தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் பலன் பயனாளிகளுக்கே
-ஜி.மணி
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நில உறவு முறையில் மாற்றம் செய்யப்படாமல், தொழில் வளர்ச்சிக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பல போராட்டங்களுக்குப் பிறகு கொண்டு வரப்பட்ட நிலச் சீர்த்திருத்தம் நிலக்குவியலை உடைக்கவில்லை.
உழுபவனுக்கு நிலம் அளிக்கவில்லை. 1999வரை மொத்த பயிரிடும் நிலப்பரப்பில் 0.9 சதம் மட்டுமே வினியோகிப்பட்டது. நிலப்பயன்பாட்டை அதிகரிக்காமல், உணவு உற்பத்தியை அதிகரிக்க. பாசனம் மேம்பட்ட விதைகள் உரம் போன்றவைகளை பயன்படுத்தி பசுமைப்புரட்சி கொண்டு வரப்பட்டது. இதனால் உணவு உற்பத்தி அதிகரித்து. மறுபுறத்தில் சிறு குறு விவசாயிகள் இந்த செலவை செய்வதற்கு இயலாமல் பாதிக்கப்பட்டனர்.
இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் சாப்பிடுவதற்கு தேவையான உணவு உற்பத்தியை நாம் அடையவில்லை. இதுவரை அதிகபட்ச உற்பத்தி 21 கோடி டன்களாக இருந்த போதிலும். கிராம நகர்ப்புற ஏழைகளின் வாங்கும் சக்தி குறைவினால் உணவுப்பற்றாக்குறை ஏற்படவிலை.
நாடாளுமன்றத்தில் அரசின் அறிவிப்பின்படி கடந்த 10 ஆண்டுகளில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் நிலத்தை இழந்துள்ளனர், அதாவது கூலிக்காரர்களாக மாறியுள்ளனர். இதனால் விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் சுமார் ஒரு கோடியை எட்டியுள்ளது.
ஆனால் அவர்களுக்கு கிடைக்கும் வேலை நாட்கள் 1964 - 65ல் 217 நாட்களாக இருந்தது. 1974- 75ல் 193 நாட்களாக குறைந்தது. 1980களில் 128 நாட்களாகவும், அனுமந்தராவ் கமிட்டி அறிக்கை படி 1990களில் 100 நாட்களாகவும் குறைந்து தற்போது 65 முதல் 70 நாட்கள் வரை வேலை கிடைக்கிறது.
இதனால் வேலை தேடி, வாழ்வு தேடி குடி பெயர்தல் அதிகரித்துள்ளது. வேலை தேடி குடிபெயர்வோர் சந்திக்கும் துயரங்கள் ஏராளம்.
எனவே, கிராமப்புற மக்களுக்கு அரசு திட்டங்களில் அரசே மாற்று வேலை அளிக்க வேண்டுமென்பது 25 ஆண்டிற்கும் மேலாக கோரி வருகிறோம். வேலை வாய்ப்பு அளிப்பதற்காக கொண்டு வரப்பட்ட திட்டங்கள் உண்மையில் வேலை வாய்ப்பினை அளிக்கவில்லை. அதிகாரிகள், காண்ட்ராக்டர் மற்றும் ஆளும் கட்சியினரின் கொள்ளைக்கு ஆளானது. மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் கூற்றுப்படி “டெல்லியிலிருந்து கிராம மக்களுக்காக ஒரு யானையை அனுப்பினால் அதன் வால் மட்டுமே கிராமத்தை சென்றடைகிறது” என்றார். அதையும் கூர்ந்து பார்த்தால் அந்த வாலில் உள்ள முடி மட்டுமே கிராம மக்களுக்கு கிடைக்கிறது. அந்த அளவிற்கு ஊழல் மலிந்துள்ளது. தற்போதும் தமிழ் நாட்டில் தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் அமலில் உள்ள 10 மாவட்டங்களில் (சென்னை தவிர) வேலை வாய்ப்பு அளித்திட கொண்டு வரப்பட்டுள்ள ‘சம்பூரண கிராமிய வேலை வாய்ப்பு திட்டம்”(SGRY) செயல்பாட்டினை பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும். பல ஊராட்சி ஓன்றிய அலுவலகங்களில் பொய்யான வருகைப்பதிவேடு தயாரிப்பதற்கு. பல இளைஞர்களை தினக் கூலிக்கு, அமர்த்தப்பட்டு வேலை வாங்கப்படுகின்றனர்.
