பாரதி நினைவு தினத்தில் 1000 மையங்களில் களப்போராட்டம்
ஆர்.வேல்முருகன்
"புறையறுக்கும் இங்கு தீயர்
புலையருக்கும் விடுதலை
மறவருக்கும் குறவருக்கும் விடுதலை"
என்றான் மாகவி பாரதி கடை கோடியில் மலை முகடுகளில் வாழும் மலைவாழ் மக்களுக்கும், ஊரில் ஒதுக்குப்புறமாய் உள்ள சேரியில் வாழும் மக்களுக்கும் என்றைக்கு விடுதலை கிடைக்கிறதோ அன்றுதான் முழுமையான விடுதலை என்றான் மாகவி பாரதி.
அவன் மண்ணில் இருந்து மறைந்து 88 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. நாடு விடுதலை அடைந்து 61 ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனால் விடுதலைப் போராளிகளின் கனவு கனவாகவே இருக்கலாமா?
கஞ்சி குடிக்க வழியுமிலார் காரணம்
இஃது என்ற அறிவுமிலார் என்றார் பாரதிதாசன்.
இன்னும் எவ்வளவு பொருத்தமாக உள்ளது.
9 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை இந்த நாடு அடைந்துவிட்டது. என்கிறார்கள். அதே நேரத்தில் வறுமையால் வாடக் கூடியவர்கள் 84 கோடி என்கிறார்கள். இதற்கு இந்த அரசுதான் காரணம் என்ற அறிவை தெளிவு படுத்தினால் எல்லாம் சரியாகிவிடும்.
DYFI is not Democratic Youth Federation Of India வாலிபர் சங்கம் ஒரு ஜனநாயக சங்கம் அல்ல இது ஒரு அபாயகரமான சங்கம் என்ற திரு வாஜ்பாய் அவர்கள் வாய்திறந்தார். இதற்கு என்ன காரணம், வாலிபர் சங்கம் சாதிய கலவரத்திற்கு எதிராக, மதவாதத்திற்கு எதிராக, மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக, வேலையின்மைக்கு எதிராக., கல்வியின்மைக்கு எதிராக, அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க என போராடங்களை நடத்துவதால் வாஜ்பாய் அவர்கள் கோபப்பட்டார்கள். வாலிபர் சங்கத்தின் அடையாளம் போராட்டங்கள், வடுக்கள், தியாகங்கள் இது தான். இத்தகைய அடையாளத்தை நாம் இழக்கலாமா?
பஞ்சாபை கூறு போட காலிஸ்தான் தீவிரவாதிகள் முயன்ற போது குர்ளாம் சிங் உப்பலும், ஷோகன் சிங் தேசியம், தங்களின் உயிரை கொடுத்து பஞ்சாபின் ஒற்றுமையைக் காத்தனரே.
1991ல் ஈராக் மீது கொலை வெறியோடு அமெரிக்கா தாக்க முயன்ற போது சகோதர அமைப்புகளோடு இணைந்து பல்லாயிரக்கணக்கான மக்களோடு அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடுகிறபோது நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும், மண்டை உடைந்து 21 தோழர்கள் சிறைச் சென்று உலக நாடுகளுக்கு முன்னுதாரனமாக திகழ்ந்தார்களே அது தான் DYFI.
90 களின் நடுப்பகுதியில் தென் மாவட்டங்களில் சாதிய கலவரம் கொழுந்து விட்டு எரிகின்ற போது ஆயிரக்கணக்கான வெள்ளை பேண்ட்டும், சண்டை அணிந்த இளைஞர்கள் வேண்டாம், வேண்டாம் சாதிச் சண்டை, வேண்டும் வேண்டும் கல்வியும், வேலையும் என்று அமைதி பிரச்சாரம் செய்தார்களே அது தான் DYFI.
தென் மாவட்டங்களில் நிலவும் வேலையின்மைதான் கலவரத்திற்கு காரணம் என்று உணர்ந்து சேது கால்வாய் திட்டத்தை அமலாக்கு, தொழில் வளர்ச்சி உருவாக்கு என அன்று முதல் இன்று வரை போராடுகிற அமைப்புதான் DYFI.
96 ல் ஆட்சி பொறுப்பேற்ற திமுக அரசு கள்ளச்சாரயம் காய்ச்சுபவர்களை அடையாளம் காட்டினால் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்றார் அன்றைய முதல்வர். கடலூர் மாவட்டம் புதுப்பாளையத்தில் கள்ளச்சாராயத்திற்கு எதிராக மக்களைத் திரட்டி போராடி தடுத்து நிறுத்திய போது, கோபடைந்த சமூக விரோதிகள் நமது அன்புத் தோழர் குமாரையும், ஆனந்தனையும் துடிக்க, துடிக்க வெட்டி சாய்த்தனரே, அந்த வழக்கே உச்ச நீதி மன்றத்திற்கு முறையிடுவதற்கு கூட இந்த அரசு தயாராகவில்லை.
கடலூர் மாவட்டத்தில் சின்னகாப்பன் குளத்தில் அம்மக்களுக்கு பல ஆண்டுக்காலமாக ஆட்சியாளர்கள் சாலை வசதிக்கு கூட செய்வதற்கு வக்கில்லாத போது, அக்கிராம மக்களை வீட்டிற்கு ஒருவர் சேர்ந்து நமக்கு நாமே ரோடு போடுவது என DYFI முடிவு எடுத்து சுமார் 5 லட்சம் செலவில் அம்மக்களுக்கு சாலை அமைத்து கொடுத்தது வாலிபர் சங்கம் தான்.
யானையின் பலம் யானைக்கு தெரியாது என்பார்கள் அப்படிதான் நமது போராட்ட வரலாற்றை திருப்பி பார்த்தால் பிரம்மிப்பாக இருக்கும். இப்படி ஏராளமான போராட்டங்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் 11 அன்று சுமார் 500 மையங்களில் லட்சத்திற்கு மேற்பட்ட மக்களை திரட்டி பல்வேறு கோரிக்கைகளை வென்று எடுத்தோம்.
நமது 12 வது மாநில மாநாட்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும்
1. மின் வெட்டை தடுத்து நிறுத்து
2. ரேஷன் கடைகளில் முறை கேடின்றி பொருட்களை வழங்கு
3. தேசிய கிராமப்புற வேலை சட்டத்தில் அரசு நிர்ணயித்த 80 ரூ. கூலியை வழங்கு என 1000 மையங்களில் லட்சோப லட்சக் கணக்கான மக்களை திரட்டி போராடுவோம்.
வெற்றி பெறுவோம்.
ஒலி படைத்த கண்ணினாய் வா...
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா...
வலிமை கொண்ட தோழனாய் வா... வா...
என்றார் மாகவி அப்படிப்பட்ட வலிமை படைத்தவர்களாய் உறுதி படைத்தவர்களாய், ஒளிபடைத்தவர்களாய் இம்மக்களின் வாழ்க்கைகளுக்கு செப் 11 அன்று பாரதி நினைவு தினத்தில் சங்கமிப்போம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|