கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- ஏ.சண்முகானந்தம்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஐந்து வகை திணைகளை உருவாக்கி அதற்குரிய தாவரங்கள், தொழில்கள் என அந்த மண்ணுக்குரிய வேலைகளை செய்து வந்தனர். நாகரிகத்திலும், விவசாயத்திலும் உலகத்திற்கே முன்னோடியாக விளங்கினார்கள்.
சங்க இலக்கியங்களில், காட்டுயிர்கள் பற்றிய பல பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தாவரங்கள், காட்டுயிர்கள் பற்றிய புரிதலுடனும், ஒத்திகையுடனும் இருந்துள்ளார்கள் என்பது புலனாகிறது.
Elephant என்று யானையே இல்லாத நாட்டின் ஒரு மொழியில் இன்று படிக்கும் நாம்தான், அக்காலத்தில் மா, கரி, ஆச்சல், இபப், இம்மபு என 50 பெயர்களில் யானைகளை அழைத்திருக்கிறோம்.
நாராய்.. நாராய்.... செங்கால் நாராய்.. எனத் தொடங்கும் நாரை பற்றிய பாடலில், பறவையின் உடலமைப்பு, பழக்க வழக்கங்கள் எனக் கூர்மையாகப் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோல எண்ணற்ற உதாரணங்களை சங்க இலக்கியத்தில் சுட்டிக் காட்ட முடியும். காட்டுயிர்கள் மேல் புரிதலுடன் இணக்கமான உறவைப் பேணி வந்த தமிழர்களுக்கு இன்று என்ன நேர்ந்தது?காக்கை, குருவி தவிர்த்து மற்ற பறவைகளைப் பற்றியோ, விலங்குகள் பற்றியோ தெரியாமல் விழிப்புணர்வு அற்ற நிலையில் இருப்பது எதனால்?ஒரு நாட்டிற்கு 33 சதம் காடு வளம் இருக்க வேண்டும். ஆனால் தமிழகத்திலோ 17 சதத்திற்கு குறைவாகவே உள்ளது. அது போலவே நீர்ப்பற்றாக்குறை மிகுந்த மாநிலமாகவும் உள்ளது. காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு என தமிழகத்திற்கு உரிமையுள்ள நீராதாரங்கள் இருந்தும் அண்டை மாநிலங்களிடம் கையேந்தி நிற்கும் நிலையில் தமிழகம் உள்ளது.
தமிழகம் முழுக்க எண்ணிலடங்கா கோயில்களும், புதுப்புது சாமியார்களும் நிரம்பியுள்ள சூழலில், காட்டுயிர்கள் மேல் உள்ள மூட நம்பிக்கையை ஆய்வு செய்வதே இச்சிறு கட்டுரையின் நோக்கம்.
சாக்குருவி, ஆந்தையின் அலறல், ஆந்தையை கண்டால் அபசகுணம், அதிசயப் பறவை என பற்பல சொல்லாடல்களால் எதிர்மறையாய் அழைக்கப் பெறும் ஆந்தைகள் தான், வேளாண்மைக்கு தீங்கு செய்யும் எலிகளை உட்கொண்டு விவசாயிகளுக்கு நண்பனாக திகழ்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நாம் சாதாரணமாகக் காணும் ஆந்தைகள் கூகை என்ற வெண்ணாந்தை, புள்ளி ஆந்தை, கொம்பன் ஆந்தை என்ற மூன்று வகையாகும்.
அதிசயப் பறவை ஆஸ்திரேலிய பறவை என அடிக்கடி செய்தித்தாள்களில் இடம் பெறும் கூகை என்ற வெண்ணாந்தை உட்பட ஆந்தைகள் யாவும் இடம் பெயர்பவை அல்ல என்பதை பத்திரிகை காட்சி ஊடகங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இரவாடிகளான ஆந்தைகள் யாவும் ஓர் இரவில் சராசரியாக 8 எலிகளை வேட்டையாடி விவசாயிகளுக்கு நன்மை புரிகிறது. ஓணான் சிறு பாம்புகள், பல்லிகள் போன்றவற்றையும் பிடித்துண்ணுகின்றன.
