்ணில் சாக வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்திற்காக கேவலம் இனிமேல் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட மாட்டேன் என்று ஒரு கடிதம் கூடத் தந்த்து ஒரு தவறா... இதுதானே உங்களது வாதம்....



த.சிவக்குமார்
2009-05-22 07:38:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

// 10. இல. கணேசனும், எஸ்வி சேகரும் தங்களது அரசியல் செயல்பாடுகளில் இவரைப் பயன்படுத்த காரண்ம் என்ன//

இல.கணேசன், எஸ்.வி.சேகர், பிராமணர் ஜாதிச் சங்கத்தினர் போன்றவர்கள் பாரதியை பயன்படுத்துகிறார்கள் என்பதை வைத்து பாரதியை மதிப்பிட முடியுமா? ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. அமைப்பினர் உலகறிந்த நாத்திகவாதி பகத்சிங்கையும் கூடத்தான் தங்களது அரசியல் செயல்பாடுகளில் பயன்படுத்துகின்றனர். அதை வைத்து நாம் பகத்சிங்கை மதிப்பிடமுடியுமா? பிள்ளைமார் ஜாதிச் சங்கத்தினரும் சுதந்திரப் போராட்டவீரர் வ.உ.சி.யை தங்களது ஜாதிச் சங்கத்தின் செயல்பாடுகளில் பயன்படுத்தத்தான் செய்கிறார்கள். அதை வைத்து நாம் வ.உ.சி.யை மதிப்பிடமுடியுமா?
த.சிவக்குமார்,ஆசிரியர்,மாற்றுக்கருத்து!

த.சிவக்குமார்
2009-05-26 06:31:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

//15. பாரதி ஆர்எஸ.எஸ் ன் மூதாதையன் என்பதற்கு பல் கட்டுரைகளையும் மக இக தோழர் மருதையன் எழுதியுள்ளாரே அதுபற்றி தமிழரங்கம் சைட்டில் ஒரிஜினல் கட்டுரை இருக்கும் என நினைக்கிறேன். அது பற்றி என்ன நினைக்கின்றீர்கள் //

ம.க.இ.க. வின் அடிப்படை அரசியல் வழிக்கும் பாரதி பற்றிய அவர்களின் மதிப்பீட்டிற்கும் அடிப்படையான முரண்பாடுகள் காணப்படுகின்றன.

ம.க.இ.க. வின் அடிப்படை அரசியல் வழி புதிய ஜனநாயகப் புரட்சி; அப்புரட்சியின் நேசசக்தி தேசிய முதலாளிகள். ஆனால் தமிழ் மண்ணில் தேசியம் பேசிய பாரதியோ அவர்களின் வர்க்க எதிரி. நடைமுறை அரசியல் என்று வரும்போது அடிப்படை அரசியல்வழியை பரண் மேல் தூக்கி வைத்து விடுகின்றனர்.

"பாரதி கம்யூனிஸ்ட் அல்ல; அவன் மதநம்பிக்கை உடையவன்; அவன் ஜாதியக் கட்டமைப்பிற்கு ஆதரவானவன் அதனால் அவனை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது" என்று அவர்கள் கூறலாம். ஆனால் அவர்கள் நேசசக்தியாகப் பார்க்கும் தேசிய முதலாளிகள் கம்யூனிசத்தை ஏற்றுக் கொண்டவர்களா; மதநம்பிக்கையையும் ஜாதியக் கட்டமைப்பையும் தூக்கி எறிந்தவர்களா? எல்லாவற்றிற்கும் மேலாக அவர்கள் தொழிலாளர்களைச் சுரண்டிப்பிழைக்கும் ஒட்டுண்ணிகள். இருந்தாலும் அவர்களை நேசசக்தியாகப் பார்க்கும் இவர்கள் ஏன் பாரதியை எதிரியாகப் பார்க்கின்றார்கள்?

