Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
நவம்பர் 2007

குஜராத்: இனப்படுகொலை நிரூபணம்
அப்பணசாமி

மீண்டும் மீண்டும் நிருபிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது:

• குஜராத்தில் நடந்தது இனப் படுகொலை என்பதும்,

• இந்த இனப்படுகொலையை கொலை வெறியுடன் நடத்தியது இந்துத்துவா சங்கப் பரிவாரங்கள் என்பதும்,

• இதற்குத் திட்டமிட்டது குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியும், தொகாடியாவும் என்பதும்,

• இந்தக் கொலை வெறியைக் கொண்டாடி மகிழ்பவர்கள் பா.ஜ.க., விஷ்வ இந்து பரிசத் தலைவர்கள் என்பதும்.

• இந்த இனப்படுகொலையாளர்களுக்கு பாதுகாப்பு அளித்தவர்கள் குஜராத் காவல்துறையினர் என்பதும்.

ஆனால், தமது தகாத நடவடிக்கைகளுக்காக இவர்கள் உள்ளூர மகிழ்ந்தாலும், நீதிமன்றங்களிலும், விசாரணைக் கமிசன்களிலும் அப்பட்டமாகப் பொய்கூறிவந்தனர். ஏதோ ஜனநாயகக் காவலர்கள் போல சட்ட அமைப்புகள் முன்பு வேஷமிட்டு வந்தனர். பசுத்தோல் போர்த்திய புலிகளாக அவர்கள் குஜராத் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டுவரும் இத்தருணத்தில் ‘தெகல்கா’ ஆங்கில வார இதழ் உலகமே பாராட்டும் வகையில் அவர்களின் அப்பட்டமான காவி முகத்தை வெளிக் கொணர்ந்துள்ளது.

குஜராத் இனப்படுகொலையில் ஈடுபட்ட முக்கியக் குற்றவாளிகள் அனைவரிடமும் பேட்டி கண்டு அவற்றை ரகசியமாக கேமராவில் பதிவுசெய்து தமது இதழில் வெளியிட்டுள்ளது. நவம்பர் 3 தேதியிட்ட அந்த இதழ் இக்கட்டுரைகளுக்கு இட்ட தலைப்பு: குஜராத் 2002 உண்மை யார் செய்தார்களோ அவர்கள் வார்த்தைகளில். அவர்களது பேட்டிகள் அனைத்தும் ஆஜ்தக் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. இவை இனப்படுகொலைக் குற்றவாளிகளின் வாக்குமூலம் போல பதிவாகிவிட்டது. இனி குற்றவாளிகள் தப்பிப்பது கடினம்.

உண்மையில் கற்பனை செய்யமுடியாத அளவுக்கு கடினமான பணி. உயிரைப் பணயம் வைத்து இப்பணியை முடித்துள்ளார் தெகல்கா நிருபரான ஆஷீஷ் கேதான். இதற்காக அவர் எடுத்துக் கொண்ட காலம் ஆறுமாதங்கள். தனது பெயரை பியூஷ் அகர்வால் என்று மாற்றிக்கொண்டு ஆறுமாதங்களுக்கு முன்னர் குற்றவாளிகளிடம் அறிமுகமானார். தன்னை ஒரு இந்துமத அபிமானி போலக் காட்டிக்கொண்டு அவர்களை அணுகினார். நாட்டின் நிலை குறித்தெல்லாம் பேசி அவர்களின் நம்பிக்கையைப் பெற்றார். குஜராத் கோத்ரா சம்பவம் பற்றி தாம் ஆய்வு செய்வதாகவும், அதில் ஈடுபட்ட இந்துக்களின் வீரதீரங்களை தமது ஆய்வில் சேர்க்க விரும்புவதாகவும் கூறினார். இந்துமத வெறியர்கள் இதை நம்பி ஏமாந்தனர். கோத்ரா நிகழ்வுக்குப் பின்னர் தாம் ஆடிய கோரதாண்டவங்களை நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு விளக்கினர். அவையெல்லாம் அப்படி அப்படியே கேதானின் ரகசிய வீடியோ கேமராவில் பதிவாகிக் கொண்டிருந்தது. இதில் ஈடுபட்ட சதிகாரர்கள் 7 பேர், குஜராத் வழக்கில் ஆஜராகி குற்றவாளிகள் தப்பிக்கக் காரணமான நரேந்திர மோடிக்கு நெருக்கமான அரசு வழக்கறிஞர், குஜராத் இனப்படுகொலையின் போது உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி. யாக இருந்த காவல்துறை அதிகாரி, கோத்ரா ரயில் எரிப்பு தொடர்பானவர்கள் என மொத்தம் 12 பேர் இவ்வாறு ரகசியக் கேமராவில் சிக்கியுள்ளனர்.