தனக்கென ஓர் இடத்தை தேர்ந்தெடுத்து வாழும் இயல்பு கொண்ட ஆந்தைகள் மரப் பொந்துகள், பாழடைந்த கட்டடங்கள், பாறை இடுக்குகள் போன்ற பகுதிகளைத் தேர்ந்தெடுத்து நான்கு வரையிலான முட்டைகளை இட்டு இனப்பெருக்கம் செய்கின்றன.
அடுத்ததாக நகரத்தின் துப்புரவாளனாக விளங்கும் காக்கைகள் ஒற்றுமைக்கு உதாரணமாக பற்பல சொல்லாடல்கள் மூலம் கூறப்படுகின்றன. இவையாவும் உண்மையா? அறிவியல் என்ன சொல்கிறது பார்ப்போம்.
பொதுவாக விலங்குகள், பறவைகள் கூட்டமாக கூடுவது தனியே இருக்கும் போது உள்ள ஆபத்தின் அளவை குறைக்கத்தான். அதாவது சுயதைரியம் பெறத்தான் கரைவதும், கத்துவதும் என்கிறார் உயிரியல் அறிஞர் டபிள்யூ டி. ஹேமில்டன். அவரது இந்தக் கோட்பாடு சுயநலக் கூட்டம் அல்லது மந்தை என்று உலகின் அனைத்து உயிரியலாளர்களிடமும் பழக்கத்தில் உள்ளது.
காக்கைகள் தங்கள் நேரடி உறவினர்களிடம் மட்டுமே உணவை பகிர்ந்து கொண்டு, மற்றவற்றை விலக்கி விடும் என்று அவரது மற்றொரு கோட்பாடான மin ளநடநஉவiடிn என்ற விதிப்படி கூறுகிறார். இம்முறை எறும்பு, தேனீ, கரையான் போன்ற உயிரினங்களிடமும் பழக்கத்தில் உள்ளது.
காட்டுயிர்களில் பேருயிரான யானைகள் பற்றிய கீழ்க்கண்ட சொல்லாடல் நீண்ட காலமாக நிலவி வருகிறது.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன். யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே. யானையின் செவிலில் புகுந்த எறும்பு. காடுகளின் வளமைக்கு குறியீடாக விளங்கும் யானைகள் அதன் உணவுத் தேவையான 300 கிலோ, பசுந் தாவரங்களுக்காக ஓரிடத்தில் தங்காமல் தனக்கென வழித்தடத்தை ஏற்படுத்தி காடுகள் முழுமைக்கும் சுற்றியலைந்து பலதரப்பட்ட தாவரங்களின் விதைகளை வீரிய மிக்க விதைகளாக பரப்பி வருவதுடன் பல பறவை இனங்களுக்கும், விலங்குகளுக்கும் மறைமுக உதவி புரிகிறது.
அந்த வகையில் முதல் சொல்லாடலின், முதல் வாக்கியத்தின் அர்த்தமாக மேற்குறிப்பிட்டவற்றை கொள்ளலாம். யானைகள் இறந்தபின் அவற்றின் தந்தங்கள் கலைப் பொருட்கள் செய்யப் பயன்படுவதால் இரண்டாவது வரி சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், கடந்த நூறு ஆண்டுகளில் தந்தங்களுக்காகவே பெரும்பாலான யானைகள் கொல்லப்பட்டு இன்று சில ஆயிரங்களாக குறைக்கப்பட்டுள்ளது இந்தியாவில்.
இரண்டாவது சொல்லாடல் வளர்ப்பு யானைகள் குறித்து சொல்லப்படும் வார்த்தை. காடுகளின் செழுமைக்கும் சுற்றுச் சூழலுக்கும் முக்கிய பங்களிக்கும் பேருயிர்களை யானைகளை சிறு கூடாரங்களில் அடைத்து பட்டையும், நாமமும் போடுவதில் என்ன சுகம் கண்டதோ மனித சமூகம்! சாலைகளில் பிச்சை எடுப்பதற்கும், பக்தியின் சின்னமாக வணங்குவதற்காகவும் யானைகள் படும் வேதனைகள் சொல்லி மாளாது.