ஏனென்றால் பாரதி பிறப்பால் பிராமணன் என்பதே. பிறப்பின் அடிப்படையில் உயர்வு-தாழ்வு பாராட்டும் மனுவாதப் பார்வைதான் இவர்களையும் வழிநடத்துகிறது; இயக்கவியல் அடிப்படையிலான வர்க்கப் பார்வை அல்ல. வர்க்கப் பார்வை இருந்திருந்தால் கம்யூனிசத்தை ஏற்றுக்கொள்ளாத, கடவுள் மறுப்பை ஏற்றுக்கொள்ளாத டால்ஸ்டாயை லெனின் எவ்வாறு தன் அபிமான எழுத்தாளராக ஏற்றுக் கொண்டார் என்பதைப் புரிந்து கொண்டிருப்பார்கள்.

தன் எழுத்துக்களிலும் கவிதைகளிலும் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வையும் சுதேசியத்தையும் பிரதிபலித்த பாரதியை நிலப்பிரபுத்துவத்தின் பிரதிநிதி என்பார்கள்; ஆனால் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தை எதிர்த்து இறுதிவரை விட்டுக்கொடுக்காமல் போராடிய பெருமைக்குரிய வரலாற்றைக் கொண்டவர்களாக இருந்தாலும் நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் அசல் பிரதிநிதிகளாகவே வரலாற்றில் செயலாற்றிய கட்டபொம்மனையும் திப்புசுல்தானையும் தேசபக்தர்கள் என்பார்கள். ஆனால் நிலப்பிரபுத்துவமே இன்றும் மக்களின் பிரதான எதிரி என்றும் சொல்வார்கள்.

பாரதியின் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு ஆரம்பத்தில் இருந்த அளவிற்கு கடைசிவரை இருக்கவில்லை; படிப்படியாகக் குறைந்து கொண்டேவந்துள்ளது என்று நூல் பிடித்து அளந்து பார்த்து அவன் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை இழந்துவிட்டான் என்று நிரூபிக்கப் பார்ப்பார்கள். ஆனால் ஆங்கில ஏகாதிபத்தியமே உருவாகியிருக்காத ஒரு காலத்தில், கிழக்கிந்தியக் கம்பெனி எனும் வியாபார நிறுவனத்தை எதிர்த்து தனது நிலப்பிரபுத்துவச் சுரண்டலைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடிய கட்டபொம்மனையும் திப்புசுல்தானையும் எந்த நூலும் பிடிக்காமல் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் என்பார்கள். ஆனாலும் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து புதிய ஜனநாயகப் புரட்சி என்றும் சொல்வார்கள்.

எனவே, இவர்களது இந்தப் பார்வை இயக்கவியலின்பாற்பட்டது அல்ல; மாறாக சுய விருப்பு-வெறுப்பின்பாற்பட்டது. பாரதியைப் பற்றிய மார்க்சிய அடிப்படையிலான மதிப்பீட்டை அறிந்து கொள்வதற்கும் அதன் மீதான ஆக்கப்பூர்வமான விவாதங்களைத் துவங்கி அந்த மதிப்பீட்டை மேலும் செழுமைப் படுத்துவதற்கும், கைலாசபதி, தொ.மு.சி.ரகுநாதன் போன்றோரின் எழுத்துக்கள் இருக்கின்றன என்பது எங்களது கருத்து.
த.சிவக்குமார்,ஆசிரியர்,மாற்றுக்கருத்து!

த.சிவக்குமார்
2009-05-27 11:39:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பாரதி எதிர்ப்பாளர் மணி அவர்களே,
உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் இத்துடன் முடிந்தது. இனி உங்கள் பதில்களை எதிர்பார்க்கின்றோம். நான் ஏற்கனவே எனது பதில்களின் ஊடாக எழுப்பியிருக்கும் கேள்விகளுடன் தங்களது 21.05.2009 தேதிய இடுகையினின்று எழுந்த பின்வரும் கேள்விகளுக்கும் பதில் அளிக்குமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
1)நமது நாட்டில் ஜாதியை ஒழிப்பதற்கு நீங்கள் அல்லது நீங்கள் சார்ந்திருக்கும் இயக்கம் முன்வைக்கும் தீர்வு என்ன?
2)சாருவாகனன், அய்யன் காளி, அயோத்திதாசர், ஜோதிராவ் புலே, பெரியார், அம்பேத்கார் ஆகியோர் ஜாதியை ஒழிப்பதற்கு அவரவர் காலத்தில் முன்வைத்த தீர்வுகள் என்ன? அவை பாரதியின் தீர்வில் இருந்து எவ்வகையில் வேறுபட்டது அல்லது முற்போக்கானது அல்லது அவை எவ்வகையில் கான்டக்ஸ்ட்டுக்குப் பொருத்தமான தீர்வு என்பதை விளக்கவும்.

