கடிதம்
அரவிந்தன்
அன்புள்ள சரவணா நலம் நலமறிய ஆவல்.
இன்றைய தமிழகத்தில் பல புரட்சிகள் உலவுகின்றன. இதில் புரட்சி என்றால் என்ன என்று நமது இளைய தலைமுறை குழம்பிக் கொண்டு இருக்கிறது எனது நண்பர் கூறினார். அவரிடம் இது குறித்து பேசிய விசயத்தை உனக்கு கடிதமாக எழுதுகிறேன். நான் பேசியது சரியா? இல்லை எனில் அடுத்த கடிதத்தில் இது குறித்து விளக்கமாக கடிதம் அனுப்பு...
புரட்சி என்றால் என்ன ?
இன்றைய இந்திய மற்றும் உலக முதலாளித்துவ ஊடகங்கள் இளைய சந்ததியினரை குறி வைத்து சுய ஒழுக்கம், சுய முன்னேற்றம் அதற்காக எதுவும் செய்யலாம் என ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் வளர்ச்சியை மட்டும் மையமாக கொண்டு இதர பெரும் பகுதியினரை சிந்தனை ரீதியாக சுரண்டப்படுவர்களாக வைத்து வருகிறது. 21ம் நுற்றாண்டின் துவக்கத்தில் சமூக பொருளாதார நிலைகளில் மிகப்பெரும் அசமத்துவத்தை முதலாளித்துவ சமூக அமைப்பு முறை உருவாக்கியுள்ளது. இது நிமிடத்திற்கு நிமிடம் வசதி படைத்தவர்களை மேலும் வசதி படைத்தவர்களாகவும், ஏழைகளை மேலும் ஏழைகளாகவும் உருவாக்கிக் கொண்டு வருகிறது. இதனை மாற்ற தற்போதைய தேவையான பெரும் திரளான மக்கள் திரள் போராட்டங்கள் தேவைப்படுகிறது. இப்போராட்டங்களினை நடத்திக் கொண்டு இருக்கும் முற்போக்கு சக்திகளை சிறுமைப்படுத்தும் நடவடிக்கையை ஊடகங்கள் செய்து வரும் சூழலில் இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் நடந்த புரட்சிகர போராட்டங்களின் நடவடிக்கைகளை அறிவது அவசியமாகிறது...
இந்திய தேசியவாதிகள் வட்டாரத்தில் இது குறித்து தவறான கருத்து நிலவுகிறது. புரட்சி என்றால் அது வெடிகுண்டுகள், கைத்துப்பாக்கிகள் மற்றும் ரகசிய சங்கங்களுடன் இணைந்திருக்கும் என்று கருதப்படுகிறது. எனவே தான் இந்திய அரசியலமைப்பு அகராதியில் புரட்சிக்கரகுற்றம் என்ற சொற்றொடரும் காணப்படுகிறது. ஆயினும் புரட்சி என்பது இதைவிட விரிவான அளவில் பொருள் கொண்டது. ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கால கட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து புதியதொன்றை உருவாக்கும் ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வே புரட்சி என்று அழைக்கப்படுகிறது.
நடைமுறை சமூக அமைப்பில் வளமாக வாழ்ந்து வரும் வர்க்கங்கள் மற்றும் அரசியல் நிறுவனங்கள் அத்தகைய அமைப்பில் மாற்றம் வருவதை தங்கள் வளமான வாழ்க்கை பறிபோவதை அவ்வளவு எளிதாக அனுமதிக்க மாட்டார்கள். தாங்கள் முற்றாக அழித்தொழிக்கப்படும் போது மூர்க்கத்தனமாகத் தங்கள் எதிர்ப்பைக் காட்டாமல் இருக்க மாட்டார்கள். அரசியல் மற்றும் சமுக வன்முறைகளில் வெறித்தனமாக இறங்காமல் இருக்க மாட்டார்கள். இவ்வாறு இவர்களால் ஏவப்படும் அனைத்து எதிர்ப்புகளையும் அழித்தொழித்து வெற்றிவாகை சூடும் மாபெரும் வரலாற்று நிகழ்வே புரட்சி என்று அழைக்கப்படுகிறது. ஆள்வோரின் அடக்குமுறை கருவியான அரசை உடைத்தெறிய வரலாறு நெடுகிலும் ஆயிரக்கணக்கான போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. அதன் படிப்பினைகளில் இருந்து கற்றுத் தேர்வது மட்டுமல்ல, ஒடுக்குமுறைக்குள்ளான மக்களுக்கான போராட்டங்களை தொடர்ந்து நடத்திட வேண்டுமெனில், பகத்சிங் கூற்றுப்படி புரட்சிகர அமைப்பின் இரண்டு கட்டங்களை கடக்க வேண்டியுள்ளது. ஒன்று முன்னேற்பாடு, இரண்டு நேரடி நடவடிக்கை.