இன்றைய பள்ளி மாணவர்கள், பெரியவர்களிடம் காட்டின் ராஜா யார்? என்று கேட்டால் சட்டென சிங்கம் என்று ஒருமித்த பதில் வரும்.
உண்மையாகவே காட்டின் இராஜாவாக சிங்கம் இருக்குமா? இல்லை என்பதுதான் அறிவியலாளர்களின் பதில். பெண் சிங்கங்கள் வேட்டையாடியதை பகிர்ந்து உண்ணும் இயல்பு கொண்ட ஆண் சிங்கங்கள் காட்டின் ஓர் அங்கமே. அதனதன் இயல்பிலேயே அனைத்து காட்டுயிர்களும் ஒழுங்குற வாழ்கின்றன.
தனித்தே சுற்றியலைந்து வேட்டையாடி உண்ணும் புலிகளைக் காட்டின் இராஜாவாகக் கூறலாம். அதனுடைய மஞ்சள் நிற உடம்பில் கருப்பு பட்டைகளும், கம்பீரமான உடலமைப்பும் ஆண்டொன்றுக்கு 50 முதல் 60 வரையிலான இரை விலங்குகளை உண்ணும் புலிகள் உணவு சங்கிலியின் உச்சத்தில் உள்ளன. புலிகளின் அழிவு காடுகளின் அழிவுக்கு காரணமாகும் எனலாம்.
ஒரு காட்டில் புலிகளின் எண்ணிக்கை குறைந்தால் இரை விலங்குகளான மான், காட்டு மாடுகள் எண்ணிக்கை அதிகரித்து மேய்ச்சல் பரப்பு குறைந்து காடுகளின் வளம் சீர்குலையும். புலிகளை சார்ந்து வாழும் கொரி விலங்குகளும், பறவைகளும் அழியும்.
அடுத்ததாக ஏமாற்றும் ஒருவரை குள்ளநரித்தனம் பண்ணுகிறான் என்று மனித சமுதாயத்தின் பொது புத்தியை நரிகளின் மேல் சொல்வது நமது அறியாமையை காட்டுகிறது.
புலி, சிங்கம், சிறுத்தை போன்ற இரை கொல்லி விலங்குகள் உண்ட உணவுகள் மிச்சத்தை உண்டதுடன், தானே வேட்டையாடி உண்ணும் இயல்பு கொண்ட குள்ள நரிகள். மனிதரை கண்டால் ஒதுங்கிச் செல்லும் குணமுடையது. இந்திய அளவில் அழியும் காட்டுயிர்களின் பட்டியலில் நரிகள் உள்ளன.
இந்தியாவில் 214 வகைகளாக காணப்படும் பாம்புகளில், 4 வகை பாம்புகள் மட்டுமே விஷத்தன்மை வாய்ந்தன. ஆனால், நமது சமூகத்தில் பாம்புகள் என்றால், அச்சத்தின் குறியீடாகவும், பற்பல சொல்லாடல்களும், மூட நம்பிக்கைகளும் ஆழமாக பதிந்துள்ளன. இதன் காரணமாகவே ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பாம்புகள் அடித்துக் கொள்ளப்படுகின்றன.
பாம்புக் கடிக்கு ஆளானோரில் 70 சதம் பேர்கள் பயத்தின் காரணமாகவும், உரிய சிகிச்சை இன்றியுமே உயிரிழக்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு.
வேளாண்மைக்கு உற்ற தோழனாக விளங்கும் பாம்புகள், எலிகள், ஓணான், பல்லி, மீன்கள் போன்றவற்றை உணவாகக் கொள்கிறது.
பாம்பு நடனம், பாம்பு பழிவாங்கும் பண்பு கொண்டது, பால், முட்டை குடிக்கும் போன்ற பற்பல மூட நம்பிக்கைகள் பாம்புகள் பற்றி உள்ளன. இவையாவும் அறவே ஒழிக்கப்பட வேண்டியவை. மனிதர்களுக்கு எவ்விதத்திலும் தீங்கிழைக்காத உயிரினம் பாம்புகள். பாம்புகள் யாவும் அழியும் நிலையில் உள்ளது.
