வீரவணக்கம்
(ஹேமச்சந்திரனுக்கு அஞ்சலி)
என்னா...
நிருபர் சார்...
கரகரப்புத் தமிழ்
இப்போதும் காதுகளில்
ரீங்காரமிடுகிறது...
தோழர். ஹேமச்சந்திரன்
உழைக்கும் வர்க்கத்தின்
நம்பிக்கை...
பொதுவுடைமைத் தோட்டத்தில்
பூத்த மற்றொரு
சிகப்பு ரோஜா.
நாளைய வரலாற்றின்
நம்பிக்கை பக்கம்.
அம்பாடியில்
சிவலோகத்தில்
மருதம்பாறையில்
பால்குளத்தில்
பரளியாற்றில்
ரப்பர் காடுகளில்
பனிமொழியும்
பின்னிரவுகளில்
இயக்கம் வளர்த்ததை
வரலாறு
தன் ரகசியப்பக்கங்களில்
வைத்திருக்கிறது.
பஞ்சாலைகளில்
முந்திரி ஆலைகளில்
மின்சாரத்தில்
போக்குவரத்தில்
உங்கள்போர் முழக்கம்
காற்றின் அலைகளில்
கலந்து கிடக்கிறது.
விவசாயி _விலைவாசி
நீங்கள் உரக்கச்
சொல்லும் வார்த்தைகள்.
உங்கள் மீது விழுந்த
வெற்றிகளும் தோல்விகளும்
உழைக்கும் மக்கள் மீது
எழுதப்பட்டது.
விளம்பர வெளிச்சத்தில் விழாத
சலிப்பில்லாத உழைப்பு
உங்களுடையது.
விமர்சனங்களும் விருதுகளும்
உங்கள் புன்முறுவலில்
புதைந்து போகும்.
சட்டப்பேரவைகளில்
கவன ஈர்ப்புகள்
இல்லாமலேயே
கவனம் பெறும் உங்கள் குரல்
மேடைகள்
உங்கள் பேச்சால்
நாகரிகம் கற்றுக் கொண்டன.
ஓவ்வொரு நாளும்
உடற்பயிற்சியோடுதான்
உங்கள் பயணம் தொடங்கும்
எனினும்
மாத்திரைகளோடு யாத்திரைகள்
செய்வது தான்
உங்கள் வழக்கம்.
சமரசமும் சமாதானமும்
உங்கள் தலையில்
பூத்திருக்கின்றன.
ஓயாத உங்கள் பயணம்
முடிந்து விட்டது.
எங்கள் இதயங்கள்
ஈர விழிகளோடு சொல்கிறது
வீர வணக்கம்...
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|