2004 பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் ஏற்பட்ட சாதகமான அரசியல் சூழ்நிலையில். வேலை வாய்ப்பினை குறைந்த பட்ச பொதுத் திட்டத்தில் சேர்க்க முடிந்தது. இடது சாரிகளின் தொடர்ச்சியான வற்புறுத்தலால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலாளிகள் மற்றும் அதிகார வர்க்கத்தின் எதிர்ப்பினையும் மீறி, தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் 21.12.04 ல் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப் பட்டது. அதில் உள்ள பாதகமான அம்சங்கள் திருத்தப்பட வேண்டுமென கோரினோம். 23.12.04 ல் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. அதன் மீது பலர் கருத்து தெரிவித்தனர். 39 திருத்தங்கள் ஏற்கப்பட்டு 25.08.05 ல் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப்பின் 2.02.06 முதல் நடைமுறைக்கு வந்தது.
இதற்கு முன்னோடி திட்டமாக 14.11.2004 முதல் தேசிய வேலைக்கு உணவுத்திட்டம் 150 மாவட்டங்களில் செய்யப்பட்டது. (தமிழ்நாட்டில் கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவண்ணாமலை ஆக 4 மாவட்டங்கள்).
தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் முதலில் 200 மாவட்டங்களில் 2.2. 06 ல் செயல்படத் துவங்கியது. (தமிழ்நாட்டில் கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, திண்டுக்கல், சிவகங்கை ஆக 6 மாவட்டங்கள்).
2007 -08 ல் மேலும் 130 மாவட்டங்களில் விரிவுபடுத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு அரசு பல்வேறு அளவு கோள்படி கோரிய மாவட்டங்களைத் தவிர்த்து தஞ்சாவூர், திருவாரூர், கரூர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் கொண்டு வரப்பட்டது.
ஆக தமிழ்நாட்டில் உள்ள 12618 ஊராட்சிகளில் 5432 ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்படுகிறது. ஏறத்தாழ 43 சதமான கிராம ஊராட்சிகள் இதன் கீழ் வருகிறது.
இச்சட்டத்தின் நோக்கங்கள் கிராமப்புற மக்களின் வாழ்வுரிமைக்கு பாதுகாப்பு அளிப்பது, பெண்களை அதிகாரப்படுத்துதல், குடிபெயர்தலை குறைத்தல், சமூக சமத்துவத்தை வளர்த்தல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல் மற்றும் கிராமப்புற சொத்துக்களை ஏற்படுத்தல் ஆகும்.
தேசிய ஊரக வேலை உறுதி சட்ட செயல்பாடு பற்றி ஜூலை 24 முதல் 30 வரை விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர், திருவெண்ணெய் நல்லூர், திருநாவலூர், மைலம் மற்றும் வானூர் ஆக 5 ஒன்றியங்களில் தலா 5 கிராம ஊராட்சி வீதம் 25 ஊராட்சிகளில் சமூக தணிக்கை செய்யப்பட்டது. ஆகஸ்ட் 1ல் சிறப்பு கிராம சபை கூட்டமும், ஆகஸ்ட் 2 ல் மாவட்ட பொது விசாரணையும் நடைபெற்றது.
பயனாளிகள் பங்கேற்பு இல்லாவிடில் சட்டத்தின் பயன்கள் கிராம மக்களை சென்றடையாது. அதிகாரிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நேர்மையுடன் நிறைவேற்ற மாட்டார்கள் என்பதே சமூக தணிக்கையின் கசப்பான உண்மையாகும்.
சமூக தணிக்கைக்கு கிராமங்களுக்கு செல்வதற்கு முதல் நாள் வேலை அட்டை (JOB CARD) பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டது. அதில் வேலை செய்த நாட்கள் குறிக்கப்பட்டுள்ளதற்கும், உண்மையில் வேலை செய்த நாட்களுக்கும் தொடர்பில்லை.