அடுத்ததாக பன்றிகளை பற்றிய சொல்லாடல் புகழ் பெற்றது. பன்றி மாதிரி சேற்றில் புரளாதே? இந்த வாக்கியத்தில் உள்ள பன்றி என்ற காட்டுயிர் சேற்றில் மட்டுமே வாழும் என்ற மன நிலையை மக்கள் மனதில் நிறுத்தி வைத்துள்ளனர். பன்றிதான் இருக்கும் இடத்தை தூய்மையாகவும், மலம் கழிக்க ஓரிடத்தை மட்டுமே தொடர்ந்து பயன்படுத்தும் என்கிறது ஆய்வு. ஆறு, ஏரி, குளங்களை சேறுகளாகவும், குட்டைகளாகவும் வைத்திருப்பது மனிதர்களாகிய நாம்தான். நீர்நிலைகள் பறிபோவதில் அரசியல் பின்னணி இருக்க நமது தவறுகளுக்கு காட்டுயிர்கள் மேல் பழிசுமத்துவது நமது விழிப்புணர்வு அற்ற தன்மையே.
ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்ற சொல்லாடல் நீண்ட காலமாகவே பழக்கத்தில் உள்ளது. கடன்பட்ட மனிதரின் நிலங்கள் பறிமுதல் செய்வதில் தொடர்பு படுத்தி வரும் இந்த வாக்கியத்தில் நீர்நில வாழ்வியான ஆமை ஏன் வந்தது என்பதை சிந்திக்க வேண்டும்.
நீர் நிலைகளை சுத்தப்படுத்தும் பணிகளை பல வகை மீன்களோடு ஆமைகளும் செய்கின்றன. நன்னீர் ஆதாரத்திற்கு ஆமைகள் வாழ்வதும் ஓர் குறியீடு.
ஆமைகள் இறைச்சிக்காக அதிகளவில் கொல்லப்படுகின்றன. மேலை நாடுகளில் ஆமைகளை பாதுகாப்பது, வளர்ப்பது என்பது அறிவியல் பூர்வமாக அணுகும் போக்கு துவங்கி நீண்ட காலமாகி விட்டது.
அறிவியல்பூர்வமற்ற இவ்வாக்கியங்களை பயன்படுத்துவதை வரும் தலைமுறைக்கு பரவாமல் தடுத்திட வேண்டும்.
தமிழகத்தில் கோடை கால முடிவில் ஜூன், ஜூலை மாதங்களில் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் சுற்றுப்புற மக்கள் மழை வர பல்வேறு வடிவங்களில் வேண்டுவது பத்திரிகை செய்திகளாக வருகின்றன. உதாரணத்திற்கு பத்திரிகை அடித்து ஒரு லட்சம் ரூபாய் செலவில் 1000 கிராம மக்கள் முன்னிலையில் ஆலமரத்திற்கும் அரச மரத்திற்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. கழுதைகளுக்கு திருமணம் நடத்திவைக்கப்பட்டது. மக்கள் திரண்டு வந்திருந்து தவளைகளுக்கு திருமணம் நடத்தி வைத்தனர். ஆற்றில் நடுப்பகுதியில் பள்ளம் தோண்டி இரவு நேரத்தில் பெண்கள் மட்டும் மழை வேண்டி பிரார்த்தித்தனர். என பலப்பல செய்திகள் ஊடகங்களில் வருகின்றன. மழை வராமல் இருக்க, மரங்கள் தொடர்ந்து வெட்டப்படுதல், காடுகள் அழிப்பு, நீர் நிலைகள் வீட்டுமனைகளாகவும், கழிவு நீர் குட்டைகளாகவும், மருத்துவக் கழிவுகளாகவும் மாறுவதற்கு அதிகார வர்க்கமும், பலமான அரசியல் பின்னணி இருக்கும் சூழலில், விழிப்புணர்வு படிப்பறிவற்ற மக்கள் கூட்டம் மீண்டும் மீண்டும் மூடநம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் பின்பற்றுவது கடும் பின்விளைவுகளையே ஏற்படுத்தும்.
