தலையங்கம்
வழிபாடும் மனித வாழ்க்கையும்
இராஜஸ்தான் ஜோத்பூரில் உள்ள சாமுந்தாதேவி கோவிலில் செப்டம்பர் 30 அன்று கூட்ட நெரிசலில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறி இறந்துள்ளனர். இரண்டே இரண்டு கிலோ மீட்டர் மலைப்பாதையில் பல்லாயிரம் பேர் குவிந்துள்ளனர், தரிசனத்திற்காக வாசல் திறக்கப்பட்டபோது முண்டியடித்துக் கொண்டு சென்றபோது இந்த அசம்பாவிதம் நடந்தேறியுள்ளது.
கடந்த காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏராளமான உயிர்களை பறித்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் இச்சம்பவம் 6ஆவது நிகழ்வாகும். ஆகஸ்ட் 27, 2003இல் மகாராஷ்டிரா நாசிக்கில் கும்பமேளா விழாவில் 39 பேர் இறந்துள்ளனர். ஜனவரி 25, 2005இல் அதே மகாராஷ்டிரா மாநிலம் மந்திராதேவி கோவிலில் நடந்த விபத்தில் 340 பேர் பலியாகியுள்ளனர். மார்ச் 7, 2006இல் வாரனாசி கோவிலிலும், காண்டோன்மென்ட் ரயில் நிலையத்திலும் வெடித்த குண்டுகளில் 28 பேர் மாண்டுள்ளனர். ஆகஸ்ட் 3, 2008இல் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள நைனா தேவி கோவிலில் பாறை சரிவு ஏற்பட்டத்தில், 47 பேர் பலியாகியுள்ளனர். ஆகஸ்ட் 10, 2008 அன்று வடமேற்கு ராஜஸ்தானில் மாதவன் கோவிலில் படிக்கட்டு உடைந்து இரண்டு பேர் இறந்துள்ளனர்.
அர்த்தத்தோடு வாழ்ந்து முடிக்க வேண்டிய மனித உயிர்கள் இப்படி அற்பமாக கூட்டம் கூட்டமாய் சாய்ந்து கிடக்கும் போது, நம் உணர்வுகள் எல்லாம் உறைந்து போகிறது. கோவில் நிர்வாகமும், அரசும் போதுமான ஏற்பாடுகள் செய்திருந்தால் இந்த உயிர் பலியை தடுத்திருக்கலாம். இனியேலும் புத்தி வரட்டும்! ஒரு பக்கம் அதிதீவிர நம்பிக்கை மதத்தீவிரவாதமாக ஆங்காங்கே வெடித்து சிதறுகிறது, மறுபக்கம் நம்பிக்கையின் பேரில் கூடும் கூட்டம் எந்த கடவுளின் துணையுமின்றி இப்படி அற்பமாய் மடிகின்றனர்.
உலகில் பெட்ரண்ட் ரஸல், இங்கர்சால், காரல்மார்க்ஸ், பகத்சிங், பெரியார், உள்ளிட்ட எத்தனையோ பெரிய மனிதர்கள் கடவுள் குறித்தும், நம்பிக்கை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனாலும் மக்கள், இது போன்றவற்றிலிருந்து விடுதலை பெறவில்லை. மக்கள் இன்னும் அறியாமையில் மூழ்கிக்கிடப்பதற்கும், வறுமையில் வாடுவதற்கும் ஆட்சியாளர்கள் பின்பற்றும் கொள்கையே காரணம் என்பது தெளிவு.
ஒருபுறம் நூற்றுக்கணக்கான உயிர்கள் தேவையில்லாமல் இதுபோன்ற நிகழ்வுகளில் பலியாவது நம்மை அதிர்ச்சிகுள்ளாக்கினாலும், திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த ஹிதேந்திரனின் மரணம் நம்மைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
விபத்தில் அடிபட்டு மூளை செயலிழந்த காரணத்தினால், இனி பாதுகாக்க முடியாது என்ற நிலையில் தனது 17 வயது மகனின் உடல் உறுப்புக்களை 6 மனித உயிர்களைக் காப்பாற்றும் வகையில் தானமாக வழங்கியுள்ளனர் டாக்டர் தம்பதியினர். யாருக்கும் பயன்படாமல் கூட்டம் கூட்டமாக நூற்றுக்கணக்கான மனித உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கும் அதே வேளையில், இறந்த பின்னும் 6 பேரை வாழவைத்த நிகழ்வு, இரத்ததானம், கண்தானம், உடல்தானம் போன்ற சேவைகளில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உற்சாகமளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
- ஆசிரியர் குழு
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|