உங்களின் ஒவ்வொரு இடுகைக்கும் பதில் அளிப்பதைவிட நான் அளித்துள்ள பதில்கள் மற்றும் எழுப்பியுள்ள கேள்விகள் அனைத்திற்கும் நீங்கள் பதில் அளித்த பிறகு என்னுடைய பதிலைப் பதிவு செய்வது முழுமையான விவாதத்திற்கு உதவுவதாக இருக்கும் என்று நினைக்கிறேன். உங்களது முழுமையான பதில்களை எதிர்பார்க்கிறேன்.
த.சிவக்குமார்,ஆசிரியர்,மாற்றுக்கருத்து!

mani
2009-06-02 11:58:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பாரதியை எஸ்வி சேகர் போன்றோர் பயன்படுத்த காரணம்தான் கேட்டேன். அதற்கான காரணத்தில்தான் ஒளிந்திருக்கிறது பாரதியின் நடைமுறை வழுவல். இதனை பகத்சிங் சீக்கிய மாநாட்டில் கலந்து கொண்டான் என்றோ வ.உ.சி பிள்ளைமார் மாநாட்டில் கலந்து கொண்டார் என்றோ கூறி சரிக்கட்ட இன்று அவற்றை நிறுபுவர்களால் சொல்ல முடியாது.

...ம.க.இ.க. வின் அடிப்படை அரசியல் வழி புதிய ஜனநாயகப் புரட்சி; அப்புரட்சியின் நேசசக்தி தேசிய முதலாளிகள். ஆனால் தமிழ் மண்ணில் தேசியம் பேசிய பாரதியோ அவர்களின் வர்க்க எதிரி. நடைமுறை அரசியல் என்று வரும்போது அடிப்படை அரசியல்வழியை பரண் மேல் தூக்கி வைத்து விடுகின்றனர்...

பாரதி உருவாக்க நினைத்த இந்திய தேசியத்தை. இது தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்பது இன்று மார்க்சிய முறையில் ஆய்வு செய்து நீங்கள் புரிந்து கொள்ளலாம். இந்திய தேசியம் வெள்ளையர்களுக்கும் தேவைப்பட்டது.. இராமனை தேசிய நாயகனாக சித்தரிக்க பார்ப்பனர்களுக்கும் தேவைப்பட்டது இந்திய தேசியம்... இந்த வகையில் பாரதி அதனை ஆதரித்து பாரத மாதா, பராசக்தி காளி என்றெல்லாம் பாடினான். குறைந்த பட்சம் அன்னை மேரி என்று கூட பாடவில்லை.. அவ்வளவு ஜனநாயமானவன் அவன்...

அமெரிக்கா கூடத்தான் தேசியம் பேசும். ஆனால் அந்த தேசிய இனம் ஒடுக்கப்படுகிறதா அல்லது ஒடுக்குகிறதா என்பதைப் பொறுத்துத்தான் ஒரு கம்யூனிஸ்டு அதனை எதிர்ப்பதா அல்லது ஆதரிப்பதா என்பது உள்ளது... டாடா பிர்லா போன்ற தரகுமுதலாளிகளின் மடியில் பிச்சை எடுத்த காந்தியும் அந்த முதலாளிகளும் மக்களுக்கு இன்று சிங்கூர் வரை எதனைப் பரிசாகத் தந்தார்கள் என்பது வெள்ளிடை மலை... நேச சக்தியை பகை சக்தியை மதிப்பிடுவதில் டாடா வும் அம்பானியும் கனவு காணும் கோமாளி அப்துல் கலாமின் வல்லரசை ஆதரித்து செல்போன் வாங்கி தேசப்பற்றை காண்பிப்பதா அல்லது இந்த நாட்டு விவசாயத்தை
காண்டிராக்ட் எடுத்து அதனைக் கைப்பற்றுவதன் மூலம் சிறுமுதலாளிகளான அண்ணாச்சிகளை வியாபாரத்தை விட்டே விரட்டும் போது டாடா வை ஆதரிப்பதா அல்லது த•வெள்ளையனை ஆதரிப்பதா என்று வந்தால் நியாயமானவர்கள் யாரை ஆதரிப்பார்கள்... இல்லாவிடில் இரண்டுபேருமே முதலாளி கள்தானே என்று குதர்க்கவாதம் செய்வீர்களா...