அலங்கு நங்கில் என்ற தமிழ்ப் பெயர்களை மறந்து யவே நயவநச என்றும் னடிடbin என்றும் மனப்பாடம் செய்து கொண்டிருக்கிறார்கள் நமது மாணவர்கள்.
பள்ளி, கல்லூரிகளில் சுற்றுச்சூழல், காட்டுயிர்கள் பற்றிய பாடங்களை தாய்மொழிக் கல்வியில் கற்பிக்கும் போது மட்டுமே வருங்கால தலைமுறைக்கு நாம் அனுபவித்த இயற்கைச் சூழலை அதன் அழகு குறையாமல் கொடுக்க இயலும்.
மனிதனின் பொதுப் புத்தியில் பதிந்துள்ள கடவுள் பற்றிய மாயைகளையும் அச்சத்தையும் உடைத்தெறிந்தால் மட்டுமே, காட்டுயிர்கள் மேல் நெருக்கத்தை ஏற்படுத்த இயலும் என்பது மறுக்க இயலா உண்மையாகும்.
(இளைஞர் முழக்கம் ஆகஸ்ட் 2011 இதழில் வெளியானது)
- விவரங்கள்
- பா.சதீஸ் முத்து கோபால்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
Great Indian Bustard:
இறக்கைகள் இருந்தும் அதிக எடை காரணமாக பறக்க முடியாத பறவைகள் உண்டு. பறக்கும் தன்மை கொண்ட பறவைகளிலேயே அதிக எடை கொண்ட பறவை இந்த கானமயில். வறண்ட புல் வெளி பகுதிகளில் வாழ்கின்றன. பொதுவாக ஒரே ஒரு முட்டை மட்டுமே இடுகிறது.
அதுவும் தரையில் இடுவதால் ஆபத்தும் அதிகம். இதியா மற்றும் பாகிஸ்தானில் இவை அதிகம் காணப்பட்டன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் காணப்பட்ட இந்த கானமயில் இப்போதும் மிக மிக அருகிவிட்டது. தமிழ் நாட்டிலும் இவை காணப்பட்டதுண்டு. வெளி மான்கள் வாழும் நிலப்பரப்பு இவற்றிற்கு ஏற்றதாக இருப்பதால் அங்கு இவை காணப்படுகின்றன.
அதிக அளவில் இந்த வேட்டயாடப்பட்டதன் விளைவு இன்று இந்த பறவைகளின் எண்ணிக்கை வெறும் 250 என்ற அளவில் குறைந்து விட்டது. மேலும் வருடத்திற்கு ஒரு முட்டை மட்டுமே இடுவதால் இவற்றை காப்பாற்றுவது கடினமாக இருக்கலாம்.
இந்தியாவில் மட்டுமே பார்க்கக்கூடிய எத்தனையோ அரிய உயிரினங்கள் இன்று அழியும் தருவாயில் உள்ளன. இந்த கானமயில்களை பாதுகாக்க சிறப்பு கவனம் எடுத்து அரசு இந்த பறவையை காப்பாற்றவேண்டும்.
- விவரங்கள்
- பா.சதீஸ் முத்து கோபால்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் அவ்வப்போது நடக்கும் முரண்பாடுகளால், பலமுறை யானைகள், காட்டெருமைகள், மான்கள், காட்டுப் பன்றிகள் என ஏராளமான உயிரினங்கள் மடிந்துள்ளன. பல சமயங்களில் தங்கள் மாடுகளை கொன்று விடுவதாக கூறி புலிகளுக்கும் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்ததுண்டு. தற்போது, அந்த பட்டியலில் மயிலும் சேர்ந்துள்ளது. பெருந்துறையில் இருபது மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளன.
