தலையங்கம்
உயிர் என்ன உங்களுக்கு துச்சமா?
இந்தியாவில் ரணஜன்னி தடுப்பு ஊசி மருந்துகளை இனி அரசு தயாரிக்காது என மத்திய காங்கிரஸ் அரசில் உள்ள பாமக அமைச்சர் அன்புமணி உத்திரவிட்டுள்ளார். அதாவது குன்னூர், கிண்டி மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள காசோலி தடுப்பூசி தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்களை ஜன 15ல் இருந்து தடுப்பூசிகளை தயாரிக்காதே என அரசு சொல்லிவிட்டது. மூன்று கம்பெனிகளும் இந்த மருந்துத் தேவையில் 60 சதத்தை பூர்த்தி செய்தன என்ற பின்னணியில் இந்த அறிவிப்பின் ஆபத்து முக்கியமானது. இவர் சார்ந்திருக்கும் கட்சியின் நிறுவனர், நாட்டு மக்களை பாதுகாப்பது தான் மட்டும் தான் என்ற நினைப்பில் தினம் ஒரு அறிக்கை விடுபவர் ஆனால் இந்த அறிவிப்பை எதிர்த்து இதுவரை வாய் திறக்கவில்லை.
ஆசிரியர் குழு
எஸ்.கண்ணன்
ஆர்.வேல்முருகன்
ஆர்.வேலுசாமி
வி.ஜானகிராமன்
எம்.கவிதா
ஆசிரியர்
எஸ்.ஜி.ரமேஷ்பாபு
முகவரி:
ஏ.பாக்கியம்
118/10, வேப்பேரி நெடுஞ்சாலை,
பெரியமேடு,
சென்னை - 600 003
[email protected]
ஆண்டு சந்தா: ரூ.50
ஆயுள் சந்தா: ரூ.500
|
ஒரு வயிற்று வலி மாத்திரையையோ அல்லது நெஞ்சு வலி ஊசியையோ அந்த நோய் வந்தவர் மட்டும் தான் பயன்படுத்துவார், எல்லோரும் பயன்படுத்தக்கூடிய மருந்து என்று சொல்ல முடியாது. ஆனால் தடுப்பூசி அப்படி அல்ல. பிறந்த எல்லாக் குழந்தைகளும், கர்ப்பிணி பெண்களும், பயன்படுத்தக்கூடியது தடுப்பூசி மட்டுமே. அதுவும் தடுப்பூசி பலவகை. குறிப்பாக தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி, போலியோ, குழந்தைகள் காசநோய் ஆகிய முக்கிய தடுப்பூசிகளை குறைந்த விலையில் தயாரித்து இந்தியா முழுமைக்கும் அளித்துவந்த இந்த மூன்று மையங்களையும் அரசு மூடிவிட்டதால், இனி தடுப்பூசிக்கு தனியாரை அல்லது பன்னாட்டு மருந்து தயாரிக்கும் கம்பெனிகளை நம்பியே இருக்கும் நிலைக்கு அனைவரும் தள்ளப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த மூன்று கம்பெனிகளும் மூடிய மூன்று மாதத்திற்குள் இந்த மருந்துகள் விலை கடுமையாக அதிகரிக்கத் துவங்கிவிட்டது. உலகமய தாக்கம் இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் தன்னுடைய செல்வாக்கை செலுத்தி வரும் சூழலில், சுகாதாரத் துறையில் இந்திய அரசு தன்னுடையக் கட்டுப்பாட்டை மெல்ல மெல்ல பின்வாங்க வேண்டும் என்ற உலகவங்கியின் கட்டளையை ஆட்சியாளர்கள் தலைவணங்கி ஏற்றுக் கொள்கினறனர். இந்த ஒப்புதலின் வடிவம்தான், தனியார் மற்றும் பன்னாட்டு மருந்து தாயாரிக்கும் கம்பெனிகளுக்கு கொழுத்த லாபத்தை உருவாக்கித் தர வேண்டும் என்று நமது நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ஆசைப்படுவது. நம்மால் குறைந்த விலையில் தயாரிக்க முடிகின்ற உயிர் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட மருந்துகளை ஏன் தனியாரிடம் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி புறக்கணிக்க முடியாதது.
ஏற்கனவே நாய்க்கடி மருந்து இல்லையென அரசு மருத்துவமனையில் ரேசன் கார்டை எடுத்து வரச் சொல்கிறார்கள். இந்த நிலையில் அரசு தடுப்பூசி நிறுவனங்களை மூடிவிட்டால் ஏழைக் குழந்தைகள், தாய்மார்களின் கதி மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும். ஏனெனில் தனியார் மருந்துகளின் விலை தரம் நாம் அறிந்தது தான்.
இந்தியாவில் இன்று பல நோய்கள் ஒழிக்கப்பட்டுள்ளன. காரணம் தேசிய தடுப்பூசி திட்டம் என்கிற மத்திய அரசின் திட்டமாகும். இத்திட்டத்திற்கு தேவையான தடுப்பூசி மருந்துகளை மிகக் குறைந்த விலையில் தயாரித்து இந்த மூன்று நிறுவனங்களும் தான் கொடுத்து வந்தது. இன்று இது மூடப்படுவதால், தேசிய தடுப்பூசி திட்டம் கைவிடப்படும். அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார மையங்களில் இலவச தடுப்பூசி இல்லாத நிலை வரும். தடுப்பூசி என்றால் பன்னாட்டுக் கம்பெனி அல்லது தனியார் கம்பெனி என்ற நிர்பந்தம் வந்தால் காசு இருந்தால் தடுப்பூசி என்ற கொடூரமான நிலை வரும்.
அனைவருக்கும் சுகாதாரம் என்பது நமது அடிப்படை உரிமையாகும். இதை உலகமயத்தின் தாக்கத்தால், லாப வெறியின் நோக்கத்தால் நமது அடிப்படை உரிமையை இழப்பதை அனுமதிக்கக் கூடாது. எனவே மத்திய அரசின் இம்முயற்சியை எதிர்க்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.
ஆசிரியர் குழு
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|