எல்லோருக்குமான மருத்துவக் கொள்கை
எஸ்.கண்ணன்
கியூபா என்று சொன்னாலே, உலகின் பல நாடுகள் அதனுடைய மருத்துவச் சேவையைத் தான் உடனே நினைக்கின்றன. கியூபாவின் இன்றைய தலைவர்கள், மருத்துவத் துறையில் கியூபாவின் சாதனையைத் தெளிவாகப் பட்டியலிடுகிறார்கள். 1959ல் புரட்சி வெற்றி பெறுவதற்கு முன்பு மக்கள் மிகப் பெரிய துன்ப துயரங்களை அனுபவித்துள்ளனர். அமெரிக்காவிற்கு துதிபாடியாக இருந்த பாடிஸ்டா அரசு, மருத்துவம் மற்றும் சுகாதாரம் ஆகிய அடிப்படைத் தேவைகளை வசதியானவர்களுக்கு மட்டுமே உறுதி செய்திருந்தது. புரட்சிக்குப் பின்னர் தான் அனைவருக்கும் இலவச மருத்துவம் கிடைத்தது. சுகாதாரத் துறையில் கியூபா படிப்படியாக முன்னேறி, இன்று உலகில் வியத்தகு சாதனைகளைப் புரிந்து வருகிறது. அனைவருக்கும் மருத்துவம் கிடைப்பதற்கு கியூபாவின் அரசு, அரசு சுகாதார மையங்களையும் மருத்துவமனைகளையும் எளிதில் சென்றடையும் வகையில் அமைத்துள்ளது.
1) குடியிருப்பில் மருத்துவர்,
2) பாலி கிளினிக்
3) மருத்துவமனை என்ற மூன்று பிரிவுகளில் செயல்படுகிறது.
1. அண்மை மருத்துவர்:
50 வீடுகள் கொண்ட பகுதியை neibourhood என்று அழைக்கிறார்கள். 50 வீடுகளில் சராசரி மக்கள் தொகை 250 எனவும் சொல்கின்றனர். இந்த 50 வீடுகளில் ஒரு வீட்டில் டாக்டர் இருப்பதை அரசும், மக்களும் இணைந்து உறுதி செய்திருக்கின்றனர். அந்த குடியிருப்பில் உள்ள மருத்துவர் ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில், வீடுகளைப் போய் பார்வையிட்டு, நோயாளிகள் இருந்தால் மருந்து கொடுத்து வரும் பழக்கம் உண்டு. இது பெரும்பாலும் முதலுதவி சிகிச்சையாக அமைந்து விடுகிறது. இதன் காரணமாக இரவு நேரங்களில் ஏதாவது பிரச்சனை என்றாலும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை.
2. பாலி கிளினிக்:
ஒரு நகராட்சிக்கு குறைந்தது 3 பாலிகிளினிக் அமைக்கப்பட்டுள்ளன. நாங்கள் கைமிட்டா என்ற நகராட்சியில் அமைந்த முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்தோம். கைமிட்டா நகராட்சியில் 3 பாலிகிளினிக் உள்ளன. ஒரு பாலிகிளினிக்கில் அமைக்கப்பட்டுள்ள உள்கட்டமைப்புகளைப் பார்வையிடுகிற போது, ஆச்சர்யத்தால் உள்ளம் பூரிப்படைகிறது. புறத்தோற்றத்திற்கு சின்னதாக காட்சியளிக்கும் பாலிகிளினிக் எக்ஸ்ரே இ.சி.ஜி, எய்ட்ஸ் நோய் அறிதல், சிறிய அறுவைச் சிகிச்சைகள் போன்ற அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கிறது. உள்நோயாளிகளுக்கான படுக்கை வசதி உள்ளிட்டவையும் இருக்கின்றன. அனைத்து வகை மருந்துகளும் உள் நோயாளிகளுக்கு இலவசமாகக் கொடுக்கப்படுகிறது. மருத்துவமனை சிகிச்சைக்குப் பின், மருந்து கடையில் மானிய விலையில் மருந்துகள் கிடைக்கும் வசதி உள்ளது. இந்திய பிரதிநிதிகள் குழு பார்வையிட்ட போது, கூட்டம் மிகக் குறைவாக இருந்தது. விசாரிக்கின்ற போது அண்மைப் பகுதியிலேயே மருத்துவர் இருப்பதும், பொதுச் சுகாதாரம் குறித்த புரிதல் கல்வி மூலமாக மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருப்பதும் காரணம் என்று தெரிவித்தனர். இரண்டாவதாக பாலிகிளினிக்கில் 13 மருத்துவர்கள், 64 செவிலியர்கள் பணியாற்றுகின்றனர். எனவே போதுமான ஊழியர்கள் இருப்பதால், நோயாளியை சந்திக்காமல் இருப்பதில்லை.
