Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
செப்டம்பர் 2008

ஒவ்வொரு நிமிடமும் ஒரு மரணம்
சமூக மருத்துவன்

ராஜம்மாளின் பரிசோதனை முடிவுகளை மருத்துவர் பார்த்துவிட்டு, மற்றவர்களுக்கு டி.பி யை பரப்பக்கூடிய அளவிற்கு தீவிரமான நோய் அவருக்கு உள்ளது என்றும், இதை குணப்படுத்த முடியுமென்றும், அதற்கு 6 மாதங்கள் தொடர்ந்து மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென்றும் கூறுகிறார்.

இந்தியாவில் டிபி நோயாளிகள் நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை வெளியிலுள்ள பலகையில் படித்தோம். முன்னேறும் நாடுகளில் இந்நிலையென்றால், முன்னேறிய நாடுகளில் டிபியின் பாதிப்பை பற்றி விளக்குமாறு முருகன் மருத்துவரிடம் கேட்கிறான். டி.பி யை குணப்படுத்துவதற்கு மருந்து கண்டுபிடிப்பதற்கு முன்னர் டி.பி நோயாளிகள் சானடோரியம் எனப்படும் தனியிடத்தில் அனுமதிக்கப்பட்டு தங்களுடைய கடைசி நாட்களை எண்ணிக் கொண்டே இறக்கக்கூடிய சூழல் இருந்தது. பின்னர் பல சோசலிச நாடுகளிலும் அதைத் தொடர்ந்து, சில மேற்கத்திய நாடுகளிலும் உருவான சமூகப் பொருளாதார மாற்றங்களால் அம்மக்களின் சுவாச குழாயிலிருந்தே டி.பி கிருமி தானாகவே அகன்றுவிட்டது. டி.பிக்கான மருந்தை பயன்படுத்துவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே, முன்னேறிய நாடுகளில் டி.பி யின் தாக்கம் குறைந்துவிட்டது. இதனால் முன்னேறிய நாடுகளில் டி.பி நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததோடு அதன் பாதிப்பும் வெகுவாக குறைந்துள்ளது. நம் நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கும் டி.பி மிகப்பெரும் தடையாக இருப்பது போன்ற சூழல் அங்கு இல்லை. ஒரு நாட்டின் சமூகப் பொருளாதார நிலையோடு டிபி நேரடியாக தொடர்புடையது என்பதையும், சமூக மாற்றமே டி.பி ஒழிப்பதற்கான வழி என்பதையும் மருத்துவர் விளக்குகிறார்.

என்னுடைய அம்மாவிற்கு இருமல் மற்றும் காய்ச்சல் வந்தபோது ஆரம்பத்தில் சாதாரண சளி என்றுதான் நினைத்துக்கொண்டு எங்கள் ஊரிலுள்ள டாக்டரிடம் காண்பித்தேன். பிறகு வேலுசாமியின் துணையோடுதான் இங்கு வரமுடிந்தது என்றும், சாதாரண சளியையும், டி.பி யையும் எவ்வாறு வித்தியாசப்படுத்தி கண்டுபிடிப்பது என்றும் விளக்குமாறு முருகன் மருத்துவரிடம் கேட்டான். நோய் கண்டவர்கள் இருமும்பொழுது தும்மும்பொழுது, பேசும்பொழுது வெளியேறும் நோய் கிருமிகள் காற்றுடன் கலந்து காற்று நுண் குமிழ்களை உருவாக்கும். நெருக்கடியான வீட்டுச் சூழல், மூன்று பேருந்தில் பயணம் செய்ய வேண்டியவர்கள் ஒரே பேருந்தில் அடைக்கப்பட்டு பயணம் செய்யும் சூழல், பள்ளி வகுப்பில் 40 மாணவர்கள் அமரவேண்டிய இடத்தில் 100 மாணவர்கள் அமரக்கூடிய சூழல், காற்றோட்டமில்லாத சினிமா அரங்க சூழல் போன்ற எண்ணற்ற ஆரோக்கியமில்லாத சூழலில் வாழும் இந்தியர்களுக்கு காற்றில் கலந்திருக்கும் நோய் கிருமிகளை உடைய காற்று நுண்குமிழ்கள் மூலம் எளிதில் நோய் பரவக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது. இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காற்றுமூலம் பரவும் நோய்களுக்கு பொதுவானதாக இருந்தாலும், ஒவ்வொரு வியாதியும் வெவ்வேறு கிருமிகளால் உருவாக்கப்படுகிறது.