விளை நிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி விடுவதாக கூறி தற்போது விவசாயிகள் போராட்டத்திலும் இறங்கி உள்ளனர். மயில்கள் பயிர்களை நாசம் செய்வதாக சொல்பவர்கள் சில விஷயங்களை மறந்து விடுகின்றனர். வேளான் நிலங்களில் பாம்புகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருப்பது மயில்கள். பயிர்களை தாக்கும் பல பூச்சி இனங்களை உண்டு அவற்றின் பெருக்கத்தையும் கட்டுக்குள் வைத்திருப்பது மயில்கள் தான்.
விவசாயிகளுக்கு ஒரு வகையில் மயில்கள் நன்மையே உண்டாக்குகின்றன. மயில்கள் நம் தேசத்தின் பொக்கிஷம். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு இல்லாத பெருமை மயில்களால் இந்தியாவிற்கு உண்டு. இவை விஷம் வைத்துக் கொல்லப்படுவதை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கான தீர்வாக மயில்களுக்கு என்று புதிய சரணாலயங்கள் அமைக்கப்பட வேண்டும்.
வேளான் நிலங்களுக்கு இடையே பயிர் செய்ய முடியாமல் வெறும் குன்றுகளாக, சிறிய மலைகளாக இருக்கும் பயன்படாத இடங்களை மயில்களுக்கான இடமாக மாற்ற வேண்டும். அவற்றின் உணவிற்கான தேவையும் அந்த இடங்களில் உறுதி செய்யப்பட வேண்டும். மயில்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். மயில்களால் பயிர்கள் சேதம் அடைந்தால் அதற்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அப்போது மயில்களை கொல்ல வேண்டும் என்ற அவசியம் ஏற்படாது.
- விவரங்கள்
- பேரா.சோ.மோகனா
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
இந்தியாவில், மரத்தில் விளையும் முக்கியமான நறுமணப் பொருள்களில் ஒன்று இலவங்கப்பட்டை என்னும் பட்டை. சின்னமோமம் வேறம் (Cinnamomum verum) என்ற பட்டை மரம், வெப்ப மண்டல பசுமை மாறா மரமாகும். இது 10 -15 மீட்டர் உயரம்வரை வளரும். இது லாரேசியா என்ற தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. சின்னமோமம் வேறம்(Cinnamomum verum) மற்றும் சின்னமோமம் சைலானிகம் (cinnamomum zeylanicum) என்ற முக்கியமான இரு வகைகளும் இலங்கை, இந்தியா, ஜாவா, சுமத்திரா, போர்னியோ, மடகாஸ்கர், வியட்நாம், பிரேசில் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் பயிரிடப்படுகிறது. உலகம் முழுவதும் சுமார் 250 வகை இலவங்க மரங்கள் காணப்படுகின்றன. இதில் மிக உயர்ந்த தரம் இலங்கையின் இலவங்கமே..! சீன பட்டை கொஞ்சம் தரம் தாழ்ந்தது, தடிமனானது. இலவங்கப் பட்டை மரம் ரொம்ப சுகவாசி. இதற்கு ரொம்ப வெப்பமோ அதிக குளிரோ ஆகவே ஆகாது. மிதமான வெப்பம், ஈரப் பதமான சீதோஷ்ணநிலை பட்டை மரம் வளமாக வளர அவசியம் தேவை.
அறுவடை செய்யப்படாத நிலையில் இலவங்கமரத்தின் அடிமரம் 30 -60 செ.மீ அகலத்தில் இருக்கும்; மேல் பட்டை கனமாக சாம்பல் படர்ந்த நிறத்தில் இருக்கும்; கிளைகள் தாழவே தொங்கும். இலைகள் எதிரெதிரே காணப்படும். இலையின் துளிர் சிவந்த வண்ணத்தில் துளிர்க்கும். இலவங்கத்தின் மலர்களும் பச்சையாகவே இருக்கும். ஆனால் அற்புத மணத்தைக் கொண்டிருக்கும். பழம் கருப்பாக, 1.5 -2 செ.மீ நீளத்தில், நீள்வட்டமாக அமைந்திருக்கும். இலவங்கப் பட்டை இலவங்க மரத்தின் உள்பகுதி பட்டையிலிருந்தே பெறப்படுகிறது. நன்கு முதிர்ந்த மரத்தின் பட்டையை உரித்து வெயிலில் உலர வைப்பார்கள். பட்டை மெலிதாக சூரிய வெப்பத்தில் காயும்போதே சுருள் சுருளாக மெல்லிய குழல் போல சுருண்டுவிடும். இதனை 5 -10 செ.மீ நீளமுள்ள சின்ன சின்ன துண்டுகளாக வெட்டிவிடுவார்கள். இதுவே இலவங்கப் பட்டை/குச்சி எனப்படும். இதுவே விற்பனைக்கு வரும் லவங்கப் பட்டை..!
