100 ஆண்டுகளுக்கு முன் விட்ட கப்பல்
தேசத்தினை காத்தல் செய்தல் ஒன்றே கடமையாய் கொண்ட சுதந்திர போராட்ட விரர் வ.உ.சிதம்பரம் அவர்கள் வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சுதேசிக் கப்பல் விட்ட நூற்றாண்டு இந்த ஆண்டு. ஆனால் நமது ஆட்சியாளர்கள் மானம் இழந்து நிமிட்ஸ் கப்பலை வரவேற்கின்றனார். இந்திய கடல் எல்லையில் உலகை அடிமைக்கொள்ள துடிக்கும் ஏகாதிபத்திய சக்திகளுடன் கூட்டுபடை பயிற்சி பெறுகின்றனர். இக்கொடுமைகளை எதிற்க வ.உ.சியின் நினைவுகளை நெஞ்சில் சுமப்போம்.
இங்கே அவரது இரண்டு கடிதங்கள் உள்ளது ஒன்று அவர் கப்பல் வருகையை அறிவிப்பது. மற்றொன்று சிறையில் அவர் வாடியபோதும் தன் சகாக்களுக்கு கப்பல் பற்றி எழுதியது.
விசாரணைக் கைதியாக பாளையங்கோட்டை சிறையில் இருந்தபோது கப்பல் கம்பெனிக்கு எழுதியது (பகிரங்கக் கடிதம்)
1908
சகோதரர்களே! நான் இப்பொழுது சிறையில் உள்ளேன். நாளை என் கதி என்ன ஆகுமோ? தெரியாது. ஆகையினால் சகோதரர்களாகிய நீங்கள் எல்லோரும் என் மேல் காட்டும் அனுதாபத்தையும், அன்பையும் நமது கப்பல் கம்பெனி மீது காட்டுங்கள். இந்தக் கம்பெனியானது பங்காளிகளின் தன் லாபத்திற்காக ஸ்தாபிக்கப்பட்ட வியாபாரக் கம்பெனி என்றெண்ணாமல் நமக்கு ஆரூயிரினும் இனிய பாரத மாதாவாகிய பரிசுத்த தெய்வத்தின் தேவஸ்தானமாகவும், ஆலயமாகவும், தருமமாகவும் கருதி, மாதுர் பக்தியுடனும், தேசாபிமானத்துடனும் உழைக்க வேண்டும். இந்தச் சுதேசிக் கம்பெனி அந்நிய விரோதிகளின் சூழ்ச்சிக்குத்தான்ன வெற்றி பெறுமானால் அது கேவலம். அதிலுள்ள பங்காளிகளின் வெற்றியன்று. பாரத தேவியின் ஸ்வராஜ்ய வெற்றியேயாகும். இந்தக் கம்பெனி அந்நியருடைய போட்டிகளையும் மீறி இலாபம் அடையுமானால் அது கேவலம். நாணய ரூபமான லாபமன்று. ஆனால் நாம் இதுவரை பிறரிடம் விற்பனை செய்து கொண்டு வந்த ஸ்வதந்திர சுயேச்சை முதலிய அதிக தனங்களைக் கைப்பற்றி யடைந்தாற் போன்ற ஜாதிய ஸ்வதந்திர லாபமாகும்.
பாளையங்கோட்டை வ.உ. சிதம்பரம்
9.6.1908
1907
நமது “சுதேசிய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி லிமிடெட்’’க்கு சென்ற டிசம்பர் மாதம் 22ந் தேதியில் கிரையத்துக்கு வாங்கப்பெற்ற ஸ்டீமர், நிகழும்ஜனவரி மாதத்தில் தூத்துக்குடி வந்து சேருமென சுதேச பத்திரிகைகளில் கூறியிருந்தோம். ஆனால் ஸ்டீமரின் சொந்தக்காரர் ஸ்டீமரை புதுப்பித்து நமக்கனுப்ப வேண்டுமெனக் கருதி, ஸ்டீமரை செப்பனிடும் கலத்திற்கனுப்பி ஸ்டீமரில் சில வேலைகள் செய்யும் நிமித்தமாக ஸ்டீமர் முன் குறித்த தேதியில் ஐரோப்பாவை விட்டுப் புறப்படவில்லை. இப்பொழுது ஸ்டீமரின் வேலைகளெல்லாம் முடிந்துவிட்டனவென்றும், ஸ்டீமர் வருகிற பிப்ரவரி மாதம் 4ம் தேதியில் ஐரோப்பாவினின்றும் புறப்பட்டு மணி ஒன்றரைக்கு 2மைல் அளவு விரைவில் பம்பாய்க்கு பிப்ரவரி மாதம் முடிவுக்குள் வந்து சேருமென்றும் ஸ்டீமரின் சொந்தக்காரர்களுக்கு தந்திகளும் நிருபங்களும் வந்திருக்கின்றன. நிகழும் ஜனவரி மாதம் 24ந் தேதியில் கிரையத்துக்கு வாங்கப்பெற்ற ஸ்டீமரும் இன்னும் இரண்டு தினங்களில் கிரையத்துக்கு வாங்கப்பெறும் ஸ்டீம் லாங்சுகளும் பிப்ரவரி மாதம் 10ந் தேதிக்குள் ஐரோப்பாவைவிட்டு புறப்பட்டு, பிப்ரவரி மாதம் முடிவுக்குள் பம்பாய் வந்து சேரும். மார்ச் மாதம் முதல் கம்பெனியின் ஸ்டீமர்கள் தூத்துக்குடிக்கும், கொழும்புவுக்கும் தினசரி நடைபெறும். ஸ்டீமர்களுடையவும், ஸ்டீம் லாஞ்சுகளுடையவும் பெயர்களையும் இருப்பிடங்களையும் குறித்து தற்காலம் சொல்லாதிருத்தல் நலமெனறு தோன்றியதாக இதுகாறும் அவைகளை பத்திரிகைகளில் வெளிப்படுத்தாது விட்டனம். இன்னும் சில தினங்களில் ஸ்டீமர்கள், ஸ்டீம் லாஞ்சுகள் சம்பந்தமான யாவற்றையும் நமது “மித்திரனில்’’ வெளிப்படுத்தக் காத்துக் கொண்டிருக்கின்றோம்.
பிப்ரவரி மாதம் 22, 1907ஆம் தேதி ‘இந்தியா’வில் பாரதி எழுதிய கட்டுரையிலிருந்து (பாரதி தரிசனம் - தொகுப்பு: இளசை மணியன்) வ.உ.சி எதிர்பார்த்தபடி கப்பல் பிப்ரவரி இறுதிக்குள் வரவில்லை.
ஏப்ரல் 16, 1907இல் தான் காலியா கப்பல் தூத்துக்குடி துறைமுகம் அடைந்தது. வ.உ.சி அக்கப்பலில் பம்பாயிலிருந்து தூத்துக்குடி வந்தார்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|