பகைசக்திகளின் தற்காலிக நேச்ச‍க்திதான் தேசிய முதலாளி என்பதும் தெரியும்தான்.. தொழிலாளி கூடத்தான் தனது அடிமைத்தன ஒழிப்பை விரும்புவது இல்லை.. அது ஒரு புராசஸ்லதான் வரும் என்பது இயக்கவியல் பார்வை. அது மக•.இக விடம் உள்ளது. நீங்க சுத்தவாதம் பேசுவதாக நினைத்துக் கொண்டு எங்களிடம் கோபித்து கொண்டு கால் கழுவாம பாரதிய தூக்கிப் பிடிக்கிறீங்க•..

mani
2009-06-03 12:42:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

புதிய ஜனநாயகப் புரட்சி பற்றிய உங்களது குழந்தைத்தனமான கேள்வியை நினைத்து நீங்களே வெட்கப்பட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். ப‌கை ச‌க்திக‌ள் புர‌ட்சியின் ஒரு த‌ருவாயில் நேச‌ ச‌க்திக‌ளுக்கு வ‌ருவ‌தும் அவ‌ர்க‌ளில் சில‌ர் அம்முகாமின் த‌லைமையை ஏற்ப‌தும் வ‌ர‌லாறு முழுவ‌தும் ந‌ட‌ந்துள்ள‌து.. அத‌ற்கு உதார‌ண‌ம் த‌ருகிறேன்... அது அறிவிய‌ல் பூர்வ‌மான‌ இய‌க்க‌விய‌ல் பார்வை கூட•.

பார்ப்ப‌ன‌ராக‌ப் பிற‌ந்தார் என்ப‌த‌ற்காக‌ ம‌க•இக‌ யாரையும் திட்டுவ‌தில்லை. ப‌ல‌ தோழ‌ர்க‌ளே இன்றும் அவ்வ‌மைப்பில் பிற‌ப்பால் பார்ப்ப‌ன‌ர்தான். என‌வே இது அவ‌தூறு அல்ல‌து அறியாமை..

டால்ஸ்டாய் நில‌பிர‌புத்துவ‌ பிற்போக்குத்த‌ன‌ங்க‌ளை ஆத‌ரித்து எழுத‌வில்லை, பார‌தியைப் போல•. ப‌ழைய‌
1861 க்கு முந்தைய‌ ர‌சிய‌ நாட்டுப்புற‌ங்க‌ளைப் ப‌ற்றியும் அம்ம‌னித‌ர்க‌ளின் ம‌ன‌ப்போக்கு ப‌ற்றியும் அவ‌ர‌து வ‌ர்ண‌ணை தான் ர‌சியாவை அறிந்து கொள்ள‌ உத‌விய‌து. இன்னும் ப‌ல‌ எழுத்தாள‌ர்க‌ளைச் சொல்ல‌லாம். இத‌ற்கும் பார‌திக்கும் ஏதாவ‌து தொட‌ர்பு உள்ள‌தா ...