இதில் முன்னேற்பாடு என்பது தொழிலாளர்கள், விவசாயிகளை போராட்டத்தின் முன்னணி படையாக திரட்ட வேண்டும். தற்போதைய போராட்டத்திற்கு பிறகு நேர்மையான புரட்சிக்கரத் தொண்டர்கள் மத்தியில் வெறுப்பையும், அவநம்பிக்கையும் நீங்கள் காண்பீர்கள்.. ஆனால் நீங்கள் கவலைப்பட தேவையில்லை. உணர்ச்சி வயப்படுதலை ஒதுக்கி வையுங்கள். புரட்சி என்பது கடினமான பணி, புரட்சியை ஏற்படுத்துவது என்பது தனிநபர்கள் எவரது சக்திக்கும் அப்பாற்பட்டது. அதனை முன்கூட்டியே குறித்து வைத்த தேதி ஏதேனுமொன்றில் கொண்டு வரவும் முடியாது. அது குறிப்பிட்ட சமுதாய பொருளாதாரச் சூழ்நிலைகளின் மூலமே கொண்டு வரப்படும். இந்த சூழ்நிலைகளில் கொடுக்கப்படும் எந்தவொரு வாய்ப்பையும் பயன்படுத்துவதே ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு புரட்சிகர கட்சியின் பணியாகும்.
புரட்சிக்கான சக்திகளை ஒன்று திரட்டுவது மிகக் கடினமான பணி. அப்பணி புரட்சிகரத் தொண்டர்களிடமிருந்து மாபெரும் தியாகத்தை வேண்டுகிறது. இதனை நான் தெளிவுபடுத்துகிறேன். நீங்கள் வியாபாரியாகவோ இவ்வுலக வாழ்வில் ஈடுபட்டிருப்பவர் அல்லது குடும்பதரகவோ இருந்தால் தயவு செய்து நெருப்போடு விளையாடதீர்கள். ஒரு தலைவராக உங்களால் கட்சிக்கு ஒரு பயனும் இல்லை. சொற்பொழிவாற்றுவதற்காக சில மாலைநேரங்களை செலவிடும் இத்தகைய தலைவர்கள் நம்மிடத்தில் நிறைய பேர் உள்ளனர். நமக்குத் தேவையானவர்கள், லெனினுக்கு பிடித்தமான வார்த்தைகளில் சொல்வதென்றால், புரட்சியே தங்களது தொழிலாகக் கொண்ட முழுநேரப் புரட்சியாளர்களே. புரட்சியைத் தவிர வேறு எந்த இலட்சியமோ, வாழ்நாள் பணியோ இல்லாத முழுநேரத் தொண்டர்கள். அத்தகைய தொண்டர்கள் அதிக எண்ணிக்கையில் கட்சியில் சேர்க்கப்படுவது உங்களது வெற்றிக்கான வாய்ப்பை அதிகப்படுத்தும்.
இளைஞர் அமைப்பின் பணி
இளைஞர் இயக்கமானது படிப்பு வட்டங்களுக்கும், அரசியல் வகுப்புகளுக்கும், துண்டுப் பிரசுரங்கள், சிற்றிதழ்கள், புத்தகங்கள் மற்றும் பத்திரிக்கைகள் வெளியிடுவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். இதுவே அரசியல் தொண்டர்களை புதிதாகச் சேர்ப்பதற்கும் அவர்களின் பயிற்சிக்குமான களமாகும். தியாகம் என்று சொன்னால் முதலில் வந்து நிற்கும் திரள் இளைஞர் திரளே ஆகும்.
உழைக்கும் இளைஞர்களிடையே ஜனநாயகம், சோசலிசத்திற்கான பொறுமையற்ற, கட்டுப்பாடற்ற உற்சாகம் இருப்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும் என ரஷ்ய புரட்சியின் நாயகன் மாமேதை லெனின் கூறுவது இன்றைக்கு கூடுதலாக இளைஞர்களை திரட்ட வேண்டியதன் அவசியத்தை அறிவுறுத்துகிறது.
புரட்சி குறித்து தெளிவான சிந்தனையோடு இருந்த சோசலிட் குடியரசு சங்கத்தின் வீரர்களான பகத்சிங்ம் அவரது தோழர்களும் சோசலிசத்தினை தங்களது லட்சியமாக ஏற்றுக் கொண்ட பின்னணியில், புரட்சியாளர்கள் மனிதனை மனிதன் சுரண்டும் ஒரு தேசத்தை மற்றொரு தேசம் சுரண்டும் இச் சமுக அமைப்பை ஒழித்து, ஒரு வர்க்கமற்ற சமுதாயத்திற்காக நிற்கிறோம் என்றும், எங்கள் போராட்டம் என்பது பிரிட்டி ஏகாதிபத்தியத்திற்கு எதிரானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஏகாதிபத்திய முறைக்கே எதிரானது எனவும் பிரகடனம் செய்தார்கள். ஏகாதிபத்தியத்திற்கு மாற்று சோசலிசமே என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உலக இளைஞர், மாணவர் விழாவை தொடர்ந்து ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகான தளமாக மாற்றி செயலாற்றி வருகிறது.
அன்புடன் அரவிந்தன்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|