மூடிய கைகளை மேலுயர்த்தி...
கே.எஸ்.கனகராஜ்
அரசு நல விடுதிகள்... அருகில் பள்ளிக்கூடங்களோ கல்லூரிகளோ இல்லாத கிராமப்புற மாணவர்களின் கல்வி வாய்ப்பிற்காக அரசால் உருவாக்கப்பட்டவை. அதிக எண்ணிக்கையில் கல்வி நிலையங்களை அரசு உருவாக்காமல், அருகாமை பள்ளி, கல்லூரி இல்லாத மாணவர்களுக்காக தங்கிப் பயில உருவாக்கப்பட்டவை அரசு நல விடுதிகள். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் நகரங்களில் தங்கி உயர்கல்வி கற்க இவை வாய்ப்பளிக்கின்றன.
அரசின் ஆதிதிராவிட நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பாக நடத்தப்படும் இவ்விடுதிகள் முறையாக பராமரிக்கப்படாமல் அவலங்களின் உறைவிடமாய் உள்ளது. விடுதிக்காக மிகக் குறைந்த நிதியே ஒதுக்கப்படுகிறது. அதுவும் விடுதி மாணவர்களை முழுமையாக சென்று அடைவதில்லை. பெரும்பாலான விடுதிகள் பராமரிப்பின்றி பாழடைந்த கட்டடங்களாய் மரணத்தேதியை எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றன. சொந்த கட்டடமின்றி வாடகை கட்டடத்தில் வாடுகின்ற விடுதிகளும் சில நூறு தமிழகத்தில் உள்ளன. குடிநீர் கழிப்பிடம் மற்றும் மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாத விடுதிகளை பரவலாக பார்க்க முடியும்.
விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களின் நிலையோ அவலங்களிலும் அவலம். புழு மிதக்கும் சாம்பாரும் புழுத்துப்போன அரிசிச்சோறும் தான் விடுதி மாணவர் உணவாக வழங்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.400ம் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.500ம் உணவுக்காக அரசு ஒதுக்குகிறது. இன்றைய விலைவாசி சூழலில் இந்தத் தொகையில் எப்படி சத்தான உணவு தரமுடியும்? கொடுமை என்னவென்றால் இக்குறைந்த தொகையிலும் முறைகேடு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதனால் விடுதி உணவு தமிழகம் முழுவதும் தரங்கெட்டதாய் உள்ளது.
மாணவர் எண்ணிக்கை பெருகியதற்கு ஏற்ப புதிய விடுதிகளை உருவாக்காததால் விடுதிகளில் நான்கு பேர் தங்க வேண்டிய அறையில் பத்து பேர் தங்கும் நிலை உள்ளது. மாணவிகள் விடுதிகளோ விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே உள்ளது. அதுவும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. பன்னாட்டு முதலாளிகளின் தொழிற்பேட்டைகளுக்கு சலுகைகளை அள்ளி வழங்கும் தமிழக அரசு, தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட கிராமப்புற ஏழை விவசாயக் கூலி தொழிலாளிகள் மற்றும் நகர்ப்புற ஏழை தொழிலாளிகளின் வீட்டுப் பிள்ளைகள் தங்கிப் பயிலும் நலவிடுதிகளை அரசு, அவலங்களின் உறைவிடமாய் மாற்றி உள்ளது.
இதற்கு பிறகாவது கேளாக்காதினராய் நடிப்பதை விட்டு விட்டு, விடுதி மாணவர் நலனில் அக்கறை செலுத்த அரசு முன்வர வேண்டும். கடந்த பிப்ரவரி 7அன்று சென்னையில் ஆயிரக்கணக்கான விடுதி மாணவர்கள் கொதித்து போன குரல்களோடும் கோபம் கொப்பளிக்கும் கோசங்களோடும் கோட்டையை நோக்கி கோரிக்கை பேரணி நடத்தினர்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|