கோத்ரா சம்பவம் நடந்த 2002 பிப்ரவரி 27 ஆம் தேதிக்குப்பிறகு மூன்று நாட்களில் 1,000க்கும் அதிகமான முஸ்லிம்களைக் கொன்றுகுவித்தது எவ்வாறு? இஸ்லாமியச் சகோதரிகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கியது எப்படி? இஸ்லாமிய சிறுபான்மையினரின் வீடுகளையும், சிறுகடைகளையும், வர்த்தக நிறுவனங்களையும் தீக்கிரையாக்கியது எப்படி? என்பதெல்லாம் அவர்கள் வாயாலேயே இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பஜ்ரங் தள் தலைவனான பஜ்ரங்கி சொல்கிறான்: “நான் போன வீட்டில் ஒரு கர்ப்பவதி இஸ்லாமிய பெண் இருந்தாள். எனது வாளால் அவளது வயிற்றைக்கிழித்து குழந்தையை வெளியே எடுத்துப்போட்டு வெட்டினேன். பிறகு அவளையும் வெட்டிக்கொன்றேன். இது எனக்குப் பெருமையாக இருக்கிறது. பிரதாப் ராணா சிங், ஜான்சி ராணி போன்று பெருமையாக உணர்ந்தேன்.”

“நரேந்திர மோடி இல்லையென்றால் இதையெல்லாம் செய்திருக்க முடியாது. போலிஸ் காரர்கள் எங்களுக்கு பக்கபலமாக இருந்தார்கள். நாங்கள் என்ன செய்கிறோம் எப்படிச் செய்கிறோம் என்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். பாட்டியா பகுதியில் மட்டும் 50 பேரைக் கொன்றோம். ஒருவன் பெயர் சலீம். அவன் அப்பகுதியின் தாதா என நினைக்கிறேன். எங்களிடம் தப்பித்து போலிஸிடம் அபயம் தேடி ஓடினான். அவர்கள் ஒருவரும் உதவமுன்வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவன் அங்கு நின்றுகொண்டிருந்த போலிஸ் வேனுக்குள் ஓடி ஒளிந்தான். நான் அவனை வெளியே இழுத்துப்போட்டு வெட்டிக்கொன்றேன். இங்கு நடப்பவற்றை உடனுக்குடன் தொகாடியாவுக்கு போன் போட்டுக்கூறினேன். அவரும் ரொம்பப் பெருமைப்பட்டார்.”

மேலும் இந்த இந்துத்துவா மதவெறியர்களின் குரூர புத்திக்கு எல்லையே கிடையாது போலும். இஸ்லாமியர்களின் மத நம்பிக்கைப்படி அவர்கள் இறந்தபின் எரியூட்டப்படுவதில்லை. நல்லடக்கமே செய்யப்-படுகிறார்கள். எனவே இறந்தபின்னும் அவர்கள் நிம்மதியடையக் கூடாது என மதவெறியர்கள் நினைத்தனர். பஜ்ரங்கி மேலும் கூறுகிறான்: “அவர்களுக்குப் பரிசாக தீயை அளித்தோம். முஸ்லிம் வீடுகளை வெளியே பூட்டி விட்டு தீயிட்டுக் கொளுத்தினோம். அந்தப் பாஸ்டர்ட்டுகளைப் பிணமாக விட்டால் புதைத்து விடுவார்கள் அல்லவா! அதனால் அதற்கு இடமில்லாமல் அவர்களை கொன்று தீக்கு இரையாக்கினோம்.”

இந்துத்துவா சக்திகளின் புளுகு மூட்டைகளுக்குப் பலியாகி மதிமயங்கிய பழங்குடியின இளைஞர்கள் பிரகாஷ் ரத்தோட், சுரேஷ் ரிச்சர்டு. இவர்கள் சங்கப் பரிவாரத்தின் கூலிப்படையாகச் செயல்பட்டனர். இவர்கள் இருவரும் கிரிமினல் குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டிந்ருந்தனர். பாட்டியாவில் வன்முறையில் ஈடுபடுவதற்காக திறந்துவிடப்பட்டனர். இவர்களுடன் மேலும் சிலரும் பரோலில் வந்து வேட்டையில் ஈடுபட்டதாக இவர்கள் கூறியுள்ளனர். இவர்கள் இருவரின் விஷேசம் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவது.

அவர்கள் “நாங்கள் கண்ணில் கண்ட முஸ்லிம்களை கொன்று தீயிட்டோம்” என்று தெகல்கா நிருபரிடம் கூறியபோது, கற்பழிப்புகளிலும் ஈடுபட்டீர்கள் அல்லவா என்று நிருபர் கேட்கிறார். அதற்கு “கடும்பசியுடன் ஆயிரக்கணக்கானவர்கள் செல்லும்போது, ஒருசிலர் பழங்களையும்தான் பறித்துத்தின்பார்கள்” என சிரித்துக் கொண்டே கூறினர். இவர்களில் ஒருவன் தான் ஒரு இஸ்லாமியச் சிறுமியை வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியதை ஒப்புக்கொண்டான். பாட்டியாவில் போலிசார்தான் இவர்களுக்கு ஆயுதம் வழங்கினர். காவல்நிலையத்தில் இருந்த 50 துப்பாக்கிகளை வழங்கியுள்ளனர். மேலும் போலிசாரும் இனப்படுகொலையில் இறங்கியுள்ளனர். போலிஸார் மட்டும் 50க்கும் அதிகமான இஸ்லாமியர்களை கொன்று குவித்ததாக சுரேஷ் ரிச்சர்ட் கூறியுள்ளான். துப்பாக்கி மட்டுமல்ல குண்டுகள், ராக்கட் லாஞ்ச்சர்கள் போன்றவையும் பயன்படுத்தப்பட்டன என்கிறார்கள்.