3. மருத்துவமனை
பாலிகிளினிக்கில் இருந்து 20, 30 நிமிட பயண நேரத்தில் மருத்துவமனை இருக்கிறது. பாலிகிளினிக்கில் சிகிச்சை அளிக்க முடியாத அளவிற்கு தீவிர நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். பெரிய அறுவைச் சிகிச்சைகள் அனைத்தும் மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. முழுமையாக குணமடையும் வரை உள் நோயாளிகளாக இருந்து சிகிச்சை பெரும் சூழல் இருக்கிறது. மருத்துவத்துறையின் அனைத்து வகையான நிபுணர்களும் இருப்பதற்கான ஏற்பாடு உத்திரவாதம் செய்யப்பட்டுள்ளது. கியூபாவில் சாலை விபத்து மிகக் குறைவாகவே நடைபெறுகிறது. அப்படியே விபத்து நடந்தாலும் விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து 20, 30 நிமிட நேரத்தில் பாலிகிளினிக் அல்லது மருத்துவமனையை சென்றடையும் வகையில் நாடு முழுவதும் பாலிகிளினிக் மற்றும் மருத்துவமனைகள் பரவலாக இருகின்றன. இதன் காரணமாக, விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் தவிர்க்கப்படுகிறது.
மேற்படி சிகிச்சை முறைகளைக் கடந்து, சர்வதேசப் பார்வையுடன் செயல்படும் மருத்துவர்கள், மருத்துவக்கல்வி பயிலும் காலத்திலேயே உருவாகின்றனர். 169 நகராட்சி இருக்தகிறது. ஒவ்வொரு நகராட்சியிலும் ஒரு பல்கலைக்கழகம் இருக்கிறது. மருத்துவக் கல்லூரி இருக்கிறது. நமது ஊரில் இருப்பது போல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒரு பல்கலைக்கழகத்தில் படிப்பதில்லை. சில நூறு மாணவர்களே ஒவ்வொரு நகராட்சியிலும் மருத்துவக் கல்வி பயிலுகின்றனர். இதுவல்லாமல் இலத்தீன் அமெரிக்கா கண்டத்தின் மாணவர்களுக்கான மருத்துவக் கல்லூரி ஹவானா நகரில் இருக்கிறது. மருத்துவம் மற்றும் துணை மருத்துவம் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 3000 ஆகும். நாங்கள் போயிருந்த போது முதல் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
எந்த நாட்டு மாணவராக இருந்தாலும் மருத்துவக் கல்வி இலவசமாக கற்றுக் கொடுக்கப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நிகரகுவா நாட்டில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் இருத்த போது, மருத்துவப் பணிகளில் ஈடுபட்ட கியூப மருத்துவர்களை அமெரிக்கா சுட்டுக் கொன்றது. அந்த செய்தியைக் கேள்விப்பட்ட கியூப மருத்துவர்கள் நிகரகுவா நாட்டிற்கு செல்ல ஆயிரக்கணக்கில் வரிசையில் நின்று பெயரைப் பதிவு செய்தனர். இத்தகைய ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு, ஏகாதிபத்தியத்தின் கொடுமைகளைப் புரிந்து கொள்வதில் இருந்து வளர்கிறது. வெனிசுலாவில் சாவேஸ் தலைமையில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த போது 5000 மருத்துவர்கள் அனுப்பப்பட்டனர். வெனிசுலா நாட்டின் மருத்துவத் தேவை ஓராண்டு காலத்தில் பூர்த்தி செய்யப்பட்டது. பாகிஸ்தான் பூகம்பம், அங்கோலாவின் உள்நாட்டுப் போர், இலங்கையில் சுனாமி உள்ளிட்ட எல்லா இயற்கைச் சேதாரங்களிலும் மாதக்கணக்கில் பணியாற்றுகிற அர்ப்பணிப்பு உணர்வு கியூப மருத்துவர்களுக்கு உண்டு. சுனாமி இந்திய கடலோரத்தை தாக்கிய போதும் கியூப அரசு இந்தியாவிடம் தங்களைப் பயன்படுத்திக் கொள்ள கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவிற்கு கூடுதல் தேவை இல்லாத காரணத்தினால், நிராகரிக்கப்பட்டதாகக் கூறினர்.
மருத்துவத் துறையில் அனைத்து விதமான நவீன வளர்ச்சி மற்றும் தொழில் நுட்பத்தை கியூப அரசு கையாண்டு வருகிறது. நாங்கள் பார்வையிட்ட பாலிகிளினிக்கில் மன வளர்ச்சி குறைந்த குழந்தைகளுக்கான சிகிச்சை, ஊனமுற்றோருக்கு புது நம்பிக்கையை உருவாக்கி முன்னேற்றம் கொடுக்கிற உபகரணங்கள் அங்கே இருகின்றன. தேவைக்கேற்ப பயன்படுத்தவும் செய்கின்றனர்.
உலகின் சமீபத்திய புள்ளி விபரங்களின்படி ஏராளமானோரை சாகடிக்கிற நோயாக மார்பகப் புற்றுநோய் அதிகரித்து இருக்கிறது. இந்நோயைக் குணப்படுத்தும் மருந்தினை கியூப மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இது உலக நாடுகளை விஞ்சி நிற்கும் சாதனையாகும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|