தொடரும் உன் பயணம்
கவிவர்மன்
கியூபாவின் சரித்திரமே!
பிடல்...
துயரங்கள் கடந்து
தோள் நிமிர்த்தியவன்
இழப்புகள் மீறி
எழுந்து நடந்தவன்
களைப்படையாத
காவிய நாயகன்
உன் சிந்தனையாலும்
புரட்சியாலும் கியூபாவில்
புதுப்பிக்கப்பட்டது மருத்துவ மறுமலர்ச்சி
உன் கோபத்தாலும்
கொள்கையாலும்
கூர்தீட்டப்பட்டது கியூப சோசலிசம்...
மக்கள்
ஆசை... ஆசையாய்
அலங்கரித்து வைத்திருக்கிறார்கள்
உனக்கான சிம்மாசனத்தை மனசுகளில்
உன்னை மக்கள் மனசிலிருந்து
விடுவிக்க முடியாத வீணர்கள் கூட்டம்
ஓய்வெடுத்துக் கொண்டதாய்
உளறுகிறது
இது ஓய்வில்லை...
அதிகாரக் கரங்களை எச்சரிக்கும்
ஆய்வுக்கான அவகாசம்
கியூப நெருப்பை
அணையாமல் அடைகாக்க
எத்தனை பிடல்கள் வேண்டும் என்று
உன்னால் விடுக்கப்பட்ட சவால்.
அதிபர் நாற்காலி
மக்களுடையது..
மக்கள்
உன்னுடையவர்கள்...!
ஓய்ந்து போகாத கடலலையே...!
காய்ந்து போகாத ஜீவநதியே..!
இயங்கிக் கொண்டே இருக்கிறாய்...
உன் கண்கள்
சுரண்டல்காரர்களுக்கு எதிராய்
சிவந்து கொண்டே இருக்கிறது.
அதிபர் நாற்காலிக்கு
விடைகொடுத்துவிட்டு
ஐம்பதாண்டு
பொன்விழா கொண்டாட்டத்தில்
ஒரு சாமானியனாய் மக்களோடு
கலந்து கரம் கோர்த்திருக்கும்
உனக்கு
ரெட் சல்யூட் காம்ரேட்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|