சிகரங்களை நோக்கி
சி.ரவிச்சந்திரன்
வடசென்னையின் மிகவும் பின்தங்கிய பகுதியான வியாசர்பாடியை நோக்கி திடீரென அத்தனை ஊடகங்களின் கவனமும் திரும்பியிருக்கிறது. அன்றாடம் சாப்பாட்டுக்கே அல்லல்படும் கூலித்தொழிலாளர்கள் வாழும்பகுதியில் இந்த ஊடகங்களின் படையெடுப்பிற்கு காரணம் இளவழகி என்ற சாதனை மங்கை. சமீபத்தில் பிரான்சில் நடந்த உலக கேரம் போட்டியில் சாம்பியன் ஷிப் பட்டத்தை வென்று நாடு திரும்பியிருக்கிறார் என்பதால்தான்.
அவரைக் காண்பதற்கு அவரது இல்லத்திற்கு சென்றோம். சாமந்தி பூ காலனி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இருக்கிறார் கேரம் ‘உலக சாம்பியன்’ இளவழகி. தலையை குனிந்தபடி வீட்டினுள் சென்று அமர்ந்தோம். வீட்டின் மூலை முடுக்கெல்லாம் பரிசுக்கோப்பைகள், தூசி படிந்த நிலையில் இருந்தன.
தான் ஆறு வயதிலிருந்தே கேரம் விளையாட ஆரம்பித்ததாக கூறும் இளவழகி. சைக்கிள் ரிக்ஷா ஓட்டும் தனது தந்தை இருதயராஜ் தான் தனது கேரம் ‘குரு’ என்கிறார். ஆறாவது வகுப்பு பயிலும் காலத்திலிருந்தே ஜீனியர் போட்டிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்த இளவழகிக்கு அவர் படித்த ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியின் ஆசிரியை கலாவதிதான் முதன் முதலில் கேரம் போர்டு வாங்கி கொடுத்து ஊக்குவித்திருக்கிறார்.
தொடர்ந்து மாவட்ட அளவிலான, மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வென்று குவித்த இளவழகிக்கு கடுமையான வறுமையின் மத்தியிலும் அவரது தந்தை இருதயராஜ் தொடர்ந்து ஊக்கம் தந்து இளவழகியின் இந்த சாதனைக்கு பெரும் காரணமாக இருக்கிறார். 2003ல் அமெரிக்காவில் நடந்த உலக டோர்னமென்ட் போட்டியில் கலந்துகொள்ள அழைப்பு வந்தபொழுது அதற்கான பயணச்செலவுக்கு என்ன செய்வதென்பதறியாமல் விழி பிதுங்கிய இருதயராஜிக்கு அப்போதைய அதிமுக அரசின் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் இருந்து வந்த பதில் தெருவில் விளையாடும் விளையாட்டுக்கெல்லாம் அரசாங்கம் எப்படி உதவி செய்யும் என்பது தான். ஆனால் தக்க சமயத்தில் இளவழகியின் திறமையை உணர்ந்து அவருக்கான பயணத்தொகை முழுமையும் ஏற்று அவரை அமெரிக்காவிற்கு அனுப்பிவைத்திருக்கிறார் இளைஞர் நலத்துறை மற்றும் விளையாட்டுத்துறை செயலாளராக இருக்கும் கிருஸ்துதாஸ் காந்தி (ஐ.ஏ.எஸ்.)
தொடர்ந்து இளவழகி கலந்து கொண்ட அனைத்து சர்வதேச போட்டிகளுக்கும் ‘பாலம்’ தொண்டு அமைப்பின் மூலம் உதவி செய்து வருகிறார். பெண்கள் ஆறுமணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியில் சென்றாலே இந்த சமுகம் அவளை இழித்துறைக்கும் போது நீங்கள் ஒரு பெண்ணாக இந்த சமுகத்திடமிருந்து எப்படிப்பட்ட விளைவுகளை எதிர்கொண்டீர்கள் என்ற கேள்விக்கு:
இந்த சமுகம் ஏதாவது சொல்லிக்கொண்டு தானிருக்கும் ஆனால் நாம் மனதைரியத்துடன் அதை எதிர்த்து நின்று நாம் மேற்கொண்ட காரியத்தில் உறுதியாகப் போராடி வெற்றி பெற வேண்டும் அதற்கு என் குடும்பம் பெரும் துணையாக இருக்கிறது என்கிறார். மற்ற விளையாட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கேரம் போட்டிகளுக்கு வராமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று கேட்டதற்கு.
மற்ற விளையாட்டு வீரர்களுக்கு லட்சக்கணக்கில் கொட்டி கொடுக்கிறார்கள், சமீபத்தில்கூட, விஸ்வநாத் ஆனந்த் மற்றும் தடகள வீராங்கனை சாந்தி ஆகியோருக்கு தமிழக அரசு நிதியுதவி வழங்கியது. அதேபோல் கேரம் விளையாட்டு வீரர்களுக்கும் வழங்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள். அப்படி வழங்கும்பட்சத்தில் என்போன்ற பல சாதனை பெண்மணிகளுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்கிறார்.
தொடர்ச்சியாக அமெரிக்க டோர்மென்டில் சாம்பியன் பிறகு சார்க் விளையாட்டுகள், இலங்கை மற்றும் மாலத்தீவுகளில் நடந்த விளையாட்டுகளிலும், சாம்பியன் ஷிப் வென்றிருக்கும் இளவழகி. 2007ல் புதுடெல்லியில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். அதன் பிறகே சமீபத்தில் ஃபிரான்சில் உலக சாம்பியன் ஷிப் பட்டம் வென்றிருக்கிறார். ஆனால் அப்போட்டிக்காக அவருக்கு ஒரு பைசா கூட பரிசுத் தொகை அளிக்கப்படவில்லை என்கிறார்.
சிறு வயதில் இருந்து நூற்றுக்கணக்கான பரிசுகளை வென்றிருக்கும் இளவழகி அவற்றை வைக்க இடமில்லாமல் மூட்டை கட்டி வைத்திருக்கிறார். அவற்றை பராமரிப்பதற்காகவேனும் ஒரு வீட்டை தமிழக அரசு தர வேண்டும் என்று கேட்கும் இளவழகி மற்ற விளையாட்டு வீரர்களுக்கு தருவது போல் தனக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என்கிறார்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|