கிராமப்புற குடும்பங்களில் 68 சதமான குடும்பங்களுக்கு வேலை அட்டை வழங்கப்பட்டுள்ளது.
பெண்கள் வேலைகளில் பங்கேற்பு 82 சதமானம்.
இச்சட்டம் தொடர்பாகவும், உரிமைகள் பற்றியும் கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை.
வேலைக்கான மனு அளிக்கப்பட வேண்டுமென்பதும், அதற்கான ஒப்புகை சீட்டு வழங்கப்-படுவதும் இல்லை. ஊராட்சி தலைவர் விரும்பும் நேரத்தில் வேலை துவங்கப்படும். அப்போது வேலைக்கு செல்ல வேண்டும். கிராம மக்கள் தாங்கள் விரும்பும் நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாது. வேலைக்கான மனுவை பெற்றால் 15 நாட்களுக்குள் வேலை அளிக்க வேண்டும் அல்லது வேலையில்லா நிவாரணம் அளிக்க வேண்டும்.
-வீட்டுக்கு ஒருவருக்கு மட்டுமே வேலை அளிக்கப்படுகிறது. குடும்பத்தில் உள்ள அனைவரும் வேலைக்கு வந்தால் அனுமதி மறுப்பு.
-முறை வைத்து வேலை அளிப்பதானது சாதிப்பிரிவினையை மேலும் ஊக்கப் படுத்துகிறது. தலித்துகள் ஒரு வாரமும், பிற்படுத்தப்பட்ட மக்கள் அடுத்த வாரமும் வேலை செய்ய அனுமதி. இதன் மூலம் சமூகப்பிரிவினை வலுப்படுத்தப்படுகிறது.
குழந்தையுடன் வரும் பெண்களுக்கு வேலை மறுப்பு ஏனெனில் குழந்தைகள் காப்பகம் ஏற்படுத்துவதில்லை.குழந்தைகளை பாதுகாத்திட ஒரு பெண் தொழிலாளியை நியமிக்க வேண்டும்.
வேலைகளில் ஊனமுற்றோர் மற்றும் வயதானவர்களுக்கு வாய்ப்பு மறுப்பு.
வேலைத்தளங்களில் ஒய்வுக்கான நிழல், குடிதண்ணீர், முதலுதவிப் பெட்டி, குழந்தைகள் காப்பகம் போன்ற வசதிகள் பெரும்பாலான இடங்களில் இல்லை.
வருகைப் பதிவேட்டில் (Muster roll) பல கோளாறுகள் உள்ளன. கரும்பு வெட்டுவதற்கு வெளியூர் சென்றவர் மற்றும் கஞ்சா வழக்கில் சிறை தண்டனை பெற்றவர் வேலை செய்ததாக பொய்யான வருகைப் பதிவேடு.
ஒரே குடும்ப அட்டை எண்ணில் 16 பேர் ஒரே நாளில் வேலை செய்ததாக வருகைப் பதிவேடு.
வேலையின் போது பாம்பு கடித்ததால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை, நிவாரணம் மறுப்பு.
வருகைப் பதிவேட்டில் உள்ள கூலிக்கும் வேலையின் அளவிற்கும் வித்தியாசம்.
போன்ற பல முறைகேடுகள் சமூக தணிக்கையில் கண்டறியப்பட்டது. இத்தனை குறைகளையும் போக்க முடியும். கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுடன் சேர்ந்து நாமும் தலையிட்டால் சாத்தியமே. ஏனெனில் இச்சட்ட செயல் முறை கிராமங்களில் பலவகைகளில் உதவியுள்ளது.
இவ்வேலைகளில் பெண்களுக்கு ரூ 80 கூலி கிடைக்கிறது. இதனால் விவசாய வேலைகளில் உள்ள குறைவான கூலியை உயர்த்திட பேரம் பேசும் சக்தியை அளிக்கிறது.
