நாங்கள் வென்றே தீருவோம்
எஸ்.கண்ணன்
வீரத்தெலுங்கானாவின் வரலாறு பல சித்ரவதைகளைத் தாங்கியது. ஆனால், வீரம் செறிந்தது. உழைப்பாளி மக்களின் ஒப்பற்ற போராட்டம், அன்றைய பிரதமர் பண்டித நேரு, உள்துறை அமைச்சர் வல்லபாய் படேல் ஆகியோரின் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்டது. வெள்ளையர் கையில் இருந்த ராணுவமும், மேலே குறிப்பிட்ட இந்தியர் கையில் இருந்த ராணுவமும், நூலிடை வித்தியாசம் இன்றி கொடூரமாகப் பெண்கள், குழந்தைகள் என எல்லோரையும் சூறையாடியது. அது 1948 என்றால், ஐம்பத்து ஒன்பது ஆண்டுகள் கழித்து, 2007 ஜூலை 28 அன்று அதே தெலுங்கானா மண்ணில், அதே காங்கிரஸ் ஆட்சியில் பட்டா, நிலம் கேட்டுப் போராடிய மக்கள் மீது, வேற்று நாட்டு ராணுவத்தை எதிர்த்து போரிடப் பயன்படும், AK 47, SLR ரகத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி உள்ளனர். 7 பேர் படுகொலை 15 பேர் படுகாயம் என தனது அடக்குமுறை வெறிக்கு ரத்த அபிசேகம் செய்து கொண்டனர்.
ரத்தத்தைப் பார்த்தவுடன் அதிர்ச்சியில் மயங்கிவிழும் சினிமா கதாநாயகிகள் அல்லது மேல்தட்டு பெண்கள் என்று ராஜசேகர ரெட்டி நினைத்திருப்பார். இவர்கள் வீரத் தெலுங்கானாவின் வாரிசுகள் என்பது போராட்டக்காரர்களுக்கு மட்டுமே தெரியும். தடியடி, அனுமதி மறுப்பு, சிறையிலடைப்பு என அடக்குமுறையை கையாண்ட ஆந்திர அரசு, இறுதியில் சுட்டுக் கொலை செய்யும் மிருக குணத்தையும் வெளிப்படுத்தியது. ஆனாலும், போராட்டம் பீனிக்° பறவையைப் போல், பல லட்சம் மக்களை ஆர்ப்பரிக்கச் செய்துள்ளது. தொடர்ந்து எழுச்சிகரமானதாக மாறியிருக்கிறதேயொழிய, வேகம் குறையவில்லை.
கோரிக்கைப் பேரணி, தர்ணா, மண்டல அளவில் மறியல், அரசுப் புறம்போக்கு நிலங்களில் செங்கொடி ஏற்றும் போராட்டம், ஆட்சியாளர்களை குலை நடுங்கச் செய்வதாக அமைந்தது. சுமார் 194 வெகுஜன அமைப்புகள் இந்தப் போராட்டத்தில் கரம் கோர்த்தது செங்கொடி இயக்கத்தின் மகத்தான வெற்றி. போராட்டத்திற்கு திரண்ட மக்கள் கூட்டத்தைக் கண்டு மிரண்ட அரசு, வழக்கம் போல் அதிகாரத்தைப் பாதுகாக்கும் வகையில் அடக்குமுறையை வெறித்தனமாகக் கட்டவிழ்த்து விட்டது. படுகொலை நடந்த கம்மம் மாவட்டத்தில் மட்டும் 4800 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் 766 பேர் பெண்கள். 121 பெண்கள் உட்பட கட்சியின் தலைவர்கள், முன்னணி ஊழியர்கள் 37 பேர் கிரிமினல் மற்றும் ஜாமின் பெறமுடியாத பிரிவுகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அடக்கு முறையை மீறிய மக்கள் திரள், கம்மம் மாவட்டத்தில் மட்டும் 35082 ஏக்கர் அரசு நிலத்தை இதுவரை கைப்பற்றியுள்ளனர். விடுதலை இந்தியாவின் வீரம் மிக்க இப்போராட்டம், இந்தியத் துணைக் கண்டதிற்கு பாடமாக அமைய வேண்டும்.
ஆக. 22 முதல் இரண்டாம் கட்டப் போராட்டம் துவங்கியுள்ளது. முதல் கட்டப் போராட்டத்தில் 7 பேரை கொலை செய்த அரசு, போராட்டம் சமாதி ஆகிவிடும் என்று தான் நினைத்திருக்கும். ஆனால், முன்னிலும் வீரத்துடன், கைப்பற்றிய மனைகளில், குடிசை போடும் போராட்டமாக இரண்டாம் கட்டத்தை அறிவித்தது போராட்டக்குழு. அதிசயமும், அதிர்ச்சியும் என்னவென்றால், சாகடிக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து, தாலியறுக்கப்பட்ட இளம் மனைவி, மகள், மகன், அண்டை வீட்டார் அல்லது உறவினர் என அனைவரும் “பூ போராட்டம்” ஓயவில்லை, நாங்களும் பங்கேற்போம். அப்போது தான் எங்கள் கணவரின் ஆன்மா சாந்தியடையும். நாங்கள் வென்றே தீருவோம் என உறுதியாகக் கூறுகின்றனர்.
அழவில்லை, சோகத்துடன், விட்டத்தை பார்த்துக் கொண்டு புலம்பவில்லை. இழந்துவிட்டோம். உண்மை. ஆனால், வெற்றி நிச்சயம் என்கிறார்கள். நாடு அழைத்தது புத்தகத்தில் மேஜர். ஜெய்பால் சிங் தமது அனுபவத்தை பதிவு செய்கிறபோது, வீரத் தெலுங்கானா பூமியைப் புகழ்ந்திருப்பார். “பல மாதங்கள் கழித்து காடுகளுக்குள் ரகசியமாகச் சந்திக்கும் கணவனிடத்தில், கட்சி என்ன சொல்கிறது? புரட்சி வெற்றி பெறுமா? சோவியத் யூனியன் ஏதாவது செய்யாதா? ” என்று மனைவிமார்கள் கேள்வி எழுப்பியதை குறிப்பிடுவார். அதே மனைவி தானும் தன் குழந்தைகளும் காவல்துறை மற்றும் ராணுவத்தினரால் படுகிற சித்ரவதைகளை ஒருபோதும், போர் களத்தில் இருக்கும் கணவரிடம் சொன்னதில்லை. இது அன்றைய தெலுங்கானாவில் மட்டும் இல்லை. இப்போதும் நீடிக்கிறது. 7 பேர் இறந்ததை தொடர்ந்து ஆறுதல் சொல்ல யார் முடிகொண்டாவிற்கு போனாலும், அம்மக்கள் “பேர் இறந்துவிட்டதைத் தொடர்ந்து போராட்டத்தை நிறுத்தாதீர்கள், தொடருங்கள்” என்று ஆர்ப்பரிக்கிறார்களேயன்றி, அனுதாபத்தை எதிர்பார்க்கவில்லை.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|