பட்டையை மென்பானங்களிலும், மருந்துப் பொருளிலும், அழகு சாதனப் பொருள்களிலும், ஏன் கழிப்பறைப் பொருள்களிலும் இதன் வாசனைக்காவே கலக்கின்றனர். உணவுப் பொருளில், மசாலாவின் நாயகன் இலவங்கப் பட்டைதான். குஜராத் மற்றும் வட மாநிலங்களில் காதி (Khadi) எனப்படும் தயிர் பானத்தில் பட்டையைக் கலப்பது மிகவும் பிரசித்தம். இலவங்கத்தை தேநீரிலும் கலப்பது உண்டு.
பட்டை உணவுப் பொருள்களை, பதப்படுத்தும் குணம் கொண்டது. பட்டையிலுள்ள பினால் (Phenol) என்னும் வேதிப்பொருள் உணவின் மீது பாக்டீரியா வளர்ந்து பொருள் கெட்டுப் போவதைத் தடுக்கிறது. அதனால் இதனை முக்கியமாக மாமிசத்தைப் பதப்படுத்த பயன்படுத்துகின்றனர். மேலும் பட்டை, உணவுக்கு ரம்மியமான மணத்தையும் கொடுக்கின்றது. பட்டை பரவலாக, நறுமணத்திற்காக சின்ன துண்டுகளாக/ பொடியாகவே கலக்கப்படுகிறது. இனிப்பின் சுவையை அதிகரித்துக் காண்பிக்க, இலவங்கப்பட்டை, இனிப்பில் கலக்கப்படுகிறது. மதுவிலும், மருந்திலும், சோப் மற்றும் பல்லுக்குத் தயாரிக்கும் பசை மற்றும் மருந்து, தைலம் போன்றவற்றிலும் இலவங்கம் கலக்கப்படுகிறது. இது மிட்டாய், சூயிங்கம் மற்றும் உடலுக்குத் தெளிக்கும் வாசனை திரவியங்களிலும் சேர்க்கப்படுகிறது. அது மட்டுமல்ல, கேக், ரொட்டி, பிஸ்கட், சாக்லேட் போன்ற பொருள்களிலும் பட்டை மணம் மற்றும் சுவைக்காக கலக்கப்படுகிறது.
- பேரா.சோ.மோகனா (
- மாயமாகும் மயில்களின் உலகம்
- வாரணம் ஆயிரம்; வழி செய்வோம்
- இயற்கை கொடுத்த வரம்
- கடல் எனும் விந்தை
- வாழ வழி விடுவோம் விலங்குகளுக்கும்
- பறவைகள் பற்களின்றி எப்படி உண்கின்றன?
- சிறுத்தை புலிகள் - சிக்கல் அவிழ்கிறது
- சிறுத்தையும் நாமும் - யாருக்கு யார் எதிரி?
- வாழ்வை இழக்கும் வெளவால்கள்
- காண்டாமிருகங்களின் தாயகங்கள்
- தேனீக்கள் வளர்ப்பில், தேன் உற்பத்தியில்... மர்மங்கள்
- முதலைக் கண்ணீர்
- கங்கை முதலைகள்
- இயற்கை வேளாண்மை - தேனீக்கள் வளர்ப்போம்
- புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..?
- வேங்கை வர்ணங்கள்
- நம்முடன் வாழும் யானைகள்
- இந்தியாவில் மீண்டும் சிறுத்தைகள்
- பறவைகளுக்கும் பொருந்துமா காதலர் தினம்?
- புலிகள் பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும்?