கிராமங்களில் வேலை வாய்ப்பை உருவாக்குவதால் குடிபெயர்தலை ஒரளவு தடுத்துள்ளது. முறையாக செயல்படுத்தினால் பெருமளவு உதவும்.
கிராமப்புற சொத்துகள் உருவாக்கப்படுகிறது. ஏரி, குளம் ஆழப்படுத்துவதால் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுகிறது.
எந்த சட்டம் அல்லது திட்டமானாலும் பயனாளிகள் பங்கேற்பை உறுதிப்படுத்தப் பட்டால் மட்டுமே அதன்முறையான செயல்பாட்டை உறுதிப்படுத்துவதும், பலன்கள் பயனாளிகளை சென்றடைவதும் சாத்தியமாகும்.
கிராமங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
பயனாளிகளை பங்கேற்க வைப்போம்.
பலன்கள் பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்வோம்.
********
சமத்துவமின்மை, கட்டற்ற வெறுப்பையும், கருணையே இல்லாத தன்மையையுமே வளர்ந்து வருகிறது.
2004 ல் சுனாமியால் இந்தியா, இந்தோனேஷியா, ஸ்ரீலங்கா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சுனாமி ஏற்பட்ட சமயத்தில் அந்நாடுகளில் பங்கு சந்தை புள்ளிகள்
(சென்செக்ஸ்) வெகுவாக உயர்ந்தன.
சுனாமி பாதிப்பை சரி செய்ய மறு கட்டமைப்பு பணிகளில் புரளப்போகும் கோடிக்கணக்கான பணத்தை எதிர்பார்த்தே பங்கு சந்தை சுறுசுறுப்பானது, மறு கட்டமைப்பு பணிகளில் இலாபம் அடைவோர் அதன் பின்னணியில் இருந்தனர்.
மக்களின் அடிப்படை தேவைகளான தண்ணீர், சுகாதாரம், கல்வி மற்றும் மருத்துவம் ஆகியவற்றை அளிக்கும் பொறுப்பிலிருந்து அரசு பின்வாங்குதல்.
வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகளுக்கான நிதியை பெருமளவில் குறைத்தல், பெரும் பணக்காரர்களுக்கு சலுகைகள் அளிக்கும் அதே நேரத்தில் ஏழை மக்களுக்கான வாழ்வாதார திட்டங்களை ஒழிப்பது, எல்லாவற்றையும் தனியார்மயம் ஆக்குவது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வணிக நிறுவனங்களுக்கு அதிகாரம் அளித்தல், ஏழை,எளிய மக்கள் செலுத்த முடியாத வகையில் அவர்கள் பயன்படுத்துகின்ற எல்லாவற்றிற்கும் கட்டணங்கள் விதித்தல் போன்ற ஆறு காரணங்கள் தேசத்தில் ஏழை பணக்கார வித்தியாசத்தை வளர்க்கின்றன.
பெரும் பணக்காரர்களை கொண்ட நாடுகள் வரிசையில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. ஆனால் மனித வளத்தை வளர்ப்பதில் 126வது இடத்தில் உள்ளது.
இந்தியரின் சராசரி ஆயுள் காலம் ஏழை நாடுகளின் மக்களின் ஆயுள் காலத்தைவிட குறைவாக உள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில் முன் எப்போதுமில்லாத அளவிற்கு பணக்காரர்கள் முன்னேறி உள்ளனர். ஏழை மக்கள் சொல்ல முடியாத வறுமைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.
ஏறத்தாழ 837 மில்லியன் இந்திய மக்கள் ஒரு நாளைக்கு 20 ரூபாயில் உயிர் வாழ்கின்றனர்.
மருத்துவ செலவுகள் விண்ணோக்கி பறக்கின்றன. ஆந்திராவிலும், மகாராஷ் டிராவிலும் விவசாயிகள் தற்கொலை செய்து மடிவதை இதை கண் கூடாக காண முடிந்தது.
வளர்ந்து கொண்டே வரும் ஏழை - பணக்கார வித்தியாசமே இன்று ஜனநாயகத்தின் முன் உள்ள பேராபத்து.
- பி. சாய்நாத்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|