இந்திய‌ சுதேசிய‌மா அல்ல‌து த‌மிழ் சுதேசிய‌மா... ஏகாதிப‌த்திய‌ எதிர்ப்புண‌ர்வு க்கு ஏதாவ‌து உதார‌ண‌ம் தாருங்க‌ள்...இதெல்லாம் பார‌திக்கு...க‌ட்ட‌பொம்ம‌னும் திப்புவும் ஏகாதிப‌த்திய‌ம் தோன்றிய‌ பிற‌கு போராடினால்தான் ஏற்க‌ வேண்டும் என்றோ அத‌ற்கு முன் உள்ள‌ பெருமுத‌லாளிக‌ளை எதிர்த்த‌ போதும் அத‌னை க‌ண‌க்கில் எடுக்க‌ கூடாது என்ப‌து அறிவுடைமையா... நில‌பிர‌புத்துவ‌ சுர‌ண்ட‌லை எல்லாப் பாளைய‌ங்க‌ளும் செய்த‌ன• ஆனால் இதில் ம‌க்க‌ள‌து ந‌ல‌னை க‌ருத்தில் கொண்ட‌ மாம‌ன்ன‌ர்க‌ளை வ‌ர‌லாறு முழுவ‌தும் நீங்க‌ள் காண‌முடியும். அவ‌ர்க‌ள் விதிவில‌க்கு... த‌ன்னால் ப‌ண‌ம் த‌ர‌ முடியாத‌ போது த‌ன‌து ம‌க்க‌ளை இள‌வ‌ர‌ச‌ன் என்று கூட‌ப் பாராம‌ல் ப‌ண‌ய‌க் கைதியாக‌ அனுப்பிய‌ திப்புவை வெறுமென‌ நில‌பிர‌புத்து சுர‌ண்ட‌ல்கார‌ன் என்பதும், மூவாயிர‌ம் ப‌ண‌ம் த‌ர‌முடியாத‌ வ‌ற‌ட்சியால் ம‌க்க‌ளைப் பிழிந்து வ‌ரி வ‌சூலிக்காம‌ல் ஜாக்ச‌னிட‌ம் அவ‌காச‌ம் கேட்க‌ப் போய் அத‌னைப் போர் வ‌ரைக்கும் இட்டுச் சென்ற‌ க‌ட்ட‌பொம்ம‌னைப் ப‌ழிப்ப‌தும், அந்த‌க்க‌ட்ட‌பொம்ம‌னை சுப்புலாபுர‌ம் என்ற‌ ஒரு கிராம‌ம் கிடைக்கும் என்ற‌ ந‌ப்பாசையில் காட்டிக் கொடுத்த‌ எட்ட‌ப்ப‌னிட‌ம் சீட்டுக்க‌வி அனுப்பி த‌ன‌து பாட‌ல்க‌ள் எதிலும் க‌ட்ட‌பொம்ம‌னைப் பாடாம‌ல் இத்தாலி விடுத‌லை ப‌ற்றியெல்லாம் பாட‌த்தெரிந்த‌ செல்க்டிவ் அம‌னீசியா புக‌ழ் பார‌தியைப் போற்றுவ‌தும், க‌ரிச‌ல்காட்டின் திண்ணைப் பேச்சின் பெருமித‌ம் போல‌த்தானே இருக்கிற‌து... இதைமீறி தொமுசி ம் கைலாச‌ப‌தி சிவ‌த்த‌ம்பியும் மார்க்சிய‌ முறையில் ஆய்வு செய்து இருப்ப‌தாக‌ க‌ருதுவ‌து உங்க‌ள‌து உரினம‌ ஆனால் உண்மை கிடையாது

எந்த‌ என‌து கேள்விக்கும் நீங்க‌ள் ப‌தில் சொல்ல‌வில்லை. மாறாக‌ ப‌ல‌ கேள்விக‌ளை நீங்க‌ள் புரிந்து கொள்ள‌வும் இல்லை... உம் ந‌ந்த‌ன் ப‌ற்றிய‌ கேள்வி... மாறாக‌ பார‌தி ப‌ற்றிய‌ விவாத‌ம் உங்க‌ள‌து ம‌ன‌தில் இருந்த‌ பார‌தி ப‌ற்றிய‌ பிம்ப‌த்தை கேள்வி கேட்கும் என்ப‌தால், விவாத‌த்தை திசைதிருப்ப‌ வேறு கேள்வி கேட்டுள்ளீர்க‌ள். அத‌னை த‌னிப்ப‌திவாக‌ பேச‌லாம்... அத‌ற்கு முன் மீண்டும் ஒருமுறை பார‌தி ப‌ற்றிய‌ என‌து கேள்விக‌ளுக்கு லாஜிக் உட‌ன் ப‌தில் சொல்லுங்க‌ள். இடையில் நீங்க‌ள் கேட்ட‌ கேள்வி என்ன‌ என‌ டைப் செய்ய‌வும்




ராணித்தேனீ
2009-06-03 08:13:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

