இதயத்தைத் தேடுகிறேன்
- என்.மாதவன்
சமுகத்தில் படைப்பாளிகளுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசங்களில் ஒன்று ஒவ்வொரு சமுக நிகழ்விலும் தனது சக்திக்கேற்றபடி பங்கேற்பு செய்வதுதான். படைப்பாளர்களுக்கு உள்ள சமுகப்பொறுப்புணர்வானது அவர்களது எழுதுகோலை சரியான கோணத்தில் திருப்புகிறது. அவ்வாறான பொறுப்புணர்வு குறைவது மன்னிக்க முடியாததே.
அவர்தம் மனத்தூரிகைகள் சரியான வண்ணக்கலவைகளை உருவாக்குகிறது. இவற்றின் துணைகொண்டு மனக்காமிராக்கள் தரும் பார்வையினை சக வாசகர்களோடும், படைப்பாளிகளோடும் பகிர்வதே படைப்பாளர்களின் வாழ்க்கை நெறியாக உள்ளது. உண்மையான படைப்பாளிகளில் பலரும் தமது நிகழ்கால படைப்புகளோடு பெரும்பாலும் திருப்தியடைந்துவிடுவதில்லை அவர்களும் சரி, அவர்களது படைப்புகளும் சரி முந்தைய படைப்பினைவிட அடுத்தது மேலும் செழுமையாக வரவேண்டும் என்ற கண்ணோட்டத்திலேயே இயங்குவதே சிறப்பு.
இப்படிப்பட்ட பல்வேறு பரிமாணங்களையும் உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. ந.காவியனின் கவிதைகள் மற்றும் பாடல்களின் தொகுப்பு “இதயத்தை தேடுகிறேன்” அரசு ஊழியர் போராட்டம், ஆழிப்பேரலையின் சீற்றம், கறுப்பு ஏசுநாதருக்கான ஏக்கம், இந்திரா படுகொலை, சென்னை மெரினாவிலிருந்து கண்ணகி சிலை அகற்றப்பட்டது, குஜராத்பூகம்பம், தனிமனிதர்களுக்கு அனுபவங்கள் போதி மரமாகும் தன்மை என்று பல்வேறு தளங்களில் பலவகைப்பட்டதாய் அவரது படைப்புகள் நீள்கின்றன. பெரும்பாலும் கவிதைகள் எழுதுவோருக்கு ஒன்று மரபில் சிறப்பாக எழுதுவர், அல்லது புதுக்கவிதைகள் புனைவதில் வல்லவராய் இருப்பர். காவியன் இரண்டிலும் வல்லவராய் இருப்பது கூடுதல் சிறப்பு. பாடல்களில் பலவும் ஓசை நயமுடையதாயிருப்பது இசைக்கும் போது இனிமையினைக் கூட்டும்.
சமகால நிகழ்வுகளை நையாண்டியோடு பகிர்வதை பல இடங்களில் காணமுடிகிறது. உதாரணமாக போர்க்களங்கள் என்ற கவிதையில் சமீப கால சட்டமன்ற, நகர் மன்ற காட்சிகளை
புதிய போர்க்களங்கள்
புறநானூறு காணாத
நகைச்சுவைப் போர்க்களங்கள்
மானமிகு தமிழகத்தின்...
....................
...............................................
வண்ணக்கரையோடு திடீரென
வெள்ளைக்கொடிகள் பறக்கும் அவை
சமாதானக்கொடிகள் அல்ல
போரிடும்போது நினைவில்லாமல்
அவிழ்ந்து பறக்கும் வேட்டிக்கொடிகள்
அவமானத்தால் நாணிக்கோண வேண்டியது போர்வீரர்கள் மட்டுமல்ல, ஜனநாயகம். தழைக்க உதவாமல் வேலியை மீறும் வெள்ளாடுகளும் தான் தமது வாழ்வை பரிதபமாக வைத்து வேலை நிறுத்தத்தில் பங்கேற்றது. ஆயிரக்கணக்கான தோழர்கள்...
பாதிப்பிலிருந்து மீளாத போது நல்லாசிரியர் விருதினைப் பெற்றோரைப் பார்த்து கேட்கும் கேள்வி சரியான பலருக்கும் அளிக்கப்படுவதில்லை வாங்கவேப்படுகிறது என்பது அந்த ஆண்டும் நிதர்சனமான உண்மையாகி உள்ளது. செல்பேசி பற்றிய கவிதையில் அடுத்தவர் அனைவரும் கவிதை நயத்தோடு கடிதம் எழுத அழைப்பு விடுக்கும் லாவகம் மறைந்துகொண்டிருக்கும் கடிதம் எழுதும் பண்பாட்டினை மீட்டெடுக்க விழையும் பேராவல். யானை வெள்ளையம்மாவின் சோகத்தில் பங்கேற்கும் பெரிய மனமும் காவியனுக்கு வாய்த்திருப்பது பாராட்டுதற்குரியதே.
இப்படியாக பல கவிதைகளும் பாராட்டும்படியாகவே இருந்தாலும் சில விஷயங்கள் நெருடவே செய்கின்றது. அனைத்துக் கவிதைகளுமே நீண்ட நெடியதாக அமைவது அதுவும் அவை அனைத்தும் ஒரே தொகுப்பில் வருவது ஒரு சில வாசகர்களுக்கு சலிப்பினை ஊட்டலாம். அனைவரும் காணும் காட்சியில் தான் கண்ட ஒரு சிறப்பான அம்சத்தினை பளிச்சென விளக்கும் கவிதைகளே காலத்தை வெல்லும் கவிதைளாகின்றன. அப்படிப் பார்க்கும் போது காவியனின் கவிதைகளிலேயே பாருங்கள் ஒரு கருப்பு போப்பாண்டவரும், ஒரு கருப்பு ஏசுநாதரும் என்ற கவிதையில்
அது இயலாவிடில்
ஒரு கருப்பு ஏசுநாதரை
உருவாக்கிக் கொள்ள
எங்களை அனுமதிப்பிராக
எங்களை அனுமதிப்பீராக
இப்பபிடிப்பட்ட வரிகளில் வெளிப்படும் காட்சிகளே வாசகர்ளையும் உயர்த்தும். இப்படியாக காவியன் மென்மேலும் காவியம் படைப்பார் என நம்புவோம். நூலுக்கு தமிழ்ச்செல்வன் அவர்களின் அணிந்துரை மேலும் சிறப்பு அளிக்கின்றது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|