அதுமட்டுமல்ல குஜராத்தில் உள்ள அரசு வழக்கறிஞர்கள் அனைவரும் குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு குற்றவாளிகள் தப்பிக்க உதவியுள்ளனர். காவல்துறை உயர் அதிகாரிகள் அடித்தும், மிரட்டியும் பொய்சாட்சிகளை உருவாக்கி உதவியுள்ளனர். எல்லாவற்றையும்விட இதுகுறித்து விசாரணை நடதிய நீதிபதி நானாவதி கமிசனையும் விலைக்கு வாங்கிவிட்டதாக ஒருவன் பெருமையுடன் கூறுகிறான்.

தெகல்கா நிருபருக்குப் பேட்டியளித்த ஒருவரிடமும் குற்றஉணர்ச்சி காணப்படவில்லை. இனப்படுகொலை நடந்து ஐந்து ஆண்டுகள் கழிந்தபின்னரும் தாம் செய்தது சரியென்ற இருமாப்பில்தான் இருக்கிறார்கள். பாசிஸ்டுகளின் குணம் அதுதான். நாஜிக்களின் குணம் அதுதான். அவர்களின் ரத்தப்பசி தீராது. நாம் தான் அவர்களை அடக்க வேண்டும். இந்தியாவில் மதவெறி பாசிஸ்டுகளை வேரோடு கிள்ளியெறிய வேண்டும். அவர்களை அம்பலப்படுத்தும் வரலாற்று முக்கியத்துவமுள்ள பணியை தெகல்ஹா மேற்கொண்டுள்ளது.

குஜராத்தில் நடந்த படுகொலைகள் இஸ்லாமிய சிறுபான்மையினர் இந்திய ஒருமைப்பாட்டுக்கு கொடுத்த விலை; ஆயிரக்கணக்கான அப்பாவி இஸ்லாமியர்கள் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்து தாங்கள் இந்தியாவின் அங்கம் என்பதை மீண்டும் நிருபித்துள்ளனர். பன்முகத்தன்மை கொண்ட இந்தியக் கலாச்சாரம் இந்திய முஸ்லிம்களிடம் இருந்து பிரிக்க முடியாததாக உள்ளது. இதற்காகத்தான் காவிக்கரங்கள் அவர்களை பலிவாங்கத் துடித்துக்கொண்டுள்ளன. அக்கொலைக் கரங்களிடமிருந்து சிறுபான்மையினரை காக்க வேண்டியது நமது கடமை.

ஆஷீஸ் கேதானின் ஆறுமாத புலனாய்வு, இந்திய பத்திரிகை வரலாற்றிலேயே மகத்தானது. குற்றவாளிகளின் முகமூடிகளை கிழித்தெறிந்து அப்பட்டமாக நிர்வாணமாக்கிவிட்டார். கடந்த ஐந்து ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள், குற்றவாளிகளின் மழுப்பல் பதில்கள், விசாரணைகள், காவல்துறையினர், நீதிமன்றங்கள், மக்கள் உரிமை அமைப்புகளின் அறிக்கைகளை மட்டுமே கேட்டுவந்துள்ளோம். இப்போது முதல் முறையாக கொலையாளிகள் வாயாலேயே அவர்கள் எப்படி கொலை செய்தார்கள் என்பதைக் கூறவைத்துள்ளார். “இதைப் படியுங்கள். படித்து அச்சத்தில் நடுங்குங்கள்; இதை முழுமையாக வாசியுங்கள், அவர்கள் (இஸ்லாமியர்) எவ்வாறு அச்சத்தில் உறைந்திருந்தார்கள் என்பதை உணருங்கள்” என்று தெகல்கா ஆசிரியர் தருண் தேஜ்பால் கூறுவது சரிதான். நாம் உணர்வோடு இருக்க, இந்திய ஒருமைப்பாட்டைக் கட்டிக் காக்கும் உறுதிமொழி எடுக்க, சிறுபான்மை ஜனநாயகத்தைக் காக்க, குஜராத்திலும், இந்தியா முழுவதிலும் மதவெறியை பூண்டோடு ஒழிக்க இக்கதைகள் கோடானு கோடி இளைஞர்களை தட்டியெழுப்பும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com