சாதாரண சளி பொதுவாக வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. இது ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு காற்று மூலமும், பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் பொருட்களை பயன்படுத்துவதாலும் பரவுகிறது. கடுமையான காய்ச்சல், இருமல், தும்மல், உடல்வலி, ஆகிய அறிகுறிகளுடன் வரும் சாதாரண சளி ஒரு வாரத்தில் குணமாகிவிடும். காய்ச்சலுக்கான பாராசிட்டமால் மருந்து, போதிய அளவிற்கு ஓய்வு, நல்ல ஊட்டச்சத்துமிக்க உணவு, கூடுதலான நீர் ஆகியவைகளை எடுத்துக்கொண்டாலே சாதாரண சளி தானாகவே குணமாகிவிடும். இதற்கு விலை உயர்ந்த நோய் கொல்லி மருந்துகளோ மற்ற வைட்டமின் மாத்திரைகளோ, ஊசியோ தேவையில்லாதது சில சமயங்களில் வைரஸினாலோ, சில பாக்டீரியாவினாலோ சைனஸில் தொற்று ஏற்பட்டோ, கீழ் சுவாச குழாயில் தொற்று ஏற்பட்டோ அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகும்போது மருத்துவரின் அறிவுரைப்படி தேவையான மருந்துகளையும், ஓய்வையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர் விளக்குகிறார்.

ராஜம்மாளுக்கு உள்ளதைப்போல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து சளி பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே எடுத்து அதற்கு தகுந்தாற்போல் சிகிச்சை பெறுவது நல்லது. மேலும் மேற்கூறியது போன்ற ஆரோக்கியமில்லாத சூழலால் தொற்று ஏற்பட்டு, சின்னம்மை, புட்டாள அம்மை, தட்டம்மை, புளூ காய்ச்சல், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், தொண்டையில் தொற்று ஏற்பட்டு ரூமேடிக் காய்ச்சலால் வரும் இதயநோய், சிறுநீரக நோய், மூளைக்காய்ச்சல் போன்ற காற்று மூலம் பரவும் நோய்கள் பரவுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது. இதில் பெரும்பாலான நோய்களை தடுப்பூசி கொண்டு தடுத்து வந்துள்ளோம்.

அந்த தடுப்பூசிகளை பாரம்பரியமிக்க மூன்று பொதுத்துறை நிறுவனங்களில் உற்பத்தி செய்து, எந்தப் பக்கவிளைவும், பாதிப்பும் இல்லாமல் இதுவரை குழந்தைகளுக்கு கொடுத்து வந்திருந்தோம். எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், தனியார் நிறுவனங்கள் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய வேண்டுமென்பதற்காக, உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடும் தரத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் இல்லையெனும், காரணம் காட்டி அந்நிறுவனங்களில் தடுப்பூசி தயாரிக்கும் பணியை சுகாதாரத்துறை அமைச்சகம் நிறுத்தியுள்ளது. இந்நிலையில் குழந்தைகளுக்கு தேவைப்படும் தடுப்பூசியை தனியார் நிறுவனத்திடமிருந்து (WHO தரச்சான்றிதழ் இல்லாத) வாங்கி கொடுக்கப்போவதாக அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே குறைவான நிதி ஒதுக்கீட்டால் அவதிப்பட்டு கொண்டிருக்கும் பொது சுகாதாரத் துறையின் சொற்பமான நிதியும் தனியார் நிறுவனங்களின் லாப வேட்டைக்கு பலியிடப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதில் அம்மை நோய் கண்டவர்கள் பெரும்பாலும் குழந்தைகளாகும். அம்மை நோய் அம்மன் சாமியின் சாபத்தால் ஏற்படுவதாகவும், அதற்கு பரிகாரமாக அம்மனுக்கு கூழ் ஊற்றும் (மூட) வழக்கமும் இன்னமும், நம்மிடையே ஆழமாக வேரூன்றி இருக்கிறது. ஆரோக்கியமற்ற சுற்றுசூழலால் காற்று மூலம் பரவும் ஒரு வித வைரஸ் நோயே அம்மையாகும். இந்நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு போதிய ஓய்வும், இளநீர் மோர் போன்ற நீர் ஆகாரமும் தொடர்ந்து கொடுத்துக்கொண்டேயிருக்க வேண்டும். அக்குழந்தைகளை வெதுவெதுப்பான நீரில் சோப்பு போட்டு தினமும் குளிக்க வைக்க வேண்டும். காய்ச்சல் அதிகமாக இருந்தால் சுத்தமான துணியை சாதாரண நீரில் நினைத்து உடல் முழுவதும் ஒத்தி எடுக்கவேண்டும். வீட்டையும், சுற்றுப்புறத்தையும், தன் சுத்தத்தையும் கடைப்பிடித்தாலே இந்நோய்கள் ஒரு வார காலத்தில் தானாகவே குணமடைந்துவிடும் என்றும் மருத்துவர் விளக்குகிறார். பிறகு மருத்துவர், ராஜம்மாளின் விலாசத்தை ஒரு அட்டையில் குறித்துக்கொண்டு, டி.பி. க்கான சிகிச்சை முறையை பற்றி விரிவாக அவர்களுக்கு விளக்கி அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிந்துரை செய்து அனுப்புகிறார். அதன் பின்னர் வேலுசாமிக்கு விடையளித்துவிட்டு ராஜம்மாளை அழைத்துகொண்டு முருகன் ஊருக்கு செல்கிறான்.