அய்யா மணி அய்யா... என்னய்யா ஆச்சு உங்களுக்கு? எந்தக் கேள்வியையுமே நேரடியா சந்திக்க மாட்டீங்களா? ஏதோ கொஞ்ச நாளைக்கு முன்னால இதே பக்கத்தில “தர்க்கரீதியாக வரலாற்று ஆதாரங்களுடன் விவாதிக்க முடியுமானால் பாரதியின் பக்தர்கள் தமது அறிவைச் சுரண்டிப்பார்ப்பதற்கு முன் அறிவு நாணயத்தை உரசியாவது பாருங்கள்” என்று வீரவசனம் பேசினீர்களே அய்யா. இன்று என்ன ஆச்சு உங்களுக்கு? உங்க பதில்களில் தர்க்கமும் இல்ல, வரலாற்று ஆதாரங்களும் இல்ல. உங்க அறிவு நாணயத்த உரசிப் பாத்ததாகவும் தெரியலியே...

“பாரதி எழுதாத ஒன்றை, அவர் எழுதியிருந்தால் இப்படித்தான் எழுதி இருப்பார் என்று நீங்களாகவே கற்பனை செய்து கொண்டு அதன் அடிப்படையில் விமர்சிப்பது தவறு” என்று சிவக்குமார் சொன்னால் அதற்கு ஒருபதிலும் சொல்லாமல் //எட்டப்ப மகராஜாவின் வம்சமணி தீபிகை ஒரு கவிதை வடிவ நூல்ல்ல ... முதலில் அதனைப் படியுங்கள்... // என்று அவருக்கு அறிவுரை சொல்கிறீர்கள். ஆனால் இது தர்க்க ரீதியான பதில் இல்லையே அய்யா. பாரதி எழுதாத ஒன்றை, அவர் எழுதியிருந்தால் இப்படித்தான் எழுதி இருப்பார் என்று கைபோதடிகலா விமர்சிப்பது சரியா என்று உங்க அறிவு நாணயத்த உரசிப் பாத்து நேரடியா பதில் சொன்னா நல்லா இருக்கும்.

ஆனா சிவக்குமார் உங்க கேள்வி ஒவ்வொன்னுக்கும் தனித்தனியாக பதில் அளித்தது மாதிரி நீங்களும் சிவக்குமாரோட கேள்வி ஒவ்வொன்னுக்கும் தனித்தனியா பதில் சொன்னா நல்லது. எல்லாத்தையும் சேத்து மொத்தமா அமுக்குற ரோடு ரோலர் அணுகுமுறைக்கும் நீங்கள் சொல்லும் அறிவு நாணயத்திற்கும் சம்மந்தம் இருக்குறதா தெரியலியே.

ராணித்தேனீ.

p kannan
2009-06-04 05:06:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

வணக்கம் நீங்கள் செய்யும் விவாதம் பாரதி சமூகத்திற்கு தனது உடல் பொருள் ஆவி அனைத்தையும் அற்பநித்தார இல்லையா என்பதே ஆகும் . பாரதி இந்தியாவில் மட்டும் அல்ல உலக நாடுகள் முழுவதும் புகழ் பெற்ற கவிஞர், குறிப்பாக ருசிய மொழியில் பாரதியின் அனைத்து படைப்புகளையும் ரசிய மொழியில் மொழி ஆக்கம் செய்யுது உள்ளனர். சிலர் மாணவர்களிடம் கல்வி முதலாளிகள் தான் உங்கள் எதிரிகள் என்றும் , தொழிலாளர்களிடம் முதலாளிகள் தான் உங்கள் எதிரி என்றும் , வழக்கறின்கற்களிடம் போலீஸ தான் உங்கள் எதிரி என்றும் , பல பொய்களையும் சொல்லி ஏமாற்றி பல நிறுவனகளிடம் கலைக்குழு என்று பணம் வங்கி கொண்டு மிக திறமையாக குட்டி கருணாநிதி யாக உலா வருகின்றனர் அவர்களை போன்றவர்களை நீங்கள் இருவருமே சேர்ந்து அம்பல படுத்த வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்

mani
2009-06-05 01:58:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

வ‌ணக்கம் ராணித்தேனி

நான் கேள்விகளுக்கு பதில் சொல்லவே விரும்புகிறேன். பாரதி பற்றிய கேள்விகளை தொகுத்து எழுதினால் பதில் அளிக்க தயாராக உள்ளேன். அதுதான் மேற்கொண்டு படிக்கிற, விவாதிக்கின்றவர்களுக்கு உதவியாக இருக்கும். மனதில் கேள்வி இருப்பவர்கள் இதற்காக மெனக்கென மாட்டார்களா என்ன•..

