பி.சீனிவாசராவ்
கேத்தரின்
“2007” இது நூற்றாண்டுகளின் ஆண்டு. பல வரலாற்று நாயகர்களின், வரலாற்று நிகழ்வுகளின் நூற்றாண்டுகள் கொண்டாடப்படும் ஆண்டு. 1907 ம் ஆண்டு கர்நாடகாவில் பிறந்து ஆயிரமாயிரம் தஞ்சை மாவட்ட விவசாயிகளின், விவசாய தொழிலாளர்களின் இதயத்தில் இடம் பிடித்த செங்கொடி இயக்க நாயகர் தோழர். பி. சீனிவாசராவ் அவர்களின் நூற்றாண்டும் இந்த ஆண்டு கொண்டாடப்பட்டு முடிந்துள்ளது. இதை குறிக்கும் வகையில் 2007 மார்ச் DYFI மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து அளித்துள்ள ஒரு பொக்கிஷம் நம் கைகளில் 32 பக்கங்களே கொண்ட சிறு புத்தகமாக தவழ்கிறது.
“மூர்த்தி சிரியதாயினும் கீர்த்தி பெரியது” என்பதற்கு ஏற்ப கையகல கையடக்க அளவில் இந்நூல் இருந்தாலும் அதன் ஒவ்வொரு வரியும் வார்த்தையும் கணமிக்கவை. ஒரு மனிதன் எப்படி முழுமை அடைகிறான், அவன் எப்போது மகிழ்ச்சியுடைய வனாகிறான் என்கிற காரல் மார்க்ஸின் அனுபவ கூற்றுடன் இந்நூல் துவங்கி இந்நூலின் நாயகன் தோழர். பி.சினிவாசராவ் எவ்வாறு வாழ்ந்து காட்டினார் என்று அவர் வாழ்க்கையை அடுத்த பக்கங்களில் விளக்குகிறார் இதன் ஆசிரியர் ஜி.ராமகிருஷ்ணன்.
“நீங்களெல்லாம் தாய்வயிற்றில் பத்து மாதம் கருவாகி உருவாகி வெளியே வந்தவர்கள்தான். உங்கள் மிராசுதார்களும் அப்படி பிறந்தவர்கள் தானே? அவர்களைப் போன்றே நீங்களும் மனிதர்கள் தான்..... சாணிப்பால் புகட்டினால் சாட்டையால் அடித்தால், அது சட்ட விரோதம்! அப்படி தண்டிக்க வருவோரை முட்டியை உயர்த்தி ஓட ஓட விரட்டியடி!... ஒருவர், இருவருக்கு தொல்லை கொடுத்தால் ஊரே திரண்டு தற்காத்துக் கொள்ளுங்கள். ஒற்றுமையும், உறுதியும்தான் சங்கம்”. 1943 ஆம் ஆண்டு தஞ்சை மண்ணில் இறங்கிய பி.எஸ். ஆர். அவர்களுக்கு களப்பால் என்ற ஊரில் களப்பால் குப்புவின் தலைமையில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பி.எஸ்.ஆர். ஆற்றிய ஏற்புரையை இந்நூலில் பதிவு செய்வதன் மூலம் ஆசிரியர் அன்றைய தஞ்சை மாவட்டத்தின் அரசியல், சமூக, பொருளாதார சூழ்நிலையை வாசகர் முன் நிறுத்தி, அதற்கு எதிராக மக்களை திரட்டிய விதத்தையும் பதிவு செய்துள்ளார்.
என் வீடு, என் குடும்பம் என்று சுயநலம் மிகுந்த இந்நாளில், என் நாடு என்ற சுயநலம் இல்லாமல் இருப்பது ஆச்சரியமே. ஆனால் இதற்கு விதிவிலக்காக இருந்த ஒரு சிலரில் பி.எஸ்.ஆரும் ஒருவர். 1920 களில் கல்லூரி படிப்பை தூக்கி எறிந்து தேச விடுதலைக்காக போராடியது முதல், 1930 களில் அந்நிய துணி பகிஷ்கரிப்பு என்று தொடர்ந்து சுதந்திரத்திற்கு பிறகும் தன் நாடு, தன் நாட்டு மக்கள் என்று அனைவருக்காகவும் பாடுபட்டவர். தமிழில் பேச மட்டுமே தெரிந்த கர்நாடகத்துகாரர், தஞ்சை மண்ணில் வெரும் 19 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தாலும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், குத்தகை விவசாயிகள் என்று அனைவரின் மத்தியிலும் இரண்டறக் கலந்துவிட்டவர் பி.எஸ். ஆர்., விவசாயிகளின் பொருளாதார முன் னேற்றத்திற்காக மட்டுமல்லாமல் அவர்களின் சமுதாய முன்னேற்றத்திற்காகவும் போராடியவர்.
அன்று கீழ் தஞ்சை பகுதிகளில் கிராமம் கிராமமாக சென்று கட்சி கிளைகளை கட்டி அதன் மூலம் சாணிப்பால், சாட்டையடி போன்ற தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடி பல வெற்றிகளை பெற்றார், இவ்வெற்றிகள் அப்பகுதி மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக நிலப்பிரபுக்களும் தலித் பிரதிநிதிகளும் சமமாக அமர்ந்து நடத்திய பேச்சு வார்த்தையின் தாக்கமும் தலித் மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியது.
பி.எஸ்.ஆர். சாமானிய மக்களின் தலைவர் மட்டுமில்லை. அவர் தலைவர்களின் தiலைவரும் கூட. பி.எஸ்.ஆர். கொடுத்த லெனின் எழுதிய நூலைப்படித்துதான் நான் மார்க்சீய லெனினிய தத்துவத்தால் கவரப்பட்டேன் என்ற இ.எம்.எஸ் ஸின் வார்த்தைகளையும், “வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று தான் எப்போதும் பேசுவார்” என்று பி.எஸ். ஆரின் குணநலன்கள் பற்றிய எம்.ஆர். வெங்கட்ராமனின் கட்டுரை பதிவையும் “கதர் ஆடைகள் அதிகம் விற்பனை செய்யப்பட்டால் சென்னையில் பி.எஸ்.ஆர். அந்நிய ஆடை பகிஷ்கரிப்பு மறியலா? என்று கேட்பார்கள். என்று பி.ராமமூர்த்தியின் நினைவு களையும் பதிவு செய்வதன் மூலம் ஆசிரியர் பி.எஸ். ஆருடன் நெருங்கி வேலை செய்தவர்களின் நினைவலை களை நமது எண்ண அலைகளோடு கலந்து மோத விடுகிறார்.
இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு எதிரான பல வேலைகளை முதலாளிகளும் ஆளும் வர்க்கமும் செய்துவருகிறது. இதனை தொழிலாளர்களும், இளைஞர்களும் இணைந்து போராட வேண்டியது கட்டாயம். இம்மாதிரியான போராட்டங்களுக்கு உத்வேகம் அளிக்கக் கூடிய வகையில் பி.எஸ். ஆரின் வாழ்க்கை புத்தகம் அமைந்துள்ளது சிறப்பு. இதனை இளைஞர்களின் விடிவெள்ளியாக வளர்ந்து வரும் னுலுகுஐ இதை வெளியிட்டிருப்பது மேலும் சிறப்பு.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|