ராஜம்மாளை அழைத்துக்கொண்டு அவர்கள் பகுதியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முருகன் செல்கிறான். அங்கு மருத்துவ அலுவலரை சந்தித்து மாவட்ட மருத்துவமனையில் கொடுத்தனுப்பிய அட்டையை முருகன் கொடுக்கிறான். அதை பார்த்துவிட்டு, மருத்துவர் மருந்தாளுனரை அழைத்து, காசநோய்க்கான மாத்திரைகள் வழங்குமாறு கூறுகிறார். ராஜம்மாளை தன் கண்முன்னே அந்த மாத்திரைகளை விழுங்குமாறு மருத்துவர் கேட்டுக் கொள்கிறார். பின்னர், அவர்கள் கிராமம் அமைந்துள்ள இடத்திற்கு அருகிலுள்ள கிராம சுகாதார செவிலியர் ஒருநாள் விட்டு ஒருநாள் மருந்துகளை வழங்குவார் என்றும் அவரின் மேற்பார்வையில் மருந்தை விழுங்குமாறும் மருத்துவ அலுவலர் கூறுகிறார். ஆறு மாதங்கள் தொடர்ந்து மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென்றும், இரண்டு மாதம் கழித்து மீண்டும் சளியை பரிசோதிக்க வருமாறும் கூறி ராஜம்மாளை வழியனுப்பி வைக்கிறார்.

அதன் பிறகு கிராம சுகாதார செவிலியர் முதல் சில நாட்களுக்கு மட்டுமே, ராஜம்மாளுக்கு நேரடியாக மருந்துகளை கொடுக்கிறார். பின்னர் பதினைந்து நாட்களுக்கான மருந்தை ராஜம்மாளிடம் கொடுத்து சாப்பிடுமாறு கூறிவிடுகிறார். ஒரு மாதம் தொடர்ந்து மருந்தை சாப்பிட்டதால் ஓரளவு இருமல் குறைந்துவிடுவதோடு, காய்ச்சலும் நின்றிருந்தது. இதற்கிடையில் தொடர்ந்து மருந்து சாப்பிட்டதால் வாயில் புண் ஏற்பட்டதோடு குமட்டலும் ஏற்பட்டதால் ராஜம்மாள் மருந்துகளை சரிவர எடுத்துக்கொள்ளாமல் இடையிலேயே நிறுத்திவிடுகிறார். கிராம செவிலியர் அடுத்தமுறை மாத்திரையை வழங்க வந்தபோது தன் பிரச்சினைகளை ராஜம்மாள் விளக்குகிறார். சத்தான உணவு, வைட்டமின் மாத்திரைகள் சேர்த்து எடுத்துகொண்டால் எல்லாம் சரியாகிவிடும் என செவிலியர் கூறும் விளக்கத்தை ராஜம்மாளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. போதிய விளக்கமில்லாததாலும், பிரச்சினை மேலும் அதிகமானதாலும், மாத்திரைகளை தான் சாப்பிடுவதாக மற்றவர்களிடம் கூறிவிட்டு மாத்திரைகளை குப்பையில் போட்டு கொண்டிருந்தாள் ராஜம்மாள். இரண்டு மாதம் கழித்து மீண்டும் சளி பரிசோதனை செய்ய ராஜம்மாளை அழைத்துக் கொண்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முருகன் செல்கிறான். சளி பரிசோதனையின் முடிவு என்னவாக இருக்கும்?


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com