நிற்க•.எட்டப்ப மகராஜனிடம் கடிதம் எழுதிய பாரதி, தான் இப்போதெல்லாம் பிரிட்டிஷாரை எதிர்த்து எழுவதுவதில்லை என்றும், தனது பாடல்களை சர்க்கார் பாடப்புத்தகமாக வைத்திருப்பதாகவும், எனவே தனக்கு எட்டப்பனது வம்சமணி தீபிகை என்ற ஏற்கெனவே எழுதப்பட்ட நூலின் ஐ செம்மைப்படுத்தி தற்காலத் தமிழில் எழுத வாய்ப்புத்தரும்படி எழுதுகிறான் கடிதம். இக்கடிதம் கடந்த 2007 ஆம் ஆண்டு தி ஹிந்து பத்திரிக்கையில் கூட வெளிவந்த்து.

நன்றாக கவனியுங்கள்... ஏற்கெனவே எழுதப்பட்டது. உங்களை ஏன் படிக்கச் சொன்னேன் என்றால் அந்த நூலின் கதாநாயகன் சாட்சாத் எட்டப்பன்தான். வில்லன் கட்டபொம்மன்.. இதனை மாத்திரம் மொழி ரீதியாக செம்மைப் படுத்த வேண்டிய வேலை... இந்த வேலையை பெறுவதற்கு பாரதி போடும் கூழைக்கும்பிடு மற்றும் அந்நிய ஆட்சிக்கு எதிரானவன் அல்ல என்ற விளக்கம்... இதற்கெல்லாம் தயாராக இருந்தவன்தான் பாரதி என்பதே போதுமானது... அதாவது சம்பவம் நடக்கவில்லை... ஆனால் அந்த அயோக்கியத்தனத்திற்கு தயாராக இருந்தான் என்பதாலே அவன் குற்றவாளியா என்ன என்பதுதானே உங்களது விவாத்த்தின் உட்பொருள். மகா கவிகள் கூட இப்படி கூழைக் கும்பிடு போடுவார்கள், ஏகாதிபத்தியத்தை பாட்டில் எதிர்த்து விட்டு நடைமுறையில் சரண்டைவார்கள் என்பதும் அவர்தம் பாடல்களை கேட்பவர்கள் கேணத்தனமாக பொங்கி எழுவது வேண்டும் என்பதும் முரணாகத் தெரியவில்லையா...

அடுத்து கண்ணன்... பாரதி ரசிய மொழிக்கு போனது ஆச்சரியமில்லை... கொஞ்சம் விட்டிருந்தால் மொழிபெயர்க்க பொன நம்ம சிபிஐ தோழர்கள் கம்பராமாயணத்தை வரலாறு போலச் சொல்லி ராமனை தேசிய நாயகனாக்கி இருப்பார்கள் ரசிய மொழியில்... தொழிலாளர்களுக்கு எதிரி யார் எதனை அவர்கள் மறைக்கிறார்கள் அம்பலப்படுத்தப் போகிறீர்கள்... உண்மையில் மாணவர்களுக்கு எதிரி யார், வக்கீலுக்கு எதிரி யார், விவசாயிகளுக்கு எதிரி யார் என நீங்கள் இங்கே சொல்லுங்கள்... அவர்கள் எதனை மறைக்கிறார்கள் என அடுத்துப் பேசுவோம்... யாருக்கு யார் எதிரி என்பதை வரையறுப்பதைக் கூட குறை மட்டும் சொல்லும் தாங்கள் எதிரிகள் யார் எனச் சொல்லுங்கள் அதற்கு பிறகு குட்டி கருணாநிதி உங்களிடமிருந்து வெளிவந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல•..

Pin It